ஏலம் போன சோழ வேந்தன் – விலை 35 லட்சம்

2010 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு விழாவின் பொது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுஉடையார் ராஜ ராஜ சோழர் சிலை என்று கருதப்பட்ட சிலை.

இதை ஒட்டி அப்போது நாம் இட்ட பதிவு சோழ மன்னர்களின் வெங்கலச் சிற்பங்கள் – ஆய்வுத் தகவல்களின் தொகுப்பு வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அப்போது பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்பில் இருந்து அவரது சிலையின் அளவு பற்றிய தகவல் தெரிந்தது

14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.

ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ.

Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலில்

சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது

மீண்டும் ஒரு முறை அந்த சோழ அரசரின் சிலையை பார்ப்போம்.

இவர் அரசர் என்பதற்கு உள்ள முக்கிய ஆதாரம் அவரது இடது காலில் உள்ள வீரக்கழல்.

சென்ற ஆண்டு ஒரு ஏல நிறுவனம் a சோழர் காலத்து சிலை ஒன்றை ஏலம் விட்டது. பெரிய அளவு சண்டிகேஷ்வரர் சிலை – தென் இந்தியா, சோழர் காலம், 10 / 11 நூற்றாண்டு என்று தலைப்பு இட்டு அவர்கள் நிர்ணயம் செய்த விலை முப்பத்தி ஆறு லட்சம் முதல் நாற்பத்தி எட்டு லட்சம்.

A Large Bronze Figure of Chandikeshvara
SOUTH INDIA, CHOLA DYNASTY, 10TH/11TH CENTURY

ஒருமுறை சென்னை மற்றும் தஞ்சை அருங்காட்சியகங்களில் உள்ள சண்டிகேஷ்வரர் சிலைகளை பார்த்து விடுவோம்.



இவற்றில் எதிலுமே வீரக்கழல் இல்லை.

மீண்டும் ஒருமுறை ஏலம் விடப்பட்ட சிலையை பாருங்கள். இது சண்டிகேஷ்வரர் சிலையா அல்லது சோழ அரசர் சிலையா ?



கண்டிப்பாக சோழ அரசர் சிலை தான்.

அவர்கள் ஏலத்தின் போது கொடுத்த அளவுகள்

247/8 in. (63.1 cm.) high

நாம் முன்னர் அனுமானம் செய்த அளவிற்கு கிட்டத்தட்ட வந்துவிடுகிறது.

இந்த சிலை எப்படி விலைக்கு வந்தது என்று எந்த குறிப்புமே அங்கே இல்லை.

Pre-Lot Text

PROPERTY FROM A EUROPEAN COLLECTION

ஒரு வேளை இவர்தான் நாம் தேடிக்கொண்டிருக்கும் உடையார் ராஜ ராஜ சோழரோ? 35 லட்சத்துக்கு ஏலம் போய் விட்டாரே!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மறைக்கப்படும் வரலாறு – ஆறு கோடிக்கு விற்கப்படும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கௌரி !

பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு

இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

விற்பதற்கு ஏதுவாக ஒரு காணொளியும் உள்ளது.

பொதுவாக இது போன்ற பெரிய அளவில் இருக்கும் சோழர் சிலைகளின் காலம் பதினோராம் நூற்றாண்டு – அதாவது செம்பியன் மாதேவி காலத்திற்கு பின் ராஜராஜர் மற்றும் ராஜேந்திர சோழர் காலம்.

இந்த சிலை எப்படி ஏலத்திற்கு வந்தது என்று சரியான விரிவான தகவல்கள் இல்லை.

Provenance
Collection of Ariane Dandois, London, acquired in Geneva, 16 March 1977

Literature

C. Vogel, “Global Treasure Trove,” New York Times Magazine, 1 March 1987, pp. 62-66

இந்த குறிப்பைத் தேடி பார்த்தால் இந்த சிலை பற்றி ஒன்றுமே இல்லை.

இதன் படி இந்த சிலையை முன்னர் வைத்திருந்த பெண்மணி ஒரு பெரிய அமெரிக்க லக்ஷாதிபதியின் ” ” என்று தெரிகிறது.

அப்படி இருக்க இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பு கிடைத்தது.

Gauri
A Southern Bronze
By K. B. IYER

One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.

Both tradition and stylistic features distinguish it as an early Chola work of probably the 10th century

Gauri is the Gracious Mother of the Universe, the Better-half of Siva, half-female half-male (Ardha-nariswara). In love and in devotion unexcelled even among the gods, She is the supreme arche-type of conjugal felicity. When love’s darts bruise young maidens’ hearts, their secret prayers are turned to her. It is she who protects them from every shoal and storm on the unchartered sea of married life. Just as Siva as Nata-raja symbolises the cosmic law of rhythm, Parvati in her aspect as Gauri symbolises the universal and eternal female instinct of yearning devotion, aspiration and concern for the male. Isn’t this figure instinct with that poignant feeling which makes the contemplation of beauty a haunting delight?

மேலோட்டமாகவே இரு சிலைகளும் ஒன்று போல இருக்கின்றன. இன்னும் கூர்ந்து பார்ப்போம்.




குறிப்பில் இருக்கும் அளவுகள் ஒத்து போகவில்லை என்றாலும்…

1944 குறிப்பு கொடுக்கும் அளவு ”Exclusive of the pedestal which is 9 inches, the figure is 26 inches in height” ஆனால் ஏல கடையில் இவ்வாறு உள்ளது ”33 1/8 in. (84.2 cm.) high ” – ஆனால் சிலையை ஒப்பிட்டு பார்க்கும் பொது இரண்டும் ஒன்றே என்று தெளிவாக தெரிகிறது.

இங்கே நாம் மனதில் கொள்ள வேண்டியது – காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு உடையார் ராஜ ராஜ சோழர் வந்து “பெரிய திருக்கற்றளியாகிய” என்று பிரமிக்கும் குறிப்பு கல்வெட்டுகளில் இருக்கிறது, மேலும் அவர் இதனை கொண்டே தானும் ஒரு பெரிய கற்றளியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் என்று பலரும் கருதுகின்றனர். ஒரு வேளை இந்தத் திருமேனி உடையவர் கொடுத்த கொடையோ? கல்வெட்டு அறிஞர்கள் தேடிப் பார்த்தால் குறிப்பு கிடைக்கலாம் !!

இப்போது தெளிவாக இருப்பவை – இது காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலை – எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில 1944 வரை இருந்தது.

இவர் 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் UKவில் காலம் ஆனார்.

இந்த சிலை எப்படி இந்தியாவில் இருந்து சென்றது – எப்போது சென்றது. 1977 ஆம் ஆண்டு இதனை ஜெனீவாவில் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது ? இந்த 1944 குறிப்பு .இணையத்தில் சிறு தேடலில் கிடைக்கிறது. பொதுவாக இவ்வளவு விலைக்கு விற்கப்படும் பொருட்கள் பற்றி தீவிர விசாரணை எடுக்கவேண்டும். அப்படி எடுத்தால் இந்த குறிப்பு கண்டிப்பாக கிடைத்திருக்கும். அதை மறைத்து விட்டு எதற்காக ” A large and important bronze figure of Parvati” என்று சொல்லி விற்கவேண்டும்?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிலைத் திருட்டு – பாகம் பத்து :. நாகப்பட்டினம் புத்தர்

இந்த சிலை திருட்டு வழக்கில் இன்று இன்னும் ஒரு பயணம் – பௌத்த மதம், கற்சிலை – புத்தர். சாதாரண புத்தர் சிலை இல்லை – நாகப்பட்டினம் 11 ஆம் நூற்றாண்டு சோழர் சிலை – ஆம் மாமன்னர் ஸ்ரீ ராஜா ராஜ சோழர் காலத்து சிலை. அவர் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குக் கொடுத்த சிலையோ ?? இந்த சிலை, தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர் நிறுவனம் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் செப்டம்பர் 2010 பட்டியலில் இருக்கிறது. அதன் மேல் இன்று ஒரு சிறப்பு பார்வை.


நாம் இங்கே கவனிக்க வேண்டிய தகவல் ஹிந்து நாளேட்டில் நவம்பர் 11 ஆம் தேதி 2012 இல் வெளியான செய்தி மற்றும் படம். இவை இண்டும் ஒரே சிலை மாதிரி இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

நாளேட்டு குறிப்பில் இந்த சிலையைத் சிலைத்திருடர்கள் திருட எண்ணி குறி வைத்ததாகவும் காவல் துறையின் துரித நடவடிக்கைகளால் முறியடிக்கப் பட்டதாகவும் உள்ளது – ” The Buddhist statue marked for theft by alleged Kapoor associate, Sanjivi Asokan, but not stolen owing to police action.”

மேலும் இவ்வாறு ” One Buddhist idol was said to have been marked for theft by Kapoor’s alleged head of operations in Tamil Nadu, the now-imprisoned Sanjivi Asokan. However, that idol was ultimately not stolen, quite likely due to timely action by authorities. “

ஹிந்து நாளிதழ் படத்தில் உள்ள சிலையில் வலது கை கட்டை விரலை பாருங்கள்.

மீண்டும் ஆர்ட் ஆஃப் தி ஃபாஸ்ட் பட்டியலில் உள்ள படத்தை பாருங்கள் – முக்கிய துப்பு – இங்கும் புத்தர் சிலையின் வலது கை கட்டை விரல் உடைந்து இருப்பதை காணலாம்.

அப்படி என்றால் இது ஒரே சிலை – அது எப்படி. மேலும் பட்டியலில் இந்த சிலை சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் ” On the Nalanda Trial “ என்ற சிறப்புக் கண்காட்சியில் 1st Nov 2007 முதல் 23rd March 2008 வரை இருந்தது என்று உள்ளது. இது ஒரு மிகவும் பிரசித்தி பெற்ற கண்காட்சி – பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங்க் அவர்கள் வந்து துவக்கி வைத்தார் !!!

அருங்காட்சியகம் இந்த கண்காட்சி குறித்து வெளியிட்ட இந்த குறிப்பில் அதே சிலை இருக்கிறது



“…viewed stunning Buddhist art, including this 11th Century stone sculpture from South India, weighing over 700 kg.”

அது எப்படி – நமது அதிகாரிகள் எடுத்த துரித முயற்சி எங்கே போனது ?? ஹிந்து நாளிதழ் வெளியிட்ட படம் எங்கோ கட்டாந்தரையில் கோயில் மதில் சுவர் அருகில் இருப்பது போல தானே உள்ளது !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு குடைவரை – அதில் சிதைந்த ஓவியமும் உடையார் ராஜ ராஜ சோழர் பிறந்த நட்சத்திரமும் – திரு நந்திக்கரை

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை – கன்னியாக்குமரி மாவட்டம் – திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு – நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

இப்பொழுது படங்களை பாருங்கள்..

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

10034
10031

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன?

பெரிய கோயில் போன்று உலகப்புகழ் பெற்று திகழும் ஆலயத்தை ஒட்டி இருக்கும் கதைகளும் பல. நாம் முன்னரே விமானத்தின் நிழல் பற்றி பார்த்தோம். இன்று அதே போன்று இன்னொரு பரவலாக கேட்கப்படும் கேள்வி…தஞ்சை பெரியகோயிலில் ஏன் புத்தர் வடிவங்கள் உள்ளன? ஆம் வடிவங்கள்தாம் – ஒன்றல்ல – இரு இடங்களில் புடைப்புச் சிற்பம் மற்றும் புகழ் பெற்ற சோழர் கால ஓவியங்களில் புத்தர் வடிவம் உள்ளது.

( படங்களுக்கு நன்றி : திரு சதீஷ் , திரு அரவிந்த் மற்றும் நண்பர் ஓவியர் திரு தியாகராஜன் – பெரிய கோயில் ஓவியங்கள் நூல் )

திரிபுராந்தகர் பற்றிய குறிப்புகளை முதலில் பாருங்கள். ( நன்றி திவர்கர் சார்)

தாராசுரன் எனும் அசுரனின் புதல்வர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் மூவரும் மிகச் சிறந்த சிவபக்தர்களாக இருந்தனர். இவர்களுக்கு இந்த சிவபக்தியால் கிடைத்த தவ வலிமையைக் கொண்டு படைப்புக் கடவுளான பிரும்மனை நோக்கி நெடுங்காலம் கடுந்தவத்தைச் செய்தார்கள். அந்தத் தவத்தின் பலனாக திரிபுரம் எனச் சொல்லப்படும் மூன்று நகரங்களைப் பெற்றனர். மூன்றும் பறக்கும் தன்மை உடையது. அவைகள் கொண்டே பல காலம், இந்த அசுரர்கள் தங்கள் எதிரிகள் அனைவரையும் வென்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தீராத தொல்லையைத் தந்து கடும் இன்னல் விளைவித்தனர்.

அவர்களின் தொல்லை தாங்காது, அனைவரும் சிவனிடம் முறையிட்டார், சிவ பெருமான் தக்க நேரத்தில் அவர் குறை தீர்ப்பதாய் சொல்லி விட்டார். இந்த திரிபுர அசுரர்கள் எப்போதும் சிவபக்தியை தக்க வைத்துக் கொண்டிருந்ததும், அந்த பக்தியினால் ஈசன் அசுரர்களை அழிக்காமல் விடுவதாக ஒரு எண்ணம் தேவர்கள் மத்தியில் எழுந்தது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த அசுரர்களை அழிக்கவேண்டுமென்றால் ஈசன் ஒருவனால்தான் முடியும் என்பதைத் தவிர, இந்த பறக்கும் நகரங்களான முப்புரங்களும் அழிய ஒரு குறிப்பிட்ட நாள் வேண்டும், அதாவது இந்த நகரங்கள் பூசத் திருநாளன்று ஒரு நேர்க்கோட்டில் வான் வழியே கூடும். அந்தத் திருநாள் வரும்போது மட்டுமே அழிபடக்கூடிய ஒரு சிறப்பான வரத்தைப் பெற்றிருந்தனர் இந்த அசுரர்கள். ஆகையினால் இந்த முறை வரும் அந்த பூசத் திருநாளை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு விஷ்ணுவிடம் அவர்கள் வழி கேட்டனர். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு தேவர்களைக் காக்கும் விதமாக முன்வந்தார்.

ஞானகுருவின் வடிவான புத்ததேவன் உருக்கொண்டு அசுரர்களிடம் குருவாக தோன்றினார். சிவபக்தியில் சிறந்த அசுரர்களை தெய்வநோக்கம் என்பது வல்லவர்களுக்குத் தேவையான ஒன்றல்ல என்பதையும் அசுரர்கள் எல்லா வல்லமையும் ஏற்கனவே பெற்ற போது தெய்வத்தின் துணையை அவர்கள் நாடுவது நல்லதல்ல என்பதையும் போதித்தார். புத்த போதனையை திரிபுர அசுரர்கள் மேற்கொண்டனர். சிவசிந்தனையும் அவர்கள் மனதை விட்டு அகன்றது.

இதுதான் சமயம் என தேவர்கள் மறுபடியும் ஈசனின் கருணை வேண்டி சிவனிடம் சென்றபோது, சிவன் சம்மதித்தார். தேவர்கள் அனைவரையும் தனக்குத் துணை வருமாறு அழைத்தார். அசுரர்களின் பறக்கும் நகரங்களை அழித்திட ரதம் ஒன்றை வடிவமைத்தனர். வரம் கொடுத்த பிரும்மன் சாரதியாக, மேருமலையே வில்லாக, மாலவன் அம்பாக, சூரிய சந்திரர்கள் ரதத்தின் இரு சக்கரமாக, ஈசன் அந்தத் தேரில் பறக்கும் நகரங்களை நோக்கி போர் செய்யப் பயணித்தார்.

எதையும் யாவற்றையும் ஆக்கி, காத்து, அழித்து மறுபடியும் உருவாக்குபவர் எனும் பெயர் கொண்ட ஈசனுக்கே இந்த அசுரர்களை அழிக்க இத்தனை உதவிகள் தேவையா எனக் கேள்வி உருவாகக்கூடும். உருவானது கூட தேவர்களின் மத்தியிலே.. அவர்களுக்கு இதனால் ஆணவம் கூட வந்தது. எத்தனைதான் ஈசனே ஆனாலும் தம் உதவியில்லாமல் ஈசனால் கூட சில காரியங்கள் நடக்காது என்பதாக உணரத் தலைப்பட்டனர்.

ஈசன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு என்பதையும் மறந்தனர். எந்தவொரு முக்கிய செயலும் கூடிச் செய்தால்தான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்பதற்காகவே ஈசன் தம்முடன் தேவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார் என்பதையும் மறந்தனர்.

திரிபுரத்தை அழிக்கும் வேளை வந்த அந்தச் சமயத்தில் தேவர்கள் ஆணவத்தை உணர்ந்த ஈசன் இவர்களுக்கும் ஒரு சிறிய பாடம் எடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ.. பூசத் திருநாளன்று முப்புரங்களும் ஒன்று சேர்ந்த பொழுதில் ஒரு சிறு மென்னகை செய்தார், அந்த மென்னகையே அந்த திரிபுரங்களை தீ பற்றி எரிக்கத் தொடங்கியது.

”பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்”

என்பார் சுந்தரர். கண்ணிமை நொடிக்குமளவில் புரம் மூன்றையும் எரித்தவனாகப் பாடுவார்,

ஈசனுக்கு உதவியாக வந்த தேவர்கள் திகைத்தனர். ஈசனின் திருவிளையாடலை உணர்ந்த தேவர்கள் தம் தவறுக்கு வருந்தினர். ஈசனின் தாளை நினைந்து பணிந்தனர். அனைவரும் கூடிச் செயல் புரிதலின் அருட்தன்மையும் உணர்ந்தனர். ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தார். அவர்களின் உதவியையும் ஏற்று மாலவனான தன் அம்பை அசுரர்களை நோக்கி ஏவி விட, திரிபுரம் மூன்றும் மொத்தமும் எரிந்து அசுரர்களும் அழிந்தனர். திரிபுர அசுரர்களை அழித்து மூவுலகமும் காத்து அருள்செய்த ஈசனை ‘திரிபுராந்தகர்’ என்று தேவர்களும் முனிவர்களும் வழிபடத் தொடங்கினர்.

சரி, இப்போது சிற்ப்பங்களை பார்ப்போம். முதல் புடைப்புச் சிற்பம்.

இன்னும் அருகில்

மேல் வரிசையில் மூவரை நான்றாக அடையாளம் காண முடிகிறது – மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நடு வரிசையில் திரிபுர சண்டை காட்சி போல தெரிகிறது. கடைசி வரிசை முடிவடையாத நிலையில் உள்ளது

8866
8869

பக்கத்துக்கு வரிசைக்கு வருவோம். மேலே புத்தர் – அருகில் அவர் சொல்வதை பணிவுடன் கேட்டு நிற்கும் திரிபுர அசுரர்கள்

அடுத்த வரிசையில் – சண்டையில் தோற்று விழும் அசுரர்கள் போல உள்ளது. அருகில் நிற்பவர்கள் கை பாவங்களை பார்தால் மகேசனிடம் சரணடைய சொல்வது போல உள்ளது.

அடுத்த வரிசையில் தலை மீது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் காட்சி.

அடுத்த சிற்பத்தில் இதே காட்சி சற்று வேறு விதமாக உள்ளது.

முன்னர் பார்த்தவாறே புத்தர் , அருகில் அசுரர்கள்

இங்கே பாருங்கள் தனது ரதத்தில் கம்பீரமாகும் நிற்கும் மகேசன், பிரம்மன் சாரதியாக…

முடிவாக புகழ் பெற்ற சோழ ஓவியங்கள் – அதில் வரும் திரிபுர தகனம் காட்சி. நாம் முன்னரே பார்த்தது தான்.

இங்கே மேலே புத்தர், தேரின் மீது மகேசன், தேரோட்டியாக நான்முகன், அருகில் மகிஷாசுரமர்த்தினி சிங்க வாஹனத்தில் , எலி வாஹனத்தில் கணபதி, மயில் வாஹனத்தில் முருகன்.

நாம் கவனிக்க வேண்டியது பல்லவர் காலத்திலேயே புத்தரை பெருமாளின் அவதாரமாக சித்தரிக்கும் முயற்சி எழுந்துள்ளது. ஆனால் அந்த புத்தர் தான் சாக்கியமுனியா என்பது ஒரு பெரும் கேள்வி. ஆனாலும் இங்கே நாம் பார்த்தமட்டில் புத்த வடிவங்கள் அளவிலும் சரி, அமைப்பிலும் சரி ஒரு மதிப்புக்குரிய பாவத்தில் தான் உள்ளன.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சர்ச்சைச் சிற்பங்கள்- பாகம் இரண்டு ஹரி vs ஹரன்

இந்து மதமும் அதன் ​கொள்​கைகளும் பல்​வேறு அறிஞர்க​ளையும் இன்றும் ஆச்சரியப்படவும் தி​கைக்கவும் ​வைக்​கையில், சிற்பங்க​ளை விளக்கிக் கூறும் பணியில் மட்டும் பயணிக்க வி​ழைகி​றோம். இந்த ‘சர்ச்​சை சிற்பங்கள்’ பற்றிய முதல் பதி​வை படித்த பின்பு இந்தப் பதி​வை படிக்குமாறு வாசகர்க​ளை ​கேட்டுக் ​கொள்கி​றோம்.

இந்தப் பதி​வை இட​வேண்டும் என்று பல காலமாக நி​னைத்திருந்த​போதிலும், வாசகர்களின் அபிப்பிராயம் எவ்வாறு இருக்கு​மோ என்ற எண்ணத்தினா​லே தள்ளி​போட்டு​ ​கொண்டிருந்​தேன். ஆனால் தாராசுரம் ​சென்று வந்த நம் நண்பர் திரு. காமன் பா​லெம், இந்த சிற்பத்​தைப் பற்றி ​கேட்க​வே, அதன் அம்சங்க​ளை பற்றியாவது கூற​வேண்டு​மென இந்தப் பதி​வை இடுகி​றேன். வாசகர்கள் அ​னைவரும் இந்தப் பதி​வை​ ​பொறு​மையுடன் முழு​மையாக படித்த பிறகு தங்களது கருத்துக்க​​ளை கூறுமாறு ​கேட்டுக் ​கொள்கி​​றேன்.

தாராசுரத்தில் உள்ள இந்த சர​பேசுவரர் சிற்பமானது, ​சோழர்களின் க​லைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாலும், ஒருவ​ரை தாழ்த்தி மற்​றொருவ​ரை உயர்த்தும் எண்ணம் காரணமாக உருவாக்கப்பட்டது என்பதா​லே​யே சற்று​ ​நெருடலான ஒன்றாகும். காலச் சக்கரத்தின் சுழற்சியில் இந்த உருவத்தின் துவக்க காலம் ​தெரியாத​போதிலும், நாம் காண்பது இரண்டாம் இராஜராஜ ​சோழனின் ஆட்சிகாலமாகிய 12 ஆம்நூற்றாண்​டைச்​ ​சேர்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சமயப் பிரிவி​னையானது உச்சத்​தை அ​டைந்தது ​வேத​னைக்குரியதாகும்.

நரசிம்ம அவதாரக் க​தை நாம் அ​னைவரும் அறிந்த​தே. பலவிதமாக அது ​சொல்லப்பட்ட ​போதிலும், அதன் சாராம்சம் இது தான். பிரம்மதேவனிடம் இருந்து விசித்திரமான வரத்தை பெற்று சாகாவரம் பெற்றதாக இறுமாந்திருந்த ஹிரண்யகசிபுவின் சம்ஹாரமே நரசிம்ம அவதாரத்தின் நோக்கம்.

“அனைத்தும் அருளும் பிரம்மதேவா! நான் வேண்டும் வரத்தை அருள்வாயாக! தங்களால் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தாலும் நான் கொல்லப்பட கூடாது. வீட்டின் உள்ளேயோ வெளியேயோ, பகலிலோ, இரவிலோ, வானத்திலோ, பூமியிலோ நான் இறக்க கூடாது. எந்த ஆயுதத்தாலோ, விலங்கினத்தாலோ, மனிதராலோ, தேவராலோ, அசுரராலோ, பாதாள லோகத்தில் வாழும் நாகங்களாலோ கொல்லப்பட கூடாது. அ​னைத்து உயிர்களுக்கும், தேவதைகளுக்கும் நானே அதிபதியாக வேண்டும். தவம், யோகம் போன்றவற்றினால் கிடைக்கும் சித்திகள் அனைத்தும் எனக்களிக்க வேண்டும்.”

வரம் பெற்றபின் தன்னையே சர்வ சக்தி படைத்த இறைவனாக பாவித்து கொண்டு மக்கள் எல்லோரையும் தன்னை வணங்கும்படி வற்புறுத்தினான். மறுத்தவர்களை தண்டித்தான். அவனது மகன் பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணனின் சிறந்த பக்தன். தன் தந்தையை கடவுளுக்கு சமமானவன் என ஏற்க மறுத்தான். கோபம் கொண்ட ஹிரண்யகசிபு நீ வணங்கும் உன் கடவுள் எங்கிருக்கிறான் என கேட்க, பிரஹலாதன் ‘அவன் எங்கும் நிறைந்திருப்பான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என கூறுகிறான். ஆத்திரம் கட்டுகடங்காது தனது கதையினால் அருகில் இருந்த தூணை உடைக்கிறான் ஹிரண்யகசிபு.

(தெலுங்கு திரைப்படத்திலிருந்து இந்த காட்சி)

அந்த தூணில் இருந்து நரசிம்ம ரூபத்தில் மகாவிஷ்ணு தோன்றுகிறார். அவன் பெற்ற வரத்தை அனுசரித்து மனித உடலும் சிம்மத்தின் தலையும் கொண்டு, தூணை உடைத்துக் கொண்டு, வாசற்படியில் அமர்ந்து, ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்தி, சந்தியா வேளையில், தனது நகங்களாலேயே அவனது வயிற்​றை கிழித்து வதம் செய்கிறார். பல்வேறு சிற்பங்களில் அவரது ​கோப உக்ர வடிவத்தை காணலாம். பிரஹலாதன் தன் இனிய குரலில் துதி செய்ய நரசிம்மர் சாந்தம் அடைகிறார். இந்தக் கதை இங்கேயே முடிவடைய வேண்டியது.

ஆனால், இதற்கு பின்பும் கதை தொடருவதாகக் கூறப்படுவது, சைவ வைணவ சமயங்களின் பிரிவினையின் தாக்கம் என்றே தோன்றுகிறது. நரசிம்ம பெருமானின் உக்ரம் தணியாது, மகாலட்சுமி கூட அவரது அருகில் செல்ல இயலாத நிலை ஏற்பட, அனைத்துலகங்களும் இந்த உக்ரத்தின் பலனாக நடுநடுங்கி, முடிவில் சிவபெருமானை சரணடைகிறார்கள். அவர் முதலில் வீரபத்ரனை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரனாலும் நரசிம்மருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே, சிவபெருமானே சரபேசுவர ரூபமெடுத்து செல்கிறார். அதாவது, மனிதன் + சிம்மம் + பறவை – சேர்ந்ததொரு ரூபம்.

பிறகு நடப்பது பலராலும் பலவிதங்களிலும் சொல்லப்படுகிறது. நரசிம்மரை சரபேசுவரர் ஆரத் தழுவி, அவரது சினத்தைத் தணித்து, நரசிம்மரை தக்க வைத்து, மகாவிஷ்ணுவை வெளியேற்றுகிறார்.

இந்த முழுக் கதையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்றே காட்சிகளில் பறைசாற்றப்பட்டுள்ளது.

இப்போது மீண்டும் தாராசுரம் சிற்பம்.

நல்ல வேளையாக, திரு. காமன் அவர்கள் முழு சிற்பத்தையும் படமெடுத்திருந்தார்.

நரசிம்மர் உடலிலிருந்து மகாவிஷ்ணு வெளியேற்றப்படுகிறார். அந்த சிறிய உருவம், பிரஹலாதனாக இருக்கக் கூடும். மேலே, தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இக்காட்சியை காண்கிறார்கள்.

சற்று கவனித்துப் பார்த்தால், பிற்காலத்தில் காணப்படும் மதுரை சிற்பங்களைப் போல் அந்த
உருவங்களுக்கான தனித் தன்மையான அம்சங்கள் இந்த சிற்பத்தில் இல்லை என கண்டு கொள்ளலாம்.

திரு. காமன் அவர்களின் அடுத்த கேள்வி, கால்களைப் பற்றியது. சர​பேசுவரருக்கு இரு இறக்கைகளும், நான்கு ஜதை கால்களும் உண்டு.


சில இடங்களில் நிறைய கைகளுடன் கூடிய சிற்பங்களும் உள்ளன. இலங்கையில் உள்ள முனீஸ்வரர் கோவில் சிற்பத்தைப் பாருங்கள். ( படம் : விக்கி )


இதை வருந்தத் தக்கது என கூறியதன் காரணமே, சமீப காலத்தில் ப்ரத்யங்கிரா தேவி போன்று பல்வேறு தாத்பரியங்கள் சொல்லப்படுகின்றன. மக்களும் தங்கள் குறைகள் தீர, இந்தக் கோவில்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

நிச்சயமாக இந்து மதம் என்பது ஒரு கடவுளையே பிரதானமாக கொண்டதன்று. இதில் முதன்மையானது, என் கடவுள் பெரியதா, உன் கடவுள் பெரியதா என்ற கேள்வி அல்ல, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் அல்ல; கடவுளைத் தேடிச் செல்லும் பயணத்தை அனுமதிக்கும் பக்குவமேயாகும்.

இராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவிலில், இந்து மதத்தின் இரண்டு சமயங்களையும் இணைத்திடும் அற்புதமான ஹரிஹர சிற்பத்தைப் பாருங்கள்.

சுவாமி விவேகனந்தரின் வாசகம் தான் என் நினைவிற்கு வருகிறது. “இந்த உலகத்திற்கு சகிப்புத்தன்மையையும், அனைவரையும் தன்போல ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் கற்றுத்தந்த மதத்தை சேர்ந்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் சகிப்பது மட்டும் அல்ல அவை அனைத்தும் உண்மை என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ”

பின்பு ஏன் ஒருவரை தாழ்த்தி மற்றொருவரை உயர்த்துகிறோம்?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒன்றா , இரண்டா …புலித்தொப்பை நண்பர்களின் லூட்டி – திருமால்புரம்

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் – மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை – அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி – நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி – அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் – பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் – அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் – வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 – 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

அதோ அங்கே, இருப்பது அவரா ?

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.


இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சோழர் கால ஓவியங்கள் புத்தகம் -காத்திருந்தது வீண்போகவில்லை

ஏப்ரல் 9, 1931.

“காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பிரெஞ்ச் ஆர்வலர் பேராசிரியர் ஜோவூ டுப்ரீயல் (Prof. Jouveau Dubreuil) பல்லவ கால ஓவியங்களைக் கண்டுபிடித்த ஆர்வம் அடங்கும் முன்னர், எனது பாக்கியம், இதுவரை யாரும் கண்டுபிடிக்காத சோழர்களின் ஓவியங்களை தஞ்சை பெரிய கோயிலில் நான் கண்டுபிடித்தேன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், நான் எனது நண்பர் திரு T.V. உமாமகேஷ்வரம் பிள்ளையுடன் பெரிய கோயிலை தரிசிக்க சென்றேன். அப்போது சிறு எண்ணை விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், கருவறையை சுற்றி உள்ள வெளி பிரஹாரத்தின் சுவரில் சில ஓவியங்களின் சுவடுகள் தெரிந்தன.

ஆனால் நேற்று தான் ஒரு சிறு பெட்ரோமாக்ஸ் விளக்கின் பிரகாச ஒளியில் அந்த ஓவியங்களை மீண்டும் சென்று பார்த்தேன். அதன் வெளிச்சத்தில் தெரிந்த ஓவியங்களைப் பார்த்தவுடன் மனம் சற்று தளர்ந்தது – சோழர் காலத்து அற்புத ஓவியங்களின் ஒரே சான்றை கண்டுபிடிக்க எண்ணிய எனக்கு, தெரிந்தவை அவை அல்ல. ஓவியங்கள் சோழர் காலத்தை விட பல நூற்றாண்டுகள் பிந்தைய பாணியில் இருந்ததைக் கண்டு மனம் தளர்ந்தேன்.

இருந்தும், மேற்கு சுவரை அருகில் சென்று பார்வையிட்டேன், அப்போது மேல் பூச்சு உதிர்ந்த நிலையில் இருந்தது. தொட்டவுடன் பொடிப்பொடியாக விழுந்தது. ஆனால் அதன் பின்னால் இருந்த சோழர் கால அற்புத ஓவியத்தை வெளிக்காட்டியது. நெஞ்சம் படபடக்க முதல் முதலில் சோழர்களின் அற்புத ஓவியக்கலையின் ஒரே இருப்பிடத்தை கண்டுபிடித்த பெருமிதம் அடைந்தேன்.

S.K. கோவிந்தசுவாமி – தி ஹிந்து , ஏப்ரல் 11, 1931

ஹிந்து

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பயணம் – இன்று தான் அதன் நிறைவை அடைந்துள்ளது, நிறைவு என்று சொல்வதை விட புதிய துவக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஓவியங்களை இதுவரை கண்ணால் கண்டவர் சிலரே. சாமானியர்கள் இதுவரை ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டும் வல்லுனர்களின் புகழாரத்தையும், எங்கோ இங்கும் அங்கும் மங்கிய ஒளியில் சிறு அளவில் நாளேடுகளில் வரும் படங்களை மட்டுமே பார்த்து மனதை தேற்றிக்கொண்ட காலம் மாறி, அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் வந்துள்ளது – சோழர் கால ஓவியங்கள் நூல். தமிழ் நாடு அரசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் ம. இராசேந்திரன் , ஓவிய ஒளிப்படக் கலைஞர் திரு ந. தியாகராசன், ஓவியர் திரு சந்துரு , திரு ராஜவேலு மற்றும் பலரின் அயராத உழைப்பினால் இந்தப் பொக்கிஷம் இன்று நம் கண்களின் முன்னே ஜொலிக்கிறது.

இந்த ஓவியங்களை பற்றிய நூல் பற்றி பல முறை நாளேடுகளில் படித்து ஆர்வத்துடன் பல காலம் காத்து நின்ற எனக்கு, நண்பர் திரு பத்ரி ( கிழக்கு பதிப்பகம்) முக நூலில் சிறு நூல் அறிமுகம் இட்டவுடன் ஆர்வம் தலைக்கு எட்டிவிட்டது. கூடவே பயம், அரசு வெளியீடு, உலகத்தரம் இருக்குமா, ஓவியங்களை சரியான முறையில் படம் எடுத்து இருப்பார்களா? தாள் நன்றாக இருக்குமா (ரூபாய் 500 தான் விலை!) – என்றெல்லாம் எண்ணம் சென்றது. இருந்தாலும் இரு நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நண்பர் திரு. ராமன் அவர்கள் அனுப்பி வைத்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கையில் கிடைத்தது. பொதுவாக இந்த அளவு நூல் ஓரிரு நாட்களில் முடித்துவிடுவேன். எனினும் இந்த நூலில் ஒரு பக்கம் பார்க்க வாரங்கள் பல தேவைப்பட்டன. ஆஹா, என்ன அற்புதமான வடிவமைப்பு , அருமையான புகைப்படங்கள், அச்சிட்ட தாள் நல்ல உலகத்தரம், கூடவே பழம் வழுக்கி தேனில் விழுந்தவாறு ஒவ்வொரு புகைப்படத்துடன் அதன் கோட்டோவியம். ஓவியர் திரு மணியம் செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்திக்க நேர்ந்தது. அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். தனது தந்தை ஓவியர் திரு மணியம் அவர்கள் இதே சோழர் ஓவியங்களை வரைந்தார் என்றும், அவற்றையும் காட்டினார்.

அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு சாம்பிள். புகழ் பெற்ற தக்ஷிணாமூர்த்தி ஓவியம்.

(சிறிய அளவு கோப்பைகளை மட்டுமே இட்டுள்ளேன். நூலில் இன்னும் அருமையாக உள்ளது!)

அடுத்து, கோட்டோவியம்.

இந்த ஓவியங்களில் இன்னும் ஆராய ஆயிரம் விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக பலர் இந்த நூலின் உதவியுடன் அந்த ஆராய்ச்சிகளை செய்து முனைவர் பட்டம் பெறுவார்கள். உதாரணத்திற்கு இந்த ஓவியத்தின் இடது பக்கம் சற்று கவனியுங்கள்.

படத்தில் காட்டியுள்ளேன். அஷ்ட புஜ (எட்டு கைகள்) பைரவர் உருவம் தெரிகிறதா?

நூலின் உதவி இப்போது பாருங்கள்.

பார்த்தவுடன் பைரவர் உருவம் எங்கோ பார்த்த நினைவு. உடனே தேடி பார்த்தேன். முதலில் கிடைத்தது பெரிய கோயில் முன் வாயிலில் இருக்கும் க்ஷேத்ர பாலர் சிலை.

உருவ ஒற்றுமை இருந்தாலும், திரிசூலம் மாறி இருப்பதால் இந்த சிலை இல்லை.

அடுத்து தஞ்சை கலைக்கூடம் செப்புத் திருமேனி (படங்கள் திரு ராமன் மற்றும் என் தம்பி திரு பிரசன்னா கணேசன்)

அறிவுப்பு பலகை படி 11th C CE, திருவெண்காடு

இந்த சிலை பற்றி மேலும் படிக்க Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994 – Price Rs. 386), இந்த விவரங்கள் கிடைத்தன

வேலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பைரவர் சிலை நாம் முன்னர் பார்த்த ரிஷபவாகன சிலையின் காலத்தை ஒட்டி உள்ளது,

ரிஷபவாகன சிலை

ஆனால் இந்த சிலையில் பல புதிய பாணிகள் உள்ளன. இதுவரை நாம் இவற்றை சந்தித்தது இல்லை.

எட்டு கரங்களுடன் பைரவர், நேராக (வளைவுகள் இல்லாமல்) – அதாவது சாம பங்க முறையில் நிற்கிறார்.
மேலும் சிகை அலங்காரம் தலைக்கு மேலே ஒரு அலங்கார வடிவில் உள்ளது. ஒரு பக்கம் அரவமும், பிறை சந்திரனும், மறு பக்கம் மலரும் உள்ளன.

இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள் உள்ளன. இந்த வடிவத்தின் ரௌத்திர குணம் தெரிய, புருவங்கள் இரண்டும் நெரிந்தவாறும், பிதுங்கிய கண்களும், கோரைப் பல்லுடனும் இருக்கிறார் பைரவர். எனினும் அந்தக் காலத்து ஸ்தபதிகள் கோர / ரௌத்திர வடிவங்களையும் அழகுடன் வடித்தனர். எனவே புருவம், கண்கள் , கோரைப் பல் எல்லாம் இருந்தும் சிலை பயங்கரமாகத் தோற்றம் அளிக்காமல் சற்று அமைதியாகவே அழகாக உள்ளது.

கழுத்தில் இருக்கும் மாலை, அதில் தொங்கும் அணிகலன், அனைத்தும் நாம் முன்னர் பார்த்த ரிஷப வாகன சிவன் சிற்பத்தை ஒட்டி உள்ளது. பின்னிய இரு இழைகளாக இருக்கிறது யக்ஞோபவீதம். ஒரு பெரிய மாலை – அதில் சிறு சிறு மண்டை ஓடுகள் – முண்ட மாலை.

கைகள் விசிறி போல விரிந்து இரு பக்கமும் உள்ளன. மிகவும் அழகாக சிலையுடன் இணையும் இவை அருமை. மேல் கையில் இருக்கும் நாக வளையல் இந்த சிலையின் தனித்தன்மை. இங்கே தான் நம் பெரிய கோயில் ஓவியத்தில் வரும் பைரவர் சிலையுடன் சிறு வித்தியாசம் தெரிகிறது.

மேல் வலது கை, மேல் இடது கை மற்றும் கீழ் இடது கை தவிர (அவை முறையே உடுக்கை, மணி மற்றும் ஓடு ஏந்தி உள்ளன) மற்றவை கடக முத்திரையில் உள்ளன.

இடுப்பில் இரு அரவங்கள் உள்ளன. மிகவும் அழகாக அவற்றை அணிகலன் போல உபயோகித்துள்ள சிற்பியின் திறமை அபாரம்.

இங்கே தான் நமக்கு துப்பு கிடைக்கிறது. ஓவியத்தில் ஒரே ஒரு பாம்பு தான் உள்ளது. அப்போது இந்த சிலை அந்த ஓவியத்தில் உள்ள சிலை அல்ல!!

நீண்ட பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்த நூலின் அருமை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக வாங்கிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இதை இவ்வவளவு அழகாக வெளியிட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நமது பாரம்பரியத்தின் இன்னொரு முகம். பழைய நாணயவியல் ஒரு முதல் பார்வை – மின் அரட்டை

நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் – அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் 🙁

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.


முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ


Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை – என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர – அதாவது சேர, சோழ, பாண்டியர் – வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் – ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் – Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்


RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை – 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனி

நண்பர்களிடையே பலமுறை இந்த கேள்வி எழும். கலை ஆர்வலன் ( நானே சொல்லிக்க வேண்டியது தான் – ரசிகன் பட்டம் தானே !!) என்ற முறையில் தமிழ்க் கலை என்றால் பல்லவர் கலை பெரிதா இல்லை சோழர் கலை பெரியதா என்பதே ( நமக்கு சேரர் கலை வெகு சிலவே கிடைக்கின்றன – அதாவது அந்தக் காலத்து , பாண்டியர் குடைவரைகள் இன்னும் நிறைய நான் பார்க்க வேண்டி உள்ளது எனினும் பார்த்த சிலவற்றை வைத்து ( வேட்டுவன் கோயில் தவிர ) அதற்குப் பின்னர் வந்த கட்டுமானக் கோயில்களில் உள்ள கலை வேலைப்பாடு என்னை பெரிதாக ஈர்த்ததில்லை. எனவே இன்றைய விவாதம் பல்லவர் vs சோழர். அதுவும் பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனிகள். இதற்காக அவர்களது கலையின் மிகவும் மேலான உதாரணங்களை கொண்டே பார்ப்போம். பல்லவர் சிற்பக்கலை அதன் சிகரத்தை தொடும் இடம் கடல் மல்லை தர்மராஜ ரதம் மேல் தல புடைப்புச் சிற்பங்கள். சோழர் செப்புத் திருமேனி என்றால் அது உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அதுவும் அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் வார்க்கப்பட்ட சிலைகளே.

தர்மராஜ ரதம் மேல் தளம் ஒரு அதிசயம். ஒரே பாறையில் மேலிருந்து கீழே குடைந்து, அதில் இப்படி ஒரு அற்புத கலை நயத்தோடு , சிறிதளவும் பிழை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் , ஆகமங்கள் முறையே தங்கள் சட்டங்களை விதிக்கும் முன்னரே, தங்கள் செழிப்பான சிந்தனையை மட்டுமே மூல தனமாக வைத்து இப்படி அற்புத சிற்பங்களை செதுக்கிய இவர்களை என்னவென்று புகழ்வது. கடினமான கருங்கல்லில் உயிர் ஓட்டம் ததும்பும் இந்த சிற்பங்களை அழகு பட வடித்த இவர்கள் மனிதர்களா என்றே சந்தேகம் வரும்.

அந்த மேல் தடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்க்ளில் ஒரு அற்புத வடிவத்தை இன்று நாம் நண்பர் அசோக் உதவியோடு பார்க்கிறோம். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை – மேல் தடம் செல்வதே கடினம் – பலரிடம் அனுமதி பெற வேண்டும். நெரிசலான பாதை, சுவருக்கும் சிற்பத்திற்கும் இடைவெளி மிகவும் குறைவு , இதனால் புகை படம் எடுப்பது மிகவும் கடினம், அதுவும் ஒரே படத்தில் முழு உருவை பிடிப்பது அதைவிட கடினம். நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றை ஒன்று சேர்த்து அவரால் இதை செய்ய முடிந்தது. படம் பிடிக்க நாம் படும் பாட்டை பார்க்கும்போது, இதே இடத்தில தனது கற்பனை உருவை கல்லில் கொண்டு வந்த சிற்பியின் வேலைக்கு மீண்டும் தலை வணங்க வேண்டும்.பல்லவ ரிஷபாந்தகர்

இந்த சிற்பத்தின் தனித்தன்மை அதன் தலை / சிகை அலங்காரம். தலை பாட்டை மற்றும் சடை முடியை சுற்றிக் கட்டிய கொண்டை, இதுவரை நாம் வேறு எங்கும் பார்க்காதது. இதன் பிறகும் பல்லவர் படைப்புகளில் , ஏன் மல்லையிலே கூட நாம் இந்த மாதிரி மற்றொன்றை பார்க்க முடியாது – அர்ஜுன ரத சிற்பத்தை பாருங்கள்
(
அர்ஜுன ரதம் ).

இந்த சிற்பத்தில் ஒரு தனி நளினம், சிற்பம் முழுவதிலும் ஒரு உயிரோட்டம் , வளைந்து செல்லும் அருவியின் நெளிவு சுளிவு , ரத்தம் சதை கொண்டு தோல் போர்த்திய கை கால் என சொல்லிக்கொண்டே போகலாம்.

த்ரிபங்கத்தில் ஒய்யாரமாக நிற்கும் சிவன், லாவகமாக வலது கையை நந்தியின் மேல் வைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து , இடுப்பை மறுபக்கம் மடக்கி, ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டு நிற்கும் காட்சி …அப்பப்பா பிரமாதம்.

இந்த சிலைக்கு எதிர்த்து நின்று ஈடு கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கடினம் தான். அதனால் சோழர் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்த ஒன்றை போட்டிக்குள் கொண்டு வருவோம். அதிஷ்ட வசமாக கோவையில் செம்மொழி மாநாடு அரங்கில் வழி தவறி, அங்கே அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு வேலைகள் கடந்துக் கொண்டிரந்த அருங்காட்சியக மையத்தினுள் தற்செயலாக சென்றதால் இந்த அற்புத சிலையை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,. கூடவே இன்னும் ஒரு பெரும் பாக்கியம் ( படங்களை கூர்ந்து பார்த்தல் அது என்ன என்று விளங்கும் ) . இந்த சிலை, தஞ்சை கலை அரங்கத்தில் இருக்கும் ,மாநாட்டிருக்கு என்று பிரத்தேயகமாக கொண்டு வரப்பட்டது. செப்புத்திருமேனிகள் வடிப்பது சுலபம் இல்லை, நாம் முன்னரே பார்த்தவாறு, அச்சை உடைத்து சிலையை வெளிகொணர்வதால் ஒவ்வொரு முறையும் அச்சு புதிதாக செய்யப்பட வேண்டும். அதுவும் அச் சிலையை வார்த்த பின்னர், அதாவது அனைத்து சிறு குறிப்புகளும் முதலில் செய்யும் மெழுகு சிலையிலே செய்து விட்டு, மெழுகில் வடித்த பிரதிமத்தின் மேல் மண் பூசி சுட்டு ஆற்றிய பின், அதனுள் உலோகத்தை ஊற்றி சிலை வார்த்த பிறகு, அதன் மேல் உளி படாமல் ( செப்பனிடாமல் அதாவது மேலும் செதுக்காமல் ) எடுக்கும் கைத்திறன் படைத்த மகா கலைஞர்கள் இருந்த காலம் அது, இப்படி அவர்கள் புகழ் படும் கைத்திறன், கலை நயம் பல்லவர் காலம் முதலே தென்னகத்தில் இருந்தாலும், உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அவர்களது காலத்தில் , குறிப்பாக 1000 முதல் 1014 வரை வார்க்கப்பட்ட சிலைகள் மிகவும் பிரசித்தி. அந்த காலத்தை சார்ந்த கல்யாணசுந்தரர் ( நாம் முன்னரே பார்த்த உன் கரம் பிடிக்கிறேன்), இன்று நாம் போட்டியில் வைக்கும் ரிஷபாந்தக முர்த்தி, பிக்ஷாடனர் மற்றும் வீனாதாரர் ( விரைவில் அவற்றையும் பார்ப்போம் ) மிகவும் அழகு.

செப்புத் திருமேனிகளின் காலத்தை நிர்ணயம் செய்வது சற்று கடினம் தான், எனினும் இன்று நாம் காணும் சிலை ஒரு அபூர்வ சிலை. தன பிறப்புச் சான்றிதழை கல்வெட்டாக கொண்ட சிலை. மண்ணில் புதையுண்டு 1950ஆம் ஆண்டு திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை பற்றிய கல்வெட்டுக் குறிப்பு – அதன் இருப்பிடமான ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வர (திருவெண்காடு என்பதின் வடமொழிப்பெயர்) ஆலயத்தின் சுவரில் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவரின் 26th இருபத்தி ஆறாம் ஆட்சி ஆண்டில் ( 1011 CE) , கோலக்கவன் என்ற ஒருவர் ( ( AR 456 of 1918 – குறிப்பு இண்டம் பெரும் நூல் South Indian Shrines – Illustrated By P. V. Jagadisa Ayyar ) பொன்னும், நகைகளும் அங்கே எடுப்பித்த சிவ ரிஷபாந்தகர் சிலைக்கு அளித்ததாக உள்ளது ( இதற்கு அடுத்த ஆண்டு கல்வெட்டுக் குறிப்பு இந்த சிவனுக்கு அம்மை சிலை செய்து வாய்த்த குறிப்பை தருகிறது )

முதல் பார்வையிலேயே பல்லவர் சிலைக்கும் சோழர் சிற்பத்திற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. இந்த இயங்கும் படத்தை சொடுக்கி பாருங்கள்.

இரு வடிவங்களையும் சற்று ஒப்பு நோக்குங்கள். நந்தி சிற்பம் என்ன ஆனதென்று தெரியவில்லை. சோழ கலைஞன் கூடுதலான இரு கைகளை நீக்கி விட்டு, இது சிலை என்பதனால் சற்றே கைகளை சற்று இறக்கி, அதற்க்கேற்ப த்ரிபங்க வளைவை ஏற்படுத்தி, தலையையும் சற்றே நேர் படுத்தி எழில் மிக்க ஒரு படைப்பை உருவாக்கி உள்ளான்.

இது சரியான போட்டி அல்ல, ஏனெனில் சோழ சிற்பி அச்சுக்கு மண்ணை பிசைவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பல்லவ சிற்பி கருங்கல்லில், அதுவும் ஒரே கல் ரதத்தின் மேல் தலத்தில், தனது சிந்தனையை மட்டுமே கொண்டு பிழை என்றே சொல்லுக்கே இடம் இல்லாத இடத்தில மகத்தான சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஆனால் சோழ சிற்பியும் லேசுப் பட்டவன் அல்ல, புடைப்புச் சிற்பம் ஒன்றை மனதில் கொண்டு, அதை அப்படியே முப்பரிமாண சிலையாக வடிப்பது எளிதான காரியம் அல்ல.


சரி, இந்த பல்லவர் சிற்பத்தை பார்த்து விட்டுதான் சோழர் சிற்பி வேலை செய்தான என்பதற்கு என்னஆதாரம் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். இதற்கு விடை இரு சிற்பங்களிலும் உள்ள உருவ ஒற்றுமை, இதற்கு முன்னர் வந்த சோழ கல் மற்றும் உலோக சிற்பங்களில் இந்த பாணியில் சிலை / சிற்பம் இல்லை. இன்னும் ஒரு முக்கிய குறிப்பும் உள்ளது. மீண்டும் ஒரு கல்வெட்டை நாடுவோம். மல்லை சுற்று வட்டாரத்தில் சோழ கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் கல்வெட்டும் உள்ளது. கடற்கரை கோயிலில் ..மாமல்லபுரம் கடற்கரை கோயில் கல்வெட்டு AR40

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/mamallapuram.html

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் ஆட்சி யாண்டு 25th இருபத்தி ஐந்தாம் ஆண்டு ( 1010 CE) கல்வெட்டு அது., அதாவது திருவெண்காடு சிலை வைப்பதற்கு சரியாக ஒரு ஆண்டிற்கு முன்னர் .


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment