சோழர் கால ஓவியங்கள் புத்தகம் -காத்திருந்தது வீண்போகவில்லை

ஏப்ரல் 9, 1931.

“காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பிரெஞ்ச் ஆர்வலர் பேராசிரியர் ஜோவூ டுப்ரீயல் (Prof. Jouveau Dubreuil) பல்லவ கால ஓவியங்களைக் கண்டுபிடித்த ஆர்வம் அடங்கும் முன்னர், எனது பாக்கியம், இதுவரை யாரும் கண்டுபிடிக்காத சோழர்களின் ஓவியங்களை தஞ்சை பெரிய கோயிலில் நான் கண்டுபிடித்தேன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர், நான் எனது நண்பர் திரு T.V. உமாமகேஷ்வரம் பிள்ளையுடன் பெரிய கோயிலை தரிசிக்க சென்றேன். அப்போது சிறு எண்ணை விளக்கின் மங்கிய வெளிச்சத்தில், கருவறையை சுற்றி உள்ள வெளி பிரஹாரத்தின் சுவரில் சில ஓவியங்களின் சுவடுகள் தெரிந்தன.

ஆனால் நேற்று தான் ஒரு சிறு பெட்ரோமாக்ஸ் விளக்கின் பிரகாச ஒளியில் அந்த ஓவியங்களை மீண்டும் சென்று பார்த்தேன். அதன் வெளிச்சத்தில் தெரிந்த ஓவியங்களைப் பார்த்தவுடன் மனம் சற்று தளர்ந்தது – சோழர் காலத்து அற்புத ஓவியங்களின் ஒரே சான்றை கண்டுபிடிக்க எண்ணிய எனக்கு, தெரிந்தவை அவை அல்ல. ஓவியங்கள் சோழர் காலத்தை விட பல நூற்றாண்டுகள் பிந்தைய பாணியில் இருந்ததைக் கண்டு மனம் தளர்ந்தேன்.

இருந்தும், மேற்கு சுவரை அருகில் சென்று பார்வையிட்டேன், அப்போது மேல் பூச்சு உதிர்ந்த நிலையில் இருந்தது. தொட்டவுடன் பொடிப்பொடியாக விழுந்தது. ஆனால் அதன் பின்னால் இருந்த சோழர் கால அற்புத ஓவியத்தை வெளிக்காட்டியது. நெஞ்சம் படபடக்க முதல் முதலில் சோழர்களின் அற்புத ஓவியக்கலையின் ஒரே இருப்பிடத்தை கண்டுபிடித்த பெருமிதம் அடைந்தேன்.

S.K. கோவிந்தசுவாமி – தி ஹிந்து , ஏப்ரல் 11, 1931

ஹிந்து

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பயணம் – இன்று தான் அதன் நிறைவை அடைந்துள்ளது, நிறைவு என்று சொல்வதை விட புதிய துவக்கம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த ஓவியங்களை இதுவரை கண்ணால் கண்டவர் சிலரே. சாமானியர்கள் இதுவரை ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்டும் வல்லுனர்களின் புகழாரத்தையும், எங்கோ இங்கும் அங்கும் மங்கிய ஒளியில் சிறு அளவில் நாளேடுகளில் வரும் படங்களை மட்டுமே பார்த்து மனதை தேற்றிக்கொண்ட காலம் மாறி, அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணம் வந்துள்ளது – சோழர் கால ஓவியங்கள் நூல். தமிழ் நாடு அரசு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், முனைவர் ம. இராசேந்திரன் , ஓவிய ஒளிப்படக் கலைஞர் திரு ந. தியாகராசன், ஓவியர் திரு சந்துரு , திரு ராஜவேலு மற்றும் பலரின் அயராத உழைப்பினால் இந்தப் பொக்கிஷம் இன்று நம் கண்களின் முன்னே ஜொலிக்கிறது.

இந்த ஓவியங்களை பற்றிய நூல் பற்றி பல முறை நாளேடுகளில் படித்து ஆர்வத்துடன் பல காலம் காத்து நின்ற எனக்கு, நண்பர் திரு பத்ரி ( கிழக்கு பதிப்பகம்) முக நூலில் சிறு நூல் அறிமுகம் இட்டவுடன் ஆர்வம் தலைக்கு எட்டிவிட்டது. கூடவே பயம், அரசு வெளியீடு, உலகத்தரம் இருக்குமா, ஓவியங்களை சரியான முறையில் படம் எடுத்து இருப்பார்களா? தாள் நன்றாக இருக்குமா (ரூபாய் 500 தான் விலை!) – என்றெல்லாம் எண்ணம் சென்றது. இருந்தாலும் இரு நண்பர்களிடம் சொல்லி வைத்தேன். நண்பர் திரு. ராமன் அவர்கள் அனுப்பி வைத்தார். மூன்று வாரங்களுக்கு முன்னர் கையில் கிடைத்தது. பொதுவாக இந்த அளவு நூல் ஓரிரு நாட்களில் முடித்துவிடுவேன். எனினும் இந்த நூலில் ஒரு பக்கம் பார்க்க வாரங்கள் பல தேவைப்பட்டன. ஆஹா, என்ன அற்புதமான வடிவமைப்பு , அருமையான புகைப்படங்கள், அச்சிட்ட தாள் நல்ல உலகத்தரம், கூடவே பழம் வழுக்கி தேனில் விழுந்தவாறு ஒவ்வொரு புகைப்படத்துடன் அதன் கோட்டோவியம். ஓவியர் திரு மணியம் செல்வன் அவர்களை சென்ற வாரம் சந்திக்க நேர்ந்தது. அவரும் பார்த்து விட்டு பாராட்டினார். தனது தந்தை ஓவியர் திரு மணியம் அவர்கள் இதே சோழர் ஓவியங்களை வரைந்தார் என்றும், அவற்றையும் காட்டினார்.

அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு சாம்பிள். புகழ் பெற்ற தக்ஷிணாமூர்த்தி ஓவியம்.

(சிறிய அளவு கோப்பைகளை மட்டுமே இட்டுள்ளேன். நூலில் இன்னும் அருமையாக உள்ளது!)

அடுத்து, கோட்டோவியம்.

இந்த ஓவியங்களில் இன்னும் ஆராய ஆயிரம் விஷயங்கள் உள்ளன. கண்டிப்பாக பலர் இந்த நூலின் உதவியுடன் அந்த ஆராய்ச்சிகளை செய்து முனைவர் பட்டம் பெறுவார்கள். உதாரணத்திற்கு இந்த ஓவியத்தின் இடது பக்கம் சற்று கவனியுங்கள்.

படத்தில் காட்டியுள்ளேன். அஷ்ட புஜ (எட்டு கைகள்) பைரவர் உருவம் தெரிகிறதா?

நூலின் உதவி இப்போது பாருங்கள்.

பார்த்தவுடன் பைரவர் உருவம் எங்கோ பார்த்த நினைவு. உடனே தேடி பார்த்தேன். முதலில் கிடைத்தது பெரிய கோயில் முன் வாயிலில் இருக்கும் க்ஷேத்ர பாலர் சிலை.

உருவ ஒற்றுமை இருந்தாலும், திரிசூலம் மாறி இருப்பதால் இந்த சிலை இல்லை.

அடுத்து தஞ்சை கலைக்கூடம் செப்புத் திருமேனி (படங்கள் திரு ராமன் மற்றும் என் தம்பி திரு பிரசன்னா கணேசன்)

அறிவுப்பு பலகை படி 11th C CE, திருவெண்காடு

இந்த சிலை பற்றி மேலும் படிக்க Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994 – Price Rs. 386), இந்த விவரங்கள் கிடைத்தன

வேலைப்பாட்டின் அடிப்படையில் இந்த பைரவர் சிலை நாம் முன்னர் பார்த்த ரிஷபவாகன சிலையின் காலத்தை ஒட்டி உள்ளது,

ரிஷபவாகன சிலை

ஆனால் இந்த சிலையில் பல புதிய பாணிகள் உள்ளன. இதுவரை நாம் இவற்றை சந்தித்தது இல்லை.

எட்டு கரங்களுடன் பைரவர், நேராக (வளைவுகள் இல்லாமல்) – அதாவது சாம பங்க முறையில் நிற்கிறார்.
மேலும் சிகை அலங்காரம் தலைக்கு மேலே ஒரு அலங்கார வடிவில் உள்ளது. ஒரு பக்கம் அரவமும், பிறை சந்திரனும், மறு பக்கம் மலரும் உள்ளன.

இரு காதுகளிலும் பத்ர குண்டலங்கள் உள்ளன. இந்த வடிவத்தின் ரௌத்திர குணம் தெரிய, புருவங்கள் இரண்டும் நெரிந்தவாறும், பிதுங்கிய கண்களும், கோரைப் பல்லுடனும் இருக்கிறார் பைரவர். எனினும் அந்தக் காலத்து ஸ்தபதிகள் கோர / ரௌத்திர வடிவங்களையும் அழகுடன் வடித்தனர். எனவே புருவம், கண்கள் , கோரைப் பல் எல்லாம் இருந்தும் சிலை பயங்கரமாகத் தோற்றம் அளிக்காமல் சற்று அமைதியாகவே அழகாக உள்ளது.

கழுத்தில் இருக்கும் மாலை, அதில் தொங்கும் அணிகலன், அனைத்தும் நாம் முன்னர் பார்த்த ரிஷப வாகன சிவன் சிற்பத்தை ஒட்டி உள்ளது. பின்னிய இரு இழைகளாக இருக்கிறது யக்ஞோபவீதம். ஒரு பெரிய மாலை – அதில் சிறு சிறு மண்டை ஓடுகள் – முண்ட மாலை.

கைகள் விசிறி போல விரிந்து இரு பக்கமும் உள்ளன. மிகவும் அழகாக சிலையுடன் இணையும் இவை அருமை. மேல் கையில் இருக்கும் நாக வளையல் இந்த சிலையின் தனித்தன்மை. இங்கே தான் நம் பெரிய கோயில் ஓவியத்தில் வரும் பைரவர் சிலையுடன் சிறு வித்தியாசம் தெரிகிறது.

மேல் வலது கை, மேல் இடது கை மற்றும் கீழ் இடது கை தவிர (அவை முறையே உடுக்கை, மணி மற்றும் ஓடு ஏந்தி உள்ளன) மற்றவை கடக முத்திரையில் உள்ளன.

இடுப்பில் இரு அரவங்கள் உள்ளன. மிகவும் அழகாக அவற்றை அணிகலன் போல உபயோகித்துள்ள சிற்பியின் திறமை அபாரம்.

இங்கே தான் நமக்கு துப்பு கிடைக்கிறது. ஓவியத்தில் ஒரே ஒரு பாம்பு தான் உள்ளது. அப்போது இந்த சிலை அந்த ஓவியத்தில் உள்ள சிலை அல்ல!!

நீண்ட பதிவை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இந்த நூலின் அருமை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக வாங்கிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இதை இவ்வவளவு அழகாக வெளியிட்டு சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தமிழகக் கோயில் வாகனங்கள் – பிரதீப் சக்ரவர்த்தி

நான் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்களை நேரில் பார்த்தது இல்லை (இதுவரை). சென்ற மே மாதம் முக நூல் அறிமுகம் கிடைத்தது. முதல் உரையாடல் முடிந்தவுடனே புரிந்தது. இவர் சாதாரண நபர் இல்லை என்று. கூகிளார் உதவியுடன் அவர் நாளேடுகளுக்கு எழுதிய பதிவுகள் கிடைத்தன. இப்படி ஒரு விவேகமும் தீர்க்க சிந்தனையும் அத்துடன் நல்ல ஆராய்ச்சி செய்து மக்களுக்கு சென்றடையும் எளிய முறையில் எடுத்துச் செல்லும் நோக்கம் உடைய இவர், எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், வெற்றிகரமாக சென்னையில் ஒரே வருடத்தில் முப்பது ஆலய நடை (டெம்பிள் வாக் ) நடத்தினார் என்பதையும் படித்தேன். சமீபத்தில் அவர் ஆற்றிய சில உரைகளின் படமும் இணையத்தில் கிடைத்தது. அப்போது தான் புரிந்தது நவீன ஆடைகளுக்குள் பழைய காலத்து கதாகாலக்ஷேபம் செய்யும் வித்தகர்கள் போன்று ஹாஸ்யம் கலந்து மக்களை தன வசம் இழுத்து நல்ல கருத்துக்களை அவர்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வசீகரம் கொண்ட ஒரு வித்துவான் இருக்கிறார் என்று.

இப்படி இருக்கையில், அவர் விரைவில் இரு நூல்களை வெளியிடுகிறார் என்றதும் மகிழ்ந்தேன். தஞ்சை பற்றிய ஒரு நூல் ” Thanjavur – A Cultural History” மற்றும் ” தமிழகக் கோயில் வாகனங்கள் “. முதல் நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. இரண்டாவது நூல் சமீபத்தில் சன்மார் நிறுவன பதிப்பகமான கலம்க்ரியா அவர்கள் உதவியுடன் வெளிவந்துள்ளது.

வாகனம் என்றவுடன் நினைவுகள் சலசலவென பின்னோக்கி ஓடின. ஏன் முதல் மிதிவண்டி – பி எஸ் ஏ நிறுவனம் எஸ் எல் ஆர்!, கொஞ்சம் போன பின்னர் அட்லாஸ் நிறுவன எம் டி பி! அப்பாவின் லாம்பி ஸ்கூட்டர், பல ஆண்டுகள் கழிந்த பின்னர் பஜாஜ் சேடக்! அப்போது சாலைகளில் நான்கு பேர் ஒரே சேடக் மேல் பயணம் செய்யும் பொது அருகில் செல்லும் அம்பாசடர் அல்லது ஃபியட் கார்கள் (பெங்களூர் ஆசாமிகள் மட்டும் அந்த பிரீமியர் பத்மினியை விட மாட்டார்கள்!!). நடுவில் ஸ்டாண்டர்ட் 20000, மின்மினி போல வந்து மறைந்தது. பிறகு மாருதி 800 களின் ஆதிக்கம் என்று, நமக்கோ அந்நாட்களில் அர்னால்டு படம் பார்த்துவிட்டு ஹர்லி டேவிட்சன் மோகம், ராயல் என்பீல்ட் புல்லட் என்று ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டை!! ஒரு சிறு வரலாறு. எனினும் நாம் இன்று இன்னும் பின்னோக்கிச் செல்கிறோம், கால் நடை, மற்றும் கால்நடை வாகனங்களே இருந்த காலம். அந்தப் பாரம்பரியத்தை இன்றும் போராடி காத்து நிற்கும் கோயில் வாகனங்கள்.

ஆம் போராட்டம் தான். வருடத்தில் ஒரு நாளோ இரண்டு நாட்களோ வெளியில் வரும் இவை, அதுவும் தமிழ் நாட்டில் தினசரி பூஜை நடத்தவே திண்டாடும் நிலையில் உள்ள கோயில்களில் விழா எடுக்க எங்கே முடிகிறது, அப்படியும் விழா நடந்த பின்னர், பூட்டிய இருட்டு அறைகளுக்குள் வசிக்கும் இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. ஆலயத்தை சுற்றி வரும்போது கண்ணில் பட்டால் பார்ப்பது கூட இல்லை. இந்த நிலை அங்கு தூண்களில் உள்ள அருமையான சிற்பங்கள், விமான/கோபுர சுதை வேலைப்பாடுகள் என்று பல கலை பொக்கிஷங்களின் இன்றைய அவல நிலை தான். அப்படி இருக்கும் இவற்றில் வாகனங்களைப் பற்றி எழுத எண்ணிய பிரதீப் அவர்களுக்கு முதலில் ஒரு பாராட்டு.

நூல் முகம் பார்த்தவுடனே நெஞ்சம் கொள்ளை போனது. அருமையான கோட்டோவியம். முகப்படம் மட்டும் அல்ல, ஒவ்வொரு வாகனத்தையும் அருமையாக வரைந்துள்ளார் திரு V. விஜயகுமார் அவர்கள். மென்மேலும் இப்படி பல ஓவியங்களைப் படைத்து அமரர் சில்பி மற்றும் ஓவியர் பத்மவாசன் போன்று வரவேண்டும் என்று வாழ்த்துக்கள். மேலும் இந்த முழு நூலையும் இரு மொழிகளில் படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. முதல் பார்வையிலேயே இந்த நூல் ஆர்வலர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியரின் முன்னுரை படிக்கும் போது ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது. இப்படி எதற்காக ஒரு முன்னுரை ஆரம்பம் என்று தோன்றியது? தனது நிலையை தைரியமாகவும் தெளிவாகவும் விளக்க ஆசிரியரின் இந்த வெளிப்படையான எழுத்துக்கள் நமது சமயத்தில் இன்றும் இருக்கும் பிரிவுகள் பற்றி நினைவூட்டின. தொடர்ந்து படிக்கையில் அவர் நூல் அறிமுகத்தில் சுட்டிக்காட்டும் ஒரு கல்வெட்டுக் குறிப்பு நூலின் தன்மையையும் ஆசிரியரின் நோக்கங்களையும் அருமையாக எடுத்துக்காட்டியது.

நூலின் பொருளடக்கம் இதோ. பல அறிய வாகனங்களைத் தேடி பிடித்து விவரித்துள்ளார் பிரதீப்.

நமக்கென்று நூலில் இருந்து ஒரு சிறப்பு பார்வை – அதிகார நந்தி.

எனக்கு மிகவும் பிடித்த வாகனம் கைலாச வாகனம், அடியில் சிக்கி இருக்கும் இராவணன் , தனது ஒரு தலையை கொய்து தன கையையே தண்டாக கொடுத்து நரம்புகளை மீட்டும் காட்சி அருமை.

அடுத்து ஆடு வாகனம், ஆமாம் சரியாகத் தான் படிக்கிறீர்கள். பிரதீப் எந்த அளவிற்கு இந்த நூலிற்காக உழைத்துள்ளார் என்பது இந்த வாகனத்திற்கு அவர் கொடுக்கும் இலக்கிய சான்றுகள் மூலம் தெரிகிறது.

எல்லா வாகனங்களும் பிராணிகள், பறவைகள் , தேவர்கள் என்பது இல்லை. சில மரங்களும் வாகனங்களாக உள்ளன. நமது முன்னோர் இயற்கையை எப்படி கொண்டாடி வழிபட்டனர் என்பதன் குறிப்புகளே இவை. (நாம் இந்தப் பாடத்தை என்று தான் கற்போமோ!)

நமது மதம் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதில் வரும் புராணக் கதைகள், அத்துடன் வரும் முரண்பாடுகள், எல்லாம் அழகு தான். ஒரு புலி வாகனத்தை பற்றிய சிறு குறிப்பில் கூட வாதம் ஏற்படலாம் என்பதும் அழகு தான்.

நூல் ஆசிரியர், ஓவியர், மற்றும் இதை உருவாக்கி வெளி கொண்டுவந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நூலை படிக்கும் போதே, முன்னிரவு நேரத்தில் ஜன நெரிசல் நிறைந்த வீதியில், தாரை தப்பட்டை ஓசையுடன், ஆடி ஆடி பவனி வரும் கம்பீர வாகனத்தின் மேல் அமர்ந்து வரும் சுவாமி தரிசனம் மட்டும் அல்லாமல், ஒளியுடன் மண்ணெண்ணெய் உமிழும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வாசமும் வருகிறது.

பின் குறிப்பு: தற்போது நூல் முதல் பிரதிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. விரைவில் அடுத்த பிரதி வெளிவரும் !

காமுகனின் முரட்டு இழுப்பும் , மனம்கொண்டவனின் அன்பு அணைப்பும் !

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை ஒட்டிய கதை ஒன்றை எடுத்து இன்றைய சிறப்புப் பதிவாக இடலாம் என்று – மல்லைக்கு மீண்டும் செல்கிறோம். வராஹ அவதாரம். பெருமாள் பூமாதேவியை பாதாள உலகுக்கு கடத்திச் சென்ற ஹிரண்யாக்ஷனை வதம் செய்து மீட்டு வரும் காட்சி. நாம் முன்னரே பார்த்த ஒன்று தான். ஏன் மீண்டும் ?

இந்த காட்சியை வடித்த சிற்பி, அதில் கடினமான கருங்கல்லில், அதுவும் ஒரு குடைவரைக் கோயிலின் சுவரில் இப்படி ஒரு காட்சியை, அதுவும் அதில் இடம் பெரும் நாயகன் நாயகி – அவர்களின் பாவங்கள் , உணர்ச்சிகளை , கற்பனை ரசத்துடன் செதுக்கி உள்ளான். இதை முழுவதுமாக ரசிக்க சமீபத்தில் இணையத்தில் கிடைத்த ஒரு பளிங்கு சிற்பம் கொண்டு இந்த பதிவை அமைக்கிறேன். ( இந்தப் பிறவியில் நேரில் இந்த பொக்கிஷங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது. எனினும் நான் இன்னும் ரோமாபுரி சென்றதில்லை. படங்கள் அனநிதும் இணையத்தில் தேடி எடுத்தவை. முடிவில் சுட்டிகளை தந்துள்ளேன்) –

கருங்கல்லில் செதுக்குவதை விட பளிங்கு கல்லில் செதுக்குவது சுலபம் தான். ஆனால் தனது இருபத்தி மூன்றாம் வயதில் இந்த படைப்பை தந்த திரு பெர்னினி அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அப்படியே ஓரத்தில் ஒரு ஆசை – நமது பல்லவ சிற்பி மட்டும் பளிங்கில் செதுக்கி இருந்தால் ?

இன்று நாம் பார்க்கும் சிற்பம் “தி ரேப் ஆப் ப்ரோசெர்பின “. ரேப் என்பது கடத்தல் என்று படிக்கவும்.

சுவாரசியமான கதை கரு. ப்ளூடோ ப்ரோசெர்பினாவை கடத்திச் செல்லும் காட்சி. ப்ளூடோ பாதாள உலகுக்கு அதிபதி. அதன் வாசலை காக்கும் கொடிய மூன்று தலை நாய் – செரீப்ரஸ்

கதை இது தான். ப்ளூடோ காதல் வசப்பட வேண்டும் என்று எண்ணிய வீனஸ், தன மகன் அமோர் (அல்லது
குபிட் ) ஐ அங்கு அனுப்புகிறார். அவன் விடும் அம்பு ப்ளூடோவை தாக்குகிறது. அந்த சமயம் , ச்சிலி நகரில் தன தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் ப்ரோசெர்பினாவை , அருகில் இருக்கும் எட்னா எரிமலையில் ( வெடித்து) இருந்து வெளி வரும் ப்ளூடோ கடத்திச் செல்கிறார்.

மகளை காணவில்லை என்று அம்மா செரெஸ் ( பயிர்களின் கடவுள்) மனம் வருந்தி மகள் கிடைக்கும் வரை பயிர்களை விளைய விடாமல் செய்கிறாள். பூமி வரண்டு பாலைவனம் ஆகத்தொடங்கியது.

கவலை கொண்ட கடவுள் தலைவர் ஜுபி்டர், ப்ளூட்டோவை அதட்டி ப்ரோசெர்பினாவை விடுவிக்க கட்டளையிட்டார். ஆனால் அதற்குள் அங்கே இருந்த ஆறு பழங்களை தின்றதானால் ப்ரோசெர்பின ஆண்டுக்கு ஆறு மாதம் உலகிலும், ஆறுமாதம் ப்ளூடோவுடன் இருக்க வேண்டும் என்று ஆயிற்று !)

கதை நமது கதை போலவே வருகிறதே. பல்லவ சிற்பி, அந்த ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை கடத்திச் செல்லும் காட்சியை கல்லில் வடித்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்ப்போம்.

அந்தக் கற்பனையை மனதில் கொண்டு, பெர்னினி சிற்பம் கண்ணில் பார்ப்போம் . ப்ளூடோ பக்கம் இருந்து. ஒரு வலிமையான ஆணின் தாக்கம்.

ப்ரோசெர்பின பக்கம், வளைவுகள் நிறைந்த ஒரு பெண்ணின் போராட்டம்.

அப்படியே பல்லவ சிற்பத்தை பார்ப்போம். கம்பீரமாக தந்து தொடையில் அமர்த்தி அழகு பார்க்கும் பெருமாளின் வராஹ உருவம், மேன்மையும் மென்மையும் ஒருங்கே கொண்ட பூமாதேவி.

தன்னைக் கடத்தும் கொடியவனின் பிடியில் இருந்து விலக போராடும் அவலப் பெண்.

இங்கோ, தன்னை காப்பாற்றிய வீரனின் எதிரில் தேவி.

பெர்னினி, என்ன திறமை, பளிங்கு என்றாலும் கல் தானே. அதில் எப்படி தான் இப்படி செதுக்க முடிந்ததோ. மந்திரம் போட்டு குருதியும் சதையுமாக இருந்த இருவரை இப்படி கல்லாக மாற்றிவிட்டனோ. ப்ளூடோ கை ஒன்று அவள் மீது படும்போது, ஒரு அசுரத் தன்மை தெரிகிறது.

அவனை வெறுத்து தள்ளும் அவள் கை, அவன் முகத்தில் படும்போது

மல்லையில் ?? ஆஹா , பட்டும் படாமலும் ஒரு ஸ்பரிசம். வலது கை அன்பு ததும்பும் அணைப்பு, இடது கை தனது பொறுப்பான வேலையை ( அவளை காப்பாற்றுவது ) உணர்த்தும் வண்ணம் வலிமையான பிடி.

மங்கையின் முகத்தில் தான் என்ன ஒரு சோகம், வெறுப்பு. கண்ணீர். அந்த திறந்த வாய் அலறும் சத்தம் கேட்கிறதே. ஓடிப்போய் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி எழுகிறது

தேவியின் முகத்திலோ வெட்கம் , வலது கை அவர் மேல் பட்டும் படாமலும் அணைக்கும் அவரது நெஞ்சை சற்றே தொட்டுப் பார்க்க செல்கிறது, முகம் வெட்கி தலை சாய்கிறது, அதை இடது கை மறைக்க செல்கிறது.

ஆயிரம் ஆண்டுகள் சென்று விட்டன – இரண்டு மகா சிற்பிகளுக்கு இடையில், ஆனால் கலை வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒருவர் பெயர் உலக பிரசித்தம், மற்றொருவர் தனது பெயரை விட்டுச் செல்லவே இல்லை.

முடிவாக மீண்டும் ஒரு முறை இவற்றை பார்த்துக்கொண்டே – விடைபெறுகிறேன்.

படங்கள்:

மாமல்லபுரம் – அசோக் மற்றும் ஸ்ரீராம் ,
மற்றவை இணையத்தில்

Bernini's "Rape of Proserpine"
http://www.students.sbc.edu/vermilya08/Bernini/Pluto%20and%20Proserpina.htm
http://www.youtube.com/watch?v=nXR2YZxgDV4&feature=player_embedded#!
http://en.wikipedia.org/wiki/The_Rape_of_Proserpina

என்ன கொடுமை இது ?

தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழா சிறப்பாக நடை பெற்றது. அதை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தை பலரும் கண்டு ரசித்தனர். இந்த வாயிற் காவலனை நினைவிருக்கிறதா ?

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அந்த பதிவில் நாம் பார்த்த பொது இப்படி இருந்த சிலை ..

அதுவும் அதன் சிறப்பு – அதன் அடியில் உள்ள கல்வெட்டு வரிகள்

“உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

இந்த சிலையை மக்கள் பார்வைக்கு வைக்கும் பொது நீல நிற கம்பளி இட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட சிலை, அதன் பின் என்ன நடந்தது ?

விழா முடிந்தவுடன், அதன் இருப்பிடமான தஞ்சை கலைவளாகம் சென்றது இந்த சிலை. ஆனால் அங்கே அதை அதன் இடத்தில் திரும்ப வைக்கும் பொது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளனர் . அந்த அவல நிலையை நீங்களே பாருங்கள்.

சிலையை தரையில் புதைத்து சிமெண்ட் பூசிய கொத்தனாருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. எனினும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரியே மறையும் அளவிற்கு சிதைக்க அருகில் இருந்தவர்கள் விட்டு விட்டார்களே என்பது தான் மிகவும் கவலையாக உள்ளது.

ஆவணப் படுத்தும் கூடங்களே இப்படி இருந்தால் !!!

சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம் -பாகம் 2

சித்தன்னவாசல் ஓவியத்தை பற்றி முதல் பதிவை எழுதி பல மாதங்கள் ஆகி விட்டன. நண்பர்கள் பலரும் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாமதம் செய்யாமல் இதோ. (முதல் முறை தளத்திருக்கு வரும் வாசகர்கள் இந்த பதிவின் முதல் பாதியை படித்துவிட்டு இங்கு வரும்படி வேண்டுகிறேன். )

முதல் பாகம்

நண்பர் அசோக் உதவியுடன், பல நாட்கள் தவமிருந்து கிடைத்த புகைப்படங்கள். அசோக்கிடம் ஒரு கேமரா
ஒரு கணினி கொடுத்துவிட்டால் போதும். எந்த கடினமான இடத்திற்கும் சென்று திறம்பட படம் பிடித்து வந்துவிடுவார். அவர் மட்டும் இப்படி நமக்கு படங்களை தந்து உதவவில்லை என்றால், நாமும் சித்தன்னவாசல் போனேன் – எதையோ பார்த்தேன் என்று நடையை கட்டிக்கொண்டு போயிருப்போம்.

அந்த ஓவியங்களில் உள்ள காட்சிகளை, எப்படித்தான் அந்த ஓவியன், மேலே இருக்கும் சுவரில் , குடவரையில் உள்ள குறைவான வெளிச்சத்தில் , சாரம் கட்டி படுத்துக்கொண்டு தூரிகை கொண்டு தீட்டினானோ என்று மீண்டும் மீண்டும் வியக்கத் தோன்றுகிறது.

சென்ற பதிவில் பார்த்த குளம் காட்சியின் தொடர்ச்சி தான் இன்று. மூன்று பறவைகள், ஒரு மனிதன், ஏன் ஒரு யானை கூட இங்கே இருக்கிறது என்றால் – முதல் பதிவை கூர்ந்து கவனிக்க தவறியவர்கள் – நம்பமுடியுமா. கூடவே எங்கும் நீந்தும் மீன்கள் வேறு

கட்டம் கட்டி காட்டுகிறேன் – இப்போது தெரிகிறதா ?

சரி, சென்ற பதிவை போலவே, மற்ற இடங்களில் வண்ணம் இல்லாமல் இதோ

இப்போது தெரிகின்றனவா ? மேலே, இடது பக்கம், ஒரு பறவை கண் தெரிகிறதா ?

வலது பக்கம் ஒரு மீன் ?

அடுத்து இரு பறவைகள் மற்றும் மீன்கள்?

கோமணத்துடன் குளத்தில் இறங்கி பூக்களை பறிக்கும் வாலிபர் ?

கோட்டோவியம் இதோ !

வாலிபர் பறிக்கும் பூக்களில் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அதை முடிவில் பார்ப்போம், அடுத்து கம்பீர தந்தங்களை கொண்ட யானை.

அதனைச் சுற்றியும் மீன்களின் கூட்டம்

அடியிலும் இன்னும் நிறைய நீந்தும் மீன்கள்

நாம் கவனிக்க வேண்டிய விஷயம், குளத்தில் தாமரைப் பூக்களும் அல்லிப் பூக்களும் இருக்கின்றன. இவற்றை முறையே பறிக்கும் காட்சி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.


இரு மலர்களின் வேற்றுமையை மலர்களின் தண்டுகளில் காட்டியிருக்கிறான் ஓவியன். இதற்கு மீண்டும் ஒருமுறை மேலே இருக்கும் இரு மலர்களை அருகில் சென்று பார்ப்போம்.

இணையத்தில் கிடைத்த படங்கள் – தாமரை மற்றும் அல்லி மலர்களின் தண்டுகள்

அல்லித் தண்டு வழவழவென ஒரு மங்கையின் கரம் போல இருக்க, தாமரைத் தண்டோ முரடனின் கைகளை போல உள்ளன – பார்த்தீர்களா? இப்போது மீண்டும் ஓவியத்தை பாருங்கள்

என்ன அருமையான கலை – நமது ஓவியக்கலை !

எளிபாண்டா குடவரை புத்த மதம் சார்புடையது, சிவனாக இருந்தால் கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே !

இணையத்தின் வளர்ச்சி , கூகிள் , விக்கி போன்ற வசதிகள் நம் படைப்புகளுக்கு மிகுந்த பலத்தை தருகின்றன. எனினும் நாம் அவற்றை உபயோகிக்கும் முறை சரியா , அவற்றை கொண்டு நாம் படைக்கும் படைப்புகள் நம்பகத்தன்மை உடையனவா என்ற எச்சரிக்கை கலந்த பொறுப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் அவையும் ஆவணங்களாக மாறுகின்றன. என்ன இது திடீரென இப்படி ஒரு கருத்து என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இணையத்தில் எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவற்றில் சாதி, மதம் என்று பல இறுக்கமான விஷயங்கள் , இதமாக மருந்திட்டு ஆறவிடாமல் , சிலர் கார சாரமாக எழுதி வாசகர் எண்ணிக்கை கூட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் ஆரா புண்ணாய் எரிய விடுகின்றனர்..

சில வருடங்களுக்கு முன்னர், சிலைகளை பற்றி நடந்த உரையாடல் ஒன்றில், நண்பர் ஒருவர், எளிபாண்டா குடவரை திருமூர்த்தி சிலையின் படத்தை போட்டார். இணையத்தில் அரை குறையாக அங்கு புத்த மத குடைவரைகளும் உள்ளன என்று படித்துவிட்டு, அவர் இதுவும் ஒரு புத்தர் சிலை. சைவர்கள் அணைத்து குடைவரைகளையும் வன்முறையால் எடுத்து, அங்கு உள்ள புத்த வடிவங்களை மாற்றி விட்டனர் என்றும், அத்தாட்சி படத்தில் இருக்கும் சிலையின் நீண்ட காதுகளை பாருங்கள் என்றார். மேலும் “இந்த படத்தை உற்று நோக்குங்கள் பாலமுகம், கம்பீரமுகம் நம்மை பார்ப்பது , தளர்ந்த முகம் சோத்தாங்கை பக்கம்,இது மத சின்னங்களான பட்டை, நாமம், எல்லாம் எங்கே, சங்கு எங்கே சக்கரம் எங்கே கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே ?” என்றும் எழுதினார்.

இந்த படத்தை தான் அவர் அங்கு இட்டார். கீழே இருக்கும் தலத்தில் இருந்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

Temple net தளம்

இதை முதல் பார்வையில் பார்க்கும் வாசகர்கள் அவர் சொல்வது சரிதானோ என்ற ஐயம் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் விடை அளிக்க நாம் முயற்சி செய்வோம்.

முதலில் அவர் இட்ட படமே தவறு. உற்று பாருங்கள், அவர் சொல்லும் சோத்தாங்கை பக்கம் ( உங்களுக்கு) மீசையுடன் இருக்கும் சிலை அப்படி இருக்காது. ஏன் ? யாரோ செய்த குற்றம், படம் மாறி வலையில் ஏற்றி உள்ளார். சரியான படம் இதோ.

எங்கே பாம்பு என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் மிகவும் சுலபம். அதை பார்க்கும் போதே இந்த நபர் தான் சொல்லும் இடத்திற்கு சென்றதே இல்லை என்பதும் தெளிவாகிறது. இந்த பதிவில் வரும் படத்தை பாருங்கள்.

பதிவு

அருகில் சென்று பாருங்கள். கையில் பிடித்திருப்பது என்ன ?

இந்த தலத்தில் 12வது படத்தை பாருங்கள் ( ASI இணைய தளம்)

ASI இணைய தளம்

திரு ஜார்ஜ் மீச்சேல் அவர்களது ஆங்கில நூல் “ELEPHANTA” , அதில் அவர் மிக அழகாக அருமையான படங்களுடன் முழு குடவரையையும் விளக்குகிறார். அவரது நூலில் இருந்து சில படங்கள் ( இன்னும் ஒரு பாம்பு உள்ளது )

பாம்பு பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியாயிற்று . அடுத்து நீண்ட காதுகள். ஆகமம், சிற்ப சாஸ்திரம் என்று முழுவதுமாக விவரிக்காமல் , மேலோட்டமாக பார்ப்போம். ( மேலே படிக்க வேண்டும் என்றால் திரு கோபிநாத் ராவ் அவர்களது Elements of Hindu Iconography நூலை படிக்கவும் – ஒரே ஒரு பக்கம் மட்டும் இணைக்கிறேன் ),சிற்ப சாஸ்திரங்கள் சமண, பௌத்த , இந்து சிற்பங்கள் என்று தனித்தனியாக பிரிப்பதில்லை. எல்லா சிலைகளுக்கும் ஒரே அளவுகள் தான்.

உதாரனத்திற்க்கு, அவர் காதை பற்றி கேள்வி எழுப்பியதால், சிற்ப சாஸ்திர முறை படி வரைந்த ஒரு காதை ( அதே நூலில் இருந்து ) பாருங்கள்.

இந்தக் காது, நமது திருமூர்த்தி உருவத்தின் காதின் அளவுகளுடன் ஒத்து போகுமா ? முழு ஆராய்ச்சி போல அகல நீளம் அளக்க வில்லை – நம் பார்வைக்கு எப்படி தெரிகிறது என்று மட்டும் இப்போதைக்கு பார்ப்போம்.


சுவாரசியமாக இருக்கிறது அல்லவா. சரி, இதே காது , ஒரு சிவன் சிலைக்கு பொருந்துமா. எதோ ஒரு சிவன் சிலை இல்லை, சோழர் கால செப்புத் திருமேனி, அதுவும் புகழ் பெற்ற ரிஷபாந்தகர் சிலை ( நாம் சில தினங்களுக்கு முன்னர் பார்த்த வடிவம் தான் )

அவரது காது இப்போது நமக்கு தேவை. இதோ

இரண்டு காதுகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா ?

7832
7858

எப்படி இருக்கிறது பொருத்தம் ?

நண்பர், மேலும் குடவரையில் இருந்த அணைத்து பெளத்த சிலைகளையும் சைவ சிலைகளாக மாற்றிவிட்டனர் என்றும் கூறினார். நண்பர் நன்றாக தேடி படித்து பார்த்திருந்தால் , குடவரைக் கோயில் – ஒரே கல்லால் ஆனா சிலைகள் இவர். அதுவும் ஒன்றோ இரண்டோ சிற்ப்பங்கள் இல்லை, மொத்தம் பதினாறு புடைப்புச் சிற்ப்பங்கள், வாயிர்க் காப்போன், பூத கணம் என்று ஒரு பெரும் படையே உள்ளே இருக்கு என்று நண்பருக்கு தெரிந்திருக்கும்.

விக்கி தலத்தில், குடைவரையின் அமைப்பு , அதில் இருக்கும் சிற்ப்பங்கள் என்று முழு விவரமும் இருக்கின்றனவே!!

Wiki layout of Elephanta

நடு மண்டபம்

1. ராவணன் கைலாய மலையை அசைக்கும் காட்சி
2. ஈசனும், உமையும் கைலாயத்தில்
3. உமையொருபாகர்
4. திருமூர்த்தி
5. கங்காதர வடிவம்
6. பார்வதி கல்யாணம்
7. அந்தகாசுரன் வதம்
8. நடராஜர்
9. யோகிஷ்வர
16. லிங்கம்

கிழக்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்

10. கார்த்திகேயன்
11. மாத்ரிகா
12. பிள்ளையார்
13. வாயிர்க் காப்போன்

மேற்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்

14. யோகிஷ்வர
15. நடராஜர்

ஒவ்வொரு சிற்பமும் அருமையான படைப்புகள். ஆனால் எங்கும் ஒரு கல்வெட்டு கூட இல்லை, இதன் காலம், கட்டிய மன்னர் யார் – எதுவும் தெரியவில்லை. சுமார் கி பி 8th நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் குப்தர் இல்லை சாளுக்யர் கலை தாக்கம் இருக்கிறது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். .

உண்மை ..அறிவு …ஆனந்தம்

ஒரு மோதிரத்தை தேடி

மோதிரங்கள் நமது வரலாற்றுடன் பின்னிப் பயணிக்கும் ஒரு அணிகலன். அதை அணிய வேண்டும் என்றால் உடலை வருத்தி ( குத்தி )ஓட்டை போடத் தேவை இல்லை ) – மேலும் , கால் விரல்களை சேர்த்தல் இருபது மோதிரங்களைக் கூட எளிதாக அணியலாம், ஒரே விரலில் ஒன்றுக்கு மேல் போட்டுகொண்டால் – எண்ணிக்கை மேலும் பெருகும். உலக வரலாற்றில் ( விக்கி ) குறிப்புப்படி சுமார் 4800 ஆண்டு காலாசாரம் இது. எனினும் நமது பரத கண்டத்தில் ( நமது புராணங்களின் காலத்தை நிர்ணயிக்கும் சர்ச்சை இங்கு வேண்டாம் !!) முத்திரை மோதிரங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அசோகா வனத்தில் சீதை அனுமனை ஸ்ரீ ராமனின் கணையாழி கொண்டு அடையாளம் கண்டு்கொண்டது, மனையாளை மறந்த துஷ்யந்தன் முனி சாபத்தால் நினைவு திருந்தாமல், பின்னர் மீன் வாயில் சிக்கிய தன முத்திரை மோதிரம் கண்டு சகுந்தலையை நினைவு கூர்வதும், தன சொந்த மகனான பரதனைக் கண்டு கொண்டதும் , என்று இந்த சிறு அணிகலன் ஆற்றும் பணி மிக முக்கியம்.

இன்று நாம் ஒரு மோதிரத்தைத் தேடிச் செல்கிறோம், இந்த பயணத்தின் மூலம் இரு வரலாற்றுச் சின்னங்களை ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய எத்தனிக்கிறோம். அணிகலன்கள் மற்றும் செப்புத் திருமேனிகள். ஒன்றுக் கொன்று, தங்கள் காலத்தை துல்லியமாக நிர்ணயிக்கும் பணிக்கு, எவ்வாறு உதவி செய்கின்றன ? இதன் மூலம் நம் வாசகர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. உலகெங்கும் இருக்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளை பல கோணங்களில் படம் எடுப்பதன் முக்கியத்துவம் விளங்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிவு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடந்த விழா , மற்றும் விழாவை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. திரு ராமன் அவர்கள் அருமையாக விழாவை படம் பிடித்து வந்தார். அதில் ஒன்று கண்ணைப் பறித்தது. சோழர் காலத்து அணிகலன்கள் – இதுவரை கண்டிராத ஒன்று, அதை பற்றி நூல்களிலும் வந்த மாதிரி தெரியவில்லை.

ஆர்வலர்கள், நாங்கள் இருவரும் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்தோம்.

திரு ராமன் அருங்காட்சியகத்தில் இருந்த பல செப்புத் திருமேனிகளை படம் பிடித்ததும், நான் சென்ற டிசம்பர் மாதம் சென்னை அருங்காட்சியக சிலைகளை படம் பிடித்ததும் மிகவும் உதவின. அதிலும் தஞ்சையில் சிலைகளின் மிக அரு்கில் சென்று அவரால் படம் எடுக்க முடிந்தது. ( சென்னையில் கண்ணாடி போட்டு சிரமமப் படுத்துவார்கள் )

தனியாக பார்க்கும் மோதிரத்தை சிலையில் தேடும் பணியில் ஈடுபட்டோம்.

அதற்கு முதலில் மோதிரத்தின் நல்ல படங்கள் – இதோ

என்ன ஒரு அருமையான மோதிரம்.

முதலில் , CE 10th நூற்றாண்டு, உமையம்மையின் சிலை, கொடிக்காடு , வேதாரண்யம் தாலுகா, நாகை

அருமையான சிலை – எனினும் நேராக மோதிரங்களுக்கு போவோம்.

கையில் இருக்கும் மோதிரங்கள், பொதுவாக எளிமையாகவே உள்ளன. தடிமனான கம்பி போலவும் , அதில் சிறு வேலைப்பாடும் தெரிகிறது.

அடுத்து ஒரு நூறு ஆண்டுகள் அடுத்து , CE 11th நூற்றாண்டு உமையம்மை தம் தோழியுடன் , திருவேங்கிமலை , திருச்சி

இன்னும் அருகில் சென்று, இடைப்பட்ட காலத்தில் அணிகளின் வடிப்பதிலும் அணிவதிலும் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்போம்.

நல்ல மாற்றம் தெரிகிறது. நடுவில் கல் பதித்து, அதை சுற்றி சிறு மலர் இதழ்கள் விரிவது போல இருப்பது நன்றாக தெரிகிறது.

அதே நூற்றாண்டை சேர்ந்த உமையொரு பாகர், 11th C CE, திருவெண்காடு , மயிலாடுதுறை .

உமை பாகத்தில் உள்ள கையில் இருக்கும் மோதிரத்தை அருகில் சென்று பார்ப்போம்.

சென்ற சிலையை விட சற்று எளிமையாக உள்ளன மோதிரங்கள். இந்த சிலை 11th நூற்றாண்டின் முதல் பாதியில் வடித்ததாக கொள்ளலாமோ?. மோதிரம் சற்று தட்டையாகவும், நடு பகுதி சற்று விரிவு பெற்று தெரிகிறது.

இன்னும், 12th மற்றும் 13th நூற்றாண்டு சிலைகளை தேடி, அவற்றில் இருக்கும் மோதிரங்களை ஆய்வு செய்யவேண்டும், எனினும் அடுத்து நாம் பார்க்கும் சிலையில், நம் தேடல் வெற்றி பெற்றது. உமை, தேவர்கண்டனல்லூர் , திருவாரூர்.

இந்த சிலையின் காலம் தெளிவாக இல்லை. சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொது 14th C CE என்றும், தஞ்சையில் 15th நூற்றாண்டு என்றும் பலகைகள் உள்ளன. ( அருங்காட்சி அட்டவணை நூலில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் )

எனினும், உமையின் வலது கையில் நம் தேடலின் நிறைவு …

அருகில் சென்று பாருங்கள், நாம் தேடிய மோதிரம் – இதோ இந்த செப்புத்திருமேனியில்

இப்போது கடினமான கேள்வி – இந்த மோதிரத்தின் காலம் என்ன ?

நமது பாரம்பரியத்தின் இன்னொரு முகம். பழைய நாணயவியல் ஒரு முதல் பார்வை – மின் அரட்டை

நண்பர்களே, இன்று நாம் ஒரு புதிய கோணத்தில் இருந்து இந்த அற்புதக் கலையை பார்க்கப்போகிறோம். சிலை , சிற்பம் என்று இது வரை நம் பாரம்பரியத்தை பார்த்துவந்த எனக்கு திரு ராமன் சங்கரன் அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் நாணயவியல் நிபுணர், நம்முடன் அவரது அனுபவங்களை பகிர்கிறார். இதை அப்படியே ஒரு கேள்வி பதில் பேட்டியாக அமைத்துள்ளேன். முதல் பாகம் – அறிமுகம் இதோ.

Me : சார், காலை வணக்கம். எங்களை இந்த பயணத்தில் எடுத்துச் செல்ல எண்ணும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு எங்கள் முதல் நன்றி. முதல் கேள்வி, எல்லோரும் கேட்பது போலவே தொடங்குகிறேன். உங்களுக்கு் இந்த நாணயங்கள் சேகரிக்கும் ஆசை எப்போது துவங்கியது.

RAMAN: நான் பள்ளியில் படிக்கும் போதே பிரிட்டிஷ் இந்தியா காசுகளை சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது கூட நினைவில் உள்ளது ஒரு ரூபாய் கொடுத்து ஒரு அரையணா காசை வாங்கினேன் 1835 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் அது. நான் வாங்கியது 1980’s

Me : அப்படியா. அந்த நாணயம் தங்களுக்கு எப்படி கிடைத்தது.

Me: சார், இருக்கீங்களா ?

RAMAN: சாரி, கரண்ட் கட்

Me : பரவாயில்லை சார்.

RAMAN: நான் சென்னையில் வசிக்கிறேன் 🙁

Me: ஹஹஅஹஹா . நீங்கள் உங்கள் முதல் 1835 காசை பற்றி சொன்னீர்கள். அந்த காசு எப்படி உங்களுக்கு கிடைத்தது.

RAMAN: நான் அதை ஒரு பழைய சாமான்களை விற்கும் கடையில் இருந்து வாங்கினேன். நண்பர்கள் அனைவரிடத்திலும் பெருமையாக அதை காட்டினேன். 145 ஆண்டு பழமையான நாணயம் என்று.

Me : அருமை. அடுத்த கேள்வி அதில் இருந்தே தொடர்கிறது. புதிதாக என்னை போல ஆரம்பிப்பவர்கள் பழைய நாணயங்கள் தேடி யாரிடத்தில் செல்வது. நீங்கள் யாரை தொடர்புக் கொள்வீர்கள். அப்படியே நீங்கள் தெனிந்திய நாணயங்களை மட்டுமே சேகரிக்கிறீர்களா இல்லை பொதுவாக ஏனைய பழம் பொருட்களில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா.

RAMAN: புதிதாக வரு்வோருக்கு ஒரு நல்ல டீலர் அறிமுகம் இருப்பது நல்லது. மற்றும் இப்போது எல்லா ஜில்லாக்களிலும் நாணய ஆர்வலர் கிளப்ஸ் ( சங்கங்கள் ?) உள்ளன.

Me : புரிகிறது, இந்த துறையில் பல நகல்களும் புழக்கத்தில் இருப்பதால் நல்ல தேர்ச்சி பெற்ற நண்பர்களின் அறிமுகம் மற்றும் அறிவுரை தேவை . சென்னையில் இது போன்ற கிளப் ( சங்கங்கள்) உண்டா

RAMAN: திருநெல்வேலி , நாகர்கோவில் , தஞ்சாவூர் . திருச்சி , சேலம் சென்னை …. என்று எங்கும் நிறைய கிளப்ஸ் உள்ளன. மேலும் சென்னையில் மட்டுமே 25 டீலேர்ஸ், 5 கடைகள், 4 கிளப்ஸ் உள்ளன.

Me : சார், நீங்கள் நாணயங்கள் மட்டுமே சேகரித்து வருகிறீர்களா. இல்லை மற்ற பொருள்களிலும் ஆர்வம் உண்டா?

RAMAN: கடந்த 25 ஆண்டுகளாக நான் நாணயங்கள் சேகரித்து வருகிறேன். சங்க காலத்து நாணயங்கள் பல வைத்துள்ளேன். சோழ, பாண்டிய, சேர, பல்லவ, விஜயநகர, நாயக்கர் காலத்து நாணயங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. 2004 முதல் மோதிரங்கள் மற்றும் இலச்சினை (சீல்ஸ்) மீதும் கவனம் செலுத்தி வருகிறேன்.

Me: முதல் முதலில் இந்தியாவில் கிடைத்துள்ள நாணயங்கள் யாருடையது, எந்த காலம்

RAMAN: முதல் முதல் கிடைத்துள்ள காசு வெள்ளியில் வந்த முத்திரை காசு.ஒரு பக்கம் ஐந்து சிறு முத்திரையும், மற்ற பக்கம் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளுடன் இருக்கும். தமிழ் நாட்டில் தொன்மையான காசு ஒரு பாண்டிய முத்திரை காசு.

Me: சரி, தமிழ் நாட்டில் என்ன உலோங்கங்களில் நாணயங்கள் கிடைக்கின்றன.

RAMAN: தங்கம், வெள்ளி, தாமிரம் , செப்பு என்று பல காசுகள் கிடைக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஈயம் மற்றும் பலஉலோகங்களுடன் பித்தளை கலந்த கலவையிலும் கிடைகின்றன.

Me: அப்படியா. இதில் பரவலாக கிடைப்பது எது. தங்கமே மிகவும் அரியதா ?

RAMAN: சங்க காலத்து தங்க நாணயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அப்போது ரோமானியர்களின் நாணயங்களே நாம் உபயோகித்தோம் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து. தமிழ் நாட்டில் முதல் முதலில் கிடைக்கும் தங்க நாணயம் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் காசு தான்.

Me: ஆஹா, எங்கள் ராஜராஜர் புகழ் பாடாமல் பதிவுகள் நகராது போல உள்ளது. அந்த நாணயத்தை நாம் முதலில் பார்த்துவிடுவோமா.

RAMAN: பார்த்தீர்களா அதில் ஸ்ரீ ராஜராஜ என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

Me: அருமை. பொதுவாக பழைய நாணயங்கள் சதுர வடிவில் இருப்பதை பார்க்கின்றோம். எப்போது இவை வட்ட வடிவம் பெறுகின்றன.

RAMAN: பொதுவாக சங்க காலத்து முத்திரை நாணயங்கள் சதுர வடிவத்தில் உள்ளன. பிறகு ரோமானியரின் தாக்கத்தால் வட்ட வடிவமாக மாறி இருக்கலாம். இப்போது இந்த 2ஆம் கி மு சேரர் நாணயத்தை பாருங்கள். .

முன் பக்கம் கம்பீர யானை, எதிரில் ஒரு மரம், அதன் பின்னால் நான்கு மீன்கள், யானையின் அடியில் பக்க வாட்டில் ஒரு பனை மரம் உள்ளது. பின்புறம் சேரர் வில் அம்பு இலட்சினை உள்ளது. அதனுடன் யானையை அடக்கும் அங்குசமும் உள்ளது.

Me: அருமை அருமை. சார், அடுத்து சங்க காலத்து பாண்டியர் நாணயம் பார்க்க கிடைக்குமா.

RAMAN: இருக்கே, இதோ இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு.


முன்பக்கம் கம்பீர ஆண் யானை. பின்பக்கம் கரையை நோக்கி நீந்தும் மீன் சின்னம்.

Me. மீன் தெரிகிறது, அது கரையை நோக்கி நீந்துவது ?

RAMAN: நீரில் அலை போல ஒரு குறி இருக்கிறது. வரைந்து காட்டுகிறேன்.

Me: இப்போது புரிகிறது. ரோமானிய நாணயம் பற்றி கூறினீர்கள். இதே காலத்து ரோமானிய நாணயம் எப்படி இருந்தது. நமது நாணயங்களை விட தொழில் நுட்பம் , கலை அம்சம் என்று ரோமானியர் நாணயங்கள் மிகை யா. ரோமானியர் தாக்கம் நமது நாணயங்களில் உள்ளதா?

RAMAN: இருக்கிறது. சோழர் சேரர் வட்ட வடிவ நாணயங்கள் முதலில் பார்ப்போம். .

Me: சங்க காலத்து சோழர் நாணயமா. பார்க்க ஆவலாக உள்ளது.

RAMAN: இதோ


Me: அற்புதமாக உள்ளது. இதன் காலம் என்ன, அதில் என்ன சித்தரிக்கப்பட்டுள்ளது.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு காலம். முன் பக்கம் யானை, அதற்க்கு முன்னர் வெளியே இருக்கும் மரம், யானைக்கு மேல் வெண் கொற்றக் குடை உள்ளது. பின்புறம் சோழர்களி்ன் வேங்கை ஒரு கால் தூக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வாலும அழகு.

Me: அருமை, வட்டமான சேரர் காசு?

RAMAN: இதோ.

RAMAN: முன்பக்கம் அமர்ந்திருக்கும் சிங்கம் , பக்கத்தில் ஒரு கம்பத்தின் மேல் சக்கரம். பின் பக்கம் சேரர் ’வில் அம்பு’.

Me: சிங்கம் சிங்கம் போல இல்லையே. !!

RAMAN: ஹஹஅஹா , இன்னும் ஒரு காரணம் (- தங்க நாணயம் சங்க காலத்தில் இல்லாமைக்கு ) அந்த காலத்தில் தங்கச் சுரங்கமோ , உலையோ தென் இந்தியாவில் இல்லை. ரோமானிய நாணயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடைக்கின்றன. சென்னை அருங்காட்சியகம் 5000 க்கும் மேற்பட்ட ரோமானிய தங்கம் மற்றும் செப்புக் காசுகள் உள்ளன. சுமார் கி மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாட்டில் ரோமானியர் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: அப்பாடி , அந்த காசு ஒன்றை பார்க்கலாமா ?

Me: தமிழ் காசுகளில் ரோமானியர் தாக்கம் என்ன. ரோமானியர் காசை போல அரசர் தலை பொறிக்கப் பட்டுள்ள காசுகள் உண்டா ?

RAMAN: உண்டு. சங்க கால அரசர்கள் பெயர் பொறித்த காசுகள் சில கிடைத்துள்ளன. மாக்கோதை , பெருவழுதி ,குட்டுவன் கோதை, கொல்லிப்புறை மற்றும் கொல்லிரும்புறை – என்று பிராமி
எழுத்தில் பொறிக்கப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன.

Me: ஆஹா. நிறைய நாம் கற்க வேண்டும். முதலில் மூவேந்தர் தவிர – அதாவது சேர, சோழ, பாண்டியர் – வில் அம்பு, வேங்கை மற்றும் கயல் சின்னங்கள் தவிர சிற்றரசர் நாணயங்கள் உள்ளனவா?. அவற்றின் குறிப்பிடத்தக்க சின்னங்கள் / இலச்சினைகள் என்ன?.

RAMAN: தமிழ் நாட்டில் வணிக ரீதியாக கிரேக்க நாணயங்கள் கிடைக்கின்றன. அதே போல சங்க காலத்து மலையமான் சிற்றரசனுடைய நாணயங்களும் கிடைத்துள்ளன. திருக்கோயிலூர் அருகில் மட்டுமே மலையமான் நாணயங்கள் கிடைக்கின்றன.

Me: திருக்கோயிலூர் அருகில் தான் எங்கள் பூர்வீகம். மலையமான் நாணயம் பார்க்க கிடைக்குமா ?

RAMAN: சங்க காலத்து நாணயங்கள் பொதுவாக நதிக் கரைகளில் கிடைக்கின்றன. மதுரை, கரூர், திருக்கோயிலூர், மற்றும் திருநெல்வேலி அருகில் – ஆனால் மிகவும் அதிகம் கிடைப்பது கரூர் அமராவதி ஆற்றில் தான். இதோ மலையமான் காசு.

RAMAN: இதுவும் கி மு ஒன்றாம் நூற்றாண்டு. திருக்கோயிலூர் அருகில் கிடைத்தது. முன் பக்கம் வலது புறம் நோக்கி நிற்கும் குதிரை, அதற்கு எதிரில் வேலியில்லாத மரம், குதிரைக்கு மேலே ஆயுதம், அதற்கு மேல் கொட்டுரிவில் எருது தலை சின்னம் ( டாரின் – Taurine ). பின்புறம் ஆற்றின் கரை கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. நேராக ஒரு வேலும், படுக்க வாட்டில் ஒரு வேலும் உள்ளன.

Me: ஆஹா , மிக அருமை. நாங்கள் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய உள்ளது, இந்த சின்னங்கள் ( டாரின் போன்று). இந்தத் துறையில் எங்களை போன்று ஆரம்ப நிலை ஆர்வலர்கள் படிக்க நல்ல நூல்கள் உள்ளனவா ? நாங்கள் எங்கே துவங்க வேண்டும்.

RAMAN: முதலில் எந்த நாணயங்கள் சேகரிக்க போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.

Me: எங்கள் உடல் மண்ணுக்கு , உயிர் சோழர் தான் ! உடையார் ராஜ ராஜா சோழர் காலத்து காசை கையால் தொட்டால் புளகாங்கிதம் அடைந்து விடுவோம். அவரது காசுகள் இன்றும் கிடைகின்றனவா ?

RAMAN: சோழர் காசு சரியான தேர்வு. தமிழகம் எங்கும் பரவலாக கிடைக்கும். ஒரு செப்புக் காசை நானே அன்பளிப்பாக தருகிறேன்.

Me: ஆஹா

RAMAN: சும்மா சொல்ல வில்லை, கண்டிப்பாக தருவேன்.

Me: அப்படி என்றால் விரைவில் வந்து வாங்கிக் கொள்கிறேன். பொதுவாக இந்த அளவிற்கு தேர்ச்சி வருவதற்கு அறிஞர்கள் துணை தேவை. அப்படி உங்கள் துணை நின்று உதவிய குரு என்று யாராவது உண்டா ?.

RAMAN: எனது முதல் குரு தஞ்சை திரு சீதாராமன் அவர்கள். பிரம்மி எழுத்து பொறித்த நாணயங்கள் மற்றும் மோதிரங்கள், முத்திரைகளுக்கு திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

Me: ஆஹா. ஜாம்பவான்கள்.

RAMAN: எனது அறிவுரை, முதலில் பிடித்த நாணயம் தேர்ந்தெடுத்து , அதை பற்றி படியுங்கள். திரு சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள புத்தங்களை வாங்கி படியுங்கள்.

Me: பதிப்பகம் எது, எங்கே கிடைக்கும்


RAMAN: அவரது முகவரி இதோ. .

தனலட்சுமி பதிப்பகம்
12, ராஜராஜன் நகர் ,
மானோஜிப்பட்டி ( தெற்கு )
தஞ்சை – 613004

புத்தகத்தின் விலை ரூபாய் 150

Me: நன்றி சார். மிகவும் எளிமையான நடையில் பல தகவல் தெரிந்துக் கொண்டோம். அடுத்து பகுதியில் மூவேந்தரில் ஒருவரையோ அல்லது பல்லவர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அரட்டை (சாட்) அடிப்போம் !!

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.