பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

கிராதன் அர்ஜுநர்கள் – இன்றைய காமிக்ஸ் அன்றைய சிற்பம் ஒரு கலக்கல்

கலைச் செல்வங்களை ரசிக்கும் தன்மையை எப்படி நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பது. அவர்களை எப்படி இந்த பொக்கிஷங்களை பாதுகாக்க வைப்பது. அவர்களது ரசனையை எப்படி தூண்டுவது. இவை போன்ற கேள்விகள் எங்கள் மனதில் தினமும் எழும். இன்றைய தலைமுறை சதா சர்வகாலமும் இணையம், அதில் உள்ள இணைய விளையாட்டு, காமிக்ஸ் என்றே செல்கிறது என்று பார்க்காமல், அவற்றையும் ஒரு வளரும் துறையாக பார்த்து , அவற்றை கொண்டும் இள நெஞ்சங்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் செல்லலாம் என்பதே எங்கள் கருத்து. அதன் அடிப்படையில் இன்று காஞ்சி கைலாசநாதர் சிற்பம் ஒன்றையும் ( எனக்கு மிகவும் பிடித்த சிற்பம் ) அதை ஒட்டிய கதையை இன்றைய இணைய ஓவிய காமிக்ஸ் போலவும் சேர்த்து பார்ப்போம்.

கதை ஒன்றும் பெரியது அல்ல. மகாபாரதத்தில் வன பர்வத்தில் , அர்ஜுனன் தனியே சிவ பெருமானிடத்தில் இருந்து பாசுபத அஸ்திரத்தை பெற தவம் செய்ய இமயம் செல்கிறான். கடுந்தவம் புரியும் அவனை சோதிக்க
ஈசனே கிராதன் ( வேடன் ) உருவிலும், உமை ஒரு வேடர் குல பெண்ணாகவும் வனத்தினுள் வருகின்றனர். அப்போது முகசுரன் என்றஅசுரன் காட்டுப்பன்றி உருவம் தரித்து அர்ஜுனனை நோக்கி விரைந்து வருகிறான். வில்லுக்கு ஒரு விஜயன் ஆயிற்றே, உடனே காண்டீபத்தை எடுத்து பன்றியின் தலைக்கு நாணைத் தொடுக்கிறான் பார்த்தன். அதே வேளையில் இன்னொரு புறத்தில் இருந்து பன்றியின் பின்புறம் ஒரு அம்பு பாய்கிறது. அங்கே வில்லேந்தி நிற்கிறான் கிராதன். அர்ஜுனன் சினம் கொண்டு, பின்னால் இருந்து நாணை எய்வது வீரனுக்கு அழகா என்று கேட்க, அவனோ இது வேட்டை.. யுத்தம் அல்ல !!, காட்டு மிருகங்களுக்கு போர் நீதி செல்லாது என்கிறான் ( வாலி வதம் ? ) அப்படியே பன்றி யாருடையது என்று வாக்குவாதம் நடக்கிறது.

வாக்குவாதம் முற்ற கைக்கலப்பும் ஆரம்பம். காண்டிபதை கொண்டு அக்னி கொடுத்த தீராத பாணங்களை தரும் கூடையில் இருந்து அம்புகளை மழையென பொழிய வைத்தான் குந்தி புத்திரன். எனினும் அந்த வேடனோ சிறிதும் சிரமம் இல்லாமல் அனைத்தையும் தடுத்து விட்டான். உடனே காண்டீபத்தை ஈட்டி போல வேடன் மேல் பாய்ச்சுகிறான் அர்ஜுனன். அதை அப்படியே பிடித்து இழுத்துப் பறித்து விடிகிறான் அந்த வேடன். அர்ஜுனனுக்கு இன்னும் கோபம், உடனே மல்யுத்தம் செய்ய அவன் மேல் பாய்கிறான். ஆனாலும் வேடனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அர்ஜுனுக்கு மூச்சு வாங்கி தலை சுற்றுகிறது, வேடனோ ஒரு வியர்வை துளி கூட சிந்தாமல் நகைத்துக் கொண்டே போர்புரிகிறான். இதனை கண்ட அர்ஜுனன், சண்டையை நிறுத்தி விட்டு, ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து , வேடனை வீழ்த்த மகேசனின் ஆசி கூறி, மலர்களை சமர்ப்பிக்கிறான். என்ன ஆச்சரியம், லிங்கத்திற்கு அவன் இடும் மலர்கள் வேடனை அலங்கரிக்கின்றன. உண்மை புரிந்த அர்ஜுனன் மகேசனிடம் சரண் புகுந்தான். இன்னொரு வழக்கில் சண்டை இடும்போது அர்ஜுனன் ஈசனின் காலை பிடித்தானாம், தன மலர் பதம் பிடிக்கும் பக்தரை தடுத்துத்ஆட்கொள்ளும் ஈசன், அப்போது போரை நிறுத்தி அவனை அணைத்தார் என்றும் வருகிறது. எனினும் நாம் இன்று பார்ப்பது இருவரும் சண்டை போட்டனர்.

நன்றி திரு அபிலாஷ் நாராயணன் , அவர்களுக்கு, நம்முடன் அவரது கணினி ஓவியத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு.

அவரது மற்ற படைப்புகளை காண

திரு அபிலாஷ் நாராயணன்

சரி, இப்போது நாம் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் செல்கிறோம். வெகு நாட்களுக்கு முன்னரே இந்த சிற்பத்தை ஒட்டிய பதிவை இங்கு போட்டிருக்க வேண்டும் – எனக்கு அவ்வளவு பிடிக்கும் இந்த சிற்பம். அதில் உள்ள உயி்ரோட்டம், காட்சி அமைப்பு எல்லாமே அபாரம். இது இரு கதாநாயகர்கள் நடிக்கும் படத்தின் விளம்பரம் போல இருக்கும் இந்த சிற்பத்தை திரு அபிலாஷ் அவர்களின் ஓவியத்துடன் மோத விடுவோம்.

படங்களுக்கு நன்றி: திரு அர்விந்த் மற்றும் திரு சுவாமிநாதன்

சிற்பத்தை நன்றாக பாருங்கள். இரு வீரர்கள், ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி சண்டை இட தயாராக நிற்கும் காட்சி. இருவர் கையிலும் வில், மற்றொரு கையில் அம்பு, அல்லது அம்பை எடுக்கு செல்லும் கை. முதுகில் அம்புகள் வைக்கும் கூடை ( இருபுறமும் இவை இருப்பது நேர்த்தி ) , ஒருவர் இடுப்பில் மற்றும் உடைவாள். இது கிராடார்ஜுன கதை தான் என்பதை சந்தேகம் இன்றி நிறுவ இருவரின் பின்னால் நேர்த்தியாக ஒரு காட்டுப் பன்றியை செதுக்கி உள்ளான் சிற்பி.

இப்போது ஒரு கடினமான கேள்வி, இதில் ஈசன் யார், அர்ஜுனன் யார். சற்று அருகில் சென்று பார்ப்போம்.

குறிப்பாக அவர்கள் அணிந்திருக்கும் உடை , ஆபரணம் மற்றும் தலை அலங்காரங்களை பாருங்கள்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை என்ன – பட்டியல் இடுவோம்.

சிற்பத்தின் இடது புறம் ( நீங்கள் பார்க்கும்போது வலது புறம்) – இருக்கும் வீரன் ஒரு நீண்ட கிரீடத்தையும், மார்பில் பூணூலையும் அணிகிறான். மற்ற வீரனோ தலையை கொண்டாய் போல கட்டிக்கொண்டு, மார்பில் சன்னவீர என்னும் குறுக்கு பட்டைகளை அணிகிரான். அவன் மட்டுமே உடைவாளை வைத்துள்ளான்.

நமக்கு தெரிந்த மட்டிலும் அர்ஜுனன் ஒரு துறவி போல தவம் செய்து ( கடைசியில் காற்றை மட்டுமே சுவாசித்து பல மாதங்கள் கடுந்தவம் புரிந்தான் என்று நினைக்கிறோம். மகாபாரத்திலும் அவன் காண்டீபம் என்னும் வில்லுடன் ஒரு அற்புத தங்க கைப்பிடி கொண்ட உடைவாளை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் உள்ளன.

சரி, அது அப்படி நிற்க , நாம் கிராட உருவத்தை பற்றி படிப்போம்.கிராதன் ஒரு வேடன், அதுவும் ஈசனை பொதுவாக ஜடா மகுடத்துடனே நாம் காண்கிறோம். மேலும் திரு நாகசுவாமி அவர்களின் குறிப்புகளில் , சோழ வடிவத்தில் கிராட உருவம் ஒரு வேடன், அதுவும் உருண்டை தொப்பையுடனும், மார்பில் சன்னவீர கொண்டும், தலையை கொண்டாய் போட்டுக் கொண்டு இருக்க காண்கிறோம் என்கிறார்.

Kirata or Tripurantaka


However in many Chola sculptures and also Bronzes (Melapperumpallam image) Kirata will be shown like a hunter with round bellied body , beard and cannavira. His hair would be tied as a bun-like knot and not the jata-makuta one sees in the Tripurari form.

இவை அனைத்தும் கொண்டு பார்க்கையில் கிரீடம் அணிந்திருப்பது அர்ஜுனன் என்றும் மற்றவர் ஈசன் என்றும் நான் நினைக்கிறேன், உங்கள் எண்ணம் என்ன.

என்ன, கலக்கல் பிடித்தா ?

சித்தன்னவாசல் – ஓவியக்கலையின் சிகரம்

சித்தன்னவாசல் என்றதுமே பலருக்கு பலவிதமான சிந்தனைகள் தோன்றும். நமது திரைப்பட கவிஞர்கள் தங்கள் கதாநாயகிகளை வர்ணிக்க பொதுவாக சித்தன்னவாசல் ஓவியம் என்று எழுதுவார்கள். அதில் எத்தனை பேர் அங்கே சென்று அந்த ஓவியங்களை பார்த்துவிட்டு ஏற்பட்ட தாக்கத்தினால் அப்படி எழு்தினார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்படி அவர்கள் அங்கு சென்று இருந்தால் , இன்றைக்கு அந்த அற்புத ஓவியங்கள் படும் பாட்டை பாட்டாக பாடி இருப்பார்கள். பாவம் அவை, தெரியாமல் நம் நாட்டில் உள்ளன. அங்கே இருப்பதில் நூற்றுக்கு ஒரு சதவிதம் வேறு ஒரு நாட்டில் இருந்தாலும் அவை அந்த நாட்டின் தலை சிறந்த கலை பொக்கிஷம் என கொண்டாடப்படும்.

நாம் முன்னரே இரு பதிவுகளில் அங்கு இருக்கும் அற்புத நடன மாந்தர்களை பார்த்துவிட்டோம். அவை இருக்கும் இன்றைய அவல நிலையை கண்டு நம் மனம் கதறுகிறது. இன்றைக்கு, நண்பர் அசோக் கிருஷ்ணசுவாமி அவர்களின் உதவியுடன் நாம் முக்கியமான ஓவியங்களை பார்க்கப் போகிறோம் (அவர் இந்த அற்புதங்களை சரியான விதத்தில் வெளிக் கொணரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ) இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் அனைத்தும் அவரது கைவண்ணம் இல்லை கேமராவண்ணம். கேட்டவுடன் பெருந்தன்மையுடன் நமக்காக பகிர்ந்துக்கொண்டார். அவருக்கு அனைவரின் சார்பாக ஒரு பெரிய நன்றி. மின்னாக்கம் என்பது இவற்றை பாதுகாக்கவும், தற்போதைய நிலையை எடுத்துரைக்கவும், மேலும் சிதைவில் இருந்து இவற்றை காக்கவும் உதவும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். ( இந்த சமண குடைவரையும் அதில் உள்ள ஓவியங்களையும் திரு S. ராதாகிருஷ்ண ஐயர் அவர்கள் 1916
கண்டுபிடித்தார் )

முதன் முதலில் முனைவர் திரு சுவாமிநாதன் அவர்கள் தான் சித்தன்னவாசல் ஓவியங்களை எனக்கு அறிமுகம் செய்தார். ஒரு மணிநேரம் பிரமித்து அவரது உரையை உள்வாங்கினோம். அதை இன்னும் படங்களுடன் மெருகு சேர்த்து ஒரு பெரிய பதிவை இடவேண்டும் என்று பல நாள் ஆசை. நண்பர் அர்விந்த் அவர்களுடன் சென்ற டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோது படம் எடுக்க முயற்சி செய்தோம். முடியவில்லை. எனினும் அதற்கேற்ற காலத்தை அதுவே நிர்ணயம் செய்தது போல – படம் பிடிப்பதில் கைதேர்ந்த வல்லுநர் திரு அசோக் அவர்களது படங்களுடன் தான் பதிவு அமைய வேண்டும் என்று காத்து இருந்தது போல.

சித்தன்னவாசல் நோக்கி – வெறும் பாறை இல்லை. அதற்கு மேலும் கீழும் சரித்திரம் உள்ளது. மேலே என்ன வென்று பிறகு பார்ப்போம்.

குடைவரை அடைந்தவுடன் எதிரில் தோன்றிய தூண்கள் சற்று நெருடலாக இருந்தன. இவை மிகவும் சமீபத்தில் கட்டியவை.

குடைவரையின் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று அங்கே இருக்கும் தடிமன் பெருமான் தூண்கள் ( மகேந்திரர் காலத்து தூண்கள் போல ) இருப்பதால் நாம் கருதலாம் , பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் செப்பனிடப் பட்டது. இதனை குடைவரை தூணில் இருக்கும் ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு சொல்கிறது. சிறிமாறன் ஸ்ரீவல்லபன் ( பாண்டிய அரசன் (815 – 862 AD) காலத்தில், இலன் கௌதமன் என்னும் சமணனால் அர்த்த மண்டபம் செப்பனிடப்பட்டது

நாம் முன்பு பார்த்த பதிவில் வெளிக் குடைவரை தூண்களில் உள்ள நடன மாதர் ஓவியங்களை பார்த்தோம். இப்போது உள்ளே செல்கிறோம் – மண்டபத்தின் மேலே பார்த்துக்கொண்டே..

ஆம்! மேல் சுவரில் தான் உள்ளது அந்த தாமரை பூத்த தடாகம்.

முதலில் சுவரில் பூச்சு அடித்து அது காய்ந்த பின்னர் ஓவியத்தை வரையும் முறை இங்கு காணப்படுகிறது. இதனை ஃபிரெஸ்கோ செக்கோ என்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Fresco-secco

யோசிக்கும் போதே , தலை சுற்றுகிறது. இப்படி சாரம் கட்டி, மல்லாக்க பார்க்க படுத்துக்கொண்டு, எப்படித்தான் ஓவியக் கலவை , தூரிகையை கொண்டு கையாண்டார்களோ.

சரி, இன்னமும் உங்கள் பொறுமையை சோதிக்க மாட்டேன். இதோ ஓவியம்.

அப்படி என்ன இந்த ஓவியத்தில் என்று கேட்கிறீர்களா. பொறுமை, இந்த ஓவியப் பயணத்தை படங்களுடனே தொடருவோம். நீங்கள் கவனிக்க வேண்டிய பகுதிகள். ஆமாம்
ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒளிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஓவியத்தின் பெருமிதம்.

இப்படி போட்டுக் காட்டினால் எளிதாக உள்ளதா?. தாமரை பூத்துக் குலுங்கும் தடாகத்தில் மீன்கள் பல துள்ளி விளையாடுகின்றன .

மீன்களை சிரிக்கும் வண்ணம் வரைந்தானோ ஓவியன்.



இன்னும் பல தடாகத்தில் ஒளிந்துக்கொண்டு இருக்கின்றன. நன்றாக தேடிப் பாருங்கள்.

இது ஒரு பெரிய தடாகம். மீன்கள் மட்டும் அல்ல – உள்ளே ஒரு காட்டெருமை குடும்பம், ஒரு எருமை மாடு, ஏன் ஒரு யானை குடும்பம் , எட்டு நாரை பறவைகள் உள்ளன, என்றால் நம்புவீர்களா ?


உண்மை தான். முதலில் கஜங்கள். உற்று பாருங்கள். அதில் ஒன்று தனது துதிக்கையை கொண்டு ஒரு தாமரை மலர்க் கொத்தை சுற்றி இழுப்பதும், அதன் அடியில் ஒரு குட்டி யானை ( சற்று கடினம் தான் – என்ன செய்வது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன )

இப்போது மாடுகள். காட்டெருமை நம்மை வெறுப்புடன் திரும்பிப் பார்ப்பது தெரிகிறதா. அதன் பின் அதன் துணை போல

மாடுகளின் கொம்புகளில் உள்ள வித்தியாசத்தை காட்டும் ஓவியனின் கலை அபாரம்.


இன்னொரு விதமான எருமை. இது நம்ப ஊரு எருமை போல உள்ளது. ( என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பெயர் எருமை – என் பெயரை விட அவர் என்னை கூப்பிட உபயோகித்த பெயர் அதுதான் )


இங்கே மிகவும் சிதைந்த நிலையில் ஒரு பிராணி உள்ளது. குதிரையாக இருக்கலாம்.

இவை அனைத்துக்கும் நடுவில் கூட்டம் கூட்டமாக நாரைகள். எதையோ கண்டு மிரண்டு பறக்க இருக்கின்றன.

கண்களில் ஒரு மிரட்சி தெரிகிறதா ?


அவை மிரள காரணம் என்ன. ஓவியத்தை மீண்டும் பாருங்கள். அவை எதை பார்த்து மிரளுகின்றன.

அடியில் இருக்கும் நாரைகளை தவிர ( அவை அருகில் இருக்கும் யானையை கண்டு மிரளுகின்றன ) மற்ற பறவைகள் அனைத்தும் பார்ப்பது…..

ஆம், குளத்தின் நடுவில் இரு மனிதர்கள் தண்ணீரில் இடுப்பு வரை இறங்கி பூக்களை பறிக்கிறார்கள். இது சாமவ சரண என்னும் சமண சடங்கில் வரும் காட்சி.


சற்று மாநிறமாக இருப்பவர், எட்டி ஒரு தாமரையை பறிக்க தண்டை பிடித்து இழுக்கிறார். மற்றொரு கையில் ஒரு பின்னிய கூடையில் பிரித்த மலர்கள். ஓவியன் அவர் இழுப்பிற்கு வளையும் வண்ணம் தண்டை வரைந்துள்ளான் பாருங்கள்.

அவருக்கு பின்னால் இன்னும் ஒரு இளம் துறவி. இவர் சற்று நல்ல சிகப்பு நிறம் போல. முகத்தில் என்ன ஒரு தேஜஸ். அந்த கையில் தான் என்ன ஒரு நளினம், தன நண்பனுக்கு அடுத்த பூவை சுட்டிக்காட்டும் பாவம் அருமை.

அவருக்கு பின்னல் இருக்கும் பூ தண்டுகளை கவனமாக பாருங்கள். நடுவில் இருப்பது அல்லி , இருபுறமும் தாமரை. அல்லித் தண்டு வழவழ வென இருக்கும், தாமரை சற்று சொர சொரவென இருக்கும்.(அல்லித் தண்டு காலெடுத்து அடிமேல் அடிவைத்து என்று கவியரசர் எழுதினாரே..)

என்னமாய் நுண்ணி்ய அளவில் ஒரு தடாகத்தை கூர்ந்து கவனித்து நமக்கென வரைந்துள்ளான் அந்த அற்புத ஓவியன். இவனல்லவா உலகிலேயே மிகச் சிறந்த ஓவியன்.. இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தடாகத்தில் உள்ள மலர்கள் மொட்டில் இருந்து முழுவதுமாக மலரும் வரை எத்தனை விதமாக மலருமோ , அவ்வளவும் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்னரே திரு சிவராமமூர்த்தி அவர்கள் எடுத்த பிரதி உதவுகிறது.

இருங்கள், இதுவரை பாதி தடாகம் தான் முடிந்தது. அடுத்த பக்கம் இதன் மறுபாதியைக் காண்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இருநூறாவது பதிவு – பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழியவே – சோழ ஓவியம்

இந்த தளம் எங்களுக்கு வாழ்க்கைப் பாதையில் மிகவும் மனநிறைவைத் தரும் பயணம். திடீரென ஏற்பட்ட ஒரு தாக்கத்தால் பலரும் தங்கள் பயணத்தை துவங்குவது உண்டு , எனினும் முதலில் ஏற்பட்ட தாக்கத்தை தொடர்ந்து நினைவில் வைத்து கவனத்தை எங்கும் எதிலும் சிதற விடாமல் செல்வது பெரும் சவால். அந்த விதத்தில் நாங்கள் மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களை இந்த பணியில் ஈர்த்த , இன்றும் தூண்டுதலாக இருக்கும் அந்த முதல் தீ பொறி – அதற்கு அப்படி ஒரு பலம். இருநூறாவது பதிவிற்கு அந்த தீப் பொறியை விட வேறு நல்ல கரு உண்டோ ?

ஆம் அவர்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர்.

ஆனால் எங்களை போன்றோருக்கு அவர் என்றும் அருண்மொழி வர்மர் தான் – இன்றும் எங்கள் நினைவில் நீங்காமல், ஒரு வாழும் வரலாறாக , எங்களை வழிநடத்தும் தமிழனின் வாழ்வியலில் பொன்னேட்டில் பொறிக்கப் பெற்ற மாமனிதர். தமிழனும் தமிழ் மண்ணும் தனது பெயரை கேட்டவுடன் தலை தானாக நிமிரும் சாதனைகளை நிகழ்த்திய சகாப்தம். இது வெறும் முகஸ்துதி அன்று – இன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத பல இடங்களில் இருந்து அவர் எழுப்பிய பெரிய கற்றளியான ராஜராஜேஸ்வரம் தஞ்சை பெரிய கோயில்தனை காண வரும் பலகோடிக்கணக்கான பேர்களில் பலர் அதன் பிரம்மாண்டத்தை ரசிப்பர், சிலர் அதன் அழகை ரசிப்பர், மற்றும் சிலர் அதன் கட்டட அமைப்பு,அறிவியல் , விஞ்ஞானம் என்று வாய் பிளந்து அண்ணாந்து பார்க்கும் கூட்டத்தில் இருப்பர். வேறு ஒரு கூட்டமும் உண்டு. எங்களை போல – இது எங்கள் மண் , இவர் எங்கள் அரசன் என்று எங்கோ ஒரு விட்ட குறை தொட்ட குறை – அடி மனதில் ஒரு இனம் புரியா ஆனந்தம், அருகில் அந்த மாமனிதர் இன்னும் எங்களை அன்புடன் பார்த்து மந்தகாச புன்னகை புரியும் ஒரு உணர்வு…

எங்களை வழிகாட்டும் அந்த சுடருக்கு என்றும் எங்கள் உழைப்பு அர்ப்பணம். முடிவு ஆரம்பம் என்று பிரிவு படுத்தி பார்க்காமல், இதுவரை நாங்கள் செய்துள்ள அனைத்தும் தங்களுடையது, இனி நாங்கள் செய்யப்போவதும் தங்களுக்கே அர்ப்பணம். எங்களை இந்த பணியில் ஆழ்த்தியதும் தாங்களே , உங்கள் புகழ் பாரெங்கும் பரவ நாங்கள் எங்களை இன்று மீண்டும் அர்ப்பணிக்கின்றோம்.

காலவெள்ளத்தில் நாம் பரபர வென்று பின்னோக்கி பயணிக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் இரண்டு நொடிகளில் புரட்டிவிட்டோம். கி பி 1010.

(ஆம், தற்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன – பெரியகோயில் எடுப்பித்து – கல்வெட்டுகளில் உள்ள படி உடையார் அவர்கள் தனது ஆடிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டின் இருநூற்றி எழுபத்தி ஐந்தாம் நாள் – விமானத்தின் மேல் உள்ள கலசத்திற்கு தங்கம் கொடுத்த செய்தி உள்ளது. ஆட்சிக்கு வரும் வரிசையில் இல்லாமல், காலத்தின் கோலத்தால் விதியின் ஆட்டத்தினால் தன்கையில் ஆட்சி வந்தாலும் பெருந்தன்மையுடன் அதை விட்டுக்கொடுத்த தியாக சிகரம் – பின்னர் அவர் தமிழுக்கும் தமிழன்னுக்கும் ஆற்ற வேண்டிய அற்புதங்களை எண்ணி மீண்டு்ம் அரியணை தேடி வந்தது கி பி 985 )

ஆலய மணிகள் கிண் கிண் என்று ஒலித்துக்கொண்டிருந்தன – அந்த மணியோசையின் பின்னணியில் பிரம்மாண்டமான வாயிற் காவலர்கள் வழி காட்ட பெருவுடையாரைக் காண உள்ளே வந்தனர் பெருமக்கள். அங்கே ஒருபக்கம் போட்டியாய் தவில், மேளம், பறை, தாரை , தப்பட்டை, நாதஸ்வரம் என்று ஒரு புயலென கிளம்பிய ஓசையில் திக்கு முக்காடி,அவை கருவறையின் கருங்கல் சு்வரில் வெளியே திரும்ப ஓட ஒரு வழியை தேட… ஒரு நிமிடம் அப்படியே அண்ணாந்து காற்றில் கலக்கும் கற்பூர வாசனையையும் பின்னந்தள்ளி வந்த சந்தன வாசனை முகரும்போது , அகில், ஜவ்வாது, சாம்பி்ராணி என்று ஒன்றோடு ஒன்று போட்டியிட….திடீரென இன்னும் ஒரு புது வாடை , மேலிருந்து வருகிறது, முல்லை – ஆமாம் அடர்த்திக்கட்டிய முல்லை மொட்டுகள் மெதுவாக மலரும்போது வெளிவரும் வாசனை. எங்கிருந்து வருகிறது, மேல் தளத்தில் அடுக்கடுக்காக பின்னிய ஜடைகளில் முல்லை மொட்டுக்கள். யார் இந்த யு்வதிகள். புலியின் பார்வையில் உறைந்து நிற்கும் மானைபோன்ற கண்களை கொண்டு தங்கள் பிடித்த ஜதிகளில் அப்படியே உறைந்து எதிரே இருக்கும் தங்கள் குருநாதரின் செய்கைக்காக காத்து நிற்கும் நாட்டிய மாதுகள். குருநாதரும் அங்கு இருக்கும் அனைவரையும் போல, காத்து நிற்கிறார் – யாருக்கு?

அனைவருமே அவரை பலமுறை பார்த்துள்ளனர், ஒளிவீசும் கவசத்தை தனது வெற்றி மார்புகளில் தரித்து, கம்பீரமாக தனது ரதத்தில் ஏறி செல்லும்போது, ராஜ உடையில் பட்டாடை உடுத்தி செங்கோலும் மணிமுடியும் ஜொலிக்க பட்டத்து யானை மீது பவனி வரும் போதும் பார்த்ததுண்டு. எனினும், இன்று அப்படி அல்ல. இன்று சாதனை ஒன்றை நிகழ்த்தி , ஒரு அதிசயத்தை நடத்தி அந்த மாவீரன் தன் கனவை நினைவாக்கும் பொன்னாள்.

ஆம், இன்று தான் பெரிய கோயிலின் குட நீராட்டு் நாள் – இது போல பாரில் எங்கும் இல்லை என்று ,சோழம் சோழம் என்று எட்டு திக்கும் இந்த குலத்தின் பெருமையை பறைசாற்றும் பொன்னாள்.

திடீரென எங்கும் அமைதி, அரசரின் அணிவகுப்பு வாசலை அடைந்து விட்டது. வாயிலின் மூலம் உள்ளே வரும் சூரிய கதிர்கள் ஒரு சில கணங்கள் மறைக்கப்படுகின்றன, பின்னர் சூரியன் உதிக்கும் ஒளி கிரணங்கள் போல அவரது மதிவதனம் , அரச சின்னங்கள் எதையும் அவர் தரிக்க வில்லை, வெள்ளை ஆடை இடுப்பில், ஒரு மேல் துண்டு , அங்கம் எங்கும் வெள்ளை விபூதி கோடுகள் – தங்க கவசத்தை விடவும் இந்த வடிவில் சிவப்பழமென ஜொலித்தார் மாமன்னர் – அப்போது..

சோழம் பூஜிக்கும் மந்திரமென பகைவர் மனதில் காலனின் நாமத்தை நினைவு படுத்தும் ஒலி.. மன்னனின் மெய்கீர்த்தி ஒலிக்க துவங்கியது….


ஸ்வஸ்திஸ்ரீ்
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்

உடனே, மாமன்னன் புருவங்கள் நெரிந்தன, வலது கை மேலே எழும்ப துவங்கியது.. குறிப்பால் அறிந்து புகழ் பாடும் வாய் அப்படியே நின்றது, என்ன வென்று அறியும் முன்னர் மெய்காவல் படை தலைவன் கை இடைவாளுக்கும் சென்றது. எனினும் நெறித்த புருவும் முழுவதுமாக நெறியாமல், முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு குடை பிடித்தது. அந்த ராஜ களை சொட்டும் முகத்தில் இன்னும் ஒரு படி அழகு எப்படியோ ஏறியது.

“அவனுக்கு முன் என் புகழ் எம்மாத்திரம். நான் இப்போது இங்கு ராச ராசன் அல்ல.. அடியேன் சிவ பாத சேகரன் “

மன்னரின் இந்த மொழியை கேட்டதம், மீண்டும் மேள தாளம், மணிகள் கிண்கிணி முழங்க – எங்கும் இசை வெள்ளம். அப்போது, மேலே இருந்து நானூறு சலங்கைகள் ஒரு சேர ஜதி பிடித்தன…குருநாதரின் ‘தா’ என்ற ஓசைக்கேற்ப.

தன் கனவு பலிக்கும் பேரானந்தத்தில் பெருவுடையாரின் அடியில் நின்ற மன்னர், தொலைவில் நின்ற குஞ்சர மல்லனை, தஞ்சைப் பெரும் சிற்பியைத் தேடி அழைத்தார்.

“இன்றுமுதல் உனக்கு ராஜ ராஜ பெருந்தச்சன் என்ற பட்டம் அளிக்கிறோம், பெயரில்லா சிற்பிகளாக நீங்கள் இருப்பது போதும். – யார் அங்கே, இந்த பெயரை எனது பெயருடன் இணைத்து கல்வெட்டில் வெட்டுங்கள். – உனது உன்னத படைப்பின் புகழ் சூரியனும் சந்திரனும் உதிக்கும் வரை நிலைத்து இந்த வையகத்தில் என் பெயரும் உன் படைப்பும் ஒன்றாய் ப் பிணைந்து உன் புகழை உலகிற்கு உணர்த்தட்டும்.

கணங்களில் நீர் பெருக தஞ்சைப் பெரும் சிற்பி கை கூப்பி வணங்கினார்.

“என் கோனே , இந்த குணமல்லோ எங்களை எந்நாளும் உங்கள் அடி பணிய வைக்கிறது. இந்த பெருமிதத்தில் இந்த அற்புத ஆலயத்தில் தங்களுக்கு விசேஷமாக வைத்துள்ள ஒரு அற்புத வெளிப்பாட்டைக் காட்ட மறக்கக்கூடாது. பிரத்தேயகமாக தலை சிறந்த ஓவியர்களை கொண்டு திருச்சுற்றில் உங்களுக்கு பிடித்த ஈசனின் வீரட்டானம் ஒன்றை தீட்டச் செய்துள்ளேன்.”

ஓ , அப்படியா. இதற்காகத்தான் கடந்த சில வாரங்களாக என்னை அந்தப பக்கம் செல்லாமல் தேர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தர அனைவரும் சேர்ந்து சதி செய்தீரோ..

ஐயனே , பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள். முதலில் வேலைபாட்டை கொஞ்சம் பாருங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள், அங்கே வெளிச்சம் போதவில்லை, யார் அங்கே – பந்தங்களை கொண்டு வாருங்கள். கவனம், சுவரின் அருகில் செல்ல வேண்டாம். எல்லா இடங்களையும் ஓவியங்களால் நிரப்பி உள்ளோம்.

வேந்தே – தாங்கள் விமானத்தின் கோஷ்டத்தில் திருப்புற விஜய சிற்பங்களை நிறுவச்சொன்ன போதே தங்களுக்கு திரிபுராந்தக கதையின் பால் உள்ள ஆவலை புரிந்துக் கொண்டோம். அதனால் அந்த கதையை ஓவியாமாக தீட்ட முடிவெடுத்தோம்.

“அருமை, கலைஞரே.! குறிப்பால் உணரும் உங்கள் திறன் அருமை. உங்களைப் போன்றோர் என்னிடத்தில் இருப்பது நான் செய்த புண்ணியம். ஆமாம், பெரிய அன்னை செம்பியன் மாதேவி பலமுறை சுந்தரர் , சண்டேஸ்வரர் புராணங்களை சொல்லிக்கொடுத்தாலும், என் அக்கன் குந்தவை பிராட்டியார் தினமும் படித்துக்காட்டிய மகேசனின் திரி்புர தகனம் மனதில் ஏனோ நின்றுவிட்டது. கதையை எப்படி தீட்டி உள்ளீர், சிற்பம் போல தொடரும் காட்சிகள் போலவா..

மன்னா, தங்களை போல உயிர சிந்தனையும் நல்ல குணமும் பெற்ற தலைவனின் காலத்தில் பிறந்து பிறவிப் பயனை அடையும் நாங்கள் தான் புண்ணியம் செய்தவர்கள். பெரிய பிராட்டியும் குந்தவை பிராட்டியார் போன்றோர் சிறுவயதில் தங்களுக்கு இது போன்ற நல்ல கதைகளை சொல்லி வளர்த்தது வரும் சந்ததியினர் கற்று தெரிய வேண்டிய பாடம். ஓவியத்தை புது பாணியில் ஒரே காட்சியில் முழு கதையையும் விளக்கும் வண்ணம் காட்டியுள்ளோம் மன்னா.

ஒரே காட்சில் முழு கதையுமா. எப்படி முடிந்தது – குறைந்தது ஆறு முக்கிய காட்சிகள் தேவையாக இருக்குமே ?

கோனே, நாம் செய்த பாக்கியம், இது போன்ற ஓவியர்களும் நம்மிடையே உள்ளனர்.

பொறுங்கள், மதுராந்தகனும் பார்க்கட்டும். ராஜேந்திரா இங்கே வா

மன்னா. இருபது வருடங்களுக்கு முன்னர் தங்களை பார்ப்பது போலவே உள்ளது

ஆமாம், பெருந்தச்சரே. ஆனால் கோபம் மட்டும் என்னை விட இருபது மடங்கு. ராஜேந்திரா , இந்த அற்புத ஓவியத்தை பார். திரிபுராந்தகன் கதை, நினைவில் உள்ளதா உனக்கு. ஈசனின் வீரட்டாணங்களில் ஒன்று. திரிபுர அசுரர்கள் மூவர் தாரகாக்ஷ , கமலாக்ஷ மற்றும் வித்யுன்மாலி – தாரகனின் மகன்கள் , பிரம்மனிடத்தில் பெற்ற வரத்தின் பலத்தால், உலகை ஆட்டிப் படைத்தனர். பறக்கும் நகரங்கள் கொண்டு, மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தினர். எனினும் நல்ல சிவ பக்தர்கள். தன் அடியார்களை வதை செய்ய மனமில்லாமல், அப்பன் பெருமாளை புத்த வடிவத்தில் அனுப்பி வேறு மார்க்கத்தில் எழுத்து செல்ல வைத்தார். அதன் பிறகு, தேவர்கள் அனைவரும் கொண்டு படை திரட்டி, புவியைத் தேராக கொண்டு, சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாக வைத்து, நான்முகன் தேரோட்டியாக நின்று, பெருமாளே நாணாக மாறி , மேரு மலையை வளைத்து வில்லாக போர்க்களம் புகுந்தார். அப்படித்தானே பெருந்தச்சரே ?

ஆமாம் அண்ணலே. அந்த தேர் எங்கள் ஆசான் விஸ்வகர்மனால் செய்யப்பட்டது. அதோ தேரோட்டியாக நான்முகன்.

தந்தையே – தேரோட்டி முன்னால் பார்க்காமல் ஏன் திரும்பி ஈசனை பார்க்கும் வண்ணம் உள்ளது?

மகனே, இது கதை சொல்லும் ஓவியம் – முழு கதையையும் ஒரே ஓவியத்தில் ஓவியன் விளக்க எத்தனிக்கிறான்.

ஐயனே, மேலே பெருமாள் புத்த வடிவில் இருப்பதும் திரிபுர அசுரர்கள் அவனை வாங்கும் வண்ணம் வரைந்துள்ளோம். அங்கே எலியின் மீது யானைமுகனும், மயிலின் மீது முருகனும், சிம்மத்தின் மீது தேவியும், ஈசனுடன் பல பூத கணங்களும் போருக்கு செல்லும் காட்சி இங்கே

ஆமாம். அசுரர் படையும் மிகவும் கோரமாக தெரிகிறது. அந்த பந்தத்தை இன்னும் அருகில் எடுத்து வாருங்கள், ஓவியத்தில் உள்ள தனித்தன்மையை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். ராஜேந்திரா , உன்னால் முடிகிறதா பார்ப்போம்.

தந்தையே , தேவார வரிகளில் இரு விதமாக இந்த காட்சியை பாடும் பாடலை படித்த நினைவு வருகிறது – கறுத்தவன் (சினந்தவனும்) என்று ஒருமுறையும் நகைசெய்த என்றும் வருமே.

முதல் திருமுறை

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

முதல் திருமுறை

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பலே மகனே – அருமை. படிப்பிலும் கவனம் செலுத்தினாய் போல உள்ளதே. ஆச்சாரியர் இதற்கு இரு விளக்கங்கள் தருவார். இவ்வாறு போருக்கு செல்லும் ஈசனை விளக்கும் பாவம் – உடல் சிவக்க, கண்கள் பிதுங்க , புருவங்கள் வில்லாக வளைய – பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் இதை ரௌத்ர திருஷ்டி என்பார்கள். உனது சினேகிதி அந்த நாட்டியக்காரியிடம் கேளேன்.

அப்பா , இங்கே எதற்கு இந்த சம்பாஷனை. தெரிகிறது தெரிகிறது. சிவனின் முழு உடலுமே செவ்வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. நீங்கள் கோபப்படுவது போலவே .

மகனே, நீ கூட இப்போது கொஞ்சம் சிவந்து காணப்படுகிறாயே ? கோபமா ? நாணமா ? சரி, ஈசனின் முகத்தில் ஏதாவது வித்யாசமாக தெரிகிறதா உனக்கு.

தந்தையே – அதற்கு முன்னர் அவர் வில்லை பிடித்திருக்கும் முறையே சற்று வித்யாசமாக உள்ளதே. எதிரி எதிரில் இருக்க, வில்லை ஏன் தன்னை நோக்கி பிடித்து இருப்பது போல உள்ளது காட்சி.

மதுராந்தகா, அது தான் ஓவியனின் திறமை. கதையை பாதியிலேயே விட்டு விட்டோமே – இரு விதாமாக விளக்கம் தருவார் குருநாதர் என்று சொன்னேன் அல்லவா, ஒன்று – இவ்வாறே படை திரட்டி செல்லும் போது கூட சென்ற தேவர்களில் சிலருக்கு சற்றே தலைக் கனம் பிடித்தது. ஈசனுக்கே நம் உதவி தேவை என்று !! இன்னொரு விதமான விளக்கம் பிரம்மன் ஈசனை பார்த்து – எதற்கு இந்த அதீத விளையாட்டு. தங்களுக்கு இந்த படை, ஆயு்தங்கள் எல்லாம் தேவையா என்று கேட்க….மகேசன் அடுத்த கணம், வில்லை தன் பால் திருப்பி, ஒரு சிரிப்பு சிறக்க – எதிரில் இருந்த அசுரர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆயினர்.

இப்போது பார். பித்தனின் முகத்தில் புன்னகையை. ஓவியன் திறமையாக இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வந்துள்ளான்.

அருமை, தங்கள் விளக்கத்துடன் ஓவியத்தை பார்க்கும் பொது மெய் சிலிர்க்கிறது. சீக்கிரம் வாருங்கள்! அடுத்த ஓவியங்களை பார்ப்போம்.

படங்கள்: திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன். பெரிய கோயிலை பற்றி மேலும் முழுவதுமாக தெரியவேண்டுமாயின் கண்டிப்பாக அவர்களது நூலை படியுங்கள்.அவர்களது நூலை
நன்றி ரீச் சந்திரா


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

உன் கரம் பிடிக்கிறேன்

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் – சாதாரண திருமணம் அல்ல – அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் – தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

மணமகனாக சுந்தரேஸ்வரர் – மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ – நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .


சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல – தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சோழ ஓவியன் vs டா வின்சி

சமீப காலங்களில் தஞ்சை பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் பற்றிய நிறைய தகவல்கள் நாளேடுகளில் வருகின்றன. இந்த ஆயிரம் ஆண்டு ஓவியங்கள் என்பது ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு இருபத்தி எட்டு வயது இளைஞர் , திரு S. K. கோவிந்தசுவாமி அவர்கள் , கண்டு பிடித்தார் என்பது பலரும் அறியாத ஒன்று. நல்ல வேளை, ஹிந்து நாளேடு ச்மீபத்தில் கூட இதை வெளியிட்டு அவரை சிறப்பித்து உள்ளது,

ஹிந்து

ஆனால் எண்பது ஆண்டுகள் ஆகியும், இந்த ஓவியங்கள் இன்னும் ஒரு புத்தகமாகவோ , இணையத்திலோ தென்படவில்லை. ஒரு சில முயற்சிகளும் காப்புரிமை பிரச்சனைகளில் சிக்கி தவிக்கின்றன. தஞ்சை சென்றாலும் கூட சாமானியர்களுக்கு இந்த ஓவியங்கள் பார்க்க அனுமதி இல்லை !! அப்படி இருக்க இந்தப் பதிவை, ஏற்கனவே வெளிவந்த ஒரு சில படங்களை மற்றும் கோட்டோவியங்களை கொண்டும் இடுகிறேன், எனினும் மனதில் ஒரு நெருடல் – வரைந்த ஓவியனே அதற்கு தன் பெயரை இட்டு சொந்தம் கொண்டாடவில்லை – அப்படி இருக்க நாம் யார் அவற்றின் வெறும் புகை படங்களுக்கு காப்புரிமை போட, மக்கள் பலரும் ரசிக்க இந்த பொருளாதார நோக்கங்கள் கொண்ட தடை எதற்கு?.

சோழ ஓவியனின் ஒப்பற்ற கலைத் திறனை நாம் இன்று பார்க்க, அந்த ஓவியங்களின் ஒரு சிறு பாகத்தை மட்டுமே எடுத்துக்கொள்கி்றேன் – சுந்தரர் ( இந்திரனின் வெள்ளை யானையின் மேல்) சேரமான் பெருமாளுடன் ( வெள்ளைப் புரவியின் மேல் ) கைலாயம் செல்லும் காட்சி. இதை பற்றி பல அறிஞர்கள் எழுதியுள்ளனர், ஏன் ஒரு சில முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகள் கூட செய்திருக்கிறார்கள் என்று செவி வழி செய்தி – எனினும் என்ன செய்வது – நமது பல்கலைக் கழகங்கள் இந்த ஆய்வுகளை பகிர்வதில்லை – இப்படி ஆய்வேடுகள் கிடங்கில் தூங்குவதில் யாருக்கு என்ன பயன் ?

சரி, பதிவுக்கு வருவோம் – இந்த ஓவியம் – அதிலும் ஒரு சிறு பாகத்தை மட்டுமே நாம் பார்க்க போகிறோம். சேரமான் பெருமாள் மற்றும் அவர் வெண் புரவி.


படங்கள்:
http://ngm.nationalgeographic.com/2008/01/india-ancient-art/behl-photography

மேலே செல்லும் முன்னர், ஓவியத்தில் இந்த பகுதியை மட்டும் ஏன் எடுத்தேன் என்பதற்கு விளக்கம். புரவிகளுக்கு ஒரு தனி ஈர்ப்பு சக்தி உண்டு, வலிமை பொருந்திய தசைகள், அவற்றை பிரதிபலிக்கும் மேல் தோல், நளினத்தை சொட்டும் அங்க வளைவுகள், காற்றில் பறக்கும் ரோமங்கள்…இப்படி பல. கலைஞனின் பார்வையில் இவை ஆண்டவனின் படைப்புகளில் மிகவும் அழகு ( பெண்களுக்கு அடுத்து !!) டா வின்சி புரவிகளை வரையவும் உலோகத்தில் வடிக்கவும் – தசை, நரம்பு, எலும்பு என்று அணு அணு வாக பிரித்து பார்த்து படிக்கிறார். அவரது கடைசி நிறைவேறா வேலை – இருபத்தி நான்கு அடி உயரமுள்ள வெண்கல புரவி. இதனை பற்றி சமீபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன். பார்த்து விட்டு அதை பற்றி மேலும் படிக்க இணையத்தில் தேடிய பொது, அவரது பல புரவி ஓவியங்கள் கிடைத்தன. ஒவ்வொன்றாய் பார்க்கும் போது, எங்கோ இதே போல பார்த்த நினைவு வந்தது. ….எங்கு? முதலில் அவரது ஓவியங்களை பாருங்கள்


படங்கள் : இணையத்தில் இருந்து எடுத்தவை.

சரி, இப்போது பெரிய கோயில் ஓவியத்துக்கு வருவோம். அறிஞர் திரு C. சிவராமமுர்த்தி அவர்கள், ஒரு மகான். கலை உலக ஜாம்பவான். அதுவும் சோழர் கலை என்றால் அவருக்கு ஒரு தனி பிரியம். இந்த ஓவியத்தை பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள் ( நமக்கென்று அவர் இந்த வடிவத்தின் கோட்டோவியத்தையும் தீட்டி தந்துள்ளார்.)

http://www.yabaluri.org/TRIVENI/CDWEB/SomeFrescoesoftheCholasnov33.htm

புரவியின் மெது இருக்கும் ஆளின் வடிவமும் மிக அழகு. ஒரு கையில் கடிவாளத்தையும் மறுகையில் தடி என்று அவர் பிடித்திருக்கும் வண்ணம் நளினம் ததும்புகிறது அந்தக் குதிரை ST. எகிடோ சண்டை காட்சி போல தோற்ற ஒற்றுமை இருக்கிறது. இன்றைய நவீன பார்வையில் இந்த ஓவியத்தில் சில குறைபாடுகள் இப்பது போல தெரிந்தாலும், ஒன்றை மனதில் நாம் வைத்துக்கொள்ள வேண்டும், எந்த தலை சிறந்த ஓவியனும் விமர்சனத்திற்கு அப்பார்ப் பட்டவன் அல்ல, எனினும் இந்தனை ஆண்டுகளுக்கு முன்னரே, மிருகங்களை இப்படி நேர்த்தியாக வடிக்கத் தெரிந்த ஓவியனும் அவனது அற்புத திறனும் ஒரு அறிய விஷயம். இன்னும் ஒரு அத்தாட்சி அருகில் இருக்கும் யானை

( யானை அடுத்த பதிவில் பார்ப்போம் )

அவரது ஓவியத்தை சற்று சரி செய்து இங்கே இடுகிறேன். ( ஓவிய நண்பர்கள் இதனை சோழர் பாணியிலே வண்ணம் தீட்ட முயற்சி செய்யலாம்!!)

திரு C. சிவராமமுர்த்தி , சொன்ன திரு போலோ அவர்களது ஓவியம் இதோ

நடுவில் இருக்கும் வெள்ளை புரவிக்கும் நமது புரவிக்கும் உருவ ஒற்றுமை வண்ண ஒற்றுமை அபாரம். எனினும் டா வின்சி அவர்களது படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெரிய கோயில் ஓவியத்துடன் ஒப்பிடும்போது – ஒவ்வொரு அம்சமும் – அங்கமும் – அழகாக வளையும் பின் முதுகு, பின்னங் கால்களின் சித்தரிப்பு, திரண்ட மார்பு, கம்பீரமான தலை, செதுக்கி விட்டாற்போல பிடரி , பிளிரும் முன்னங் கால்கள், கனக்கச்சிதமான இடை – நடை , மூட்டு மடிப்புகள், குளம்பு – அருமை.

பெயரில்லா சோழ சிற்பியே , உனக்கு கலைக்கு நிகர் இல்லை. உன் அற்புத கலைக்கு உலகம் தலை வணங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பின் குறிப்பு: தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளின் பொது அதிகாரிகள் இந்த அற்புத ஓவியங்கள் ஒரு தொகுப்பாக வெளியிட அடியேனின் சிறு கோரிக்கை – இந்த பதிவின் மூலம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யார் சிறந்த ஓவியன்

“அலைகளையும்,கொழுந்து விட்டெரியும் அழலையும்,காற்றின் போக்கில் விண்ணில் தவழ்ந்து செல்லும் வெண்முகிலின் கூட்டத்தையும் தூரிகையால் ஓவியமாக வடிக்க வல்லவனே மிகச் சிறந்த ஓவியன்.”

விஷ்ணு தர்மோத்தர புராணம், Ch 43 V 28

நான் இதனை முதல் முறையாக திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை அரசு ஓவியக் கல்லூரி ஆசிரியர் , அவர்களின் உரையில் ( அதற்கு அழைப்பு விடுத்த திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி ) கேட்டேன். உரையின் தொடக்கத்திலேயே மேல்கண்ட அந்த அற்புத வாக்கியத்தைச் சொல்லி எங்கள் ஆர்வத்தைத் தூண்டினார் சிவராமகிருஷ்ணன்.

”ஓர் ஓவியனின் பார்வையில் சிற்பம்” என்பதே உரையின் தலைப்பு – பல அற்புதமான சிற்ப வடிவங்களில் பொதிந்து கிடக்கும் கலை நுட்பங்களை அவர் எங்களுக்கு விளக்கினார். எனினும் என்னை மிகவும் கவர்ந்தது முடிவில் அவர் விளக்க எடுத்துக்கொண்ட ‘அஜந்தாவின் அழியா ஓவியங்கள்’ தலைப்பு (சிவகாமியின் சபதம் – ஆயனச் சிற்பியின் தாக்கம்தான்!!)

நண்பர்கள் பலரும் அஜந்தா சென்று அங்குள்ள அழியா ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைவதைக் கண்டதுண்டு. எனினும் அவர்கள் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு அப்படிப் பரவசப் படுகிறார்களா என்று ஒரு கேள்வி மனத்தில் இருந்தது. இங்கேதான் நுண்கலை வல்லுனர்களின் உதவி நம்மைப் போன்ற சாமானியர்களுக்குத் தேவை (இந்தப் பதிவை இட அனுமதி அளித்த திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றி – இப்பதிவில் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அவருடையவை; பிழைகள் ஏதேனும் இருந்தால் அவை எனது மட்டுமே )

இப்படித்தான் பொதுவாக அஜந்தா செல்லும் அனைவரும் அங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கின்றனர். சிதைந்து போனாலும் அதில் எஞ்சி இருக்கும் கலையை நாம் உன்னித்துப் பார்த்தால் மேலும் மேலும் ரசிக்கலாம். படத்தின் வலப்புறம் பாருங்கள்.

இது அஜந்தாவின் பதினேழாம் குடைவரையில் இருக்கும் சுவர் ஓவியம். வானுலக தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் காட்சி இது –

அருகில் சென்று ஓவியத்தின் அழகை ரசிப்போம்.

பேரழகுதான் – பொறுங்கள், அதற்குள் ’பேஷ் பேஷ்’ எல்லாம் வேண்டாம். இந்த ஓவியத்தின் நுட்பங்களை முதலில் பார்ப்போம்.

அதற்கும் முன்னர், நண்பர் ஓவியர் திரு பிரசாத் அவர்களை கட கடவென்று இந்த ஓவியத்தின் நகல் ஒன்றை வரைந்து தரச் சொன்னேன். இதோ அது –

ஒவ்வொன்றாக இந்த ஓவியத்தின் உன்னதங்களைப் பார்ப்போம்.

முதலில் – விஷ்ணு தர்மோத்தரத்தின் சித்ர ஸூத்ரம் பகுதியில் இடம்பெற்ற இன்னும் ஒரு வாக்கியத்தைப் பார்ர்ப்போம் ( விஷ்ணு தர்மோத்தரம், *அபிலாஷ்தார்த்த சிந்தாமணி,* சிவதத்வ ரத்நாகரம், சில்ப ரத்நம், நாரத சில்பம், ஸரஸ்வதி சில்பம், ப்ரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ’சித்ர ஸூத்ரம்’ என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். )

// ரேகாம் ப்ரசம்ஸந்தி ஆசார்யா:, வர்ணாத்யாம் இதரே ஜநா://

என்றால் ” வல்லுனர்கள் ஓர் ஓவியத்தைக் கோடுகளை கொண்டே மதிப்பிடுவர்”

நாம் எல்லோருமே ஒருமுறையாவது வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்ட முயற்சி செய்திருப்போம் ( சிறு வயதிலாவது !!). சிலர் முறையாகப் பயின்றும் இருப்பார். அப்படி நாம் தீட்டும்போது வர்ணத்தில் தோய்த்த தூரிகையை அப்படியே கையை எடுக்காமல் ஒரே மூச்சில் கோடுகளை வரைவது எவ்வளவு சிரமம் என்று அறிவோம். ஆனால் அதுதான் கைதேர்ந்த ஓவியனின் திறமை. இப்போது இந்த அஜந்தா ஓவியத்தின் கண்களையும் புருவத்தையும் பாருங்கள் – ஒரே இழுப்பில் வரையப்பட்ட அழகு – ஒரே இழுப்பு தான் – புருவம் வந்து விட்டது; அடுத்த இழுப்பு கண்களில் தோற்றம்.

அவை வெறும் நேர் கோடுகளும் அல்ல; அந்த வளைவுகளுக்குள் ஒரு நயம் உள்ளது. அந்தச் சிறு நெளிவில் கடைக்கண்ணின் தோற்றத்தின் உயிர்ப்பு மிக்க வெளிப்பாடு. அப்பப்பா ! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு வாக்கியம் –

// அபி லகு லிகிதேயம் த்ருச்யதே பூர்ணமூர்த்தி: //

அப்படியென்றால் “முழு உருவத்தையும் வெகு சில கோடுகளைக் கொண்டு உணர்த்த வேண்டும் “

சரி, சம கால ஓவிய முறைகள் அஜந்தாவில் உள்ளனவா? பொதுவாக முப்பரிமாண உருவங்களை இரண்டு பரிமாணத்தில் காட்டுவதே ஓவியம். ஆனால் பார்ப்போருக்கு அது முப்பரிமாணத்தை உணர்த்த வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தில் உள்ள இரு காதணிகளையும் பாருங்கள்.

இடப்புறக் காதணி – வெறும் இரு நேர் கோடுகள் மட்டுமே கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அடியில் சற்றே வளைந்த கோடு. ஆனால் இதை வலது தோட்டுடன் ஒப்பிட்டுக் காணும் பொது. இது வட்டமான காதணி தான். எனினும் அங்கேயும் அது வட்டமாக இல்லை – Oval shapeல் இருந்தாலும் அந்த வடிவமைப்பு நமக்கு இரு காதணிகளின் வட்டமான தோற்றத்தை இடைவெளியுடன் முப்பரிமாணத்தில் உணர்த்தும் வகையில் உள்ளது – நமது பார்வையுடன் விளையாடுவதே இதன் நோக்கம்.

முதன்முதலில் சொன்ன வாக்கியத்தில் வற்புறுத்தப்படும் அசைவு -இதுவும் ஓர் ஓவிய முறை – பொருட்களின் அசைவை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதே ஓவியத்துக்கான இலக்கணம்.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு – இறங்கும் தேவதை திடீரென நின்று அருகில் இருப்பவரைப் பார்க்கிறாள். அவள் முகம் சற்றே இடது புறம் திரும்ப ஆரம்பிக்கிறது – கண்கள் இவற்றை முந்திக் கொண்டு விட்டன – கடைசியில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் – திடீரென நின்று பாருங்கள் – அந்த திடீர் அசைவுக்கு ஈடு கொடுக்க அவை குலுங்கும் வண்ணம் வடித்த ஓவியனின் திறன்…

இது போல இன்னும் பல திறமைகளை இங்கு வெளிக்காட்டுகிறான் ஓவியன். அண்மையில் இருக்கும் பொருட்களைப் பெரிதாகவும் , தொலைவில் இருக்கும் பொருட்களைச் சிறியதாகவும் பார்க்கும் நமது மூளையை – இரு பரிமாணத்தில் இருக்கும் ஓவியத்தை முப்பரிமாணம் என்று நினைக்க வைக்க – அவன் அதை ஓவிய முறையில் கையாளும் உத்தி : கழுத்தில் உள்ள ஹாரத்தின் மணிகளைப் பாருங்கள் – நடுவில் உள்ள மணிகளைப் பெரிதாகவும், தோள்களின் மேல் செல்லும் பொது அவையே சிறிதாகவும் தெரியும்படி தீட்டி – நம்மை மயக்குகிறான் ஓவியன்.

இவனன்றோ சிறந்த ஓவியன் !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கலை என்றால் என்ன?

இன்று நமக்கு ஒரு புது முயற்சி. இதுவரையிலும் ஓராண்டிற்கும் மேலாக பாரம்பரிய சிற்பங்கள், சிற்பங்களை ஒட்டிய ஓவியங்களை பார்த்து வந்த நாம் ( இனியும் அவற்றை காண்போம்) , ஆனால் இன்றைய தினம், இன்னும் ஒரு புதிய பரிமாணத்தினுள் கால் பதிக்கின்றோம். எந்த கலை வடிவமும் வாழ / வளர , ஒரு குறுகிய சட்ட முறைக்குள் அடங்கிக் கிடக்க கூடாது. அது பல தரப்பட்ட கருத்துகளை உள்வாங்கி மாற வேண்டும். அதற்க்கு முன்னர் கலை என்றால் என்ன?

கலைகளில் நாம் இதுவரை சிற்பம், சிலை, ஓவியம், சுதை , கல், உலோகம், கற்கோவில், கட்டுமான கோயில், குடவரைக் கோயில் , புடைப்பு சிற்பம் என்று பலவற்றை பார்த்தோம். அவை அனைத்தையும் ஒருங்கிணைப்பது என்ன – அதன் தாக்கம். நானூறு, ஐந்நூறு ஏன் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும், இந்த அற்புத படைப்புகள் காண்போரை மகிழ்விக்கின்றன?. இதன் ரகசியம் என்ன?. ஆண், பெண், பெரியவர், சிறுவர் , உள்நாட்டவர், வெளிநாட்டவர் என்று ஆயிரத்தி மூன்னூறு ஆண்டுகள் ஆயினும் இந்த சிற்பங்கள், இன்னமும் நம்மை மயக்குவதன் சூட்சமம் என்ன?, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து, நமது பண்பாட்டிற்கு அன்னியமான மண்ணில் இருந்து வரும் நபர், நமது புராணக் கதைகள் அறியாதவர், அன்னியன் என்றாலும் அவனையும் தன பால் வசியம் செய்ய வைக்கும் இந்த கலையின் ஆகர்ஷண அல்லது அமானுஷ்ய சக்தி என்ன?. மனிதன் அவன் மனத்தினுள் எங்கோ தூங்கிக்கிடக்கும் உள்ளுணர்வை தட்டி எழுப்பும் இந்த கலையை என்ன சொல்லி வர்ணிப்பது?
ஒருவேளை இப்படி வர்ணிக்கலாமோ.. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.

கலைஞர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மற்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை உபயோகித்து, பூட்டை உடைத்து தங்கள் எண்ணங்களை பறக்க விடுகின்றனர். அப்படிக் கிடைத்த சுதந்திரத்தில் சிறகடித்து பறந்து, தான் இதுவரை கண்ட மனக்காட்சிகள், மற்றும் புறக்காட்சிகள் அதனோடு ஒட்டிய உணர்வுகளை அனைத்தையும் வெளிக்கொணர்வதே கலை.

நமது மனம் ஒரு புதிர், அது நாம் புறக்கண்களால் காணும் அனைத்தையும் படம் பிடித்து தன்னுள் அடக்கி வைத்துக்கொள்ளும். பிறகு, அதில் உணர்வுகளோடு பிணையும் காட்சிகளை இன்னும் நன்றாக பதியச் செய்யும். ( சற்று கண்ணை மூடி, ஏதாவது ஒரு காட்சியை நினைவுப் படுத்தி பாருங்கள் – முதலில் நினைவிற்கு வரும் காட்சி அதனுடன் ஒட்டிய மிக அழுத்தமான உணர்வுடன் பிணைந்ததாகவே இருக்கும் ). கலைஞன் இந்த மனக்கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறனே – கலை. இது கலைஞனுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று இல்லை, கலைஞனின் படைப்பை பார்க்கும் பொது , அதனுள் ஈர்க்கப்படும் ரசிகனும் கலந்துகொள்கிறான். படைப்பில் இருக்கும் ஏக்கம், இன்பம், துன்பம், சுகம் அனைத்தையும் தாயின் தொப்புள்கொடி ஏற்படுத்துவது போல ஒரு தொடர்பு – வெட்டுப்பட்ட பின்னரும் தொடரும் அந்த உணர்வு, கலைஞனின் உணர்வை நாம் நம் மனதில் உணர வைக்கும் திறனே கலை. இதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. கலை என்று இணையத்தில் தேடினால் ஆயிரம் பெயர்கள் வரும். சில அர்த்தங்கள் உங்களை ஈர்க்கலாம். ….

ஆனால் இந்த சுதந்திரமே கலைக்கு மகுடம். ஜாதி, மத, மற்றும் எல்லா பேதங்களையும் தாண்டி கலையை கலையாய் ரசிக்கும் உணர்ச்சி. அதுவே கலை. அதனால் கலை என்பது இது தான் என்று ஒரு வட்டம் போட்டு அதனுள் எல்லா வகைகளையும் அடக்கி விட முடியாது. பரிமாண வளர்ச்சியில் புது புது சிந்தனைகள் வருவது போல கலையும் மாறிக்கொண்டே இருக்கும்.

சரி.. இப்போது நாம் நம் படைப்புக்கு வருவ்வொம். எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் ஒரே அறுசுவை உணவை எத்தனை நாள் தான் உண்ணுவது. இன்று நமக்கு அது போல ஒரு புதுவிதமான கலை விருந்து. திரு ஜீவா அவர்கள் அறிமுகம் , திரு பாலா அவர்களுது அறிமுகம் – ஓவியர் சாளுக்யன் அவர்களுது ஓவியம்.

தஞ்சை பெரிய கோயிலில் மிகவும் சிதைந்த சுதை சிற்பம். வர்ணங்கள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கும் இந்த சிற்பம் அவரது கண்ணை கவர்ந்துள்ளது. காலசம்ஹார மூர்த்தி சிலை – ஈசன் தன் பக்தனான மார்கண்டேயனை காக்க எமனை எட்டி உதைக்கும் சிற்பம். இந்த கதை நாம் இதே கோயிலில் வேறு சோழர் கால புடைப்பு சிற்பத்தை பார்த்த போதே பார்த்தோம். எனவே நேராக சிற்பத்திற்கு செல்வோம்.

கலை காலத்தை வென்றது என்பதை குறிக்க, சாளுக்யன் எடுத்துள்ள கரு – ஈசன் தன்னிடம் சரண் அடையும் மார்க்கண்டேயனுக்காக ` நீ என்றும் பதினாறு என்று வரம் அளித்து ( இன்று எத்தனை பேர் இந்த வரம் பெற முயற்சி செய்வரோ ) , இறையிடத்தில் முழுவதுமாக சரணாகதி அடையும் சிற்பத்தை, அவர் எடுத்துக் கொண்ட வெளிப்பாட்டு முறையும் வினோதம் -கரி கொண்டு தீட்டிய ஓவியம். மனிதன் வாழ்கையின் சுழற்சியை கண்டு சிரிக்கும் வண்ணம், நாம் அனைவரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவது போலவும் ஒரு தேற்றம்…. அதுவும் ஈசனது தானே என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த ஒப்பற்ற ஓவியம்..

மனித வாழ்கை நிலை அற்றது, ஆனால் அவனால் படைக்கப்பட்ட, அவன் வெளிக் கொணர்ந்த கலை அழிவற்றது.

சாளுக்யன் அவர்களுது மற்ற படைப்புகளை காண.

http://www.chalukyan.com/


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிற்பக்கலைக்கு அழகூட்டும் ஓவியம் – திருபெருந்துறை ஆவுடையார் கோயில் குதிரை வீரன்

நாம் முன்னர், ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தின் அற்புதத் தூண்களில் உள்ள குதிரை வீரர் சிலைகளை பார்த்திருந்தோம், அதை தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு அற்புத குதிரை வீரன்.

பரிமேல் அழகர்கள் ஆதி காலத்தில் இருந்தே வீரர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஈர்ப்பதுண்டு. குதிரை சவாரி என்பது வீரத்தின் இருப்பிடமாய் இருக்க, சீறும் குதிரை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பல இடங்களில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் குதிரை, அதுவும் ஒவ்வொரு சதையிலும், நரம்பிலும் இருந்து எழும் வேகம், அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரன் அதனுடன் ஒன்றாய் கலந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அனுபவம் – பார்க்கும் கோழையின் ரத்தத்தைக் கூட மாற்றி அவனை வீரனாக்கும் ( இன்றைய இளைஞர்கள் இந்த உணர்வை மோட்டார் சைக்கிளில் பறக்கும் போது சற்று அனுபவிக்கலாம் ) – அந்த உணர்வு ஒரு சுதந்திரம். அதே போல எதிரில் இருக்கும் பெரும்படையை கண்டு அஞ்சாமல், வேல் ஏந்தி செல்லும் குதிரை படையை கண்டு அவர்களே அஞ்சி ஓடும் கதை பலவற்றை நாம் கேட்டுள்ளோம். பல வீடுகளில் வாண்டுகள் தூங்கும் முன்னர் கேட்கும் கதைகளில் குளம்பொலிகள் மிகுதியாக வரும். அதில் வரும் குதிரை வீரர்கள் – அது மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை போசிபல்ஸ் அல்லது பிரிதிவ் ராஜ் சௌஹனின் செடக் அல்லது நாம் தமிழ் வீரர்களான வாள் வில் ஓரியின் ஓரி, தேசிங்கு ராஜனின் பஞ்சகல்யாணி, இப்படி அந்த அற்புத குதிரைகளின் டக், டக், டக் எனும் குளம்பொலி சப்தம், பல மழலைகளை தூக்கத்திலும் அதன் பின்னர் கனவுகளிலும் ஆட்கொண்டன.

இன்று நாம், அதே போல ஒரு அற்புத குதிரை வீரனை பார்க்கப்போகிறோம். கல்லில். அதுவும் குதிரையைப் பற்றிய ஒரு அற்புதம் நடந்த மண்ணில். ( அதை மற்றொரு பதிவில் பார்ப்போம் ) – ஓவியர் திரு ஜீவா அவர்களின் உதவியுடன் இன்று ஆவுடையார் கோயில் திருப்பெருந்துறை செல்கிறோம்

ஒரு அற்புத ஓவியர் (www.jeevartistjeeva.blogspot.com) அவரது ஓவியத்தையும் சிற்பத்தின் படங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

இந்த கால அட்டவணையில் ( 14th C முதல் – நாயக்கர் காலம் / விஜயநகர மன்னர்கள் காலம்) இந்த மாதிரி அற்புத சிற்பங்கள் நிறைந்த மண்டபங்களைக் காணலாம். பலர் பலமுறை இந்த ஆலயங்களுக்கு சென்றும் இந்த அற்புத படைப்புகளை ஒரு நிமிடம் நின்று கூட பார்ப்பதில்லை.

சரி, இந்த சிற்பத்தின் அழகை பார்ப்போம். குதிரை, குதிரை வீரன், அணிகலன், ஆபரணம் என்று இதனை நுணுக்கங்களை எப்படித்தான் கல்லில் செதுக்கினார்களோ.

குதிரை வீரனின் ஆயுதங்கள், அவன் கையில் பிடித்திருக்கும் ஈட்டி என்று ஒரு சின்ன குறிப்பை கூட விடாமல் ஒரே கல்லில் செதுக்கிய வேலைப்பாடு அருமை.

சிலை மட்டும் ஒரே கல்லில் வடிக்கவில்லை, இவை அனைத்துமே அந்த ஒரு தூணின் பாகம்.

இது மனித வெளிப்பாடா ??

படங்களுக்கு நன்றி திரு கந்தசுவாமி


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சித்தன்னவாசல் – மடிந்த ஓவியம் – பாகம் இரண்டு

சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.

நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.

நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.

சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.

வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.

“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.

பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.

கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..

பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..

எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment