சிலைத் திருட்டு – பாகம் பதினைந்து – 1916 புத்தகம் கொடுக்குத துப்பு ..

தமிழக கோயில்களில் உள்ள சிலைகளை முறைப்படி படம் எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்க இதனை விட ஒரு பெரிய உதாரணம் தேவை இல்லை.

1916 ஆண்டு வெளிவந்த நூல் என்றவுடன் ஏனோ தானோ என்று தான் இருக்கும் என்று எண்ணி வேக வேகமாகப் பக்கங்களை புரட்டினேன் – செப்புத் திருமேனிகள் படம் கண்ணில் பட்டது. எங்கேயோ பார்த்த நினைவு.

South-indian images of gods and goddesses (1916)

இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

பக்கம் 109 (129 in the pdf) உள்ள படம் தான் எனது ஆர்வத்தை தூண்டியது.

சோமஸ்கந்தர் சிலை – உலோகம் – சிவன்கூடல் என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.

பொதுவாக சோமஸ்கந்தர் வடிவம் ஒரே பீடத்தில் அமர்ந்திருப்பது போலவே இருக்கும் – இந்த சிலையில் வெவ்வேறாக வார்த்து இருப்பது கவனிக்கத்தக்க அரிய விஷயம். இப்படி உலோகத்தில் செய்வது கடினம் – இரண்டு பீடங்களை ஒரே அளவில் வார்க்க வேண்டும் – அதில் உள்ள கோடுகள் உட்பட அனைத்தும் ஒரே சீராக இருக்கவேண்டும்.

இதுவே நமக்கு தரும் முக்கிய துப்பு/குறிப்பு. தற்போது சிங்கை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிலை மட்டுமே இது போல இருக்கிறது. இந்த சிலையை அருங்காட்சியகம் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இரு சிலைகளையும் ஒப்பிட்டு பார்ப்போமா?









இரண்டு சிலைகளும் ஒன்றே என்பது தெளிவாக தெரிகிறது. அக்கம் பக்கம் கேட்டு பார்த்தால் இந்தக் கோயிலில் இப்போது ஒரு சிலை கூட இல்லை. இந்தக் கோயில் பற்றி வேறு எந்த நூலிலும் தகவல்கள் இல்லை. இந்த நூலிலும் வேறு எந்த சிலை படமும் இல்லை.

இவற்றைக் கொண்டு அதிகாரிகள் மேலே துப்பு துலக்கினால் பல உண்மைகள் வெளி வரும்!! இந்த திருட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த சிலை திருட்டு கும்பல் 2000 ஆண்டுக்கு முன்னரே இந்த செயல்களை செய்தார்கள் என்பதும், இன்னும் பல கோயில் சிலைகளை திருடி விற்ற செயல்கள் அம்பலம் ஆகும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

யார் இந்த இரு பொடி கணங்கள் ?

என்னை போன்றவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் ! ஒரு பெரியவர் நாற்காலி ஆராய்ச்சியாளர் என்று பட்டம் கூட சூட்டினார் ! அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இது.

புகழ் பெற்ற ராஜ சிம்ஹ பல்லவரது கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க எடுத்த முயற்சியின் பொது பல கடினமான இடங்களை சந்தித்தோம்.

குறிப்பாக மிகவும் சிதைந்த அடி பாகத்தில் இருந்த இரு உருவங்களை அடையாளம் கண்டுகொள்ள பல படங்களை ஆராய்ந்தோம்.

முடிந்தவரை இவை அந்நாளில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து அதன்படி படங்களை வடித்தோம். எனினும் இந்த இரு குள்ள கணங்கள் அங்கே இருப்பதே ஒரு ஆச்சரியமாக இருந்தது.

அந்த பெண் வடிவ குள்ள கணம் – உமையவளின் தோழியா ? இலக்கணத்தில் இவர்களை பற்றி ஏதாவது குறிப்பு உள்ளதா? இப்படி எல்லாம் அப்போது தோணவே இல்லை.

பல காலம் கழிந்து நண்பர் அரவிந்த் அவர்கள் தான் லால்குடி சென்ற பொது எடுத்த படங்களை சுட்டியை அனுப்பி வைத்தார்.

அங்கே உள்ள கதை சொல்லும் புடிப்புச் சிற்ப்பங்களை ஆராய்வதே எங்கள் நோக்கம் என்றாலும் அதில் இன்னொரு வடிவம் கவனத்தை ஈர்த்தது.
எதையோ நினைவூட்டியது.

இங்கேயும் அரியணையில் அம்மையப்பன் வடிவம் என்றாலும் முருகன் இல்லை. வலது புறம் அடியவர் ஒருவரும் – மேலே இருபுறமும் இரு முகங்கள் தெரிகின்றன. அவற்றில் நான்முகன், பெருமாள் வடிவங்கள் உள்ளனவா என்பது சரியாகத் தெரியவில்லை. நம் கவனத்தை ஈர்த்தப் பகுதி அரியணைக்கு அடியில் இருக்கும் இரு கணங்கள் தான்….

இந்த சிலையின் காலத்தை சரியாக கணிப்பது கடினம் என்றாலும் சுவாரசியம் என்னவெனில் பல்லவ ஓவியன் தீட்டிய அதே பாணியில் அந்த இரு குள்ள கணங்களும் இங்கே இருப்பது தான்!! இவர்கள் யாராக இருக்கக்கூடும் ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் மூன்று

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாய் இன்றும் நமது வாசகர்கள், முன் வரிசையில் அமர்ந்து, இந்த அற்புத ஓவியப் பயணத்தை நம்முடன் தொடர்கிறார்கள். இதுவரை பயணம் அருமையாக சென்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் ராஜசிம்மன் காலத்து அரிய சோமஸ்கந்தர் ஓவியத்தின் சிதைந்த பகுதிகள் கொண்டு முழு ஓவியத்தையும் தீட்டும் நமது முயற்சி இன்றும் தொடர்கிறது.

இந்த ஓவியத்தின் நடு நாயகனான ஈசன் மீது முதலில் நாம் கவனம் செலுத்துவோம்.

அடுத்து உமை

உமையின் வடிவத்தை ஓவியத்தில் உற்றுப் பார்க்கும் பொது, அம்மை மஞ்சள் நிற மேலாடை அணிந்திருப்பது போல தெரிந்தது. மஞ்சள் பூசி உள்ளாரோ அல்லது மஞ்சள் நிற கச்சை அணித்து இருக்கிறாரோ ?

ஓவியத்திற்கு இப்போது வண்ணம் தீட்டுகிறோம். முதலில் மெல்லிய வண்ணம். உடல் வண்ணங்கள்.

மகேசன் வண்ணம் பெறுகிறார், நீலகண்டர் ஆயிற்றே !

உமை இன்னும் வண்ணம் ஏற்றி அழகு பெறுகிறார்.

அம்மை அப்பன் எப்படி ஒன்றாக அழகுபட காட்சி அளிக்க ஆரம்பிக்கின்றனர்.

கேயுரம் எனப்படும் மேல் கை பட்டை, மற்ற ஆபரணங்கள் என்று இன்னும் ஜொலிக்க ஆரம்பிக்கயார் மகேசன் .

ஆசனம், கணம் , தோழி என்று அனைவரும் வண்ணம் பூசப்படுகின்றனர்.

முடியும் தருவாயில், மீண்டும் ஒரு முறை நாம் எதையாவது விட்டு விட்டோமோ என்று ஓவியத்துடன் ஒத்துப் பார்க்கிறோம்.

அடடே, நான்முகனின் அஞ்சலி ஹஸ்தம் சரி செய்ய மறந்துவிட்டோமே.

ஈசனின் கை முத்திரைகள் சில சரியாக தெரியவில்லை, அதைப் பற்றி படிக்க, நாம் சோமஸ்கந்தர் பற்றி தொடரை ஆரம்பிக்க காரணமான திரு கிப்ட் சிரோமனி அவர்களது 1971 ஆம் ஆண்டு குறிப்பை மீண்டும் சென்று படித்தேன்

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோமஸ்கந்தர் வடிவம் பற்றி அவர் சொல்லும்போது ராஜசிம்மன் காலத்திற்கு முந்தைய சோமஸ்கந்தர் கல் சிற்பம் பற்றி இவ்வாறு விவரிக்கிறார். ” சிவனின் நான்கு கைகளில், மேல் வலது கையில் ஒரு பாம்பை பிடித்து இருக்கிறார் ”

ராஜசிம்மன் காலத்து சோமஸ்கந்தர் வடிவத்தில் அவர் குறிப்பாக இந்த பாம்பை பற்றி ஒன்றும் கூறவில்லை. எனினும் பாம்பு கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தோம்.

மேல் வலது கையில் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் கீழ் வலது கையின் அருகில்

படம் எடுத்து ஆடும் பாம்பு தெரிகிறதா ?

அத்துடன் நமது இந்த பயணம் முடிவுக்கு வருகிறது, மீண்டும் ஒரு முறை நாம் ரசிக்கும் வண்ணம் சலிக்காமல் வரைந்த ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களையும், சரியான தருணத்தில் நல்ல படங்களை தந்து உதவிய இளம் நண்பர் திரு ஜகதீஷ் அவர்களையும் வாழ்த்தி , முடிவு பெற்ற ஓவியத்தை படைக்கிறேன்.

இந்த ஓவியப் பயணம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் உற்சாக வரவேற்புடன் இன்னும் பல பணிகளை இது போலவே எடுத்து நிறைவேற்ற முயற்சிக்கிறோம்.இது ஒரு முயற்சி தான், பிழைகள், தவறுகள் ஏதேனும் இருந்தால் முதலில் மன்னிக்கவும் , பிறகு கண்டிப்பாக எடுத்துக் கூறவும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் இரண்டு

முதல் பாகத்தை படித்து பலரும் அனுப்பிய நல்ல மறுமொழிகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாருமே சென்று காணாத இந்த பல்லவர் கால சுவர் ஓவியங்கள் இன்று புத்துயிர் பெற்று நம்முடன் பேசுவது போன்ற உணர்ச்சி பெறுகிறோம். இந்த பயணத்தில் நானும் ஓவியர் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்களும் பல புதிய விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். அதை அப்படியே உங்களுடன் பகிர்கின்றோம்.

நண்பர் திரு ஜகதீஷ், அவருக்கு மீண்டும் ஒரு நன்றி. அவர் தந்த படங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருந்தது எனபது இந்த பதிவை படித்து முடித்தவுடன் புரியும். தக்க சமயத்தில் உதவினார் இந்த பதினோராவது வகுப்ப மாணவன்.

சென்ற பதிவில், படத்தில் யார் யார் இருக்கின்றனர், எங்கெங்கே என்று குறித்து விவரித்தோம் நாங்கள், இன்னும் அருகில் சென்று ஒவ்வொரு சிறு குறிப்புகளையும் பார்த்தோம். பூத கணம், எங்குமே முழுமையாக தெரியவில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனை கலந்து வரைந்து முடித்து விட்டார் ஓவியர்.

அருகில் இருக்கும் தோழி அப்படி அல்ல. நல்ல படம் இருந்தது, மேலே உமையின் ஆடையில் இருக்கும் வேலைப்பாடு கூட கிடைத்தது.


அடுத்து இருவருக்கும் நடுவில் ஏதாவது இருக்குமோ.அனைத்து ஓவியங்களிலும் இந்த பகுதியில் சிதைந்து விட்டது ( மொத்தம் நான்கு சுவர் ஓவியங்களை வைத்து நாம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம் ) . சோமஸ்கந்தர் பற்றிய நமது தொடரை வாசிக்கும் நண்பர்கள், பொதுவாக சோமஸ்கந்தர் வடிவங்களில் தரையில் ஒரு கூஜா இருப்பதை கவனித்து இருப்பார்கள். இதோ இந்த மலை கடற்கரை கோயில் வடிவம் போல

அதனால் அதை நமது ஓவியத்திலும் போட்டுவிட்டோம்.

அடுத்து பிரம்மா. ஒரே ஒரு ஓவியத்தில் மட்டும், அவரது உருவம் தெரிகிறது. ( இரு கைகளையும் கூப்பி அஞ்சலி முத்திரையில் அவரை காட்டவேண்டும். மூன்றாம் பாகத்தில் திருத்தி விடுவோம் )

எப்படி அவரது மற்ற முகங்களை காட்டுவது என்று யோசிக்க, புள்ளமங்கை பிரம்மா நினைவுக்கு வந்தார்.
.

அவரை முன்மாதிரியாக வாய்த்த இந்த பிரம்மன் படத்தை வரைந்தாயிற்று.

விஷ்ணு உருவத்திற்கு இந்த நிலை இல்லை. ஒரு ஓவியத்தில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் எங்கள் பணி எளிதாயிற்று.

அடுத்து குழந்தை முருகன்.

முருகன் – அழகன். அதுவும் குழந்தை முருகன் என்றால் !! சரியாக வரவேண்டுமே.

அருகில் சென்று படங்களை பார்க்கும் பொது தான் நாங்கள் முதலில் நினைத்ததைப் போல ஆசனத்தின் கால்களில் சிங்க வடிவங்கள் இல்லை என்பது தெரிந்தது.

அடுத்து உமை.


ஈசன், இந்த வடிவத்தின் நடு நாயகன் – மிகவும் நேர்த்தியாக வரவேண்டும் என்பதால், இன்னும் கவனமாக படங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக அவர் கை முத்திரைகள். ( ஒரு குறிப்பு மிகவும் உதவியாக இருந்தது – அது என்ன வென்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்) . இடது மேல் கரம் இங்கே பாருங்கள்.

ஈசனின் மகுடம். நிறைய வேலைப்பாடுடன் இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது.

குறிப்பாக மகுடத்தில் உள்ள ஒரு அணிகலன். இதுவரை நாங்கள் பார்க்காததாக இருந்தது. எனினும் அந்த வடிவம் நாம் முன்னரே எங்கோ பார்த்த வடிவம். அப்போது திரு நாகசாமி அவரது செப்புத்திருமேனி (Masterpieces of South Indian Bronzes)நூலில் ஒரு குறிப்பு கிடைத்தது. பல்லவர் கால செப்ப்புத்திருமேனி ஒன்றில் இரு மகர ஒப்பனை கொண்டு இந்த அணிகலன் உள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆம், அதே நம் ஓவியத்திலும்.


இப்போது ஒரு அளவிற்கு நமது ஓவியம் வந்து விட்டது. இன்னும் சிறு சிறு அமைப்புகளை சரி செய்து வண்ணம் பூசினால் முடிந்து விடும்.

அதற்கு, அடுத்த இறுதிப் பதிவு விரைவில் பார்ப்போம்.

பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் சிதைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? பாகம் ஒன்று

தமிழ் நாட்டு ஓவியக்கலையின் மிக தொன்மையான பல்லவ ஓவியங்கள் இன்றும் காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இங்கும் அங்குமாய் சிதைந்த நிலையில் பார்க்க முடிகிறது. பார்த்த சில நொடிக்களிலேயே நம்மை சொக்க வைக்கும் அழகைக் கொண்ட இந்த ஓவியங்களைப் பார்க்கும் பொது ஒருபக்கம் பரவசமும் மறு பக்கம் பெரும் துக்கமும் வரும். பரவசம், ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது கலையில் இப்படி ஒரு உன்னத நிலையை நம் மண்ணின் கலைஞன் எட்டிவிட்டான் என்பதும், அவனது கலை காலத்தை வென்று இன்று வரை நின்றுள்ளது என்பதும். துக்கம், இங்கும் அங்குமாய் தெரிந்த சில கோடுகள், சில வண்ணங்கள், என்று நாம் இன்று காணும் இந்த ஓவியங்கள், அடுத்த தலைமுறை பார்க்க , பரவசம் அடைய இந்த அரிய பொக்கிஷங்களை , நம் குல தனங்களை, நிலைக்க வைக்க முடியுமா என்ற கேள்வி.

நம்மால் முடிந்தது – இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்து இணையம் மூலம் கருவூலம் அமைத்து பாதுகாக்கமுடியும். எனினும், எங்கோ மூலையில் ஒரு சின்ன ஆசை. இவை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பாய் ஜொலித்திருக்கும் என மனக்கண்ணில் அப்படியே அவற்றை கற்பனை செய்து ரசிப்பது உண்டு, எனினும் அப்படி மனக்கண்ணில் கண்ட காட்சியை அனைவருடன் எப்படி பகிர்வது. பல்லவ சிற்பியுடன் போட்டி போட நமக்கு தேர்ச்சி இல்லை, தற்போது உள்ள கணினி தொழில்நுட்பம் கொண்டு படங்களை ஒற்றி எடுத்தும், ஒரு ஓவியம் கூட முழுவதுமாக இன்று நிலைக்க வில்லை. இது சாமானியன் செய்யும் வேலை இல்லை என்று புரிந்தது. இந்த கலை ரத்தத்திலேயே ஊறி போன ஒருவரால் மட்டுமே இவற்றுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று தெளிவாக தெரிந்து. ஓவியர் நண்பர்கள் யாரை சந்தித்தாலும் கோரிக்கை மனு கொடுத்து வைப்பேன்.

இப்படி இருக்கையில், தற்செயலாக நண்பர் ஒருவரின் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு சென்ற பொது, ஓவியர் மணியம் அவர்களின் வழித்தோன்றல் இருவரை சந்திக்க நேர்ந்தது. ஆம் அவர்தான், அமரர் கல்கியின் கதை காலத்திற்கு மெருக் ஏற்றி அற்புத ஓவியங்களை படைத்தவர். அவரது கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்தவர். திரு மணியம் அவர்களின் ஓவியங்கள் சில , அவரது மகன் திரு மணியம் செல்வன் அவர்களும் சிறந்த ஓவியர், அவரது ஓவியங்கள் சில ,ஆனால் நான் சந்தித்தது அவரது புதல்விகளை . புலிக்கு பிறந்தது பூனை யாகுமா. இருவருமே சிறந்த ஓவியர்கள். அப்படியே நின்றுக் கொண்டே பேசினோம், கல்கி , பார்த்திபன் கனவு , பொன்னியின் செல்வன் என்று போன உரையாடல் முடிவில் கோரிக்கை மனுவை நீட்டினேன். திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியன் அவர்கள் அவரது ஓவியங்கள் ,முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினார்.

பணி மிகவும் கடினம், ஓவியங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. நான்கு இடங்களில் உள்ள இதே வடிவம், ஒரு இடத்தில கூட முழுவதுமாக இல்லை. போதாத குறைக்கு என்னிடத்தில் நல்ல படங்களும் இல்லை. நண்பர்கள் இடத்தில கேட்டுப் பார்த்தேன், யாரிடத்திலும் எங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு பெரிய படங்கள் இல்லை.


இருப்பதை வைத்து, முதலில் வேலையை துவங்கினோம். நன்றாக வருமோ என்ற ஐயம் எழும் முன்னரே, உடனே வந்தது சுபாஷினி அவர்களின் முதல் பிரதி

சரியான இடத்தில தான் பணியை ஒப்படைத்துள்ளோம் என்று சொன்னது மனம். வாழை அடி வாழையாய் வந்த கலை, அவர்களது கையில் விளையாடியது . எனினும் மிக நேர்த்தியாக வரையவேண்டும் என்றால் நல்ல படம் சீக்கிரம் தேவை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொடிருந்த பொது, ஒரு இனிய அதிர்ச்சி. மே மாதம் தற்செயலாக தளத்தின் மூலம் உரையாடிய பத்தாம் வகுப்பு மாணவன் ஜகதீஷ், ஒரு மடல் அனுப்பினான். எனது காஞ்சி பயண புகை படங்கள் என்றது தலைப்பு. கூடவே,”ஹலோ அண்ணா , என்னை நினைவுள்ளதா, நான் ராஜகேசரி ( புனைப்பெயர் ) , சமீபத்தில் காஞ்சிபுரம் சென்றிருந்தேன் , அங்கு எடுத்த படங்கள் இதோ ”

உள்ளே, நான் தேடிக்கொண்டிருந்த படங்கள். உடனே தொடர்பு கொண்டு, முழு அளவில் படத்தை அனுப்பு என்று சொன்னவுடன் உதவினான் நம் தோழன், இந்த சின்ன வயதில் -வேலூர் பள்ளியில் இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் ஹீரோ இதோ.

பல்லவ கலை, ராஜசிம்ம பல்லவனால் வளர்க்கப்பட்ட கலை, இன்று இந்த மாணவன் உதவியுடன் அடுத்த தலைமுறைக்கு செல்கிறது.

பிரம்மா

உமை

விஷ்ணு

நல்ல படங்கள் ஏன் தேவை பட்டன என்பதற்கு, கிழே இருக்கும் பூத கணம், மற்றும் பணிப்பெண் உருவங்களை கண்டு கொள்ள பெரிதும் உதவின.

ஆசனத்தின் கால்கள் சிங்க முகங்கள் போல சித்தரிக்க நினைத்தோம். ( மலை மகிஷாசுரமர்தினி மண்டபம் போல )

அடுத்து இன்னும் பல விவரங்களை எடுத்து ஓவியத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தோம்.

நன்றாக வருகிறது . இன்னும் பார்க்க ஆவலா ? பொறுமை, அடுத்த பதிவில் தொடரும் இந்த ஓவியம்.

சோமஸ்கந்தர் வடிவம் – செப்புத் திருமேனி, பல்லவர் காலம்

நாம் இதுவரையில் கல்லில் சோமஸ்கந்தர் வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை பற்றி பார்த்தோம். இதுவரையில் நாம் பார்த்த அனைத்து சிற்பங்களும் பல்லவ சிற்பங்களே. இன்று நாம் ஒரு செப்புத் திருமேனியை பார்க்கப்போகிறோம். பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. இன்றைக்கு அவற்றில் ஒன்றான சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை பார்ப்போம்.

இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.

அப்படி என்ன வித்தியாசம் இந்த அமர்ந்திருக்கும் கோலத்தில்?. படங்களை பாருங்கள்.


சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் ஈசன், சற்று பின்னால் சாய்ந்து அமர்த்தப்பட்டவாறு இருப்பது தெரிகிறதா. இது அவரது கம்பீர தோற்றத்தை இன்னும் அதிகரிக்கிறது.

அம்மை அப்பனின் உருவத்திலும் , முக ஜாடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஈசனின் முகம் வட்டமாக உள்ளது – அதில் கண் , மூக்கு மற்றும் வாயை கைகளால் சிற்பி அமைத்தது போல உள்ளது. தலையில் ஜடா மகுடம் , மற்றும் கழுத்தில் இரு சிறிய சங்கிளிகளிகள் மற்றும் ஹாரம் என ஜொலிக்கும் அவரது யக்நோபவீதம் தங்க கம்பிகளால் ஆனது போல உள்ளது. அதில் அவரது இடது மார்பின் மேல் ஒரு முடிச்சு மிகவும் அழகாக உள்ளது.



முகம் வட்டமாக , தலையில் முக்கோண வடிவில் கரண்ட மகுடம் ஜொலிக்க, லக்ஷணமான முகத்தொட்ட்ரத்துடன் அமர்ந்திருக்கும் உமை அழகு.

மகேசனின் பல கைகள் இணைக்கப் படுகிற பாணியும் ஒரு வழிகாட்டி. மேல் கைகள் பிரிவதும் – பிரியும் கோணமும் நாம் பார்க்க வேண்டும்.

கைகளில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை பிடித்திருக்கும் முறையும், கை முத்திரைகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிவன்

அணிகலன்களில் மிகவும் அழகான நாக கேயுர வகை இருப்பது அழகு.

உமை

கால் மற்றும் கைகள் மிகவும் நேர்த்தியாக நளினம் ததும்பும் வண்ணம் உள்ளன. இவையும் காலத்தை எடுத்துக்காட்டும் .


அங்க அணிகலன்கள், ஈசனின் இடுப்புப் பட்டையில் நாம் பிற்காலத்திய சிற்பங்களில் வரும் சிங்க முகம் இல்லாததை நினைவில் வைக்க வேண்டும் . இடுப்பை வடித்துள்ள வண்ணம் மிக அருமை.


ஈசனின் சிரத்தின் பின் நாம் கல் சிற்பங்களில் பெரிதாக பார்த்த சிரஸ்சக்கரம் இங்கே சற்று அளவில் சிறியதாகி உள்ளது. ஆறு சடைகளாக பிரியும் பின்னல் அருமை.

ஈசனின் மார்பை பாருங்கள். ஒட்டி வைத்தார் போல உள்ளதே.

இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து – நாம் அடுத்து பார்க்கும் சோழர் கால சுமார் 10th C மற்றும் 12 C செப்புத் திருமேனி்களுடன் வரும் பதிவுகளில் ஒப்பு நோக்கி எவ்வாறு இந்த படிமம் காலத்தால் அவற்றிற்கு முந்தையது என்பதை பார்ப்போம்.

Ref: Bronzes of South India – Sri. K. R. Srinivasan


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமாஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – ஆறாம் பாகம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம்

இன்றைக்கு நாம் மல்லையில் இன்னொரு அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கப் போகிறோம் – மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபம் . நாம் முன்னரே இங்கு சென்று அங்குள்ள இரண்டு அற்புத சிற்பங்களை பார்த்தோம் – மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். பொதுவாக அங்கே செல்வோர் இவ்விரு சிற்பங்களையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவர் – கர்ப்பக் கிருஹத்தில் உள்ள அற்புத சோமஸ்கந்தர் வடிவத்தை பார்க்க மறந்துவிடுவர். இது இயற்கை..

பல்லவர் சோமஸ்கந்தர் வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. முழு கருவறை பின் சுவரை ஆக்ரமிக்கும் பிரம்மாண்ட வடிவம். மகேந்திர பல்லவர் குடைவரைகளில் சோமஸ்கந்தர் வடிவங்கள் இருப்பதில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

இந்த சிற்பத்தை ஆராய்வதற்கு முன்னர், சிலவற்றை நாம் தெரிந்துக் கொள்வது முக்கியம். மல்லை சிற்பங்களை சுற்றி பல புதிர்கள் உள்ளன. பல்லவர் காலம் என்று பொதுவாக கொண்டாலும், எந்த பல்லவ அரசனின் காலத்தில் எந்த எந்த இடங்கள் உருவாகின என்பது இன்றும் பல வல்லுனர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த புதிரை நீட்டிக்கும் குடைவரைகளில் இந்த குடைவரையும் ஒன்று. விடை தேட இங்கே கல்வெட்டுகள் எதுவும் இல்லை. மேலும் பல குழப்பங்களை உள்ளடக்கும் இந்த மண்டபத்தை நாம் இந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் காலத்தை மட்டும் வைத்து ஆய்வு செய்வோம். இதை ஒப்பிட நமக்கு உதவுவது மல்லையில் ராஜ சிம்ஹன் கல்வெட்டுகளை கொண்ட கடற்கரை கோயிலில் உள்ள சோமஸ்கந்தர் வடிவம். இதில் ஏது முந்தையது – ஏது பிந்தைய கால வடிவம் என்ற கேள்விக்கு மட்டும் விடை தேடும் பதிவு இது.

முதல் பார்வையில், இரண்டுமே ஒரே வடிவமாக தெரியும். இன்னும் நுணுக்கமாக பார்க்க இரண்டு சிற்பங்களையும் பக்கத்தில் வைத்து , குறிப்புகள் இட்டு பார்ப்போம்.

எதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை விளக்கும் படம் இதோ.

என்ன அருமையான வடிவம். குழந்தை குமரனின் வடிவம் – அப்படியே அமர்ந்த வடிவில் நம்மை கண்டு தாவும்படி, சற்றே திரும்பி, வலது கையால் குமரனை அணைத்து , இடது கையில் சாய்ந்து நளினமாக அமர்ந்திருக்கும் உமையம்மை, கம்பீரமாக சுஹாசனத்தில் ஈசன் – பின்னால் விஷ்ணு, பிரும்மா – அருமை (உமைக்கு மேல் சாமரம் !!)


இரண்டு வடிவங்களுக்கும் வித்தியாசம் – அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையின் கால்கள் – கடற்கரைக் கோயில் வடிவத்தில் கால்கள் வெறுமனே இருக்கும் . ஆனால் இவை இங்கு சிங்க வடிவத்தில் செய்யப்பட்டுள்ளன. காலுக்குக் கீழே இங்கே நந்தி வந்து விட்டது. ( நரசிம்ம பல்லவர் காலத்தில் பல்லவர் கொடி நந்தியில் இருந்து சிம்மத்திற்கு மாறியது !! இதே போல பல்லவ தூண்களும் மாறின – அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம் ) – மேலும் உமையம்மை காலுக்கு அடியில் இருந்த சொம்பு மாறி இங்கே ஒரு பெண் பக்தை இருக்கிறாள்.

சரி, மீண்டும் கேள்விக்கு வருவோம். இரண்டு உருவங்களில் ஏது பழையது. இன்னும் ஆராய்வோம்.

ஈசனின் அலங்காரம் எல்லாம் ஒன்றே போல தான் உள்ளது.

இரண்டு சிற்பங்களிளும் வெளித் தோற்றதில் ஒன்றே போல இருக்கின்றன. ஆடை , அணிகலன் உட்பட. இன்னும் ஒரு முறை ஒன்றுக் கொன்று அருகில் வைத்து பார்ப்போம். ஈசனின் இடது காலை கவனியுங்கள். கடற்கரை கோயில் வடிவத்தில் – அது மேல் இருந்து கீழே ஈசனின் நடுவே ஒரு கோடு போட்டால் அப்படியே அது நடுவில் வருகிறது. ஆனால் இந்த குடவரையில் அது சற்று நகர்ந்து, நந்தி உள்ளே வர வழி விட்டு , சற்று தள்ளி வந்துள்ளது.

இன்னும் சரியாக விளக்கு கணினி கொண்டு இரு உருவங்களையும் இணைத்து பார்ப்போம். நந்தி உள்ளே வர கால் எப்படி அழகாக நகர்கிறது பாருங்கள்.

இவற்றை கொண்டு பார்த்தால், மகிஷாசுர மர்த்தினி மண்டப சிற்பம் கடற்கரை கோயில் வடிவத்தை ஒத்தது. அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ தான் வடிவமைத்திருக்க வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காஞ்சி மாதங்கேஸ்வரர் ஆலயம் – சோமஸ்கந்தர் வடிவம்

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் – இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து – அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி – இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து – முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் – என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா – நகர முடியவில்லை – ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது – போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

பூசாரி – இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் – திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் – உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே – அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் – மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )


தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

உள்ளே – லிங்கம் – அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி – தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – நான்காம் பாகம்

திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை – அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) – ஆனால் பாதகர்கள் – எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் – ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை – எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் – அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல – இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் – அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி – சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் – இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் – சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு – ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து – வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு – உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் – நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து – செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் – அபாரம்.

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி – நீங்களே முடிவு செய்யுங்கள்.

குழந்தை குமரன் – தனது கிரீடத்துடன்.

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை – சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா – கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ – அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் – இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – மூன்றாம் பாகம்

சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சியைப் பற்றிய நமது தேடல் இன்றும் தொடர்கிறது. சென்ற இரு பதிவுகளில் நாம், தர்மராஜா ரதம் ( அதனை அதன் சரியான பெயர் சொல்லி அழைக்கவேண்டும் என்றால் ஆத்யந்தகாம பல்லவேஸ்வர க்ருஹம் என்று அழைக்க வேண்டும் ) சோமஸ்கந்தர் வடிவத்தை மல்லை கடற்கரை ராஜசிம்மேஸ்வர சோமஸ்கந்தர் வடிவத்துடன் ஒப்பிட்டோம். ராமானுஜ மண்டபத்தில் உள்ள அழிந்த சோமஸ்கந்தர் வடிவத்தின் அமைப்பையும் பார்த்தோம்.

வாசகர்களுக்கு நாம் இட்ட கேள்விகளை இன்னும் ஒருமுறை காண்போம்.

1. இதுவரையிலும் நாம் பார்த்த இரு வடிவங்களில் எதை முதலில் வந்த வடிவம் என்று சொல்லமுடியுமா. அதில் உள்ள வேலைப்பாட்டின் வளர்ச்சியை வைத்து , நாம் அந்த முடிவுக்கு வர முடியுமா?

2. இரு வடிவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்ன.என்று பட்டியல் இட முடியுமா ?

3. மேற்கண்டவற்றை வைத்து ராமானுஜ மண்டபத்தில் அழிந்த சோமஸ்கந்தர் வடிவம் எந்த பாணியில் உள்ளது என்று நாம் உறுதியாக சொல்ல முடியுமா ?

வாசகர்கள் மீண்டும் முதல் இரு பாகங்களை ஒரு முறை வாசித்த பின்னர் மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் கூற முயலலாம். அதுவரை நாம் அடுத்த இடத்திற்கு செல்வோம். இன்னும் ஒன்றல்ல மூன்று அற்புத சோமஸ்கந்தர் வடிவங்கள், புலிக் குகை என்று இன்று அழைக்கப்படும் சிற்பக் கொத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். முன்னரே காணாமல் போன இரு சிவலிங்கங்கள் பற்றிய பதிவில் நாம் இந்த மண்டபத்தை பார்த்தோம்.

இன்று இன்னும் அருகில் சென்று, முதலில் நடுவில் உள்ள கருவறையைப் பார்ப்போம்.


சோமஸ்கந்தர் சிற்பம் தெரிகிறதா. ரொம்ப முயற்சிக்க வேண்டாம், இன்னும் அருகில் எடுத்து செல்கிறோம்.

சோமஸ்கந்தர் வடிவத்தை ஒற்றி வரைந்த ஓவியம் உங்கள் பணியை சுலபமாக்க .

இப்போது சற்று பின்னல் சென்று, வெளியில் இருக்கும் மற்ற இரு சோமஸ்கந்தர் வடிவங்களையும் பார்ப்போம்.

இரு சோமஸ்கந்தர் சிற்பங்கள்.

அவற்றின் ஒற்றி எடுத்த ஓவியங்கள்.

வாசகர்களுக்கு மீண்டும் ஆனால் சற்றே சுலபமான கேள்விகள்.

1. இந்த சோமஸ்கந்தர் எந்த பாணியில் உள்ளனர் ?

2. மூன்று சோமஸ்கந்தர் வடிவங்களும் ஒரு பாணியா?

நம் தேடல் தொடரும்