அங்கதம் தேடி – வானர இளவரசன் அல்ல

ஆபரணங்களின் மீது மனிதனுக்கு உண்டான தீவிர பிடிப்பு எப்போது துவங்கியது என கடவுள் நன்கு அறிவார். கிளிஞ்சல் ஓடுகளில் துவங்கி, மணிகளிலிருந்து, பனையோட்டு காதணிகள் என நிலையான வளர்ச்சி அடைந்து தங்கம் எனும் பசுமஞ்சள் உலோகத்தில் உயர்ந்த கற்கள் பதிக்கப்பெற்ற ஆபரணங்கள் வரை படிப்படியாக முன்னேறியது. அதன் பின்னர் என்ன சொல்வது…ஒரே ஓட்டம் தான்..தங்க ஓட்டம். எனினும் இன்று நாம் சற்றே காலத்தை பின்னோக்கி கடந்து செல்ல இருக்கிறோம். அரசர்கள் தங்கத்தை வாரி வாரி கொடையாக அளித்த காலங்களில், அவற்றை வைத்து எவ்வாறு இறைவனை அலங்கரித்தார்கள் என காணப் போகிறோம். ஏன் இந்த திடீர் தேடல் என நீங்கள் கேட்பது புரிகிறது. நமது நோக்கமே ஒரு அபூர்வமான ஆபரணத்தை அடையாளம் காண்பதே. அதன் பெயரோ விந்தையாக நாம் மிகவும் அறிந்த கிஷ்கிந்தையின் இளவரசனாகிய அங்கதனின் பெயராகவே உள்ளது.

நம்முடைய தேடலில் நமக்கு உதவியது இரண்டு அற்புதமான சோழர் கால வெண்கல சிற்பங்கள். இரண்டுமே நியூயோர்க்கில் உள்ளன. ஒன்று மெட்ரோபோலிடன் அருங்காட்சியகத்திலும் மற்றது ப்ரூக்ளின் அருங்காட்சியகத்திலும் உள்ளன.

இவை இரண்டுமே கி.பி. 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. சந்திரசேகர வடிவம் கொண்ட சிவனும் மற்றும் விஷ்ணுவும் – இருவருமே சமபங்க நிலையில் (நேரான தோற்றம்) தங்களது மேல்கரங்களில் வழக்கமான ஆயுதங்களுடன் காட்சி அளிக்கின்றனர் – சிவனது கைகளில் மானும், மழுவும் ஏந்தி உள்ளார். விஷ்ணு சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார்.

ப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் இந்த அற்புத வெண்கல சிலை வந்து சேர்ந்த விதம் மிகவும் சுவையானது. (இந்த இணைப்பிலிருந்து கிடைத்த படங்களுக்கு நன்றி)

மெட்ரோபோலிடன் மியூசியத்தை சேர்ந்த விஷ்ணுவின் சிலையில் இருந்து நாம் துவங்குவோம்.

கிரீடம் மிகவும் அழகாக உள்ளது. மேலும் ஒரு சிறிய பட்டை அதன் அடி வரை செல்கிறது. இதற்கு பட்டிகை என்று பெயர். அது சேர்ந்திருக்கும் பொருளின் தன்மையை பொருத்து அதன் பெயரும் மாறுபடும். உதாரணத்திற்கு இரத்தின பட்டிகை.

கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர் கால வெண்கல சிலையில் (970 CE – எப்படி இத்தனை உறுதியாக இதற்க்கான காலத்தை கணக்கிட்டார்கள் என தெரியவில்லை),புரிநூல் நேராக மார்பில் இருந்து இடுப்பிற்கு வருகிறது. (தொன்மையான விஷ்ணு திருமேனிகள் பதிவில் நாம் கண்டது புரிநூல் மூன்றாக பிரிந்து ஒன்று வலது முன்கையில் மேலே செல்வது போல இருக்கும் – இவ்வாறு அணிவதை நிவீத முறை என கூறுவர்)

அடுத்து வயிற்றில் உள்ள பட்டை – இது இடுப்பாடையை இறுக்கியிருக்கும் பட்டையாக இல்லாமல், அலங்காரத்திற்கு அணியும் உதர பந்தனத்தை போன்றதொரு அணியாகவே உள்ளது. இந்த பட்டைக்கு பெயர் கடி பந்தனமாகும்.

அடுத்து கைகளில் அந்த அணிகலன் உள்ளத என்று பாப்போம். இந்த கைப்பட்டைக்கு கேயூரம் என்று பெயர்.

ராஜேஷ் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்களது வலைதளமாகிய ஆக்ருதியில் சிற்பத்தின் பாகங்களை அருமையாக விளக்கி உள்ளனர். அதன் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டையின் கொக்கி சிம்ம முகம் மேலும் மிகவும் அழகுற தொங்கிகொண்டிருக்கும் யூ வடிவ ஆடை கடி வஸ்திரம் ஆகும்.

வலது கரம் பாதுகாக்கும் அபாய ஹஸ்தமாக உள்ளதை கவனிக்கவும்.

இடது கையோ மிகவும் அனாயசமாக இடது புற இடுப்பில் வைத்திருப்பதாக உள்ளது. இதற்கு கட்யவலம்பிதா நிலை என்று பெயர். இவ்வாறு இடுப்பில் இருக்கும் கரத்திற்கு கடி ஹஸ்தம் என்று பெயர்.

இன்னும் அங்கதம் காணவில்லையே.

சந்திர சேகர வெண்கல சிலையில் இதனை காண முடிகிறதா என்று பாப்போம்.

விஷ்ணுவின் சிலை போன்றே வலது கரம் அபாய ஹஸ்தம் கொண்டுள்ளது. ஆனால் இடது கை வேறுபட்டுள்ளது.

ஒரே போன்று தொன்று இரண்டு நிலைகள் உள்ளன. கடக ஹஸ்தம் மற்றும் சிம்ம கர்ண ஹஸ்தம்.

இவை இரண்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சிம்ம கரணத்தில் நடுவிரல் சிறிது விரிந்திருக்கும். பொதுவாக கடக ஹஸ்தம் பல்வேறு பெண் தெய்வ திருமேனிகளில் கரத்திலே ஒரு பூவை தாங்கி இருக்கும் விதமாகக் காணப்படும். (மலர்ந்த மலர்களை இறைவியின் கரத்தில் வைப்பது வழக்கம்). ஆக, நாம் இதை ஆராய்ந்து பார்க்கும்போது, நடுவிரல் சிறிது விரிந்திருக்கவே, இது சிம்ம காரணமாக இருக்க கூடும். (திரு. கோபிநாத் அவர்களின் Elements of Hindu Iconography -இல் இரண்டு முத்திரைகளும் ஒன்று போலவே கருதப்படுகின்றன. இவற்றை மேலும் தெளிவாக ஆராய மேலும் பலரின் புத்தகங்களை தேட வேண்டும்)

இப்போது நமது கண்களுக்கு வித்தை காட்டும் அந்த அங்கதம் – இது ஒரு கை அணி ஆகும். ஆனால் இது வரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது நன்றாக மறைந்துள்ளது. அதை காண்பதற்கும் நாம் சிலையின் பின்புறம் சென்று பார்க்க வேண்டும்.

இப்போது தெரிகிறதா? ஆம். இது தான் அங்கதம் – தோள்வளை என்ற மேல் கை ஆபரணம் இது.

படங்களுக்கு நன்றி : ஆக்ருதி , ப்ரூக்ளின் மற்றும் மெட்ரோபோலிடன் அருங்காட்சியகம் .


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

காளிங்க நர்த்தனம்- அற்புத வெண்கலச் சிலை

திரு. பிரசாத் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான். அவரது உயர்ந்த கலைத் திறனை நமது பதிவுகளில் ஏற்கனவே கண்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் காணப்போவது அவரது மற்றுமொரு புதிய அவதாரம். கண்ணனின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியன்று ஒரு அற்புத வெண்கலச் சிலையின் அருமையான படங்களை நமக்கு அளித்திருக்கும் திரு. அசோக்குடன் இணைந்து, புகழ் பெற்ற ஊத்துக்காடு காளிங்க நர்த்தனம் பற்றி நமக்காக ஒரு பதிவு இடுகிறார்.

சோழக் கைவினைஞரின் உயர்ந்த மேலான திறமைக்கு அறிமுகம் தேவை இல்லை. எனது அனுபவத்தின் சாரத்தை வார்த்தைகளால் வெளியிடுவது இயலாத ஒன்று என்று நன்கு அறிந்திருக்கிறேன். எனவே, அந்த தெய்வீக அனுபவத்தை வாசகர்களே பெறுவதற்கு முயற்சிக்கிறேன். இன்று நான், இந்த உயர்ந்த செல்வதை நீங்கள் அதிக ஆர்வத்துடன் கண்டு களிக்க, எனக்கு தெரிந்த அளவில் அதனை விவரிக்கவும், எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும் விழைகிறேன். இதனை துவங்குகையில் எல்லாம் வல்ல இறைவனிடம் இந்த அற்புதத்தை விவரிக்கும் சக்தியை எனக்கு அளிக்க பிரார்த்தனை செய்கிறேன், ஏனெனில் சில அற்புதங்களை விவரிப்பதை விட சுயமாக அனுபவிப்பதே மேலானது என்று கருதுகிறேன்.

இன்று நாம், அகந்தை கொண்ட நாகத்தை அடக்கிய அற்புத நடனத்தை மிக நேர்த்தியாக உலோகத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் – காளிங்க மர்தன கிருஷ்ணனின் சிற்பத்தைக் காண்போம்.

முதலில் சிற்பத்தை முழுமையாகக் காண்போம். கொடுமையே உருவாக இருக்கும் நாகமாகிய காளிங்கனுக்கு பாடம் கற்று கொடுக்கவும், அதே நேரத்தில் தான் யார் என்று உலகிற்கே எடுத்துக்காட்டவும், காளிங்கனின் தலை மீது தெய்வீக நடனம் ஆடும் விதமாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. ஒரு செயலின் ஓட்டம், அழகு, அதன் வேகம், மேலும் அச்செயல் சொல்லும் கதை இவற்றை சிற்பத்திலே அற்புதமாய் கொண்டு வருவதில் சோழ சிற்பிகளுக்கு நிகர் அவர்களே! ஒரு முறை சிற்பத்தைக் கண்ட உடனேயே அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் நினைவில் நின்று மனதில் பதியும் வண்ணம் சிற்பத்தை செதுக்கிவிடுகின்றனர்.

கண்ணனின் வலது பாதத்திலிருந்து துவங்கி இடஞ்சுழியாக அவனது அற்புத சிற்பத்தின் தோற்ற அமைப்பை காண்போம். இது ஒரு நிலையான வடிவம் அல்ல என்பதை சிற்பத்தை கண்டதுமே உணருமாறு வடித்த சிற்பியின் கலை நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியாது. இது தொடரும் நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் அந்த நொடியின் வேகம் மிகச் சிறப்பாக காண்பிக்கப்பட்டுள்ளது.

தூக்கிய வலது திருவடியை பாருங்கள். இன்னும் சில வினாடிகளில் இந்த பாதம் எவ்வாறு நாகத்தின் தலையில் இறங்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அந்த பாதத்தின் அழுத்தத்தை உணர முடிகிறதா? அந்த கொடிய நாகத்திற்கு அது மரண அடியாக இருக்காது. இருப்பினும் அதற்கு ஒரு திடமான செய்தி நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


அநேகமாக இப்படி தான் பாம்பின் தலையில் பாதம் இறங்கும்.

இந்த தனித்துவம் வாய்ந்த வெண்கலச் சிலையை கவனித்து பார்த்தோமானால், இடது பாதத்திற்கும் நாகத்தின் தலைக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருப்பதை காணலாம் – ஆக, கிருஷ்ணரின் எடை முழுவதும் பாம்பின் வாலைப் பற்றி இருக்கும் கரம் தாங்கும் விதமாக உள்ளது – இந்த சிற்பியும் அவனது அற்புத கலைத்திறனும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இப்போது கண்ணனின் இடது கரத்தை பார்ப்போம். மிக நளினமாக பாம்பின் வாலை பற்றியிருக்கிறார். சற்றே சிந்தித்து பாருங்கள். உங்கள் கரத்தில், உங்கள் தோள் உயரத்திற்கு உள்ள எடை அதிகமான ஏதேனும் ஒன்றை பற்றியிருந்தால், அதிலும், அது நிலை கொள்ளாமல் நெளிந்து கொண்டிருக்கும்போது, உங்கள் கைகள் எத்தனை வலுவாக அதை பற்றியிருக்கும்? மேலும் தசைகள் எத்தனை திடமாக அதை இறுக்கி பிடித்திருக்கும்? எத்தனை அசௌகரியமாக இருந்திருக்கும்? ஆனால், இங்கு நாம் பார்ப்பது என்ன?

வளைந்த கரம், பாம்பின் வாலை ஒரு பட்டுத் துணியை பிடித்திருப்பது போன்று பற்றியிருக்கிறது. இதை பார்க்கும்போதே இது ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டு என்று தெரிகிறது. அவனுக்கு இந்த நாகம் ஒரு பெரிய விஷயமே அல்ல. ஒரு பெரும் நாகத்தின் வாலை ஒரு சிறிய துணியை பற்றியிருப்பது போல் பற்றியிருக்கிறான். இருப்பினும், இந்த முழு வடிவத்தையும் வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய தோற்றம் அமைப்பதில் உள்ள சிக்கல் விளங்கும்.

அடுத்து நாம் கண்ணனின் முகத்தை காண்போம். அவனது மந்திரப்புன்னகையே அவன் அந்த நாகத்திற்கு ஆபத்து விளைவிக்க விரும்பவில்லை என்று காட்டுகிறது. மேலும் முகத்திலோ ஒரு துளி கோபமோ, செருக்கோ, வலியோ, பெருமையோ ஒன்றும் தெரியவில்லை. அங்கே தெரிவதெல்லாம் ஒரு சிறிய குழந்தையின் அப்பழுக்கில்லாத மகிழ்ச்சி. மேலும் கூர்ந்து கவனியுங்கள். அவன் அந்த நாகத்தை பார்க்கவில்லை, யாரையும் எதனையும் குறிப்பாக பார்க்கவில்லை. அவனது பார்வை, இந்த முழு பிரபஞ்சத்தையே காண்கிறது. அவனது முகம் சற்றே சாய்வாக உள்ளது. இங்கே நாம் மறுபடியும் அவனது நடனத்தின் வேகத்தை நினைத்து பார்க்கவேண்டும். பாம்பின் தலை மீது தனது பாதத்தை வைக்கும் முன்பு அவனது தலை நளினமாக அசைகிறது.

இங்கே நாட்டியமாடுபவரின் தலை, நடனத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு அசைகிறது பாருங்கள்.

இப்போது அவரது அபய ஹஸ்தத்தை காண்போம். காண்பவரின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியே காட்சிகளின் பொருளும் வேறுபடும் என்று சொல்வர். அவனது இடையர்குல நண்பர்களுக்கு, கவலை வேண்டாம் என்று கூறுவது போல் உள்ளது. எண்ணிலடங்கா முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், காப்பதற்கு தாம் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இறுமாப்பு கொண்ட நாகதிற்கும், அமைதியை அழிக்க நினைக்கும் மற்றவருக்கும், எச்சரிக்கை செய்வது போல் உள்ளது. நாக குடும்பத்திற்கோ, அவர்களது இறைஞ்சலை தான் செவிமடுத்து அருள் புரிவதாக சொல்வது போல் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை கொண்டதாக அவனது அபய ஹஸ்தம் காட்சி அளிக்கிறது. அவை அனைத்தையும் எடுத்துக்கூறும் திறன் எனக்கு இல்லை.

இந்த சிற்பத்தைக் கண்டதும் நான் அனுபவித்த ஆனந்தத்தை ஓரளவிற்கேனும் உங்களிடையே சேர்க்க முடிந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாசகர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். நமது பாரம்பரியம் விலை மதிக்க முடியாதது. பற்பல படையெடுப்புகள், மனிதரின் பேராசைகள் மற்றும் இயற்கை சீற்றங்களையும் தாண்டி அவை இன்றும் இருப்பதே மிகப் பெரிய அதிசயம் ஆகும். எனவே, இனி நீங்கள் காணும் சிற்பங்கள் மற்றும் சிலைகளை புதிய கோணத்தில் காணுங்கள் என்று வாசகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு சிற்பமும் தனக்குள் பல விஷயங்களை அடக்கியுள்ளன. ஒவ்வொரு சிற்பம் உருவாவதற்கு பின்பும் நமது பண்டைய சிற்பிகளின் கலை உணர்ச்சி, சக்தி, வலி மற்றும் உழைப்பு அடங்கியுள்ளது. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு மட்டுமல்ல, நமது புனிதமான கடமையும் ஆகும்.
இந்த காலத்தைக் கடந்த கலைச்செல்வங்களை உயர்த்துங்கள். இவை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற பரிசு அல்ல. இவை நம் குழந்தைகள் நமக்கு அளித்துள்ள கடன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நமது வருங்கால சந்ததியினருக்கு இவற்றை நாம் திருப்பி அளிக்க வேண்டும், அதுவும் வட்டியுடன். 🙂

படங்களை உபயோகிக்க அனுமதி தந்த திரு. அசோக் அவர்களுக்கும் செல்வி. நீரஜா ஸ்ரீனிவாசன் (நடனமாடுபவர்) அவர்களுக்கும் மிக்க நன்றி.

மேலும் நமக்கு ஒரு விருந்து படைக்கிறார் அசோக்

மேலே உள்ள அனைத்து கருத்துகளும் எழுதியவரின் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். சிற்ப சாஸ்திரத்தின் படியோ அல்லது விஞ்ஞான ரீதியான பொருளின்படியோ பொருந்தியோ பொருந்தாமலோ போகும் வாய்ப்பு உள்ளது. இந்த பதிவில் காணப்படும் தவறுகளுக்கு மன்னிக்கும்படி எழுதியவர் வேண்டுகோள் வைக்கிறார். மேலும், இவை தனது சொந்த கருத்துக்களே என்றும் அறியாமையால் தவறுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெளிவுபடுத்துகிறார். எனது எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு வழங்கிய திரு. விஜய் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல. மேலும் நமது அரிய பாரம்பரியத்தை முன்னிறுத்த அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்சி பெரும் புரட்சியாக மாற வாழ்த்துகள்! வணக்கம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தொன்மையான இரு விஷ்ணு திருமேனிகளின் தற்போதைய நிலை

“கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” , “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” இவை அனைத்தும் பள்ளியில் படித்தவுடனே மறந்துவிடவேண்டும் போல உள்ளது இன்றைய தமிழ் நாட்டில் வழக்கு. இதை முழுவதுமாக சென்ற இரண்டு மாத சம்பவங்கள் உறுதி படுத்தின.

லண்டன் செல்ல தற்செயலாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. உடனே அங்கே உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் உள்ள செப்புத் திருமேனிகளை தரிசிக்க ஆவல் கொண்டு ஒரு தினத்தை ஒதுக்கினேன். இதுவரை அவற்றை பற்றி படித்த கொஞ்ச நஞ்சத்தில் தெரிந்தது – சிறிய அளவாக இருந்தால் அவை காலத்தால் முற்பட்டு இருக்கும் – மதிப்பு டாலரில் மட்டும் அல்ல, அவை அதனுள் அடக்கும் விஷயங்களும் தான்.

சட்டென கண்ணில் பட்டது ஒரு விஷ்ணு சிலை – காலம் 9 C CE. கொள்ளை அழகு, சிலை மட்டும் அல்ல, அதனை அவர்கள் காட்சிக்கு வைத்திருந்த பாணியும் அருமை – ’மதிப்பதற்கு முடியாத’ அளவில் பெருமைமிக்க பொக்கிஷத்தை அதற்கே உரிய மரியாதையுடன் வைத்திருக்கிறார்கள்.

அருமையான சிற்பம், வலது மார்பில் ஸ்ரீவத்சம், யக்நோபவீதம் என்று பல அம்சங்கள் இதன் காலம் கடை பல்லவ அல்லது ஆரம்ப சோழர் காலமாக இருக்கலாம் என்று கருத உதவுகின்றன. ஆரம்ப சோழர் காலம் ஏன், என்ற கேள்விக்கு சுலபமாக பதில் கூறலாம். சிற்பத்தின் சிறிய அளவு, பிரயோக சக்கரம். கடை பல்லவர் காலம் ஏன் என்பதற்கு கொஞ்சம் ஆராய வேண்டும்.

அதை பற்றி மேலும் படிக்க திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் 1963 ஆம் ஆண்டு நூல் Bronzes of South India – P.R. Srinivasan, உதவி செய்தது. தென் இந்திய செப்புத் திருமேனிகளில் மிகவும் தொன்மையானவை பல்லவ விஷ்ணு திருமேனிகளே – மாயவரம் அருகே பெருந்தோட்டம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்.

இதுவே அந்த திருமேனி காலம் – 8th C CE முற்பகுதி

அடுத்து 8th C CE பிற்பகுதி.

இவை இரண்டும் மிகவும் முக்கியமான பொக்கிஷங்கள். இவற்றை விவரிக்க ஐந்து பக்கங்களை திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் எடுத்துகொள்வதை கொண்டே இவற்றின் அருமையை நாம் அறியலாம். தற்போதைய இடம் தஞ்சை கலைக் கூடம் என்ற குறிப்பை கண்டதும் ஒரு சிறு குழப்பம். அங்கே இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கும் குறிப்பே இல்லையே. நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். கணினியில் படங்களை அலசினேன். எங்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் திருமேனிகளை காணவில்லை. நண்பர் சதீஷ் அவர்களது படங்களை பார்க்கும்போது – விடியற்காலை மணி சுமார் நாலு இருக்கும், ஆஹா, அதோ அதோ …

ஆமாம், பெயர் பலகை கூட இல்லாத அலமாரியில், பத்தோடு பதினொன்றாய் ஒரு ஓரத்தில் கிடக்கின்றன இவை.

நிஜமாகவே இவை தான் அந்த விலை மதிக்க முடியாத திருமேனிகள் என்ற ஐயம் எழ மீண்டும் ஒரு முறை நண்பர்களிடம் உதவி நாடினேன். சதீஷ் மீண்டும் ஒரு முறை இதற்காகவே தஞ்சை சென்று படங்களை பிடித்தார். ஆனால் நிலைமை மாறவில்லை – மேலும் மோசமாக – அலமாரியில் உடைந்த பிளாஸ்டிக் பொருள் இறைந்து கிடக்க காண்கிறோம். ஆனால் சந்தேகமே இல்லை – இவை தான் தென்னாட்டில் மிகவும் தொன்மையான செப்புத் திருமேனிகள்.

இவற்றின் மதிப்பு அறிந்துமா இப்படி வைத்துள்ளனர்? திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் விலைக்கு விற்கப்படும் நூல். அந்த நூலின்படி முதல் இந்து சிற்பங்கள் இவை இரண்டும் தான். தஞ்சையில் அதிகாரிகளை தெரிந்த யாராவது இந்த நிலைமையை மாற்றி இவற்றுக்கு உரிய மரியாதை மதிப்புடன் ஒரு தனி காட்சிப் பெட்டி அமைத்துத் தர வேண்டுகிறேன்.

சரி, இந்த சிலைகளை மேலும் நாம் ஆராயும் முன்னர், நமக்கு தெரிந்த பல்லவ கால சிலைகளை உங்களுக்கு முதலில் காட்டுகிறேன். மல்லைத் தவக் காட்சியில் வரும் விஷ்ணு, ஆதி வராஹா மண்டபத்தில் உள்ள விஷ்ணு, தர்மராஜா ரதத்தில் இருக்கும் ஹரிஹர வடிவம் (படங்களுக்கு நன்றி சௌராப்), கில்மாவிலங்கை (நன்றி சாஸ்வத்)


நமக்கும் கடை பெஞ்சுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு…இந்த இரு நண்பர்களையும் அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

தொடரும் ….


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது ?

பரிட்சைகளில் சில கேள்விகள் பார்ப்பதற்கு கடினமாக இருக்கும், ஆனால் விடை தெரிந்த பின்னர், அட இவ்வளவுதானா என்று தோன்றும். அது போலத்தான் நான் இன்று விடை தேடும் கேள்வியின் பதில். இரு தேவியருடன் இருக்கும் நமது மூர்த்திகளில் எப்படி வித்தியாசம் காண்பது? உதாரணத்திற்கு ஸ்ரீதேவிக்கும் பூதேவிக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது ? எதற்காக தெரியவேண்டும் என்று சிலர் கேட்கலாம் – இருவரை வேண்டினால் கிடைக்கும் பலன்கள் வெவ்வேறாயிற்றே !

அதேபோல பூமியில் புதையுண்டு கிடைக்கும் மூர்த்தி சிலைகள் தனியாக கிடைக்கின்றன. அப்போது இந்த கேள்வியின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதன் விடை மிகவும் எளியது. சிற்ப சாஸ்திர முறைப்படி ஸ்ரீதேவி மார்க்கச்சை அணிந்தும் பூதேவி அணியாமலும் வடிக்கப்பட வேண்டும்.

சோதித்துப் பார்ப்போமா ? மலையடிப்பட்டி ஒளிபாதி விஷ்ணு க்ரிஹம் குடவரைக்கோயிலில் உள்ள இந்த பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சிற்பத்தை பார்ப்போம்.

அருகில் சென்று இரு தேவியரின் உடை அலங்காரத்தை பார்ப்போம்.

இருவருக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறதா ? இந்த மார்க்கச்சை குச்சபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதே போல லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் 10 ஆம் நூற்றாண்டு செப்புத் திருமேனிகளை பாருங்கள்.

பெருமாள் திருமேனி பற்றியும் அதன் வளர்ச்சி இதை விட காலத்தால் பிந்தைய சில வடிவங்களை கொண்டு விரைவில் படிப்போம். தற்போது தேவியரை மட்டும் பார்ப்போம்.

ஸ்ரீதேவியின் அருகில் சென்று பார்ப்போம்.

கச்சை / குச்சபந்தம் தெளிவாக தெரிகிறது.

அடுத்து பூதேவி. மார்க்கச்சை இல்லை.

இங்கு லண்டன் அருகாட்சியகக் குறிப்பில் உள்ள ஒரு சிறு தவறை சுட்டிக்காட்ட வேண்டும் . பெயர் குறிப்பில் பூதேவி என்று சொல்லிவிட்டு ” இங்கு அவர்கள் மார்க்கச்சை / குச்சபந்தம் அணிந்துள்ளார் ” என்று தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த செப்புச் சிலையில் மட்டும் அல்ல சிற்ப சாஸ்திர முறைப்படி அவர் அணிவதில்லை.

இதை தக்க முறையில் லண்டன் அருங்காட்சியக அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

250 ஆவது பதிவு. விடமுண்ட கண்டரே.. விஷாபஹரணரே! யாருக்காக விஷத்தை உண்டீர்?

கல்லிலே கலைவண்ணத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பான நீண்ட நெடிய உற்சாகக் கலைப் பயணத்தில் இது ஒரு முக்கிய தருணம். இந்த சிறப்பான புனிதப்பணியில் என்னோடு பங்கு கொண்டு பயணித்து வரும் நண்பர்களுக்கும் இது இனிய தருணம். ஆம்! இது 250 ஆவது பதிவு. இந்தப் பதிவின் போது ஒரு முக்கியமான உத்தமரைப் பற்றியும் அவர் எங்கள் பதிவுகளுக்கு எத்தனை அரிய சந்தர்ப்பங்களை தன் தேவாரம் தளம் மூலமாக செய்து கொடுத்திருந்தார் என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவர்தான் தமிழ்ப் பேரறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தமிழின் இனிய தேவகானமான தேவாரத்தையும் திருவாசகத்தையும் பெரிய புராணத்தையும் உலகின் பல பாஷைகளில் எடுத்துச் செல்லும் மகான். அத்தகைய மாமனிதரை இந்த 250 ஆவது சிறப்புப் பதிவான விஷாபஹரணர் (விடமுண்ட கண்டன்) சிற்பத்துக்காக ஒரு முன்னுரை எழுதச் சொல்லிக் கேட்டபோது அந்த சிவபக்தர் உடனடியாக ஒப்புக் கொண்டு அனுப்பிவைத்தார். இதோ அவர் கையால் ஒரு சிறிய முன்னுரை.

”ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி” என்றார் அபிராமிப் பட்டர் (அபிராமி அந்தாதி பாட்டு 7).

மத்து (சுழலும்போது) இரு பக்கமும் மாறி மாறிச் சுழலும். இந்தப் பக்கம் போகுதே எனக் கருதுமுன்பே மற்றப் பக்கம் திரும்பும்.

உயிர் அத்தகைய சுழற்சிக்கு ஆளானது. திரோதான சக்தி ஒருபுறம் ஈர்க்கும், சிவனின் திருவடிகளை அடைய உதவும்.

அந்தச் சக்தியின் ஈர்ப்பில் ஆட்பட்ட நிலை தொடராது.

மாயை மறுபக்கம் ஈர்க்கும், ஆணவம் சார்ந்த நிலை வரும்.

ஐயையோ தவறினோமே என வருந்தி அந்த ஈர்ப்பிலிருந்து விடுபட்டுத் திரோதான சக்தியின் ஈர்ப்பில் உயிர் ஈடுபடும்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம். மாறி மாறி வரும் ஈர்ப்புகள், இடையில் தவிக்கும் தத்தளிக்கும் உயிர்.

”அமுதம் தரும் பாற் கடல். மத்தாக மேரு மலை. நாணாக வாசுகி பாம்பு. ஒரு பக்கம் அசுரர். மறுபக்கம் தேவர். பாற்கடலைக் கடைகின்றனர்.

ஆலகால விடம் திரள்கிறது. அமுதம் திரளவேண்டிய இடத்தில் விடம். அந்த விடம் அனைவரையும், அனைத்தையும் அழிக்கும் விடம்.

சிவன் விடத்தை அள்ளுகிறார்.

நீடும் இருவினைகள் நேராக நேராதல் கூடும் இறை சத்தி கொளல் (திருவருட்பயன் 51) என்றார் உமாபதிசிவம்.

நல்வினை ஒருபுறம், தீவினை மறுபுறம்.
அருளின் ஈர்ப்பு ஒருபுறம், ஆணவத்தின் ஈர்ப்பு மறுபுறம்.

”எல்லாப் பிறப்பும் பிறந்தேன், பிறந்து பிறந்து இளைத்தேன், உன் பொன்னடிகள் கண்டேன், வீடுபேறு அடைந்தேன்,(மாணிக்கவாசகர்)

விடமுண்ட கண்டன் திருவடிகளை அடைதல், உயிரின் ஏக்கம். அறுக்க முடியாப் பாசத்தை அறுத்து, வினை நீக்கி விரும்பி வீடருள்வான் சிவன்.

தேவாரத்தில்தால் இறைஞானிகள் எத்தனை இடங்களில் விடமுண்டகண்டனை சிறப்பித்துள்ளார்கள்

ஒளியார் விடமுண் டவொருவன்

கறைக்கண் டத்தாரே

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

இவ்வாறாகப் பன்னிரு திருமுறைகள் முழுவதும் சிவனின் கண்டத்தில் விடமுள்ள பாங்கான உயிரது இருவினை ஈர்ப்பு நிலையைச் சுட்டி நிற்கின்றன.

முழுமையை நோக்கிய உயிரின் நெடும் பயணம். இடைவிடா முயற்சி. உயிரின் தன்மையே அஃதாம். அந்தக் கூர்மை முயற்சி வழுக்கும் கம்பம் போல. சாண் ஏற முழம் சறுக்கும். தீவினைகளைத் தனதாக்குபவன் சிவன், உயிரின் கூர்மை முயற்சிக்குக் கை கொடுப்பவன் சிவன். விடா முயற்சிக்குரிய நம்பிக்கையின் ஊற்றுக்கண், விடமுண்ட கண்டன் அவன்.

இறைவன் இந்த உயிரினம் என்றும் நிலைக்கச் செய்ய தன்னையே கூட தியாகம் செய்ய முன்வந்த அற்புத நிகழ்ச்சிதான் விடமுண்டகண்டன் நிகழ்ச்சி. நினைத்துப்பாருங்கள்.. அன்று சிவன் மட்டும் விடத்தை உண்டிராவிட்டால் ஏது இங்கே உலகம்.. ஏது மக்கள்.. ஏது உயிரினம்.. கிடைத்தற்கரிய அமுதத்துக்காக ஏற்கனவே கிடைத்திருந்த உயிரினங்களை பலி கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் அனைத்தையும் காத்தவன் அன்றோ..

ஆஹா.. அப்படிப்பட்ட விடமுண்டகண்டனின் சிற்பம் ஒன்று இந்த சிறப்புப் பதிவில் பார்ப்போமே. பல்லவர்கள் போய் சோழர்கள் தமிழகத்தை தங்கள் கீழ் கொண்டு வரும் 9ஆம் நூற்றாண்டு சிற்பம். மிகவும் அரிய பொக்கிஷம் இது. பொக்கிஷம் என்று சொல்லிவிட்டதால் அது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று சொல்லவும் வேண்டுமோ.

மீண்டும் ஒரு முறை காட்சியை மனதில் கொண்டு மேலே செல்வோம். சிவன் விடத்தை அள்ளுகிறார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் உதித்திருக்கும் , அவை அவரது திருமுகத்தில் எப்படி பிரதிபலிக்கும்.

நாம் முன்னர் பார்த்த சோமஸ்கந்தர் பல்லவ வடிவம் இந்த சிலையை விட பழமை என்று ஏன் கருதப்படுகிறது என்றும் பார்ப்போம்.

ஈசனின் மனதில் உள்ள ஆழ்ந்த சிந்தனையை எப்படி தான் முகத்தில் கொண்டு வந்தானோ அந்த கலைஞன்.

பொதுவாக ஆனந்தக் கூத்தனின் புன்முறவல் இங்கே இல்லை. அண்டத்தை காக்க தான் செய்ய வேண்டிய அடுத்த காரியத்தை எண்ணி ஒரு நிமிடம் …நெற்றிக் கண்ணோடு அந்த முகத்தில் இருக்கும் பாவம்.

இந்த சிலையில் ஜடாமகுடம் சற்றே உயர்ந்து காணப்படுவது இதன் காலத்துக்கு ஒரு அறிகுறி. அதில் கொன்றைப் பூ மற்றும் பிறைச் சந்திரன் அருமை. இங்கு மகுடத்தில் ஒரு புதிய அணிகலன் காணப்படுகிறது. பல முனைகளை கொண்ட சூலம் போன்ற ஒரு அணிகலன் நாம் முதன் முறையாக இந்த சிலையில் பார்க்கிறோம்.

உடல் அமைப்பு அருமையிலும் அருமை. அந்த இடை கொள்ளை அழகு. மார்பின் மேலே யக்நோபவீதத்தின் (புரிநூல்) முடிச்சு மிகவும் அழகாக உள்ளது. அதுவும் மூன்று இழைகளாக பிரிந்து ஒன்று வலது கையின் மேலே செல்கிறது. இந்த பாணி பல்லவர் காலத்து சிலைகளிலும் சிற்பங்களிலும் வெகுவாக நாம் பார்க்கலாம். பட்டையாக வேப்லைபாடுகள் கொண்ட உதரபந்தம் உள்ளது.




இரண்டு கரங்களை ஒரு பக்கத்தில் காட்ட முயற்சிக்கிறான் சிற்பி, அதனால் கைகளின் மேல் பகுதி சற்றே தடிமனாக உள்ளது. இதை கொண்டு இது ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வடிக்கப்பட்டதென்று கருதலாம.

ஆனால் கை முட்டிக்கு கீழே அபாரம். ஆபரணங்கள் மகுடத்தில் உள்ள புதிய வடிவத்தை ஒத்து உள்ளன. இதனை ஒத்து பார்க்கும் பொது நடேசர் சிலையின் மிக குறைவான அணிகலன்களை கொண்டு அதன் காலம் இந்த சிலையை விட முன்னதாக நிர்ணயிக்கப்படுவதை நாம் உணரலாம்.

மேல் கைகள் ஒரு பக்கம் மழு , மறு பக்கம் மான். இங்கே நாம் பார்க்கவேண்டியது மழு எப்படி கையினுள் உள்ளங்கையில் படும்படி இருக்கிறது. நாம் முன்னர் பார்த்த வடிவங்களில் இரு விரல்களில் அது இருக்கும்.

மான் குட்டி மிக சுட்டி. ஆஹா என்ன அழகாக தந்து முன்னங்கால்களை மடக்கி – ஒரு வேளை ’வேண்டாம் செய்யாதீர்கள்’ என்றோ அல்லது ’ஆஹா தம்மைப் போன்ற உயிரினங்களையும் வாழவைக்க நீங்கள் செய்யப் போகும் மகத்தான காரியம்’ என்று போற்றி வணங்குகிறதா ?

உடலில் தோலுக்குள் இருக்கும் எலும்பு, அதன் மேலே படியும் சதை, அதை சுற்றி இருக்கும் துணி என்று அனைத்தையும் ஆய்ந்து தன் திறமையை வெளிப்படுத்துகிறான் சிற்பி. அந்த வலது காலை பாருங்கள்.

இடுப்பில் ஆடை உக்ரமுக பதக்கதில் இருந்து வெளி வருவது போல வடிவம் உள்ளது. உத்சவ மூர்த்தி என்பதால் பவனி வருவதற்கு எதுவாக கைப்பிடிகள் , நல்ல தடிமனான பீடம் எல்லாம் உள்ளன.

தோள்களின் மேல் தவழும் அவரது கூந்தலில் ஒரு மலர் – ஆஹா என்ன அழகு.


பின்புறம் சென்று பார்க்கும் பொது தான் அந்த சிகை அலங்காரத்தின் முழு அழகு தெரிகிறது.

மிக அழகான சிரஸ் சக்கரம், முன்னர் பார்த்த வடிவங்களை விட இந்த வடிவம் புதியது என்பதற்கு இன்னும் ஒரு காரணம். சிரஸ் சக்கரத்தில் இருந்து விரியும் கூந்தல், அதில் ஒன்று எப்படி அந்த கழுத்து மாலையின் பின்னல் தொங்கும் பட்டையின் மேலே தவழ்கிறது பாருங்கள்.

அப்படியே வளைந்து தோள்களின் மேல் படரும் கூந்தல் எழில் சொக்க வைக்கிறது.

கீழ் இரண்டு கைகள் தான் நமக்கு மிகவும் முக்கியம்.

இடது கையில் ஒரு பெரிய நாகம், படம் எடுத்து மகேசனை நோக்கும் வண்ணம். ஒரு வேளை வலது கையில் இருக்கும் விடத்தின் தன்மையை விளக்க சேர்க்கப்பட்டதோ.

வலது கையில் ஆலகால விடம்

அனைத்தையும் சேர்ந்து பார்க்கும்போது தான் சிற்பத்தின் உள்ளுணர்வு நமக்கு புரிகிறது.

ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

இதோ ஈசன் தயார். அடுத்து என்ன நடந்தது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

மீண்டும் ஒரு முறை திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி கூறி, அவருக்கும் அவரதுமகத்தான பணியில்துணை நிற்கும் அனைவருக்கும் உங்களால் முடிந்த உதவியை தவறாமல் செய்யுங்கள் என்று கூறி, 250 பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டம் அளித்து எங்களை வழி நடத்தும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒக்கூர் ந​டேசன் – முதன் முதலாக ​வெண்கலச் சிற்பத்தில் ஈசனின் ஆனந்த தாண்டவம்

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது – எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் – பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) – மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் – முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் – 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன – நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு – த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் – தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி – மேலைக்கடம்பூர், பாகம் 1

இன்றைக்கு நாம் ஒரு மிக அரிய அற்புத சிலையை பார்க்கப்போகிறோம். கடம்பூர் என்றதுமே பலருக்கு பொன்னியின் செல்வன் நினைவுகள் மலரும். நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னர் மேலைக்கடம்பூர் சென்றோம்.

ஒரு வார பயணத்தின் முதல் நாள் என்பதாலும், அன்றைக்கு இரவே தில்லை செல்லவேண்டும் (30 km தொலைவில்) என்பதாலும், அரக்கபரக்க சென்றோம். மழை வேறு “இதோ இப்போ வருகிறேன்” என்று பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கோயில் வாயில் அடையும் போதே இருட்டி விட்டது. அடுத்த நாள் பிரதோஷ பூஜைக்கு குருக்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தார்.

ஒரு வருடத்துக்கு முன்பா? அப்போ ஏன் இவ்வளவு தாமதம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரு காரணங்கள். ஒன்று திரு ராஜா தீக்ஷதர் அவர்கள் அருமையான ஆங்கில பதிவு ஒன்றில் மிகவும் அருமையாக இந்த ஆலயத்தை விளக்கி இருந்தார். அவரிடத்தில் அந்தப் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து நமது தளத்தில் இட கேட்டிருந்தபோது, திடீரென அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நினைவாக விரைவில் அதனை செய்து விடுவோம். இரண்டாவது காரணம், கடம்பூர் கோயிலில் இருக்கும் சிலை. பிரதோஷத்தன்று மட்டுமே வெளியில் வரும் இந்த சிலை, அன்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வெளி வரவில்லை. வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையை மட்டுமே படம் பிடித்தோம்.

ஆனால், இணையத்தில் தேடியதில் கோயில் தர்மகர்த்தா திரு விஜய் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

கடம்பூர் கோயில்

ஆலயத்தின் ஸ்தல புராணம் பற்றிய அவரது பதிவு.

கடம்பூர் புராணம்

கடம்பூர் – அம்ரிதகடேஷ்வரார் கோயில். தற்போது இருக்கும் கற்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கட்டுமானம் (1075 -1120 C.E.). அதன் அற்புத வடிவம் மற்றும் சிற்பங்கள் பற்றி திரு ராஜா தீக்ஷதர் அவர்களது பதிவில் பின்னர் பார்ப்போம். நேரடியாக அந்த சிற்பம் காண செல்வோம்.

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி

அருகில் சென்று அதன் அற்புத வடிவத்தை பார்ப்போம்.

இந்த சிலையின் தனித்தன்மைகள், உயர்ந்த மேடை, பின்னல் இருக்கும் பிரபை

திரு நாகசாமி அவர்கள் இதனைப் பற்றி கூறுகையில் , ” இந்த கோயிலில் குலோத்துங்கன் காலத்து, அற்புத உற்சவர் சிலைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் நந்தியின் முதுகில் ஆடும் காட்சி, அருகில் விநாயகர், முருகர், பிருங்கி, நந்தி, பைரவர் மற்றும் பல கணங்கள் உள்ளன. இந்த சிலை வங்க தேசத்து பால வம்சத்து வெளிப்பாடை கொண்ட சிலை. இந்த சிலை சுமார் 9th – 10th நூற்றாண்டை ஒட்டி இருக்க வேண்டும். இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது “

கடம்பூர் பற்றிய திரு நாகசாமி அவர்களின் பதிவு

இந்த சிலையை பால கால புத்தர் சிலையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (நியூயார்க் நகர மெட்ரோபொலிடன் அருங்காட்சியக சிலை)

மேடை மற்றும் பிரபைகள் ஒத்து போவதை நாம் காணலாம்.

மேலும் இந்த சிலை தென்னாட்டு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்பதற்கு மகேசனின் ஊர்த்வ லிங்கம் இன்னும் ஒரு சான்று. இவ்வாறு நாம் சோழர் மற்றும் பல்லவர் கால செப்புத்திருமேனிகளில் பார்ப்பதில்லை.

திரு விஜய் அவர்கள் நாம் இன்னும் நன்றாக பார்க்க, அருகில் சென்று பின்னால் இருக்கும் தகடை விலக்கியும் படம் எடுத்து உதவி உள்ளார்.

மிகவும் அழகாக காட்சி அளிக்கும் இந்த சிலை மகேசனின் அற்புத நடனத்தை பிரதிபலிக்கிறது. கைகள் தோள்பட்டையில் இணையும் பாணி மிகவும் அருமை. இதற்கு முந்தைய பல்லவர் மற்றும் சோழர் வடிவங்களில் கைகள் முட்டியில் பிரியும்.

இன்னும் நிறைய பார்க்க உள்ளது இந்த சிலையில். அவற்றை இந்தப் பதிவின் அடுத்த பகுதியில் விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

எளிபாண்டா குடவரை புத்த மதம் சார்புடையது, சிவனாக இருந்தால் கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே !

இணையத்தின் வளர்ச்சி , கூகிள் , விக்கி போன்ற வசதிகள் நம் படைப்புகளுக்கு மிகுந்த பலத்தை தருகின்றன. எனினும் நாம் அவற்றை உபயோகிக்கும் முறை சரியா , அவற்றை கொண்டு நாம் படைக்கும் படைப்புகள் நம்பகத்தன்மை உடையனவா என்ற எச்சரிக்கை கலந்த பொறுப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் அவையும் ஆவணங்களாக மாறுகின்றன. என்ன இது திடீரென இப்படி ஒரு கருத்து என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இணையத்தில் எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவற்றில் சாதி, மதம் என்று பல இறுக்கமான விஷயங்கள் , இதமாக மருந்திட்டு ஆறவிடாமல் , சிலர் கார சாரமாக எழுதி வாசகர் எண்ணிக்கை கூட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் ஆரா புண்ணாய் எரிய விடுகின்றனர்..

சில வருடங்களுக்கு முன்னர், சிலைகளை பற்றி நடந்த உரையாடல் ஒன்றில், நண்பர் ஒருவர், எளிபாண்டா குடவரை திருமூர்த்தி சிலையின் படத்தை போட்டார். இணையத்தில் அரை குறையாக அங்கு புத்த மத குடைவரைகளும் உள்ளன என்று படித்துவிட்டு, அவர் இதுவும் ஒரு புத்தர் சிலை. சைவர்கள் அணைத்து குடைவரைகளையும் வன்முறையால் எடுத்து, அங்கு உள்ள புத்த வடிவங்களை மாற்றி விட்டனர் என்றும், அத்தாட்சி படத்தில் இருக்கும் சிலையின் நீண்ட காதுகளை பாருங்கள் என்றார். மேலும் “இந்த படத்தை உற்று நோக்குங்கள் பாலமுகம், கம்பீரமுகம் நம்மை பார்ப்பது , தளர்ந்த முகம் சோத்தாங்கை பக்கம்,இது மத சின்னங்களான பட்டை, நாமம், எல்லாம் எங்கே, சங்கு எங்கே சக்கரம் எங்கே கழுத்தில் தொங்கும் பாம்பு எங்கே ?” என்றும் எழுதினார்.

இந்த படத்தை தான் அவர் அங்கு இட்டார். கீழே இருக்கும் தலத்தில் இருந்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

Temple net தளம்

இதை முதல் பார்வையில் பார்க்கும் வாசகர்கள் அவர் சொல்வது சரிதானோ என்ற ஐயம் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் விடை அளிக்க நாம் முயற்சி செய்வோம்.

முதலில் அவர் இட்ட படமே தவறு. உற்று பாருங்கள், அவர் சொல்லும் சோத்தாங்கை பக்கம் ( உங்களுக்கு) மீசையுடன் இருக்கும் சிலை அப்படி இருக்காது. ஏன் ? யாரோ செய்த குற்றம், படம் மாறி வலையில் ஏற்றி உள்ளார். சரியான படம் இதோ.

எங்கே பாம்பு என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் மிகவும் சுலபம். அதை பார்க்கும் போதே இந்த நபர் தான் சொல்லும் இடத்திற்கு சென்றதே இல்லை என்பதும் தெளிவாகிறது. இந்த பதிவில் வரும் படத்தை பாருங்கள்.

பதிவு

அருகில் சென்று பாருங்கள். கையில் பிடித்திருப்பது என்ன ?

இந்த தலத்தில் 12வது படத்தை பாருங்கள் ( ASI இணைய தளம்)

ASI இணைய தளம்

திரு ஜார்ஜ் மீச்சேல் அவர்களது ஆங்கில நூல் “ELEPHANTA” , அதில் அவர் மிக அழகாக அருமையான படங்களுடன் முழு குடவரையையும் விளக்குகிறார். அவரது நூலில் இருந்து சில படங்கள் ( இன்னும் ஒரு பாம்பு உள்ளது )

பாம்பு பற்றிய கேள்விக்கு பதில் சொல்லியாயிற்று . அடுத்து நீண்ட காதுகள். ஆகமம், சிற்ப சாஸ்திரம் என்று முழுவதுமாக விவரிக்காமல் , மேலோட்டமாக பார்ப்போம். ( மேலே படிக்க வேண்டும் என்றால் திரு கோபிநாத் ராவ் அவர்களது Elements of Hindu Iconography நூலை படிக்கவும் – ஒரே ஒரு பக்கம் மட்டும் இணைக்கிறேன் ),சிற்ப சாஸ்திரங்கள் சமண, பௌத்த , இந்து சிற்பங்கள் என்று தனித்தனியாக பிரிப்பதில்லை. எல்லா சிலைகளுக்கும் ஒரே அளவுகள் தான்.

உதாரனத்திற்க்கு, அவர் காதை பற்றி கேள்வி எழுப்பியதால், சிற்ப சாஸ்திர முறை படி வரைந்த ஒரு காதை ( அதே நூலில் இருந்து ) பாருங்கள்.

இந்தக் காது, நமது திருமூர்த்தி உருவத்தின் காதின் அளவுகளுடன் ஒத்து போகுமா ? முழு ஆராய்ச்சி போல அகல நீளம் அளக்க வில்லை – நம் பார்வைக்கு எப்படி தெரிகிறது என்று மட்டும் இப்போதைக்கு பார்ப்போம்.


சுவாரசியமாக இருக்கிறது அல்லவா. சரி, இதே காது , ஒரு சிவன் சிலைக்கு பொருந்துமா. எதோ ஒரு சிவன் சிலை இல்லை, சோழர் கால செப்புத் திருமேனி, அதுவும் புகழ் பெற்ற ரிஷபாந்தகர் சிலை ( நாம் சில தினங்களுக்கு முன்னர் பார்த்த வடிவம் தான் )

அவரது காது இப்போது நமக்கு தேவை. இதோ

இரண்டு காதுகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா ?

7832
7858

எப்படி இருக்கிறது பொருத்தம் ?

நண்பர், மேலும் குடவரையில் இருந்த அணைத்து பெளத்த சிலைகளையும் சைவ சிலைகளாக மாற்றிவிட்டனர் என்றும் கூறினார். நண்பர் நன்றாக தேடி படித்து பார்த்திருந்தால் , குடவரைக் கோயில் – ஒரே கல்லால் ஆனா சிலைகள் இவர். அதுவும் ஒன்றோ இரண்டோ சிற்ப்பங்கள் இல்லை, மொத்தம் பதினாறு புடைப்புச் சிற்ப்பங்கள், வாயிர்க் காப்போன், பூத கணம் என்று ஒரு பெரும் படையே உள்ளே இருக்கு என்று நண்பருக்கு தெரிந்திருக்கும்.

விக்கி தலத்தில், குடைவரையின் அமைப்பு , அதில் இருக்கும் சிற்ப்பங்கள் என்று முழு விவரமும் இருக்கின்றனவே!!

Wiki layout of Elephanta

நடு மண்டபம்

1. ராவணன் கைலாய மலையை அசைக்கும் காட்சி
2. ஈசனும், உமையும் கைலாயத்தில்
3. உமையொருபாகர்
4. திருமூர்த்தி
5. கங்காதர வடிவம்
6. பார்வதி கல்யாணம்
7. அந்தகாசுரன் வதம்
8. நடராஜர்
9. யோகிஷ்வர
16. லிங்கம்

கிழக்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்

10. கார்த்திகேயன்
11. மாத்ரிகா
12. பிள்ளையார்
13. வாயிர்க் காப்போன்

மேற்கு பக்கம் இருக்கும் சிற்ப்பங்கள்

14. யோகிஷ்வர
15. நடராஜர்

ஒவ்வொரு சிற்பமும் அருமையான படைப்புகள். ஆனால் எங்கும் ஒரு கல்வெட்டு கூட இல்லை, இதன் காலம், கட்டிய மன்னர் யார் – எதுவும் தெரியவில்லை. சுமார் கி பி 8th நூற்றாண்டு படைப்பாக இருக்கலாம் என்றும் குப்தர் இல்லை சாளுக்யர் கலை தாக்கம் இருக்கிறது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். .

உண்மை ..அறிவு …ஆனந்தம்


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒரு மோதிரத்தை தேடி

மோதிரங்கள் நமது வரலாற்றுடன் பின்னிப் பயணிக்கும் ஒரு அணிகலன். அதை அணிய வேண்டும் என்றால் உடலை வருத்தி ( குத்தி )ஓட்டை போடத் தேவை இல்லை ) – மேலும் , கால் விரல்களை சேர்த்தல் இருபது மோதிரங்களைக் கூட எளிதாக அணியலாம், ஒரே விரலில் ஒன்றுக்கு மேல் போட்டுகொண்டால் – எண்ணிக்கை மேலும் பெருகும். உலக வரலாற்றில் ( விக்கி ) குறிப்புப்படி சுமார் 4800 ஆண்டு காலாசாரம் இது. எனினும் நமது பரத கண்டத்தில் ( நமது புராணங்களின் காலத்தை நிர்ணயிக்கும் சர்ச்சை இங்கு வேண்டாம் !!) முத்திரை மோதிரங்கள் பல இடங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அசோகா வனத்தில் சீதை அனுமனை ஸ்ரீ ராமனின் கணையாழி கொண்டு அடையாளம் கண்டு்கொண்டது, மனையாளை மறந்த துஷ்யந்தன் முனி சாபத்தால் நினைவு திருந்தாமல், பின்னர் மீன் வாயில் சிக்கிய தன முத்திரை மோதிரம் கண்டு சகுந்தலையை நினைவு கூர்வதும், தன சொந்த மகனான பரதனைக் கண்டு கொண்டதும் , என்று இந்த சிறு அணிகலன் ஆற்றும் பணி மிக முக்கியம்.

இன்று நாம் ஒரு மோதிரத்தைத் தேடிச் செல்கிறோம், இந்த பயணத்தின் மூலம் இரு வரலாற்றுச் சின்னங்களை ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய எத்தனிக்கிறோம். அணிகலன்கள் மற்றும் செப்புத் திருமேனிகள். ஒன்றுக் கொன்று, தங்கள் காலத்தை துல்லியமாக நிர்ணயிக்கும் பணிக்கு, எவ்வாறு உதவி செய்கின்றன ? இதன் மூலம் நம் வாசகர்களுக்கு மீண்டும் ஒரு கோரிக்கை. உலகெங்கும் இருக்கு அருங்காட்சியகங்களில் இருக்கும் சிலைகளை பல கோணங்களில் படம் எடுப்பதன் முக்கியத்துவம் விளங்கும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிவு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நடந்த விழா , மற்றும் விழாவை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தில் தொடங்குகிறது. திரு ராமன் அவர்கள் அருமையாக விழாவை படம் பிடித்து வந்தார். அதில் ஒன்று கண்ணைப் பறித்தது. சோழர் காலத்து அணிகலன்கள் – இதுவரை கண்டிராத ஒன்று, அதை பற்றி நூல்களிலும் வந்த மாதிரி தெரியவில்லை.

ஆர்வலர்கள், நாங்கள் இருவரும் அதை இன்னும் விரிவாக ஆராய்ந்தோம்.

திரு ராமன் அருங்காட்சியகத்தில் இருந்த பல செப்புத் திருமேனிகளை படம் பிடித்ததும், நான் சென்ற டிசம்பர் மாதம் சென்னை அருங்காட்சியக சிலைகளை படம் பிடித்ததும் மிகவும் உதவின. அதிலும் தஞ்சையில் சிலைகளின் மிக அரு்கில் சென்று அவரால் படம் எடுக்க முடிந்தது. ( சென்னையில் கண்ணாடி போட்டு சிரமமப் படுத்துவார்கள் )

தனியாக பார்க்கும் மோதிரத்தை சிலையில் தேடும் பணியில் ஈடுபட்டோம்.

அதற்கு முதலில் மோதிரத்தின் நல்ல படங்கள் – இதோ

என்ன ஒரு அருமையான மோதிரம்.

முதலில் , CE 10th நூற்றாண்டு, உமையம்மையின் சிலை, கொடிக்காடு , வேதாரண்யம் தாலுகா, நாகை

அருமையான சிலை – எனினும் நேராக மோதிரங்களுக்கு போவோம்.

கையில் இருக்கும் மோதிரங்கள், பொதுவாக எளிமையாகவே உள்ளன. தடிமனான கம்பி போலவும் , அதில் சிறு வேலைப்பாடும் தெரிகிறது.

அடுத்து ஒரு நூறு ஆண்டுகள் அடுத்து , CE 11th நூற்றாண்டு உமையம்மை தம் தோழியுடன் , திருவேங்கிமலை , திருச்சி

இன்னும் அருகில் சென்று, இடைப்பட்ட காலத்தில் அணிகளின் வடிப்பதிலும் அணிவதிலும் மாறுதல் தெரிகிறதா என்று பார்ப்போம்.

நல்ல மாற்றம் தெரிகிறது. நடுவில் கல் பதித்து, அதை சுற்றி சிறு மலர் இதழ்கள் விரிவது போல இருப்பது நன்றாக தெரிகிறது.

அதே நூற்றாண்டை சேர்ந்த உமையொரு பாகர், 11th C CE, திருவெண்காடு , மயிலாடுதுறை .

உமை பாகத்தில் உள்ள கையில் இருக்கும் மோதிரத்தை அருகில் சென்று பார்ப்போம்.

சென்ற சிலையை விட சற்று எளிமையாக உள்ளன மோதிரங்கள். இந்த சிலை 11th நூற்றாண்டின் முதல் பாதியில் வடித்ததாக கொள்ளலாமோ?. மோதிரம் சற்று தட்டையாகவும், நடு பகுதி சற்று விரிவு பெற்று தெரிகிறது.

இன்னும், 12th மற்றும் 13th நூற்றாண்டு சிலைகளை தேடி, அவற்றில் இருக்கும் மோதிரங்களை ஆய்வு செய்யவேண்டும், எனினும் அடுத்து நாம் பார்க்கும் சிலையில், நம் தேடல் வெற்றி பெற்றது. உமை, தேவர்கண்டனல்லூர் , திருவாரூர்.

இந்த சிலையின் காலம் தெளிவாக இல்லை. சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் பொது 14th C CE என்றும், தஞ்சையில் 15th நூற்றாண்டு என்றும் பலகைகள் உள்ளன. ( அருங்காட்சி அட்டவணை நூலில் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும் )

எனினும், உமையின் வலது கையில் நம் தேடலின் நிறைவு …

அருகில் சென்று பாருங்கள், நாம் தேடிய மோதிரம் – இதோ இந்த செப்புத்திருமேனியில்

இப்போது கடினமான கேள்வி – இந்த மோதிரத்தின் காலம் என்ன ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனி

நண்பர்களிடையே பலமுறை இந்த கேள்வி எழும். கலை ஆர்வலன் ( நானே சொல்லிக்க வேண்டியது தான் – ரசிகன் பட்டம் தானே !!) என்ற முறையில் தமிழ்க் கலை என்றால் பல்லவர் கலை பெரிதா இல்லை சோழர் கலை பெரியதா என்பதே ( நமக்கு சேரர் கலை வெகு சிலவே கிடைக்கின்றன – அதாவது அந்தக் காலத்து , பாண்டியர் குடைவரைகள் இன்னும் நிறைய நான் பார்க்க வேண்டி உள்ளது எனினும் பார்த்த சிலவற்றை வைத்து ( வேட்டுவன் கோயில் தவிர ) அதற்குப் பின்னர் வந்த கட்டுமானக் கோயில்களில் உள்ள கலை வேலைப்பாடு என்னை பெரிதாக ஈர்த்ததில்லை. எனவே இன்றைய விவாதம் பல்லவர் vs சோழர். அதுவும் பல்லவர் கற்சிற்பம் vs சோழர் செப்புத்திருமேனிகள். இதற்காக அவர்களது கலையின் மிகவும் மேலான உதாரணங்களை கொண்டே பார்ப்போம். பல்லவர் சிற்பக்கலை அதன் சிகரத்தை தொடும் இடம் கடல் மல்லை தர்மராஜ ரதம் மேல் தல புடைப்புச் சிற்பங்கள். சோழர் செப்புத் திருமேனி என்றால் அது உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அதுவும் அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் வார்க்கப்பட்ட சிலைகளே.

தர்மராஜ ரதம் மேல் தளம் ஒரு அதிசயம். ஒரே பாறையில் மேலிருந்து கீழே குடைந்து, அதில் இப்படி ஒரு அற்புத கலை நயத்தோடு , சிறிதளவும் பிழை என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் , ஆகமங்கள் முறையே தங்கள் சட்டங்களை விதிக்கும் முன்னரே, தங்கள் செழிப்பான சிந்தனையை மட்டுமே மூல தனமாக வைத்து இப்படி அற்புத சிற்பங்களை செதுக்கிய இவர்களை என்னவென்று புகழ்வது. கடினமான கருங்கல்லில் உயிர் ஓட்டம் ததும்பும் இந்த சிற்பங்களை அழகு பட வடித்த இவர்கள் மனிதர்களா என்றே சந்தேகம் வரும்.

அந்த மேல் தடத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பங்க்ளில் ஒரு அற்புத வடிவத்தை இன்று நாம் நண்பர் அசோக் உதவியோடு பார்க்கிறோம். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை – மேல் தடம் செல்வதே கடினம் – பலரிடம் அனுமதி பெற வேண்டும். நெரிசலான பாதை, சுவருக்கும் சிற்பத்திற்கும் இடைவெளி மிகவும் குறைவு , இதனால் புகை படம் எடுப்பது மிகவும் கடினம், அதுவும் ஒரே படத்தில் முழு உருவை பிடிப்பது அதைவிட கடினம். நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றை ஒன்று சேர்த்து அவரால் இதை செய்ய முடிந்தது. படம் பிடிக்க நாம் படும் பாட்டை பார்க்கும்போது, இதே இடத்தில தனது கற்பனை உருவை கல்லில் கொண்டு வந்த சிற்பியின் வேலைக்கு மீண்டும் தலை வணங்க வேண்டும்.பல்லவ ரிஷபாந்தகர்

இந்த சிற்பத்தின் தனித்தன்மை அதன் தலை / சிகை அலங்காரம். தலை பாட்டை மற்றும் சடை முடியை சுற்றிக் கட்டிய கொண்டை, இதுவரை நாம் வேறு எங்கும் பார்க்காதது. இதன் பிறகும் பல்லவர் படைப்புகளில் , ஏன் மல்லையிலே கூட நாம் இந்த மாதிரி மற்றொன்றை பார்க்க முடியாது – அர்ஜுன ரத சிற்பத்தை பாருங்கள்
(
அர்ஜுன ரதம் ).

இந்த சிற்பத்தில் ஒரு தனி நளினம், சிற்பம் முழுவதிலும் ஒரு உயிரோட்டம் , வளைந்து செல்லும் அருவியின் நெளிவு சுளிவு , ரத்தம் சதை கொண்டு தோல் போர்த்திய கை கால் என சொல்லிக்கொண்டே போகலாம்.

த்ரிபங்கத்தில் ஒய்யாரமாக நிற்கும் சிவன், லாவகமாக வலது கையை நந்தியின் மேல் வைத்து, தலையை ஒரு புறம் சாய்த்து , இடுப்பை மறுபக்கம் மடக்கி, ஒரு காலை இன்னொரு கால் மீது போட்டு நிற்கும் காட்சி …அப்பப்பா பிரமாதம்.

இந்த சிலைக்கு எதிர்த்து நின்று ஈடு கொடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம் கடினம் தான். அதனால் சோழர் செப்புத்திருமேனிகளில் மிகவும் சிறந்த ஒன்றை போட்டிக்குள் கொண்டு வருவோம். அதிஷ்ட வசமாக கோவையில் செம்மொழி மாநாடு அரங்கில் வழி தவறி, அங்கே அடுத்த நாள் திறப்பு விழாவுக்கு வேலைகள் கடந்துக் கொண்டிரந்த அருங்காட்சியக மையத்தினுள் தற்செயலாக சென்றதால் இந்த அற்புத சிலையை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது,. கூடவே இன்னும் ஒரு பெரும் பாக்கியம் ( படங்களை கூர்ந்து பார்த்தல் அது என்ன என்று விளங்கும் ) . இந்த சிலை, தஞ்சை கலை அரங்கத்தில் இருக்கும் ,மாநாட்டிருக்கு என்று பிரத்தேயகமாக கொண்டு வரப்பட்டது. செப்புத்திருமேனிகள் வடிப்பது சுலபம் இல்லை, நாம் முன்னரே பார்த்தவாறு, அச்சை உடைத்து சிலையை வெளிகொணர்வதால் ஒவ்வொரு முறையும் அச்சு புதிதாக செய்யப்பட வேண்டும். அதுவும் அச் சிலையை வார்த்த பின்னர், அதாவது அனைத்து சிறு குறிப்புகளும் முதலில் செய்யும் மெழுகு சிலையிலே செய்து விட்டு, மெழுகில் வடித்த பிரதிமத்தின் மேல் மண் பூசி சுட்டு ஆற்றிய பின், அதனுள் உலோகத்தை ஊற்றி சிலை வார்த்த பிறகு, அதன் மேல் உளி படாமல் ( செப்பனிடாமல் அதாவது மேலும் செதுக்காமல் ) எடுக்கும் கைத்திறன் படைத்த மகா கலைஞர்கள் இருந்த காலம் அது, இப்படி அவர்கள் புகழ் படும் கைத்திறன், கலை நயம் பல்லவர் காலம் முதலே தென்னகத்தில் இருந்தாலும், உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் அவர்களது காலத்தில் , குறிப்பாக 1000 முதல் 1014 வரை வார்க்கப்பட்ட சிலைகள் மிகவும் பிரசித்தி. அந்த காலத்தை சார்ந்த கல்யாணசுந்தரர் ( நாம் முன்னரே பார்த்த உன் கரம் பிடிக்கிறேன்), இன்று நாம் போட்டியில் வைக்கும் ரிஷபாந்தக முர்த்தி, பிக்ஷாடனர் மற்றும் வீனாதாரர் ( விரைவில் அவற்றையும் பார்ப்போம் ) மிகவும் அழகு.

செப்புத் திருமேனிகளின் காலத்தை நிர்ணயம் செய்வது சற்று கடினம் தான், எனினும் இன்று நாம் காணும் சிலை ஒரு அபூர்வ சிலை. தன பிறப்புச் சான்றிதழை கல்வெட்டாக கொண்ட சிலை. மண்ணில் புதையுண்டு 1950ஆம் ஆண்டு திருவெண்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை பற்றிய கல்வெட்டுக் குறிப்பு – அதன் இருப்பிடமான ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வர (திருவெண்காடு என்பதின் வடமொழிப்பெயர்) ஆலயத்தின் சுவரில் , உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவரின் 26th இருபத்தி ஆறாம் ஆட்சி ஆண்டில் ( 1011 CE) , கோலக்கவன் என்ற ஒருவர் ( ( AR 456 of 1918 – குறிப்பு இண்டம் பெரும் நூல் South Indian Shrines – Illustrated By P. V. Jagadisa Ayyar ) பொன்னும், நகைகளும் அங்கே எடுப்பித்த சிவ ரிஷபாந்தகர் சிலைக்கு அளித்ததாக உள்ளது ( இதற்கு அடுத்த ஆண்டு கல்வெட்டுக் குறிப்பு இந்த சிவனுக்கு அம்மை சிலை செய்து வாய்த்த குறிப்பை தருகிறது )

முதல் பார்வையிலேயே பல்லவர் சிலைக்கும் சோழர் சிற்பத்திற்கும் உள்ள ஒற்றுமை தெரிகிறது. இந்த இயங்கும் படத்தை சொடுக்கி பாருங்கள்.

இரு வடிவங்களையும் சற்று ஒப்பு நோக்குங்கள். நந்தி சிற்பம் என்ன ஆனதென்று தெரியவில்லை. சோழ கலைஞன் கூடுதலான இரு கைகளை நீக்கி விட்டு, இது சிலை என்பதனால் சற்றே கைகளை சற்று இறக்கி, அதற்க்கேற்ப த்ரிபங்க வளைவை ஏற்படுத்தி, தலையையும் சற்றே நேர் படுத்தி எழில் மிக்க ஒரு படைப்பை உருவாக்கி உள்ளான்.

இது சரியான போட்டி அல்ல, ஏனெனில் சோழ சிற்பி அச்சுக்கு மண்ணை பிசைவதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பல்லவ சிற்பி கருங்கல்லில், அதுவும் ஒரே கல் ரதத்தின் மேல் தலத்தில், தனது சிந்தனையை மட்டுமே கொண்டு பிழை என்றே சொல்லுக்கே இடம் இல்லாத இடத்தில மகத்தான சிற்பத்தை செதுக்கி உள்ளான். ஆனால் சோழ சிற்பியும் லேசுப் பட்டவன் அல்ல, புடைப்புச் சிற்பம் ஒன்றை மனதில் கொண்டு, அதை அப்படியே முப்பரிமாண சிலையாக வடிப்பது எளிதான காரியம் அல்ல.


சரி, இந்த பல்லவர் சிற்பத்தை பார்த்து விட்டுதான் சோழர் சிற்பி வேலை செய்தான என்பதற்கு என்னஆதாரம் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். இதற்கு விடை இரு சிற்பங்களிலும் உள்ள உருவ ஒற்றுமை, இதற்கு முன்னர் வந்த சோழ கல் மற்றும் உலோக சிற்பங்களில் இந்த பாணியில் சிலை / சிற்பம் இல்லை. இன்னும் ஒரு முக்கிய குறிப்பும் உள்ளது. மீண்டும் ஒரு கல்வெட்டை நாடுவோம். மல்லை சுற்று வட்டாரத்தில் சோழ கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் கல்வெட்டும் உள்ளது. கடற்கரை கோயிலில் ..மாமல்லபுரம் கடற்கரை கோயில் கல்வெட்டு AR40

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/mamallapuram.html

உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் ஆட்சி யாண்டு 25th இருபத்தி ஐந்தாம் ஆண்டு ( 1010 CE) கல்வெட்டு அது., அதாவது திருவெண்காடு சிலை வைப்பதற்கு சரியாக ஒரு ஆண்டிற்கு முன்னர் .


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment