சோழ மன்னர்களின் வெங்கலச் சிற்பங்கள் – ஆய்வுத் தகவல்களின் தொகுப்பு

கை உடைய மொழி பெயர்த்த சதீஷுக்கு முதல் நன்றி

தஞ்சை பெரிய கோவிலின் 1000-மாவது ஆண்டை முன்னிட்டு அன்றாட செய்திகளில் தஞ்சை சமீபகாலமாக தொடர்ந்து இடம் பெறுவது நாம் யாவரும் அறிந்ததே. அதே நேரத்தில் சரபாய் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரு வெங்கலச் சிலையையும் தஞ்சைக்கே மீட்டு வரவேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன என்பதையும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே செய்யப் பட்டுள்ள ஆய்வுகளை படிக்க முயல்கையில் பல்வேறு செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டி, வெங்கலச் சிலைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

கிடைத்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன: சற்றே நீளமான பதிவுதான் ஆனால் நிச்சயம் சுவையாக இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

( புகைப்படத்திற்கு நன்றி: திரு. குடவோயில் பாலசுப்ரமணியம் அவர்களின் நூலான இராஜராஜேச்சுவரத்தின் பின் அட்டைப்படம்)
இது ராஜராஜசோழரா என்று அறிந்து கொள்ள வேண்டுமா? 1014-ஆம் ஆண்டு தஞ்சை ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_2/no_36_to_40_on_1st_niche_west_enclosure_1st_2nd_inscription.html

எண். 38. மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடத்தின் மூன்றாவது கல்வெட்டு:
ஏழு உருவங்களைப் பற்றி விளக்கும் இந்தக் கல்வெட்டு இராஜராஜத் தேவரின் 29ஆம் ஆண்டுக்கு முன்னர் இராஜராஜேச்சுவர் ஆலயத்தின் நிர்வாகியால் வெட்டப்பட்டது, இவரைப் பற்றிய தகவல்களும், அவரால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை (பத்தி 23 – 50) மற்றும் இரண்டு நகரத்தை சார்ந்த மக்களின் நன்கொடைகளைப் பற்றிய தகவல்களும் (பத்தி 51 & 59) கல்வெட்டு எண் 26-ல் காணக்கிடைக்கின்றன. இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உருவங்கள்: நம்பி ஆரூரனார் (பத்தி 2, 23, 55, 59), நங்கைப் பரவையார் (5, 25, 57, 66), திருநாவுக்கரையர் (8, 29, 53), திருஞானசம்பந்தடிகள் (11, 36, 51), பெரிய பெருமாள்(14, 44), அவரது துணைவியார் ஓலோகமாதேவி (17, 47), சந்திரசேகரர்[7] (20). இதில் பெரிய பெருமாள் மற்றும் அவரது துணைவியார் ஓலோகமாதேவி உருவங்கள் இராஜராஜ சோழ மன்னரும் அவரது துணைவியாரும் ஆலயத்தைக் கட்ட அருள் செய்த சிவபெருமானான சந்திரசேகரரை வணங்குவதைப் போல் இருக்கின்றது என்பது கருத்து.
மொழிபெயர்ப்பு:
1. ஸ்வஸ்திஸ்ரீ! இராஜராஜத்தேவரின் ஆண்டு 29 – ல் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆலய நிர்வாகியுமான ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்தவேளனால் ஸ்ரீஇராஜராஜேச்சுவரர் ஆலயத்தில் பின்வரும் தாமிர சிற்பங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. சிலைகளின் அளவுகள் ஆலயத்தின் முழத்திலும், ஆபரணங்கள் தக்ஷின மேரு விடங்கன் அளவையிலும், தங்கம் ஆடவல்லான் அளவையிலும் அளந்து ஆலயத்திற்கு அளிக்கப்பட்டன என்பது கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது: –
…………………
14. இரண்டு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஒரு முழம் நான்கரை விரல் அளவு உயரம் கொண்டது.
15. ஐந்து விரல் இரண்டு தோரை அளவு கொண்ட ஒரு தாமரைப் பீடம்.
16. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
17. இரண்டு திருக்கரங்கள் கொண்ட ஓலோகமாதேவியாரின் செப்புத் திருமேனி ஒன்று, இருபத்திரண்டு விரல் இரண்டு தோரை உயரம் கொண்டது.
18. ஐந்து விரல் உயரம் கொண்ட தாமரைப் பீடம் ஒன்று (மேற்சொன்ன சிற்பத்திற்கு)
19. ஒரு பீடம் (தாமரைப் பீடத்தோடு இணைந்தது), பதினோறு விரல் சதுரம் மற்றும் ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்டது.
20. நான்கு திருக்கரங்கள் கொண்ட பெரியபெருமாளின் தேவாரத் தேவரான சந்திரசேகரதேவரின் செப்புத் திருமேனி ஒன்று, உச்சி முதல் பாதம் வரை ஐந்து விரல் மற்றும் இரண்டு தோரை உயரம் கொண்டது.
21. செப்பு பீடம் ஒன்று இரண்டு விரல் நான்கு தோரை சதுரம் மற்றும் ஒரு விரல் உயரம் கொண்டது. இதோடு இணைந்த தாமரைப் பீடம் ஒன்று ஒன்றரை விரல் உயரம் கொண்டது.
22. இருபத்தியொரு விரல் சுற்றளவு கொண்ட சிலையின் செப்புத் தோரணக்கால் ஒன்று.>>>>>>>>

நம்முடைய கவனம் இப்பொழுது பதிந்திருப்பது மேற்குறிப்பிட்ட அளவுகளில்: அதுவும் ஒரு முழம், நான்கரை விரல் அளவில். ஒரு முழம் என்பது தோராயமாக 15 அங்குலம், நான்கரை விரல் என்பது அரை முழம், அப்படியெனில் மொத்த அளவு 22.5 அங்குலங்கள் அதாவது 57 செ.மீ. ஆனால், இந்த அளவைகள் இடத்திற்கு இடம், ஆலயத்திற்கு ஆலயம் வேறுபடும், ஒரே அளவு அல்ல! சில காலத்திற்கு முன் ஒரு ஸ்தபதியிடம் இருந்து தெரிந்து கொண்டது: அளவைகள் ஒரு இடத்தில் விளையும் நெல் மணிகளின் அளவை வைத்துக் கூட தேர்வு செய்யப்படுமாம்! அதோடு மட்டுமல்ல ஆட்சியாளர், அவரது பிறப்பு மற்றும் பல காரணிகள் முன்னிட்டும் கூட இந்த அளைவைகள் வேறுபடுமாம். அப்படி தேர்வு செய்யப்பட்ட அளவுகளைக் கொண்டே ஒரு இடத்தின் ஆலயங்கள், ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் மற்ற சிற்பங்கள் முடிவுசெய்யப்படும். இது மனிதனின் மரபணுவைப் போன்றது. ஆய்வாளர்கள் நிச்சயம் தஞ்சைப் பெரியக்கோவிலின் மூல அளவையை கண்டுபிடித்தால் இந்த முழச் சிக்கல் சுலபமாக தீர்ந்து விடும்!

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து ரூ-386 க்கு வாங்கப்பட்ட ,Bronzes of South India – P.R. Srinivasan (F.E. 1963, L.R. 1994) என்ற நூலை வைத்துத்தான் நாம் வெங்கலச்சிலைகளைப் பற்றிய தேடலை மேலும் தொடரப்போகிறோம்.

படத்தில் தோன்றுவதை விடப் பெரியது இந்த நூல், கொடுக்கும் பணத்திற்கு மேல் கிடைக்கும் விருந்து.

சற்றே கருமையாகத் தோன்றும் பக்கங்கள் முழுதும் வெங்கலச் சிலைகளின் விளக்கங்கள், வெள்ளை நிறப் பக்கங்கள் முழுவதும் படத்தொகுப்பு. ஒவ்வொரு பக்கமும் சுவாரசியம் நிறைந்தது. சரி சரி நாம் தேடும் திருமேனி இருக்கிறதா இல்லையா என்று கேட்பது புரிகிறது! நாம் தேடும் சிற்பமும் இங்கிருக்கிறது. இதோ…

இந்தச் சிலை பற்றி கூறப்பட்டுள்ள விபரங்கள் (மொழிபெயர்ப்பு):

சோழ மன்னரின் உருவத்தைக் காட்டும் 74 செ.மீ. உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை பத்மாசனத்தின் மீது ஸமபங்க ஆஸநம் கொண்டு கூப்பிய கைகளுடன் உள்ளது – மகுடமும், சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சையும் நல்ல வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை மட்டுமின்றி தோளணிகள், கழுத்தணிகள் உட்பட ஏனைய ஆபரணங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. நேர்த்தியாகவும் துல்லியமான வடிவமைப்பையும் உடைய முகம் சதுரமாகத் தெரிகிறது. உருவத்திற்கு பொருத்தமான அடக்கத்தைக் காட்டும் அபிநயம். வழக்கமான வளையம் போன்ற கழுத்தணி காணப்படவில்லை ஆனால் பொருத்தமான இரண்டு கழுத்தணிகள். மென்மையான சன்னவீரம் (வெற்றி மாலை) அந்தக் காலக்கட்ட ஸ்தபதிகளின் பாணியில் உள்ளது.


உடலமைப்பு என்னவோ சற்று பொருத்தமாக இல்லை. மார்பகத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் கைகள் வீரத்தைக் காட்டுவனவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நீட்டிக் கொண்டிருக்கும் மார்புக் காம்புகளும், கையணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கையணிகளில் மணிகள் பொருத்தப்பட்டு தனித்துவமாகத் தெரிகின்றன. இது போன்ற வெங்கலச் சிலைகள் இந்தக் காலக்கட்டத்தில் காண்பது அரிது. அதுமட்டுமல்ல இந்த சிலையில் உள்ள வடிவமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகவும் இதற்கு பிற்காலச் சிற்பங்களில் கூட காணக் கிடைக்காததாகவும் தோன்றுகிறது. தோள்பட்டையின் மேல் இருக்கும் அணிகள் பக்கவாட்டில் மட்டும் இருப்பது மிகவும் சுவாரசியம். அதோடு மட்டுமல்லாமல் கைகளுக்கு இடையே மலர் போன்ற ஒன்றை வடிவமைத்திருப்பது மிகுந்த கலைத்திறனைக் காட்டுகிறது.

சிங்கமுகம் கொண்ட இடுப்புக் கச்சைகளின் வடிவமைப்பு மிகவும் அபாரம்! அதில் இருந்து தொங்கும் தோரணங்களும், குஞ்சங்களும் கலை நேர்த்தியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கீழாடையின் (கோவணம் போன்ற) (கரை)ஓரங்களின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இடுப்புக் கச்சையின் வடிவமைப்பு மிகவும் நவீனமாகத் தெரிகிறது. கால்களின் வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இல்லை, முட்டிகள் மட்டுமல்ல கால் தசைகளின் வரியமைப்புகளும் இயற்கையாக இல்லை. பாதசாரங்கள் (கொலுசு) இல்லாமல் இடக்காலில் மட்டும் காணப்படும் கழல் (சிலம்பு போன்ற ஒன்று) முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற கழல்கள் கொண்ட சிற்பங்கள் சிதம்பர ஆலயத்தில் மேற்குப்புற மற்றும் கிழக்கு கோபுரத்திலும் காணப்படுகிறது. வேறு வகையான கழல்கள் சுந்தரபெருமாள் கோவில் சிற்பங்களிலும், கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்களிலும் காணப்படுகிறது. ஆனால் பிந்தைய காலச் சிற்பங்களில் இது போன்ற கழல்கள் பொதுவான ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி பிற்காலச் சிற்பங்களில் இரண்டு கால்களிலும் கழல்கள் காணப்படுகின்றன, ஒரு காலக் கட்டத்தில் இவையில்லாத சிற்பங்களைக் காண்பது அரிதாகிவிட்டது.

தாமரைப்பீடம் எளிமையானதாகவும், நுண்ணிய வேலைப்பாடமைந்த தாகவும் இருக்கிறது. இதழ்கள் மிகப் பெரியதாகவும், அதனுடைய வரிகள் மங்கலானதாகவும், இதழ் நுனிகள் தெளிவின்றியும் தெரிகிறது. மொத்தமாகப் பார்த்தால் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்த சிற்பமிது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இந்தச் சிற்பம் பனிரெண்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது, நிச்சயமாக பதிமூன்றாம் நூற்றாண்டும் அல்ல (JISOA Vol VI P22) 12 -13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தும் அல்ல (The Art of India and Pakisthan,p 74).

ஒவ்வொரு ஆய்வாளரும் வடிவமைப்பைக் கொண்டு கணக்கிடும் காலம் வேறு வேறாக இருந்தாலும், சிலை தனியே, பீடம் தனியே, தாமரைப் பீடம் தனியே சொல்லும் அளவுகள் மாறாது. தற்சமயம் கேள்விக்குறியாக இருப்பது கல்வெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் முழ, விரல் அளவைகளை எவ்வாறு இன்றைய கால அளவுகளில் மாற்றூவது என்பதுதான்! இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் 74 செ.மீ. அளவு சிலையின் அளவு மட்டுமா அல்லது பீடத்தையும் சேர்த்தா? யாராவது சரபாய் அருங்காட்சியத்திற்கு சென்று அளந்து சொன்னால்தான் உண்டு!.

பார்க்கப் போனால் மேற்சொன்னத் தகவல்களோடு இந்தப் பதிவினை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவன் திருவருள் என்னவோ, திருமதி. லிஸ்பெத் பங்கஜ பென்னிக் அவர்களோடு உரையாடிய போது கிடைத்த திருவிசலூரின் அதி அற்புதமான சிற்பம் மேலும் தொடரவைக்கிறது நம்மை. இவர்தான் காலஞ்சென்ற திரு. இராஜா தீக்ஷிதரின் பதிவுகளை நிர்வகிக்கிறார், அதிலிருந்து கிடைத்த செல்வம் இது.
1930 –ல் திரு. T.G. ஆராவமுதன் எழுதிய தென்னிந்திய சிற்பங்கள்
South Indian Portraits – தென்னிந்திய சிற்பங்கள் ) எனும் கட்டுரையில் இருந்து:

South Indian Portraits

மிகவும் சுவாரசியமான சிற்பம் ஒன்று அந்தக் கட்டுரையில் கிடைத்தது, அதுவும் அந்தக் காலக்கட்டத்தில் தஞ்சை பெரியக் கோவிலிலேயே இருந்த ஒன்று. பார்த்தவுடனேயே அறிந்துகொள்வீர்கள் இது முற்றிலும் புதிதான சிற்பம் என்று, அதோடு மட்டுமின்றி இதைப் பற்றி எந்த ஒருக் கட்டுரையிலோ அல்லது எந்த ஒரு அருங்காட்சியகத்திலோ பார்க்காத ஒன்று என்றும் அறிந்து கொள்வீர்கள். காலில் அணிந்திருக்கும் கழல்களை பார்க்கும் அளவுக்கு படம் தெளிவாக இல்லை ஆனால் இரண்டு கால்களிலும் கழல்கள் இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் இரசிகர்கள் யாரேனும் பார்த்திருந்தால் அல்லது பார்த்தால் நமக்கும் தெளிவு படுத்தலாம். (மேலும் ஒரு வெங்கலச் சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது, அதனை இதற்குப் பின் காண்போம்)

(மொழி பெயர்ப்பு)
தஞ்சைப் ப்ரகதீஷ்வரர் ஆலயத்தைக் கட்டிய மாமன்னன் முதலாம் இராஜராஜனின் கடைசிக் காலக் கட்டத்தில் (985-1013 கி.பி.) ஆலயத்தின் 37ஆவது நிர்வாகி இராஜராஜருக்கும் அவரது அரசியார் ஓலோகமாதேவியாருக்கும் பல்வேறு படையெடுப்புகளின் செல்வங்களை நிவந்தனமாக விடப்பட்ட ஆலயத்தினுள் சிலைகள் எடுப்பித்ததாக தெரிகிறது. இதைக் குறிக்கும் கல்வெட்டில் உள்ள செய்தியை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. கல்வெட்டில், இரண்டு திருமேனிகள் அதில் மன்னனின் சிலை ஒரு முழம் நான்கரை விரல்கள் முடி முதல் அடிவரை, அரசியின் சிலை இருபத்திரண்டு விரல்கள் இரண்டு தோரை உயரம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கையணிகள் மற்றும் காதணிகள் ஆகியவை சிற்பங்களின் ஆபரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி தூங்காவிளக்கு கடவுளைப் போன்றே மன்னனின் சிலைக்கும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆலயத்தில் இருக்கும் எந்த ஒரு சிலையும் அரசியின் சிலை போன்று இல்லை, அந்தச் சிலை எங்கோ மாயமாக மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. . மன்னவனின் சிற்பம் போன்றதொன்று ஆலயத்தில் இருக்கிறது ஆனால் அது கல்வெட்டோடு ஒப்பிடும் பொழுது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. இந்தச் சிலையைப் பற்றி அறிந்த தகவல்கள் இதோ. ப்ரகதீஷ்வரர் ஆலயத்தில் உள்ள சிற்பத்தில் உள்ள பெயர் “இராஜராஜேந்திர சோழா, பெரிய கோவிலின் ராஜா” என்று பீடத்தில் பிற்கால எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னவன் கூப்பியக் கரங்களுடன் வணங்கும் கோலத்தில் இருக்கிறார். கலை வேலைப்பாடை பார்த்தால் திருமலையில் உள்ள கிருஷ்ண தேவராயரின் சிலையை விட தாழ்ந்ததாகத்தான் தெரிகிறது. உற்சவத்தின் பொழுது சிலைகளை எடுத்துச் செல்லும் பொழுது இந்த சிலைக்கு மரியாதைக் கொடுத்து எடுத்துச் செல்வதாகவும், இந்தச் சிலை உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலம் செல்வதாகவும் தெரிகிறது. சிலையில் உள்ள பெயரைப் பார்த்தால் ஆலயத்தை நிர்மாணித்தவரும் அதன் நலத்தில் அக்கறைக் கொண்டவருமான முதலாம இராஜராஜரைக் குறிப்பதாகத்தான் இருக்கிறது. உற்சவத்தின் போது நடைபெறும் முறைகளைப் பார்த்தால் இந்தச் சிலை பிற்காலத்தில் மன்னவனின் நினைவாக உருவாக்கப் பட்டதாகத்தான் இருக்க வேண்டும். முதல் பார்வையிலேயே தெரிந்து விடும் இந்தச் சிலை இராஜராஜரால் ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட மற்ற சிலைகளைக் காட்டிலும் தரத்தில் குறைவு என்று, அதிலும் இதன் வார்ப்பு முறை தெள்ளத் தெளிவாக இதன் மங்கிய தரத்தைக் காட்டுகிறது. வார்த்தைகளின்றிப் பேசும் மற்ற சிற்பங்களைக் காணும்பொழுது இது ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டை போல் தோற்றமளிக்கிறது. மேலும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகள் நிச்சயமாய் இந்த இராஜராஜச் சிற்பத்துடன் பொருந்தவில்லை. பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகத் தெரிகின்றன, எதுவாகினும் இது இராஜராஜன் காலத்தியது அல்ல. எல்லாவற்றிலும் இருந்து, இராஜராஜரின் விருப்பத்திற்கிணங்க ஆலயத்தின் நிர்வாகி இரண்டு சிலைகளை விழாக் காலங்களில் உற்சவ மூர்த்திகளோடு ஊர்வலம் எடுத்துச் செல்ல நிர்மாணித்திருப்பார் என்பது ஊகம். ஒருவேலை, அந்தச் சிலைகள் காணாமல் போய்விட்ட பின் இந்தச் சிலைகளை உருவாக்கியிருக்கலாம், அந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பகுதியினரிடையே இந்தக் கலையின் வளர்ச்சி தேய்ந்திருக்கலாம். ஒருவேளை அந்த உண்மைச் சிற்பங்கள் இருந்திருந்தால் அதனுடைய தனித்தன்மையான கலை நமக்குத் தெரிந்திருக்கக் கூடும், அதன் காலத்தினால் மட்டுமல்ல அந்தக் காலக்கட்டத்தைச் சார்ந்த வெங்கலச் சிற்பங்கள் தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த கலை நுட்பத்தில் உருவாக்கப் பட்டன என்பதாலும்!


இந்த வெங்கலச் சிற்பங்கள் இப்பொழுது எங்கே?

இந்தச் சிற்பத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, சதீஷ்-ன் தஞ்சை அருங்காட்சியகத்தின் புகப்படத் தொகுப்பில் கிடைத்த வெங்கலச் சிற்பம் இது!

காலில் அணிந்திருக்கும் வீரக்கழலை வைத்து இது நிச்சயம் ஒரு மன்னராகத்தான் இருக்கக் கூடும் என்று அறிகின்றோம்.

உடலமைப்பில் நேர்த்தி இருந்தாலும் முக வடிவமைப்பு தேர்ச்சி பெறவில்லை. மணிமுடியின் வடிவமைப்பு இதனை பிற்காலச் சிற்பங்களோடு ஒப்பிடுகிறது. இந்தச் சிலைக்கான பெயர் பலகை அப்பொழுது வைக்கப்படவில்லை, இப்பொழுது இருக்கின்றதா என இதைப் படிக்கும் யாரேனும் பார்த்துக் கூறினால் நன்றுசரி, யார் இந்த ராஜரீக உருவம்?

இதுவரை இந்தப் பதிவை ஆழ்ந்து படித்தவரால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் பார்த்தமாத்திரத்தில், இதுவரை பார்த்த சிலைகளின் பொதுவானதொரு அமைப்பு கூப்பிய கைகள் என்று! ஆனால் ஒரு வேறுபாடு, முதல் சிற்பத்தில் இரண்டு கைகளுக்கிடையே ஒரு மலர் இருந்தது. இது எதைக் குறிக்கின்றது? திரு. P.R ஸ்ரீனிவாசன் அவர்கள் நூலிலிருந்து வெங்கலச் சிற்பங்களுக்கான சில விளக்கங்களைப் பார்ப்போம்.

இதே பாணியில் 12-ஆம் நூற்றாண்டை சார்ந்த சண்டிகேஸ்வர சிற்பங்கள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஈடன் கல்லூரியில் (புத்தகத்தில் உள்ளது) உள்ள கீழுள்ள சிற்பத்தைப் பார்ப்போம்

மேலும் ஒரு தலைசிறந்த படைப்பான பொல்லுனுவாரா (இலங்கை) சண்டிகேஸ்வர சிற்பமும் இதே 12-ஆம் நூற்றாண்டை சார்ந்ததுதான்.

உருவமைப்பு, கூப்பிய கைகள் மற்றும் அதற்கிடையே மலர்கள் ஆகியவை பொதுவாக இருந்தாலும், காலில் கழல்கள் காணப்படவில்லை.

மேலும் ஒரு சுவாரசியமான சிற்பம், தென் ஆற்காடு மாவட்டம் கடலூர் கந்தரக்கோட்டையைச் சார்ந்த மன்னரின் உருவம், அதே நூலில் இருந்து.

இதன் காலம் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. வளர்புரத்தின் ராமரை ஒத்த மணிமகுடம், கழுத்தணிகள் மற்றும் கையணிகள் இந்தக் காலக்கட்ட சிற்பங்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இடுப்புக் கச்சை நெருக்கமான மடிப்புகளுடன், தெளிவான ஓரங்களுடனும் வடிக்கப்பட்டுள்ளன. உத்தரீயம் முன்புறம் அழகான முடிச்சுடனும், தொங்கணிகளுடனும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு முன் பார்த்த சிற்பங்களில் இல்லாதவாறு அஞ்சலி செலுத்தும் கைகளுக்கிடையே உள்ள மணி மாலை மிகவும் கவனிக்கத்தக்கது. முழங்கைக்குப் பின் வளைந்த கைகளும், நல்ல மொத்தமான கழலும் இந்த சிற்பத்தின் பாணி தனித்தன்மை வாய்ந்தது என்பதைக் காட்டுகிறது. முதலாம் இராஜேந்திரர் காலத்தின் பெரும்பாலான சிற்பங்களில் இந்த கழல் பொதுவான ஒன்றாக இருந்தது. இந்த சிற்பத்தின் உருவமைப்பு, விஷ்ணுவின் உருவத்தை ஒத்ததாக இருக்கின்றது அதோடு அழாகான இயற்கையான கால்கள் போன்ற வடிவமைப்பு கலைத்திறனை எடுத்துக் காட்டுகிறது.

ஏற்கனவே பார்த்தது போல் இந்த பத்மாசனத்திலும் இதழ்கள் தெளிவாகத் தெரிகிறது ஆனால் அதன் நுனிகளில் முக்கியத்துவம் தெரியவில்லை. இரண்டு வளையங்கள் கொண்ட சதுரமான பத்ராசனத்தின் மீது இந்த தாமரைப் பீடம் அமைந்துள்ளது.

மேற்சொன்ன தகவல்களிலிருந்து இது ஒரு சிறந்த வெங்கலச் சிற்பம் என்று அறிந்து கொள்ளலாம். திரு. T.G. ஆராவமுதன் இது ஏதேனும் ஓர் சிற்றரசராக இருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் ஆய்வாளர்கள், இது கண்டெடுக்க்ப்பட்ட இடத்தில் உள்ள ஆலயத்தைக் கட்டிய சோழ மன்னன் மதுராந்தகனின் உருவமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இருந்தாலும் அவர்களால் இது எந்த மன்னனின் உருவம் ஒன்று நிச்சயமாக கூறமுடியவில்லை. மதுராந்தகன் என்ற பெயர் சோழர்களில் முதலாம் பராந்தகர், சுந்தர சோழன், முதலாம் இராஜேந்திரர், வீரராஜேந்திரனின் மகன் மதுராந்தகன் என பலருக்கு இருந்திருக்கிறது. இதன் கலைத்தன்மையை வைத்துப் பார்த்தால், முதல் இரண்டு மன்னர்களுடையதாய் நிச்சயம் இருக்காது. முதலாம் இராஜராஜரைப் போலவே அவரது வழிவந்தோரும் உற்சவ மூர்த்திகளுடன் செல்லவும், ஆலயத்தில் அதைக் கட்டிய மன்னன் உருவம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிலையை நிர்மாணித்திருக்கலாம். அதோடு இராஜராஜர் காலச் சிற்பத்தை விட இதில் கலை நுட்பத்தின் முன்னேற்றம் தெரிகிறது. ஆகவே இது முதலாம் இராஜேந்திரருக்காக அவரது வம்சத்தில் வந்தவர் யாரேனும் இதனை நிர்மாணித்திருக்கலாம். காலக் கணக்கின் படி, முதலாம் இராஜேந்திரரின் பாணியில் கலை வளர்ந்த காலம் 1075 (கி.பி.) வரை, தொண்டைமண்டலத்தை ஆண்டுவந்த வீரராஜேந்திரன் 1065 (கி.பி.) ஆண்டில் இதை ஆலயத்தைக் கட்டிய இராஜேந்திரரின் நினைவாக நிர்மாணித்திருக்கலாம். இதனது முடிவை தெரிந்து கொள்ளவேண்டும் எனில், இந்த சிற்பத்தையும், கிராமங்களிடம் திருப்புக் கொடுக்கப்பட்ட மற்ற சிற்பங்களையும் பற்றிய கள ஆய்வு மேற்கொண்டால்தான் முடியும்.

இந்த வெங்கலச் சிற்பத்தின் இருப்பிடமும் தெரியவில்லை!

நீளமான இந்தப் பதிவை உடைப்பதற்காண குரல் ஓங்கி ஒலிக்கிறது மனதினுள், நிறுத்துவதற்கு முன் மேலும் ஒரு அதிசுவாரசியமான சிற்பத்தை பார்த்துவிடுவோம். மேல் பார்த்த அதே நூலில் இருந்து மேலும் ஒரு சோழ மன்னன், மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம்

ஒரு அடி உயரம் கொண்ட இந்த வெங்கலச் சிலை மூன்றாம் குலோத்துங்கராக இருக்கலாம். முன்னர் இது காளகஸ்தி சிவாலயத்தில் இருந்தது, ஆனால் தற்சமயம் ஏதோ ஒரு தனியார் வசம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை! அதிர்ஷ்டவசமாக இதன் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டாய்வாளர் திரு. G. வெண்கோப ராவ் இது 13ஆம் நூற்றாண்டை சார்ந்த எழுத்துக்கள் என்று கண்டறிந்திருக்கிறார், இதனை திரு. T.G. ஆராவமுதனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டு பாகங்களாக பொறிக்கப்பட்டுள்ள தகவலில், முதல் பாகத்தில் “குலோத்துங்க சோழ தேவர்” எனவும் இரண்டாவது பாகத்தில் “உடைய நம்பி” நிவந்தனமாக கொடுத்ததாகவும் உள்ளது. இதில் உள்ள எழுத்துக்களால் காலத்தைக் கண்டறியும் வேலை சுலபமாகிறது, அதோடு இதன் பாணியும் கலை நுட்பமும் காலத்தை கண்டறிய மிகவும் ஏதுவாக இருக்கும்.
முனைவர். சாஸ்திரி இந்த சிலையப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ” ……இந்த உருவத்தில் பல ஆபரணங்கள் உள்ளன, அதோடு இதன் முகம் இளமையும், உற்சாகமும், புத்துணர்ச்சியையும் காட்டுவதாக உள்ளது. இது மிக முக்கியமானதொரு சிலை, சோழ வம்சத்தின் கலைக்கு ஆதாரமாய் விளங்கும் வெங்கலச் சிற்பம் ஒருவேளை இது மட்டுமாகத்தான் இருக்கும்”

ஆனால் காலத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார் “…..இந்த உருவம் மன்னன் அரியணையில் ஏறும் பொழுது உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.”…..இதன் காலம் அனேகமாக 1180 ஆக இருக்கக் கூடும்,” ஒரு வேளை இது முந்தைய காலத்தைச் சார்ந்ததாக இருக்கக் கூடும் என்று எண்ணியவாறு அவர் இதை கூறியிருக்கலாம்!

அழகான இந்தச் சிலையின் அம்சங்கள்: முன்னால் சுருள் சுருளாகக் காணப்படும் முடி, திருஞானசம்பந்தரின் ஒத்த வடிவம், மொத்தமான கழுத்தணிகள், மணிகள் பதித்த தோளணிகள், அழகான ஆனால் அதிக நுண்ணிய வேலைப்பாடில்லாத கையணிகள், அழகான இடுப்புக் கச்சை மற்றும் சிறிய கீழாடை, மூன்று வளையங்களைக் கொண்ட கழல்கள்.

இதனுடைய பீடங்கள் அழகானதாகவும், தாமரைப் பீடம் வழக்கமான பாணியிலும் உள்ளது. மொத்தத்தில் இந்தச் சிலையின் வடிவம் அழகாய் மனதில் வடிக்கப்பட்டு, துல்லியமாய் வார்க்கப்பட்டதாய் உள்ளது. இதன் முகத்தில் உள்ள வசீகரம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், மந்திரப் புன்னகை யாவும் இதன் சிறப்பு. இதன் காலக்கட்டம் 13ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாக இருக்கக் கூடும்.

ஆய்வாளர்கள் நாம் படித்து தெரிந்து கொள்ள ஏராளமானவற்றை கொடுத்திருக்கின்றனர், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன ஆனால் இவையெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் அல்ல. என்னைப் போலவே, இந்த நீண்ட பதிவு உங்களுக்கும் சுவாரசியமாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது எங்கு உள்ளன என்ற குறிப்புகள் இல்லாத இந்த சிற்பங்களில் சிலவற்றையாவது நம்மால் மீண்டும் என்றாவது காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை தற்காலிகமாக முடித்துக் கொள்வோம்!


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கிரேக்க சோழ கலை கலவை.

சோழ செப்புத்திருமேனிகளில் ஒரு வசீகரத் தன்மை இருக்கிறது. அதை புகைப்படங்களில் கொண்டு வருவது மிகவும் கடினம். உதாரணத்திற்க்கு சென்னை அருங்காட்சியகம் இருப்பில் இருக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டு சோழ முருகர் வடிவத்தை பாருங்கள்.

ஓவியர் பிரசாத் அரிய மனிதர்.செப்புத்திருமேனியின் அழகை ஓவியத்தில் கொண்டு வரும் தெய்வீக திறம் படைத்தவர்.

பொதுவாக த்ரிபங்க அமைப்பை பற்றி பல கட்டுரை படித்துள்ளேன். ஆனால் இந்த மூன்று வளைவுகள் என்பது மட்டும் தான இந்த அழகின் காரணமா ? இல்லை அவற்றை தாண்டியும் ஏதாவது உள்ளதா ? எப்படிஅந்த கலைஞன் இந்த தந்திரத்தைத் தெரிந்துக்கொண்டான்?

இன்று புகழ் பெற்ற கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி நாம் பார்க்கப் போகிறோம். அவர்கள் எப்படியெல்லாம் சிற்பங்களின் அழகைக் கூட்ட பல யுக்திகளைக் கையாண்டனர், தவிர அவர்கள் உபயோகித்த முறைகளுக்கும் சோழ சிற்பியின் கலைக்கும் ஏதாவது பொதுத் தன்மை உள்ளதா என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம். இந்த பதிவு உருவாக இந்த காணொளி கோப்பு மிகவும் உதவியாக இருந்தது.

கிரேக்க சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி

பலமுறை இந்த கேள்வி எங்கள் மனதில் உதிக்கும். நண்பர் அர்விந்த் அவர்களுடன் அர்தனாரி வடிவத்தை பற்றி விவாதிக்கும் போதும் வந்தது. என்ன கேள்வி – சிற்பி ஏன் ஒரு காலை சற்றே மடித்தவாறு அமைத்தான் என்பதே அந்த கேள்வி. அப்போது எங்கள் கருத்து ஆண் பெண் என்ற இருவரின் உருவங்களின் அமைப்பை சரி கட்டவே அந்த அம்சம் என்பதில் முடிவாகும் .

அர்த்தனாரி வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது

ஆனால் இன்று இந்த கிரேக்க சிற்பம் பற்றிய காணொளியை கண்ட பின்னர் வேறு ஒரு விதமாக யோசிக்க வைத்தது. இந்த சோழ முருகர் வடிவம் அர்த்தநாரி போல அல்லவே, அப்போதும் எதற்கு அந்த காலின் மடித்து வடிக்கும் கலையையும், சிறபக்கலைஞனும் ஏன் வளர்த்துக்கொண்டே போகிறான் என யோசித்ததில் ஒஉர் உண்மை புலப்பட்டது. அதாவது கலைஞன் எனப்படுபவன் தனது படைப்புகளில் இருந்தும், தான் பார்ப்பதிலும் மட்டும் அல்லாமால், தனக்கு முன்னும் இருந்த வல்லுனர்களின் படைப்புகளில் இருந்து அவன் கற்றுக்கொள்கிறான். அவனல்லவோ கலைஞன்.. கிரேக்க சிற்பம் பாரெங்கும் புகழ் பெற்றது. கூகிள் மற்றும் விக்கி உதவியுடன் கிரேக்க சிற்பம் எப்படி பாரிணாம வளர்ச்சி கண்டது என்பதையும், அதை படிப்பது நாம் நமது சோழ செப்புத் திருமேனிகளை இன்னும் புரிந்துக்கொண்டு ரசிக்க எப்படி உதவுகின்றது என்பதை பார்ப்போம்.

கௌரோஸ்


கௌரோஸ் – சுமார் -800 BCE – 480 BCE, கிரேக்க அழகான ஆண் இளையர் சிற்பங்களை குறிக்கும்
இந்தக் காலத்திய சிற்பங்களில் நாம் பார்க்க வேண்டியவை

* உடல் முழுவதும் ஒரே நேரான கோணத்தில் இருக்கும், தலை நேராக, பார்வையும் நேரே பார்க்கும் வண்ணம் இருக்கும், இடுப்பு சின்னதாக, கைத்தசைகள் சதுரமாகவும் அதிகம் மேலே தூக்கி இராது. உடம்பும் அதே போல எந்த விதமான வளைவும் இல்லாமல் – விறைப்பாக இருக்கும்.

* சில சிலைகளில், ஒரு கால் முன்னால் வைக்கும் படி இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு இடுப்பின் வளைவை காண முடியாது.
* கைகளும் அதே போல நேரே தொங்கியபடியோ, அல்லது ஒரு கை மடக்கப்பட்டோ இருந்தாலும்,சிற்பம் பொதுவாக உயி்ரற்று இருக்கும்.

க்ரிடிஒஸ் பையன்


இதை அடுத்து பளிங்கு சிலை – க்ரிடிஒஸ் பையன் சிற்பத்தை பார்ப்போம்.

இங்கே சிற்பி மனித உடலின் செயல் பாட்டை முழுவதுமாக படித்து, அதை கல்லில் வடித்துள்ளான். உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கி ( இடது கால் ), வலது கால் சற்றே முட்டியில் மடிந்து உள்ளது. இதற்கு கிரேக்க மொழியில் ‘கண்டற்றபோஸ்டோ’ என்று பெயர். இந்த முறையில் ஒரு மனிதன் நிற்கும் பொது , உடலின் மற்ற பாகங்களில் சிறு மாற்றங்கள் தோன்றும். இடை சற்றே இடது புறம் செல்லும், முதுகு தண்டு ஆங்கில எழுத்து “s” போல வளையும்.

கண்டற்றபோஸ்டோ’

இந்த மாற்றங்களின் விளைவால் இதுவரை வெறுமனே உயிரற்று நிற்கும் மனிதன் சிலை போல இருந்த வடிவம் உயிரோட்டம் பெற்றுவிடுகிறது.

டோரிபோரோஸ்

டோரிபோரோஸ் – ஈட்டி ஏந்தியவன் சிற்பம் கிரேக்க சிற்பங்களில் மிகவும் புகழ் பெற்றது. செப்பு சிலையாக இருந்திருக்க வேண்டிய இந்த வடிவத்தின் காலம் சுமார் 450-40 BC.

கிரேக்க சிற்பியான திரு போல்ய்க்ளிடோஸ் என்பவர், மனித உடலின் அங்க குறிப்புகளையும் அதன் ஆற்றலையும் முழுவதுமாக படித்து, இந்த சிற்பத்தை வடித்துள்ளார். இந்த வடிவத்தில் பலம் மிக்க ஆண்மகன் ஒரு கையில் வேல் ஒன்றினை எறியும் வண்ணம் – அந்த தருணத்தின் உயி்ரோட்டதை அப்படியே கல்லில் சிறை பிடித்துள்ளார்.

“S” தோற்றம்

அதே போல அந்த “S” தோற்றமும் கிரேக்க சிற்பத்தின் நளினத்தை மிகவும் கூட்டியது . இதில் நாம் முன்னர் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உடல் இன்னும் தனது நடுதிசையில் இருந்து விலகி, வளைந்து நிற்கும் வண்ணம் இருக்கும். இதனால் இது ‘கண்டற்றபோஸ்டோ’ பாணியை விட உயர்ந்த காலத்தால் முற்பட்ட பாணி என்று கருதப்படுகிறது.

வீனஸ் டி மிலோ அல்லது அப்ரோடைடி மிலோஸ் சிற்பம் இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு

சரி, இவை அனைத்தையும் பார்த்துப் படித்து புரிந்த பிறகு நம் சிலையை மீண்டும் பார்ப்போம். கிரேக்க சிற்பிகள் உபயோகித்த யுக்திகளை நமது சிற்பிகளும் உபயோகித்தார்களா? தேடலின் போது பல நல்ல தளங்களும் கிரேக்க சிற்பத்தின் படங்களும் அதனை ஒட்டிய விளக்க படங்களும் கிடைத்தன. அதே போல சோழ சிற்பத்தையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

http://figdrawing.blogspot.com/2008/10/standing-pose-rhythm-and-contrapposto.html
http://employees.oneonta.edu/farberas/arth/ARTH209/Doyphoros.html


என்ன அதிசயம். அப்படியே ஒன்றை ஒன்று ஒட்டி இருக்கின்றனவே.



சோழர் சிலையின் பின் அழகு இன்னும் அற்புதம். நாம் கிரேக்க சிற்பங்க்ளில் பார்த்த ‘கண்டற்றபோஸ்டோ’ எப்படி `s’ வடிவத்தோடு சேர்ந்து சிலையில் வந்துள்ளது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.



இந்த பதிவுக்கு உங்கள் கருத்தை இடுங்கள். கேட்க மிகவும் ஆவலாக உள்ளது. கிரேக்க சோழ கலைகள் ஒன்றுடன் ஒன்று கலந்த கலவையாக உணரப்படும்போது உருவாகும் ஆச்சரியத்தை என்னவென்பது…

படங்கள் உதவி : விக்கி மற்றும் இணையம். சோழர் சிலை மற்றும் ஓவியம் – ஓவியர் பிரசாத்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சோமஸ்கந்தர் வடிவம் – செப்புத் திருமேனி, பல்லவர் காலம்

நாம் இதுவரையில் கல்லில் சோமஸ்கந்தர் வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை பற்றி பார்த்தோம். இதுவரையில் நாம் பார்த்த அனைத்து சிற்பங்களும் பல்லவ சிற்பங்களே. இன்று நாம் ஒரு செப்புத் திருமேனியை பார்க்கப்போகிறோம். பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. இன்றைக்கு அவற்றில் ஒன்றான சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை பார்ப்போம்.

இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.

அப்படி என்ன வித்தியாசம் இந்த அமர்ந்திருக்கும் கோலத்தில்?. படங்களை பாருங்கள்.


சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் ஈசன், சற்று பின்னால் சாய்ந்து அமர்த்தப்பட்டவாறு இருப்பது தெரிகிறதா. இது அவரது கம்பீர தோற்றத்தை இன்னும் அதிகரிக்கிறது.

அம்மை அப்பனின் உருவத்திலும் , முக ஜாடையிலும் கூட வித்தியாசங்கள் உண்டு. ஈசனின் முகம் வட்டமாக உள்ளது – அதில் கண் , மூக்கு மற்றும் வாயை கைகளால் சிற்பி அமைத்தது போல உள்ளது. தலையில் ஜடா மகுடம் , மற்றும் கழுத்தில் இரு சிறிய சங்கிளிகளிகள் மற்றும் ஹாரம் என ஜொலிக்கும் அவரது யக்நோபவீதம் தங்க கம்பிகளால் ஆனது போல உள்ளது. அதில் அவரது இடது மார்பின் மேல் ஒரு முடிச்சு மிகவும் அழகாக உள்ளது.



முகம் வட்டமாக , தலையில் முக்கோண வடிவில் கரண்ட மகுடம் ஜொலிக்க, லக்ஷணமான முகத்தொட்ட்ரத்துடன் அமர்ந்திருக்கும் உமை அழகு.

மகேசனின் பல கைகள் இணைக்கப் படுகிற பாணியும் ஒரு வழிகாட்டி. மேல் கைகள் பிரிவதும் – பிரியும் கோணமும் நாம் பார்க்க வேண்டும்.

கைகளில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை பிடித்திருக்கும் முறையும், கை முத்திரைகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிவன்

அணிகலன்களில் மிகவும் அழகான நாக கேயுர வகை இருப்பது அழகு.

உமை

கால் மற்றும் கைகள் மிகவும் நேர்த்தியாக நளினம் ததும்பும் வண்ணம் உள்ளன. இவையும் காலத்தை எடுத்துக்காட்டும் .


அங்க அணிகலன்கள், ஈசனின் இடுப்புப் பட்டையில் நாம் பிற்காலத்திய சிற்பங்களில் வரும் சிங்க முகம் இல்லாததை நினைவில் வைக்க வேண்டும் . இடுப்பை வடித்துள்ள வண்ணம் மிக அருமை.


ஈசனின் சிரத்தின் பின் நாம் கல் சிற்பங்களில் பெரிதாக பார்த்த சிரஸ்சக்கரம் இங்கே சற்று அளவில் சிறியதாகி உள்ளது. ஆறு சடைகளாக பிரியும் பின்னல் அருமை.

ஈசனின் மார்பை பாருங்கள். ஒட்டி வைத்தார் போல உள்ளதே.

இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து – நாம் அடுத்து பார்க்கும் சோழர் கால சுமார் 10th C மற்றும் 12 C செப்புத் திருமேனி்களுடன் வரும் பதிவுகளில் ஒப்பு நோக்கி எவ்வாறு இந்த படிமம் காலத்தால் அவற்றிற்கு முந்தையது என்பதை பார்ப்போம்.

Ref: Bronzes of South India – Sri. K. R. Srinivasan


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

உன் கரம் பிடிக்கிறேன்

உலோகத்தில் உணர்வுகளை தத்ரூபமாக கொண்டு வருவது கடினம் , அதை எடுத்துச் செய்ய திறமை வேண்டும். அந்த சவாலை ஏற்க சோழநாட்டுக் கலைஞனை விட யாரால் முடியும். அதுவும் ஒரு திருமணம் – சாதாரண திருமணம் அல்ல – அம்மை அப்பனின் திருமணம். ஆமாம், நாம் ஏற்கனவே பார்த்த தாடகை கதையின் அடுத்த காட்சி தான். சுந்தரேஸ்வரரை கண்டதும் அதுவரை இருந்த மூன்றாம் முலை மறைந்து , போர்வீராங்கனையாக இருந்த மதுரை அரசி மீனாட்சியாக மாறி , மணக்கோலம் தரித்து நிற்கும் காட்சி.

இப்படி ஒரு திருமண காட்சியை கற்பனை செய்யுங்கள். மீனாட்சியின் தமையனாக பெருமாளும் உடன் லக்ஷ்மியும் , தாரை வாற்று தரும் காட்சி.

இவற்றை மனதில் கொண்டு இந்த சிலையை பாருங்கள் – தஞ்சை ராஜ ராஜன் அருங்காட்சியகம்.

மணமகனாக சுந்தரேஸ்வரர் – மாப்பிள்ளை மெருகு , முகத்தில் ஒரு புன்சிரிப்பு, கம்பீரத் தோற்றம். தன் அன்புக்குரியவளை கரம் பிடிக்கும் பெருமிதம்.

மீனாட்சியோ – நளினமே உருவாக நிற்க, தலை சற்றே நாணத்தில் சாய, தன் கரத்தை மணாளன் பிடிக்கும் சுகத்தில் சிவக்கும் கன்னத்தை நோக்கி விரையும் கை.

கரம் பிடித்தல் (பாணிக்கிரஹணம்) என்பதன் அனைத்து பொருள்களையும் உணர்ச்சிகளால் உணர்த்தும் சிலை.

ஒவ்வொரு அசைவிலும் பல அர்த்தங்களையும் , உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்த சிலை அந்த சோழ சிற்பியின் அனுபவத்தையும் ரசனையையும் காட்டுகிறது. .


சரியான முறையில் அருங்காட்சியகத்தில் வைத்தால் இன்னும் அனுபவித்து பார்க்கலாம். படம் எடுக்கலாம். அது வரை இப்படி தான் பார்க்க வேண்டும்

ஆனால், நண்பர் பிரசாத் இருக்கும் வரை நமக்கு குறை ஏது. இதோ அவர் வரைந்த ஓவியம் உள்ளதே. (பிரசாத் இது சும்மா எப்போவோ வரைந்தது என்கிறார் !!!)

சிலைகளை வரைவது மிகவும் கடினம். அதுவும் இது மாதிரி சிலைகளை வரைவது இன்னமும் கடினம். ஏனெனில் , இவை வெறும் ஒரு உருவமோ வடிவமோ அல்ல – தெய்வத்தன்மை ததும்பும் ஒரு மாபெரும் கலை பாரம்பரியத்தின் வெளிப்பாடு. வெகு சிலருக்கு இப்படி அந்த தெய்வாம்சம் குறையாமல் வரையும் இந்த பாக்கியம் கிடைக்கும்.

கலையின் உன்னத சிகரங்களை தந்த இந்த மண்ணில் பிறந்ததற்கு மீண்டும் நான் பெருமைப் படுகிறேன்.

படங்கள் : நண்பர் சதீஷ் மற்றும் இணையத்தில் இருந்து


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

சிவானந்த நடனம் – சென்னை அருங்காட்சியகத்தில் திருவாலங்காட்டு நடேச வடிவத்தை கண்ட பிரெஞ்ச் சிற்பி அகுஸ்டே ரோடின் அவர்களது வர்ணனை

ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அந்த அற்புத வடிவத்தை பற்றி பலரும் போற்றி எழுதியுள்ளனர். பொதுவாக அவர்கள் அந்த ஆட்டத்தின் ஆன்மீக கருத்தையும், அந்த ஆட்டம் உணர்த்தும் உட்கருத்துக்கலையை முதன்மை படுத்தி காட்டும் வண்ணமே உள்ளன. எனக்கு மிகுந்த காலமாய் ஒரு ஆசை. இந்த வடிவத்தை ஒரு கலைஞன், ஒரு படைப்பாளி எப்படி வர்ணிப்பான் என்பதை பார்க்கவேண்டும் என்று. தற்செயலாக சென்னை அருங்காட்சியாக நூல் ஒன்றில் ஒரு சிறு குறிப்பு என் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. புகழ் பெற்ற திருவாலங்காட்டு நடராஜர் சிலை அழகை கண்டு புகழ் பெற்ற பிரெஞ்சு நாட்டு சிற்பி அகுஸ்டே ரோடின் ஒரு சிறு வர்ணனை வெளியிட்டார் என்றே இருந்தது அந்த குறிப்பு. உடனே பல இடங்களில் தேடி அதை கண்டு பிடித்தேன் – ரசித்தேன்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில், அதுவும் அப்போதுதான் நமது அற்புதக் கலை திறமைகளை பற்றி வெளி உலகம் உணர ஆரம்பித்த வேளையில், ஒரு புகழ் பெற்ற பிரெஞ்சு சிற்பி, ஒரு சிலையை பார்த்து லயித்து , புகழாரம் சூட்டுவது மிக அரிது. எங்கோ படித்துள்ளேன் – ஒரு வைரத்தின் பரீட்சை இன்னும் ஒரு வைரத்துடன் தேய்க்கும்போது வைரத்தின் அருமை புலப்படும் என்று – வெறும் கண்ணாடி என்றால் கீறல் விழும், வைரம் என்றால் அப்படியே இருக்கும். இன்றோ இரண்டுமே ஒன்றை ஒன்று மதிப்பை கூட்டி விடுவதை பார்க்கிறேன். ஒரு மகா சிற்பி, அதைவிட அவன் தூய உள்ளம், கலையுடன் தன் வாழ்வையே பிணைத்து சுவாசிக்கும் ஒருவராலேயே – இப்படி ஒரு ரசனையோடு படைக்க முடியும். பொதுவாக கலைஞர்கள் சற்று தலைக்கனம் பிடித்தவர்கள், அவர்களுக்கு தங்கள், தனது சகாக்கள், தனது நாட்டு படைப்பே பெரிது என்ற மனப்பான்மை விமர்சனங்களில் எப்படியாவது வந்து விடும். எனினும் இந்த வர்ணனையின் சிறப்பே அவர் கிரேக்க சிற்பம் வீனஸ் தி மெடிசி யுடன் ஒப்பிடும் நல்ல உள்ளம், மனதை பெருமிதம் கொள்ள செய்கிறது. மேலே படியுங்கள்.

திரு அகுஸ்டே ரோடின் அவர்கள் வர்ணனையில் இரண்டு நடேசர் வடிவங்களை பார்த்ததாக குறிப்பு உள்ளது. அதில் ஒன்று கீழே நீங்கள் பார்க்கும் திருவாலங்காட்டு சிற்பம். மற்றொன்று வேளாங்கண்ணி சிற்பம். அதையும் விரைவில் இங்கு இடுகிறேன். இந்த சிற்பம் சென்னை அருங்காட்சியகத்தில், கண்ணாடி பெட்டியினுள் இருப்பதாலும், அங்கே பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணமே விளக்கு போடப்பட்டிருப்பதாலும், எங்களுக்கு முக்காலி கொண்டு படம் எடுக்க உத்தரவு கிடைக்கவில்லை என்பதாலும் – படங்கள் சற்று தரம் குறைவாகவும், வெவ்வேறு கோணங்கள் – ஒலி கொண்டு எடுக்க முயற்சி செய்துள்ளோம் ( படங்கள் – நான் மற்றும் நண்பர் அர்விந்த். )

இது 1913 எழுதி , முதல் முறை 1921 ஆம் ஆண்டு எழுத்து வடிவில் வெளிவந்தது. சிறு வர்ணனை என்றாலும் ரோடின் அவர்களது அதீத ரசனையையும் ஆழ்மனதில் தோன்றும் உணர்ச்சிகளை எழுத்து வடிவில் நாம் உணரும் வண்ணம் உள்ளது.

சிவனின் தாண்டவம் – அகுஸ்டே ரோடின்

முழு நடேச வடிவத்தை பார்க்கையில்

முழு மலரென மலரும் உயிர், வாழ்வின் நில்லா ஓட்டம் , எங்கும் இருக்கும் காற்று, சூரியன், மலையில் திரண்டு ஓடும் காட்டாற்றின் வெள்ளத்தில் சுழன்று ஓடும் உணர்வு – இப்படி தெரிகிறது நமக்கு கீழை நாடுகளின் கலை!

மனிதன் அந்தக் காலத்தில் இறைமை அடைந்தான் என்றால், அப்போது நாம் படைப்பிற்கு மிகவும் அருகாமையில் இருந்தோம் என்பதல்ல காரணம் – நமது தோற்றங்கள் பொதுவாக மிகவும் மாற்றம் கண்டதில்லை – நம்மால் அப்போது எல்லா பிணைப்புகளையும் வெட்டி எரிய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, அப்படி ஒரு சுதந்திர நிலையில் சுழன்று சொர்க்கத்தை அடைந்தோம். இன்று நாம் இதைத்தான் தொலைத்துவிட்டு தேடுகிறோம்…

ஆனந்த நடனம் புரியும் சிவன் ஒரு கோணத்தில் பார்த்தால் அழகான மூன்றாம் பிறை போன்றவன்.

இன்றோ காலத்தால் வெல்ல முடியாத அழகு இந்த வெங்கலச்சிலை. என்ன ஒரு பெருமிதம் ததும்பும் கோலம். கம்பீரமான உடல் வாகு. உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒளியின் அசைவு. உற்றுப் பார்க்கும் ஒருவரால் உணரமுடியும், ஒளியின் ஓட்டம் மாறினால் நர்த்தனம் புரியும் அந்த அசையாத தசைகளின் இயக்கத்தை!


அசையாத சிலை அதே இடத்தில் நிலையாக இருந்தாலும், நெருங்கும் நிழலால் இருட்டில் மூழ்கடிக்கப் பட்டாலும் அதனுடைய வசீகரம் நிழலால் பெருகத்தான் செய்கிறது! பனிப் படலம் போல் நிழல் படர்ந்த அந்த உருவமும் அதனுடைய துல்லியமான வடிவமைப்பும் இதை ஒரு தெய்வமே வந்து உருவாக்கியதோ என்று வியக்க வைக்கிறது! எந்த ஒரு சிறுகுறையும் இன்றி அனைத்து பாகங்களும் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறே கனக் கச்சிதமாய் உள்ளது. நிலையான சிலைதான் இருந்தாலும் கைகள் அசைவது போன்றே தோற்றம் தரும். கூர்ந்து கவனித்தால், அந்த தோள்பட்டையில் உள்ள எடுப்பான எலும்பும், மார்பு எலும்புகளும், மார்பு கூட்டின் இணைப்புகளும், அவை தோள் பட்டையோடு வந்து சேரும் அமைப்பும், கால்கள் நளினமாக எழுந்து ஆடுவது போன்றே காட்சி கொடுக்கின்றன…






நடேசனை ஒரு புறத்திலிருந்து பார்த்தால்

சிவனின் இந்த வடிவம் வியக்க வைக்கும் உருவம், இரண்டு கைகளும் மார்பையும் வயிற்றையும் பிரிப்பது போல் வடிவமைத்த விதம் புகழ் பெற்ற கிரேக்க சிற்பமான வீனஸ் டா மெடிஸி வடிவத்தோடு போட்டியிட்டு மிஞ்சிவிடுவது போல்லலவா இருக்கிறது! அந்தக் காதல் தெய்வம் எப்படி தன் அழகை கைகளால் மறைக்கிறதோ அதோ போலல்லவா இந்த நடராஜரின் உருவமும் தன் கையை இயக்குகிறது!


நடராஜரின் உடலை இரண்டு பாகங்களாக பிரிக்கும் நிழல், அழகிய தொடைகளை இரண்டு பாகங்களாக நீள வாக்கில் பிரிக்கின்றது, அதில் ஒரு பாகம் இருளில் மூழ்கியும், மறுபாகம் கறுப்பு வெள்ளையிலேயே பல விதமான நிழல்படுகைகளைக் காட்டியும் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றது. இருளில் இடுப்பில் உள்ள எலும்புகள் மறைந்திருக்கின்றன. மொத்தத்தில் அதிலுள்ள ஆழம், மெல்லிய தோற்றம் அதே சமயத்தில் தோன்றும் வலிமை, இவைதான் மிகமும் முக்கியம். இவற்றின் அருமை புரியாமல் பார்த்தால் இந்த அற்புத வடிவத்தின் இயக்கமே புரியாமல் போகும் என்றே தெரிகிறது

நீண்ட கால்கள், அழகிய தசைகள் நடனத்தின் வேகத்தைக் காட்டுகிறது. அழகை பொறாமை கொண்டு மறைக்க முயலும் நிழல் அந்த அழகிய தொடைகளை, நடனத்தின் இயக்கத்தைக் காட்டும் அந்த தொடைகளை மறைப்பதிற்கு மாறாக அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. நிழலோடு படர்ந்த மெல்லிய ஒளி நர்த்தனம் புரியும் அந்தக் கால்களை ஜொலிக்க வைக்கிறது.

நிழலோடு பார்த்த சிவனை நேரில் பார்த்தால்!

இந்த வடிவம் கலைஞர்கள் வெகுவாக உபயோகப் படுத்தும் வடிவம் தான், எனினும் இது சாதாரண வடிவம் அல்ல. ஒவ்வொரு வளைவும் இயற்கையை பிரதிபலித்தாலும் அதிலும் ஒரு தொலைவு – ஒரு அமானுஷ்ய தன்மை தெரிகிறது. இந்த வடிவத்தின் உணர முடியாத ஆழம், அதில் மூழ்கியிருக்கும் வாழ்வின் சுயற்சி – பலரால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது. இந்த சிற்பத்தின் நளினத்தில் ஒரு கண்ணியம் தெரிகிறது. நளினத்தையும் தாண்டி ஒரு கச்சிதம் உள்ளது. இன்னும் பார்த்தால் அந்தக் கச்சிதத்தை தாண்டி எங்கோ செல்கிறது.

இந்த வடிவத்தில் ஒரு மேன்மை தெரிகிறது. நளினம் கலந்த மேன்மை. எனினும் நம் உள்ளுணர்வை ஆட்டுவிக்கும் வலிமை பொருந்திய மேன்மை – அதை வர்ணிக்க வார்த்தைகள் அகராதிகளில் இல்லை

தோளில் இருந்து இடுப்பு வரையும், தொடைக்கும் இடைக்கும் நடுவே செங்குத்தாக மாலை போல் தொடரும் நிழல் பார்க்க கண் கொள்ளா காட்சி.

வேறு கோணத்தில் பார்த்தால்

வேறு கோணத்தில் பார்த்தால், ஒளியும் நிழலும் மாறி மாறி இரண்டு கால்களின் மேலும் விழுந்து பிரதிபலிக்கும் வேறுபாடுகளை சிலையினுள், அதை இயக்கம் இயல்பு, – அதனால் அதற்கு வரும் வசீகர தன்மையைக் கூட்டுகிறது ! அப்படி இல்லாமல் வெறுமனே நேர் நேராக ஒளியும் நிழலும் விழுந்திருந்தால் இது ஒரு சாதாரண படைப்பாக இருந்திருக்கும்.

சிவனை உருவங்களை பொதுவாய் கோர ஸ்வரூபமாக பார்ப்போருக்கு

இவற்றை பற்றி தெரியாத பாமரன், எல்லாவற்றையும் எளிது படுத்தி, கொச்சையாக பார்த்து, இப்படி ஒரு மகத்தான கலையை விட்டு ஒதுங்கி இதைவிட மட்டமான பொருள்களில் தனது ரசனையை செலுத்துகிறான். அந்த அழகைப் பருக வேண்டுமானால் அதீத ரசனை வேண்டும், ஆழ்ந்து நுகர்ந்தால் ….

ஆழ்ந்த தியானத்தின் பின சிவனின் அழகிய முகத்தை பார்த்தால்

புடைத்திருக்கும் உதடுகள், அது வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான பொருள், கண்களுக்கும், செவ்வாயிற்கும் உள்ள பொருத்தம், இதழ்களை ஒட்டி வசீகரத்தோடு ஆச்சரியமூட்டும் நாசி – தாமரை பூத்த தடாகத்தின் மீது சாய்ந்து பரவும் மலர்க்கொத்துக்கள் நிறைந்த தாழ்ந்த மரக்கிளை போல இருக்க , கொஞ்சும் ஈர உதடுகள் – பாம்பின் வளைவுகளை போல ஜொலிக்க – புடைத்து பாதி மூடிய இமைகள், இமைகளின் மேல்முடி வரிகளுக்குள் மறைந்திருக்கும் அழகு, மிகவும் நேர்த்தியாக முகத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கபட்ட மூக்கு, அவ்வளவும் கனக் கச்சிதம். வளைந்து நெளியும் உதடுகள், ஏதோ வார்த்தைகளை உச்சரிப்பது போலவே உள்ளது . ஒரே வரி என்றாலும், வில்லை போல வளைந்த அழகான சாந்தமும் அமைதியும் ததும்பும் கண்கள், அவற்றுள் பார்ப்போரை நெகிழ வைக்கும் இரு நட்சத்திரங்கள். அதிகாலை சூரிய கிரணங்கள் போல மயக்கும் அமைதி வீசும் கண்கள், அவை தரும் சுகமான அமைதிப் பெருக்கெடுப்பு.





தாடையில் குவியும் முகத்தின் வளைவுகள், வளைந்து மேல்நோக்கிய கன்னம் ஒரு பாகத்தில் முடியும் அழகுத் தோற்றம் மற்றொரு பாகத்தில் தொடர்கிறது. இதழ்களின் அசைவு கன்ன கதுப்புகளில் முடிகிறது, காதுகளில் இருந்து கிளம்பும் வளைவுகள் இதழ்களோடும், நாசிகளோடும் முடிவடைகிறது, தாடையிலிருந்தும் மூக்கிற்கு கீழேயும் உள்ள வரிகள் கன்னக்கதுப்பில் மறைகிறது.


இன்னும் அந்த அழகிய தலையை விட்டு விலக மனம் வராமல்

நேர் சீராக தங்கள் மங்கலமான இடங்களில் அமரும் இரு கண்களும், ஒளி வீசும் பராக்கிரமம், வசீகரம்! கால வெள்ளத்தை தங்கள் இன்பத்தில் தேக்கி வைக்கின்றன. ஆஹா , அந்த கண்கள் – ஆபரணமென போற்றக் கூடிய சுத்த பொக்கிஷம். அவற்றை உள்ளடக்கும் பெட்டகம் – கண் இமைகள். வில் போன்று வளைந்த புருவம், அதற்க்கு போட்டியிடும் வளைந்து நெளியும், வசீகர இதழ்கள்.

ஒரே சமயத்தில் தன்னுள் இன்பம் பொங்கும் நினைவுகளையும், எரிமலையின் ஆவேசத்தையும் உணர்த்தும் வாய்.

உடற்கூறுகளை இயக்கத்தோடு இணைத்துக் காட்டும் ஆன்மா அந்த வெங்கலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடைபட்டுள்ளது. சாகா தன்மை அந்த இதழ்களில், எந்த நொடியும் பார்க்கத் துடிக்கும் அந்த கண்கள், எங்கே பேசிவிடுமோ ?

வாழ்வின் நாடி வாய் வழியே வந்து செல்வது போல, கூட்டிலிருந்து வெளிவரும் தேனீக்கள் போல், நாசியிலிருந்து வெளி வருகிறது – நறுமணத்தோடு கூடிய மெல்லிய சுவாசம். ..

இந்த தொலைந்து போன அழகிய வடிவம் தனக்குள்ளேயே ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ஓரிடத்தில் அதனுடைய பொருள் பொதிந்த காட்சி உறைகிறது அது அந்த மிகவும் கவர்ந்திழுக்கும் கன்னக் கதுப்புகள் கழுத்தோடு வளைந்து இணையும் காட்சி!!

மொழிபெயர்ப்பு உதவி : கீதா அம்மா மற்றும் சதீஷ்.
வீனஸ் படம் – இணையத்தில் இருந்து.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே

இந்த டிசம்பர் மாதம் நாங்கள் பல அற்புத இடங்களுக்கு பயணம் செய்தோம் – பல புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டோம். அதைவிட மேலாக கற்றது கைமண் அளவு என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துக்கொண்டோம். நல்லவை நிறைய இருக்க ஒரு நெருடலும் கண்களில் பட்டது. அதனால் அதை பற்றி எழுதுகிறேன்.

இதை ஒரு சிறு பிழை என்று பார்க்கலாம். எனினும் அது இருக்கும் இடம் சிறப்பான இடமாக இருப்பதால் அதை ஒரு நெருடல் எனவும் பெரும் தவறு என்றும் என் கண்ணில் படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வருமே, தமிழுக்குச் சங்கம் அமைத்து, ஈசனையே நக்கீரர் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டு, பிறகு ஈசனால் மன்னிக்கப்பெற்ற இடமான பொற்றாமரை குளம் அருகேதான். பல்லாயிரக்கணக்கான தினமும் வந்து செல்லும் இடம். அவர்கள் கண்களில் அருங்காட்சியகம் என்று ஒன்றை அமைத்து அதில் இந்த தவறை தினமும் காட்டும் அவலம்.

முதலில், நாங்கள் மதுரைக்கு வரும் போதே மதியம் ஆகிவிட்டது ( நான், நண்பர் அர்விந்த் , என் அருமை மனைவி பிரியா, ஆசை மகன் பிரித்வி ) – அவசர அவசரமாக கோயில் திறக்கும் போதே சென்று படம் எடுக்க துவங்கினோம். அருமையான கோபுரங்களில் மதி மயங்கி நின்றோம். உதவியர் (கைட்) ஒருவர் வந்து உள்ளே சுற்றிக்காட்டுகிறேன் என்றார். எங்களுக்கு சிற்பங்களை தான் பார்க்க வேண்டும், அங்கே கொண்டு செல்லுங்கள் என்று தொடர்ந்தோம். மூன்று மணிநேரம் பறந்ததே தெரியவில்லை. அடுத்த நாள் காலை மீண்டும் வந்து விட்டு விட்ட கோபுரங்களை படம் எடுக்கலாம் என்று கிளம்பும் தருவாயில் – முது வலி, கை வலி இவைகளை தொந்தரவு கொடுத்தும்…அத்தனை படங்களையும் எடுத்துவிட்டோம். ( அதுவும் கூட கூட்ட நெரிசலில் – எப்படி தான் இவர்கள் சரியாக நாம் படம் எடுக்கும் தருவாயில் குபீர் என்று முன்னால் வந்து குதிப்பார்களோ.. தெரியாது)

ஏழு மணி அளவில், மூட்டை கட்ட துவங்கினோம் ( இட்லி கடை கூப்பிட்டது) – அப்போது தூண் சிற்பங்களை பார்க்கவில்லையே என்றேன். உதவியர் – சார், அது ஒண்ணும் பெருசா இல்லை. விடுங்கள் என்றார். ஆனால் மண்டபத்தின் வெளியில் கட்டண சீட்டு கூடம், வெளியில் காவலர் ஒருவர் கண்டு மனம் உள்ளே செல் என்றது. தூண் சிற்பங்கள் பரவாயில்லை நன்றாகவே இருந்தன. ஆனால், மண்டபத்தின் ஒரு கோடியில், ஒளிவிளக்கு போடாமல் இருட்டாக சற்று தூசியாக இருந்த பகுதிகளில், சிறு சிறு மேடைகள், அவற்றிற்கு மேலே புகை படிந்த கண்ணாடி கூடுகள் இருந்தன. சென்று பார்த்தால் அதிர்ச்சி. ஐம்பதுக்கும் மேலான வெண்கல சிலைகளின் பவனி. அப்போது காவலர் வந்து இன்னும் இருபது நிமிடத்தில் மூடப் போகிறேன் என்றார்.

விலை மதிப்பில்லாத சிலைகள், இப்படி சரியான விளக்கு கூட இல்லாமல் – கண்ணாடி உள்ளே வெளியே தூசு. சரியான படங்களே எடுக்க முடியவில்லை.

எனினும் முதல் அணிவகுப்பிலேயே அந்த சொதப்பல்.

நீங்களே பாருங்கள்.

முதல் படிமம் ந்ருத்தன சம்பந்தன் என்று அடையாளம் கொண்டதை கூர்ந்து பாருங்கள். ( # 70 – Nruthana Sambandan)

சம்பந்தர் சிலையின் தனித்தன்மை , மற்றும் அதை கண்ணனின் சிலைகளுடன் எவ்வாறு பிரித்து பார்ப்பது என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.

சற்று அருகில் சென்று பார்ப்போம்.

தெளிவாக ஸ்ரீவத்சம் தெரிகிறது. எனினும் இதை சம்பந்தன் என்று பட்டியல் இட்டுள்ளனர். அதுவும் சங்கம் வளர்த்து தமிழ் போற்றிய மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில்.. கடைசியில் தருமி போல கூவவேண்டும் போல இருந்தது.. சொக்கா..

ஆலயம் செல்லும் பலருக்கும், அங்கே இருக்கும் உதவியருக்குமே இந்த பொக்கிஷங்கள் இருக்கும் அருங்காட்சியகம், அதுவும் பொற்றாமரைக் குளம் அருகேயே இருப்பது தெரியவில்லை. வாசிக்கும் எவரேனும் ஆலய அதிகாரிகளிடம் சென்று இந்த தவறை சரி செய்ய உதவி செய்யுங்கள்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் வளர்ச்சி – முதல் பாகம்

நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் – பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்


சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்


முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா?

ஆணுக்குப் பெண் வளைந்து கொடுக்க வேண்டுமா அல்லது பெண்ணுக்கு ஆண் வளைய வேண்டுமா ?

பதறாதீர்கள், சிற்பத்தை பற்றித் தான் பேசுகிறோம்.

முந்தைய பதிவில் அர்தனாரி வடிவம் எப்படி படிப் படியாக சிற்பியின் கையில் மெருகு பெற்றது என்பதை பார்த்தோம். அதில் கற்சிற்பங்களில் எப்படி பெண்ணின் நளினத்தை வளைவுகளிலும் அதை ஈடு கட்ட அப்பனை விடையின் மீது சாய்த்து வடிக்க நேர்ந்தது என்பதையும் பார்த்தோம். முடிவில் வெண்கல சிலைகளில் இந்த வடிவத்தை பிறகு பார்ப்போம் என்று நிறுத்தினோம். அங்கிருந்து இன்று தொடர்வோம்.

கல்கி நந்தினியை பற்றி பொன்னியின் செல்வனில் சொல்வார்..” தன் காலால் இட்ட பணியை ஆண்கள் தலையால் செய்து முடிக்க வைப்பாள்” என்று. இவை அந்த உத்தரவை கூட செய்ய வேண்டாம் – பார்த்தாலே அவற்றின் மதிவதன அழகில் சொக்கி கொத்தடிமைகளாய் ஆக்கும் நம்மை, பார்க்கப் பார்க்க சிந்தையை மயக்கி நமக்குப் பித்து பிடிக்க வைக்கும். ஆம், வெறும் வெண்கல சிலைகளை அல்ல, சோழர் சிலைகளையே பார்ப்போம். அதுவும் வெறும் சோழர் சிலையல்ல , ஒரு அற்புதச் சிலை. (தற்போது இருக்கும் இடம் கிளீவ்லாந்து அருங்காட்சியகம் ,அவர்களது படங்களுக்கு நன்றி )

அருகில் சென்றுதான் பார்ப்போமே. சிலையை அல்ல, அதை ஒத்தி எடுத்த ஓவியத்தை.

சிலர் பார்த்தவுடனேயே, அது என்ன அப்பனுக்கு இரண்டு கை, அம்மைக்கு ஒரே கை, இது ஆண் ஆதிக்கம் என்பர். ஐயா, இது அப்படி அல்ல. ஆணும் பெண்ணும் சரி சமானம் என்பதை நமக்கு உணர்த்தவே இந்த அற்புதக் கோலம். பின்னர் எதற்கு ஈசனுக்கு இரண்டு கைகள். பொறுமை. ஓவியத்தை மீண்டும் பார்ப்போம். ( இன்னும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து )

கற்சிலைகளில் பார்த்தது போலவே, இங்கும் உமையின் இடையை கடல் அலையென வளைத்து, உடலை திரிபங்கத்தில் வார்த்துள்ளான் சிற்பி. மீண்டும் ஒருமுறை கல்லையும் உலோகத்தையும் பார்ப்போம்.

உமையின் கை, அப்பப்பா – அழகே வடிவமாக மலர்ந்த தாமரையின் மெல்லிய காம்பை பிடித்திருப்பது போல அபிநயம் பிடிக்கும் விரல்களின் நளினம். அந்தப்பக்கம் அப்பன் மழுவை பிடித்திருக்கும் காட்சி அருமை. எதற்கு இன்னும் ஒரு கை.

சரி, விவாதத்திற்கு கையையும் விடையையும் அகற்றி விடுவோம்.

சிலை ஒரு பக்கம் வளைந்து கொண்டு – எப்படிச் சொல்வது. பயணிகள் நிறைந்த பேருந்தில் நாம் எட்டி நடத்துனரிடம் பயணச் சீட்டு வாங்குவது போலல்லவா உள்ளது!

இதை சரி செய்யவே விடையையும் அதன் தலைமேல் சாய்ந்த இரண்டாவது கையையும் கொண்டு வருகிறான் சிற்பி.

அது சரி , கேள்விக்கு விடை என்ன? கணவன் இழுத்த இழுப்புக்கு மனைவி வரவேண்டுமா? அல்லது மனைவி போடும் பாரத்தை கணவன் சுமக்க வேண்டுமா ? நமக்கு ஏன் இந்த வம்பு. சிற்பத்தை விளக்குவதோடு நிறுத்திக்கொள்வோம்.

அர்விந்த் ஒரு நல்ல கேள்வியை கேட்டார். சிவனின் கால் ஏன் மடங்கும்படி உள்ளது என்று.

பொதுவாக ஆணை வடிக்கும் பொது கட்டு மஸ்தான அளவில், நல்ல உயரமாக காட்டும் பழக்கம் உண்டே , அதனால் ஒருவேளை ஆண் பெண் இணைக்கும் பொது ஆணின் கால் பெண்ணின் காலை விட பெரியதாக காட்டுவதற்காகவா ? அல்லது இடையை வளைத்தனால் காலை மடிக்க வேண்டயுள்ளதா ?

நீங்கள் என்ன நினைகிறீர்கள்? இதை வெறும் ஆண் , பெண் வெண்கலச் சிலைகளை வைத்து மீண்டும் ஒரு பதிவில் ஆராய்வோம்.

அட, இதை ஒரு அற்புத வடிவம் என்றேனே – அது என்ன? முழுப் படத்தையும் பார்க்கவும்

ஆண்பாதி பெண்பாதி விடையோடு சூலத்தினுள் எப்படித்தான் வெங்கலத்தில் இப்படி மதிமயக்கும் அழகில் வார்த்தானோ!!!

முதல் ஆண்டு நிறைவு பதிவு பால கண்ணனா அல்லது ஞானக் குழந்தையா..

நண்பர்களே, இன்று நமது ‘கல்லிலே கலைவண்ணத்துக்கு’ முதல் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால் நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று நூற்றைம்பது பதிவுகளாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் மலர்ந்துள்ளது.

தமிழகக் கோயில் கலையோடு மட்டும் நின்றுவிடாமல், அதுவும் கல்லோவியங்களோடு மட்டும் நிற்காமல், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா என்றும் சிற்பம், ஓவியம், குடவரை என்று எங்கும் உலாவி, பல சுவையான கலைபெட்டகங்களை நம் கண்முன்னே நிறுத்தி, அதன் மூலம் இன்னும் பல புதுப்புது உறவுகளை உருவாக்கி தளத்தின் தரத்தையும், இடுகைகளின் அழகையும் மெருகு சேர்த்துள்ளோம். எங்கள் உயரிய நோக்கம் ஒன்றே, எங்கள் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நண்பரும் நம் கலையை ரசிக்க, அதன் பால் காதல் கொள்ளச் செய்ய வேண்டும், இதற்கு இந்த துறையின் வல்லுனர்கள் பலரிடம் கலந்துரையாடி, பல நூல்களை சேகரித்து, அதில் இருக்கும் கருத்துக்களை பாமரனும் புரிந்துகொள்ளும் பாணியில் படைக்க வேண்டும் என்பதே.

உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் இன்று மீண்டும் ஒரு சிறப்பு பதிவு.

இந்தப் பதிவு உருவான கதையும் மிகவும் சுவாரசியமானது, முந்தைய பதிவில் உள்ள சிலை பற்றி நண்பர் வைரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, செப்பு படிமங்களில் வெகு நாட்களாக இருந்த சந்தேகம் வெளிவந்தது. இரண்டு சிலைகள் – பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், பலருக்கும் ஐயம் தரும் வடிவங்கள். பால கண்ணன் மற்றும் திருஞானசம்பந்தர் சம்பந்தப்பட்ட சோழர்கால சிலைகளே இவைகள். கைதேர்ந்த வல்லுனர்களும் பல அருங்காட்சியகங்களுமே குழம்பி, திகைத்து, எதற்கு வம்பு என்று இரு பெயர்களையும் பெயர்ப்பலகையில் இட்டு தப்பிக்க பார்க்கும் புதிர் இந்த வடிவங்கள். இதோ தஞ்சை அருங்காட்சியகத்தில் அடுத்து அடுத்து இருக்கும் சிலைகள் ( நன்றி சதீஷ் )

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீங்களே பாருங்கள். முதல் பார்வையில் இரு வடிவங்களுக்கும் குமுதம் புதிர் போல ஆறு வித்தியாசங்கள் போட்டி வைக்கலாம் போல உள்ளது.

ஆனால் இங்கே தான் கலை வல்லுனர்களின் திறன் வெளி வருகிறது. அதுவும் வெண்கல/செப்புச் சிலைகளை பற்றிய வல்லுநர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் – முனைவர் திரு நாகசாமி அவர்கள். எங்கள் பாக்கியம், அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நண்பர் சுந்தர் பரத்வாஜ் மூலம் கிடைத்ததால், அவரிடமே ஐயத்தைக் கேட்டோம். அவரும், உடனே பதில் அளித்தார் – சான்றோர் எப்போதும் சான்றோரே!! அவர் அளித்த தெளிவுரையே இந்த பதிவு.

சரி, மீண்டும் இரு உருவங்களை பார்ப்போம். வலது கையின் சித்தரிப்பில் உள்ள வித்தியாசத்தை கூர்ந்து பாருங்கள்!.

பால கண்ணன் சிலைக்கு வருவோம். விடை கண்ணன் வலது மார்பில் உள்ளது. ஆம்! முக்கோண வடிவில் ஸ்ரீவத்சம் தெரிகிறதா? கேள்விக்கு இடமே இல்லை, இது கண்ணனே!. வலது கரம் அபய ஹஸ்தம், தன்னிடம் அடைக்கலம் நாடும் பக்தரை ரக்ஷிக்கும் பாணி.

இப்போது அடுத்த சிலை. ( நன்றி நண்பர்கள் சதீஷ் சிங்கை மற்றும் ஸ்டூவர்ட் லீ சென்னை அருங்காட்சியக – அற்புத புகைப்படங்களுக்கு )




இந்த வடிவம், சோழர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை. சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் – சைவ நெறியில் மூழ்கி இருந்த சோழர்களின் குலக்கொடி பேரரசன் ராஜ ராஜன் கண்டெடுத்த ( திருமுறை கண்ட சோழன் ) திருமுறைகளில், பின்னாளில் அவை தொகுக்கப்பட்டபோது, முதல்வராக போற்றப்பட்டு, முதல் மறை, முதல் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சிலை!. அவர் பாடிய முதல் பதிகத்தின் காட்சியையே இந்த சிலை குறிக்கிறது.

இவரது தந்தையார் சிவபாதஹிருதயர், தாயார் இசைஞானியார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.
தோடுடைய செவியன்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

இந்த காட்சியை படமாக காண

தோடுடைய செவியன்

காட்சி புரிந்ததா, இப்போது இதனை சிற்பி வடிக்கிறான். அதுவே இந்த சிலை யாரை குறிக்கிறது என்பதற்கு விடையும் கூட.

” குழந்தையின் தந்தை, யார் பாலூட்டியது என்று கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டியவர்”

இப்போது சிலையின் வலது கையை மீண்டும் நன்றாக பாருங்கள். ஆள் காட்டி விரல்

ஒரு நிமிடம் , சரியான படத்தை இடுகிறேன், சோழ சிற்பி தனது படைப்பில் கொண்டு வரும் உயிரோட்டத்தை விளக்கும் சிலை இது – இல்லை இல்லை, விரல் இது!. ஆள் காட்டி விரல், சற்றே மேல் நோக்கி நகருங்கின்றது, எனினும் இன்னும் முழுமையாக வானத்தை காட்ட வில்லை.

குழந்தை தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கும்போது ஆனந்தத்தில் ஆடிப் பாடி, விரலை மேல் நோக்கி நகர்த்தும் தருவாயில் சிற்பி தன் அகக்கண்ணில் அக்காட்சியை படம் பிடித்து உலோகத்தில் வார்த்து விட்டான். முகத்தில் ஒரு பரவசம், இடது கையில் தான் என்ன அப்படி ஒரு நளினம்!. நேரில் பார்க்குபோது சிலை உயிர் பெற்று அப்படியே பதிகத்தை பாடி அதற்கேற்ப அபிநயம் பிடிப்பது போல உள்ளது.

பல அருங்காட்சியகங்களில் இந்த வடிவம் உள்ளது – தில்லி, சென்னை, ப்ரீஏர்..


இனி நாம் இந்த சிலைகளை அடையாளம் கொள்ளவது சிரமம் இல்லை.

ஆக்க்லாந்து அருங்காட்சியகம்

ஸ்ரீவத்சம் நன்கு தெரிகிறது – எனவே கண்டிப்பாக கண்ணன்

இங்கே இருப்பது சம்பந்தர், தளத்தில் குறிப்பிட்டது போல கண்ணன் அல்ல.

ஹிந்து விஸ்டொம் தளம்

இந்த ஓவியத்தில் இருப்பது மேலே பார்த்த குறிகளை வைத்து சம்பந்தராக இருக்கலாம். (ஸ்ரீவத்சம் இல்லை!!)

சிற்பக் கலை பற்றி நல்ல பதிவு எனினும்

இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வாழ்த்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுபவர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொரு பெயரையும் எழுத ஆரம்பித்தால் இந்த வலைத்தளம் போதாது என்னவோ.. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. வழக்கம் போலவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எந்நாளும் நாடுகிறோம்.

மீண்டும், உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி, இன்னும் பல நண்பர்களை எங்களுடன் இணைத்து வையுங்கள், கோயில், அருங்காட்சியகம் எங்கு சென்றாலும் எங்களை நினைவு கொண்டு படங்களை எங்களுடன் பகிருங்கள் என்ற வேண்டுகோளை மீண்டும் இட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இருமுலையும் முறைமுறையா ஏஙகிஏங்கி இருந்துணாயே

அருங்காட்சியகம், அதிலும் இந்திய பிரிவு என்றவுடன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், உடனே கண்ணில் படுவது சோழர் கால வெண்கல / செப்பு சிலைகள். எப்படி தான் இவை நம்நாட்டை விட்டு சென்றனவோ ! எனினும் ஒவ்வொரு பெரிய காட்சியகத்திலும் ஒரு நடராஜர், ஒரு விஷ்ணு, சோமஸ்கந்தர், சம்பந்தர் என்று பல சிலைகளை நாம் பார்க்கலாம். அது சொக்க வைக்கும் சோழர் சிலைக்கு இந்த பணம் படைத்த உலகம் கொடுக்கும் சன்மானம்.

சரி, இன்று கண்ணன் அவதரித்த நாள், ஒரு சிறப்பு சிலையோடு வருகிறேன். ஒரு அரிய சிலை – கிளீவ்லாந்து அருங்காட்சியகம் .

அறிவிப்பு பலகையின் படி, இந்த சிற்பம் பிற்கால சோழர் காலத்து சிலை ( (12 C) – எதனால் அப்படி. சிலையில் அணிகலன்கள் குறைவாக இருப்பதால் இவ்வாறு சொல்லுகிறார்கள். எனினும் முற்கால சோழ சிலைகளில் அணிகலன்கள் சற்று குறைவாக இருந்தாலும் நுண்ணிய வேலைபடுடன் கூடிய அணிகலன் இருக்கும். பொதுவாக அதே காலத்து சைவ நாயன்மார்கள் சிலைகளே அப்படி நிறைய நகைகள் இல்லாமல் இருக்கும். அவர்களின் சித்தரிப்பு அப்படி. அப்படி இந்த சிலையில் அரியது என்ன. யசோதை கண்ணனுக்கு தனது பாலை ஊட்டும் காட்சி – வளர்ப்பு அன்னை, தனது தத்துப் பிள்ளைக்கு தன மார்பை அளிக்கும் தாய்மை போற்றும் சிற்பம், அதுவும் ராணியின் மகன் ஒரு மாடு மேய்ப்பவளிடம் – ஓ, அதனால் தானோ நிறைய ஆபரணங்கள் இல்லை ?

அற்புத அரிய சிற்பம் தான், ஆனால் இந்த காட்சியை பெரியாழ்வார் பாட்டாய் படிக்கிறார் பாருங்கள்.

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே

இதற்கு மேலும் இந்த சிலைக்கு ஒரு வர்ணனை தேவையோ ?

இருந்தும் சிலையை பார்க்கும் பொது சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக சோழர் கால வெண்கல, செப்பு சிலைகள் ஒரு மேடையுடன், அதில் கொம்புகளை பொருத்தி தோலின் மீது இட்டு ஊர்வலமாக கொண்டுவர நேர்த்தியாக வசதிகளுடன் வரும். இந்த சிலையை பார்த்தல் அப்படி தெரியவில்லை. யாராவது மன்னன் தனது சொந்த அரண்மனைக்கோ மண்டபத்திற்கோ பிரத்தியேகமாக செய்த சிலையோ ? ஆனால் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்து சோழர்கள் வீர சைவர்கள் என்றே இந்நாளில் சொல்கிறார்களே?

படங்களுக்கு நன்றி

http://www.metmuseum.org/toah/ho/07/sss/ho_1982.220.8.htm
http://www.harekrsna.com/gallery/parents1-gallery.htm

சென்னையில் எங்கள் பொன்னியின் செல்வன் விழவிற்கு வாருங்கள் ( ஆகஸ்ட் 15th)
http://festival2009.ponniyinselvan.in/


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment