குகன் படலம் – தோலுடை நிமிர் கோலின் துழவிட

இந்த பதிவு சரியாக உருவாக ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டது. முதல் முதலில் சென்னையில் டிசம்பர் மாதத்தில் திரு சிவராமகிருஷ்ணன் அவர்களின் நிகழ்ச்சியில் இந்த புடைப்புச் சிற்பத்தை பார்த்தேன். குடந்தை நாகேஸ்வரன் கோயில் சிற்பம். அருமையாக விளக்கினார். பின்னர் மார்ச் மாதம் நானும் அரவிந்தும் படம் பிடிக்க குடந்தை சென்றபோது பலத்த மழை. எனினும் சிற்பத்துக்கு் தன்னை பற்றி கண்டிப்பாக பதிவு வர வேண்டும் எனும் ஆசை போலும். ஒரே மாதத்தில் ( சென்ற மாதம் ) முதலில் இரண்டு நண்பர்களிடம் இருந்து – திரு K.S. சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் திரு ஹரி கிருஷ்ணன் அவர்களிடம் இருந்தும் இதே சிற்பம் கிடைத்தது. பிறகு நண்பர் அர்விந்த் மற்றும் அசோக் இதற்கென்றே குடந்தை சென்று படம் எடுத்து தந்தனர். இவற்றை கொண்டு நாம் ஒரு மேலே செல்வோம்.

முன்னரே, புள்ளமங்கையில் இந்த சிற்பத்தை பார்த்தோம். எனினும் பாதி தான் எஞ்சி உள்ளது – சிமெண்ட் கொண்டு ஒரு சுவர் கட்டி சிதைத்து விட்டனர். ( தகவலுக்கு நன்றி சதீஷ் மற்றும் அர்விந்த்)

அருகில் சென்று சிற்பத்தை பார்க்கும் முன், முதலில் ராமாயண கதையை ஒருமுறைக்கு இரு முறை – வால்மீகி மற்றும் கம்பனின் வர்ணனைகளை பார்த்து விடுவோம். சிறு படலம் என்றாலும் மிக அழகிய தருணம். முதலில் குகன் என்றவுடனே நம் கண்ணில் வருவது எளிமையான படகோட்டி உருவம் தான். அவன் சாதாரண படகோட்டியா . மேலே படியுங்கள். வால்மீகி ராமாயணத்தில்

http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm

sa tu raamasya vachanam nishamya pratigR^ihya cha |
sthapatistuurNamaahuya sachivaanidamabraviit || 2-52-5

ராமன் படகு கொண்டு வா என்றதும், குகன் தனது மந்திரிகளை கூப்பிட்டு இவ்வாறு கூறினான்


asya vaahanasamyuktaam karNagraahavatiim shubhaam |
suprataaraam dR^iDhaam tiirkhe shiigram naavamupaahara || 2-52-6

ஒரு அழகிய படகு, நல்லக் கட்டுமானத்துடன் விரைந்து செல்லும் படகு, நல்ல படகோட்டியுடன், இந்த கரைக்கு கொண்டுவாருங்கள் , இந்த நாயகனை அந்தப் பக்கம் எடுத்துச் செல்ல வேண்டும்

tam nishamya samaadesham guhaamaatyagaNo mahaan |
upohya ruchiraam naavam guhaaya pratyavedayat || 2-52-7

குகனின் கட்டளையைக் கேட்டவுடன், அவனது முதல் மந்திரி ஒரு அருமையான படகை கரைக்கு கொண்டு வந்தான்

tataH tam samanuj~naaya guham ikSvaaku nandanaH |
jagaama tuurNam avyagraH sabhaaryaH saha lakSmaNaH || 2-52-73

இவ்வாறு குகனுக்கு நல்ல அறிவுரை கூறிவிட்டு, அவனிடம் பிரியா விடை பெற்று, ராமன் தனது மனைவியுடனும், தம்பியுடனும் புறப்பட்டார்.

anuj~naaya sumantram ca sabalam caiva tam guham |
aasthaaya naavam raamaH tu codayaam aasa naavikaan || 2-52-80

குகனுக்கும் சுமந்திரனுக்கும் விடை கொடுத்துவிட்டு, ராமன் படகில் அமர்ந்து , படகோட்டியை புறப்படுமாறு உத்தரவிட்டான்

வால்மீகியில் அப்படி இருக்க, நாம் கம்பனின் வரிகளை பார்ப்போம்.

http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/ramayanam/gugappadalam.html

குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34

பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!

இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல்

குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல்

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;

இப்போது நாம் இரு படைப்புகளிலும் உள்ள வித்தியாசத்தை பார்க்கிறோம். கம்பனின் வர்ணனையில் குகன் ராமனோடு கங்கையை கடக்கிறான். பின்னரே ராமன் அவன் அன்பை கண்டு தன் தம்பியாக ஏற்கிறான்.

இரு வரிகளை நாம் மீண்டும் படிக்க வேண்டும் : தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா!

நிமிர் கோலின். அடுத்து நண்டு போல படகு சென்றது என்கிறார். அப்போது நண்டு என்பதை போல, பல பேர் துடுப்பு போடுவது போல காட்சி தெரிகிறது. இதை நமது சிற்பி , காட்சிக்கு மிகவும் தேவையானவை மற்றும் வைத்துக் கொண்டான் போல. எப்படி ? அப்போது நிமிர் கோலின் உதவி கொண்டு படகில் இருப்பது குகன்.

முழு பலத்தையும் கொண்டு ஊன்று கோலை பின்னால் தள்ளி, படகினை முன்னால் நகர்த்தும் காட்சி – இன்றைக்கும் இந்த பாணி இருப்பது அருமை.

அடுத்து படகில் இருக்கும் மற்றவர் – ராமர், சீதை, லக்ஷ்மணன்
( புள்ளமங்கையில் சிமெண்ட் போட்டு இளவலை மறைத்து விட்டனர் )

இரு சிற்பங்களில் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. குகன், ராமர் திரும்பி நிற்பது மட்டும் அல்ல. படகை செலுத்துபவன் தவிர மற்றவர் நின்ற கோலத்தில் முழு அளவை பாருங்கள்.

புள்ளமங்கையில் – படகு மேல் சரியாக நிற்பது போல உள்ளது.


ஆனால் நாகேஸ்வரன் கோயில் சிற்பத்தில் நீளம் அடி படுகிறது.


எது சரியான காட்சி அமைப்பு. படகு நீரில் செல்லும்போது, சற்று உள்ளே ஆழ்ந்து அமுங்கி செல்லும் அல்லவா. இந்த படத்தில் ( பழைய படம் ) அந்தமான் தீவில் ஒரு மீன்பிடி படகு

இதில் படகின் நடுவில் இருப்பவர் உயரம், எப்படி படகின் உள் வாங்குதல் தெரிகின்றது, படகை செலுத்துபவன் எப்படி விளிம்பின் மீது ஏறி நிற்கின்றான் என்பதை பாருங்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு என்ன கிடைக்கிறது என்றால், இது பத்தாம் நூற்றாண்டு சிற்பம் என்பதால் இந்தச் சிற்பம் கூட ஒருவகையில் கம்பனின் காலத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு உதவமுடியும் என்பதே…


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கம்பனுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ராமாயணம்

கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு முன்னரே தமிழகத்தில் ராமாயணம் பரவலாக இருந்ததா ? கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். வால்மீகியின் ராமாயணம் கண்டிப்பாக இருக்கும், ஆனால் தமிழில் முழுவதும் இருந்திருக்குமோ? அப்படி இருந்தால் அதற்கு சிற்பத்தில் வர்ணனை உண்டோ ? இந்தக் கேள்விகளை தான் நாம் இந்த பதிவில் அலசப் போகிறோம்.

கவிச்சக்ரவர்தியின் காலத்தை பற்றி மொழி ஆர்வலர்களும், சரித்திரி ஆர்வலர்களும் பல காலமாக விவாதித்து வருகின்றனர். கம்பர், இந்தப் புனிதப் பணியை பாரம்பரியத்துக்கு எதிராக, தனது வரிகளில் எந்த ஒரு அரசனை பற்றியும் பாடாமல், தனது நண்பர் புரவலர் சடையப்ப வள்ளலை மட்டும் ஆயிரம் செய்யுளுக்கு ஒருமுறை பாடியது இன்னொரு காரணம். இவற்றைக் கொண்டு அவரது காலத்தை நிர்ணயம் செய்வது கடினமாகி விட்டது. தற்போது அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சாட்சியம் எதுவும் இல்லாமல் விரிந்து கிடக்கிறது. பொதுவாக பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்ற கருதப்படுகிறது.

கம்பரின் ராமாவதாரம், வால்மீகி்யின் வடமொழி காவியத்தின் கருவை கொண்டாலும், அவர் அதனை அதன் மொழி பெயர்ப்பாக அதை இயற்ற வில்லை. தனது தமிழ் புலமையை முழுவதுமாக பயன் படுத்தி, காவியத்தின் பல்வேறு இடங்களில் சிறு மாற்றங்களை செய்து, அப்போதைய காலத்திற்கு ஏற்ப நயத்தை மாற்றி அவர் தனது படைப்பை தனி தமிழ்க் காவியமாகவே மாற்றி விட்டார். ஆனால் நாம் இன்று பார்க்கும் அப்படிப் பட்ட ஒரு மாற்றம் அவருடையதா , அல்லது வாட்டர வழக்காக வந்த ஒன்றை அவர் மேலும் அழகு பட பாடினாரா ?

இதனை பற்றி நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு – . நன்றி திரு திவாகர், திரு ஹரி்கி்ரிஷ்ணன், ஷங்கர் ( பொன்னியின் செல்வன் குழுமம் ), திரு அண்ணா கண்ணன் மற்றும் கீதா அம்மா – பல்வேறு விதங்களில் இந்த பதிவுக்கு உதவியதற்கு. நன்றி திரு அர்விந்த் ( படங்கள். )

இந்த சிற்பம், புள்ளமங்கை பிரம்ம புரீ்ஸ்வரர் ஆலயத்தில் இருப்பது, இதன் கட்டுமான முறையை கொண்டும், அதில் இருக்கும் முதலாம் பாரந்தக சோழரின் கல்வெட்டுகளை கொண்டும் இதன் காலம் 907 to 953 CE என்று நிர்ணயிக்கப் படுகிறது .

சிற்பத்தை அருகில் சென்று பார்ப்பதற்கு முன்னர், இரு காவியங்களில் இந்த நிகழ்வை கையாண்ட முறையை படிப்போம். அஹல்யையின் சாபமும் சாப-விமோ்சனும்

அஹல்யை -விக்கி

அஹல்யை பிரம்மனால் உலகிலேயே மிகவும் அழகு பொருந்திய மங்கையாக படைக்கப்பட்டாள். அப்போதே அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். எனினும் கௌதம முனிவரை அஹல்யையை மணந்ததால். மாற்றான் மனைவி என்றாலும் இந்திரனின் சபலம் குறையவில்லை. அவளை அடைய திட்டம் தீட்டி , கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அவளிடம் சென்றான். வந்திருப்பவன் தன மணாளன் அல்ல என்று தெரிந்தும் அஹல்யை தனது அழகின் மீது இருந்த ஆனவத்தாலோ , தேவர்களின் அரசனே வந்திருக்கிறான் என்பதாலோ தவறு செய்கிறாள்…

சரி, இதனை வால்மீகி எவ்வாறு கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

tathaa shaptvaa ca vai shakram bhaaryaam api ca shaptavaan |
iha varSa sahasraaNi bahuuni nivaSisyasi || 1-48-29
vaayu bhakSaa niraahaaraa tapyantii bhasma shaayinii |
adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi ||

இப்படி பட்ட தவறை செய்ததனால் நீ ஆயிரம் ஆண்டுகள் உண்ண உணவின்றி, காற்றை மட்டுமே சுவாசித்துக்கொண்டு, யாராலும் பார்க்க முடியா வண்ணம், இந்த ஆசிரமத்தை சுற்றியே காற்றில் கரைந்து புழுதி போல இருப்பாயாக !!

yadaa tu etat vanam ghoram raamo dasharatha aatmajaH |
aagamiSyati durdharSaH tadaa puutaa bhaviSyas

தசரதனின் புதல்வனான ராமன், இந்த வனத்திற்குவரும்போது, உனது பாவம் போய் சாப விமோசனமும் பெறுவாயாக


tasya aatithyena dur.hvR^itte lobha moha vivarjitaa |
mat sakaashe mudaa yuktaa svam vapuH dhaarayiSyasi

ராமனை போற்றி வழி படும்போது உனது பாவம், பித்து, பேராசை அனைத்தும் விலகி, உனது சுய உருவை நீ மீண்டும் பெற்று, என்னுடன் வந்து மீண்டும் மகிழ்ச்சியான வாழ்கையை பெறுவாய், என்று சபித்தார் கௌதம முனிவர். .

இதில் நாம் கவனிக்க வேண்டியது எங்குமே கல்லாய் கிடவது என்று அவர் கூறவில்லை.

இப்போது கம்பர் இதை கையாண்ட முறையாய் பார்ப்போம்.

பரிபாடல்


‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்

தன் உடம்பு முழுவதும் சாபத்தால் கெட்டு விட்டதனால், இந்திரன் அளவில்லாத,நாணத்தை அடைந்து, தனது நிலையைப் பார்த்தவர்கள். கேட்டவர்கள், எல்லோர்க்கும்,
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி, தனக்கு நேர்ந்த பழியோடும் வானுலகத்திற்குச் சென்ற பின்பு, அம் முனிவன் தன் மனைவியைப் பார்த்து, விலைமகள் ( வேசியைப்) போன்ற நீயும் கல் வடிவம் போல ஆகுக என்று சபித்தான்.


‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
கல் உருத் தவிர்தி’’ என்றான்.

அவ்வாறு விழுகின்ற அகலிகை அம் முனிவனை நோக்கி, தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்தும், புன் சிரிப்பிலிருந்தும் நெருப்பைச் சிதறறும் கடவுள் அன்னாய், உருத்திர மூர்த்தியை ஒத்த முனிவனே! சிறியோர் செய்த பிழையைப் பொறுப்பது, எக்காலத்தும் பெரியோர்களின் கடமையே ஆகும் என்று கூறுவர். இச் சாபத்திற்கு ஒரு முடிவை அருள்வீராக என்று வேண்டி நிற்க, அதற்கு
இரங்கிய அம் முனிவன், ஒலிக்கும் குளிர்ந்த பூமாலையை அணிந்த தசரதராமன் என்பான் திருவடித் தூள் உன்மேல் படியும் போது, இந்தக் கருங்கல் வடிவம் நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

இந்த இடத்தில தான் நாம் இரு காவியங்களில் உள்ள வேற்றுமையை ஆராய வேண்டும். வால்மீகி அஹல்யை காற்றோடு கலந்து எவராலும் அவள் அழகை பார்த்து ரசிக்க முடியா வண்ணம் , அவளது அழகின் மேல் அவளுக்கு இருந்த ஆணவத்தை இழக்குமாறு காட்சியை எடுத்துச் செல்கிறார். . கம்பனோ உணர்ச்சிவசப்பட்டு தவறிட்ட அஹல்யையை கல்லாக மாற்றி, உணர்ச்சியற்ற நிலையில் வாடும் வண்ணம் சபிக்கப்பட்டதாக காட்சியை அமைக்கிறார்.

இது கம்பனின் கற்பனையா? இல்லை இந்த வழக்கு தமிழ் மண்ணில் அவருக்கு முன்னரே இருந்ததா? ( நன்றி திரு ஹரிக்கிர்ஷ்ணன் அவர்களது பதிவு )

சங்கம் பாடலில் அஹல்யை

பரிபாடல் காலம்

சங்க காலத்து நூலானா பரிபாடலில் வரும் வரிகளில் அஹல்யையின் சாபம் இடம் பெறுகிறது.

பரிபாடல் 19 , முருகனை பற்றி வரும் பாடல்.அதில் ஒரு பகுதி

இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது. என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது–துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.

(Lines 50-57)

பக்தர்கள் ஓவியக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ரதி மன்மதனின் ஓவியத்தை பார்த்த பின், இன்னொரு ஓவியத்தில் – இந்த பூனை இந்திரன் (இந்திரன் பூசை) , இவள் அஹல்யை (இவள் அகலிகை), சினத்தில் சென்ற கௌதமன் (இவன் சென்ற கவுதமன்) , கல்லை மாறிய அஹல்யை (சினன்உறக் கல்லுரு ஒன்றியபடி இது‘) என்று பரங்குன்றம் செல்லும் யாத்ரிகள் பேசுவது போல வருகிறது பாடல்.

7029

இப்போது நாம், மீண்டும் சிற்பத்திற்கு வருவோம். சிறு சிற்பம் தான். புள்ளமங்கை, எனினும் அதில் நாம் மூன்று நபர்களை தெளிவாக பார்க்க முடிகிறது. லக்ஷ்மணன் , ராமன் , மற்றும் அஹல்யை.

7023
7019
7032

இப்போது பதிவின் முக்கியமான தருணம். ராமனின் காலை பாருங்கள். அப்படியே கம்பனின் அற்புத வரிகளை படியுங்கள்.எத்தனை வண்ணங்கள்.. வண்ணங்களா.. இல்லை கம்பனின் எண்ண ஜாலங்களா..

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இதை மேலும் விவரிக்க எனக்கு தேர்ச்சி இல்லை – தேவையும் இல்லை. ராமன் கால் பட்டு உயிர்ப்பிக்கும் அஹல்யையை சிற்பத்தில் பாருங்கள்.

7035

புள்ளமங்கை விமான சிற்பம் கண்டிப்பாக 953 CE க்கு முன்னர் செதுக்கப்பட்டது. நிச்சயமாக அது அஹல்யை கல்லாய் மாறுவதும், ராமனின் கால் ( அல்லது கால் தூசி) – சிற்பத்தில் குதிக்கால் ஊன்றி பாதம் கல்லின் மேல் படும்படி வடித்துள்ள திறமையை பாருங்கள் , அப்படி கால் பட்டு சாப விமோசனம் பெரும் அஹல்யை இரு கை கூப்பி பக்தி பரவசத்துடன் தன எழில் உருவம் பெற்று , ராமனை வணங்கும் வண்ணம் வடித்ததும் அருமை.
அது சரி கம்பன் சொல்லும் கால் வண்ணத்தை பார்த்துவிட்டோம் – அது என்ன கை வண்ணம். அதற்கும் சிற்பம் உண்டோ. விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

கதை சொல்லும் தூண்கள் – பேரூர்

தூண் சிற்பங்கள் என்றாலே ஒரு தனி அழகு தான் – அதுவும் கதை சொல்லும் தூண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பல புராண கதைகள் இன்று நாம் மறந்தே பொய் விட்டோம். அதனால் பல சிற்பங்களை அவற்றின் கதையை அறிந்து ரசிக்க முடிவதில்லை. இதுபோல மறந்த கதையை சொல்லும் பேரூர் தூண் சிற்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

கடைகள் மறைத்து நிற்கும் இந்த தூணைத் தேடி செல்ல வேண்டும். இல்லையேல் அகப்படாது. நமக்கென்று உதவ பிரிட்டிஷ் பட களஞ்சியம் உள்ளது.

கண்டுபிடிக்க இயலவில்லையா. இதோ

கனக சபை படிகளை கொண்டு தூண் எங்கே உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இன்றோ கடைகளுக்கு நடுவில் கயிறு கட்டி…

எனினும் இந்த உடைந்த தூண் கண்ணில் பட்டது.

ஏன் என்று தெரிகிறதா.

ஓவியர் பத்மவாசன் அவர்களுடன் பேசும்போது, தான் அந்த தூணை கூட வரைந்து வைத்துள்ளேன் என்றார். இதோ அவரது ஓவியம்.

சரி, இது என்ன கதை? முழு கதையை ஸ்ரீரங்கம் சேஷ ராயார் மண்டப தூணில் பார்த்தோம். படிக்க இங்கே சொடுக்கவும்.

முதலை வாயில் சென்றது மீளுமா ?

இந்த தூண் எப்படி உடைந்தது. இப்போது நாம் பார்ப்பது மாற்று தூணோ ?


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ராமனுக்கு உதவிய கவந்தனின் கதை – பரம்பணன்

நேற்று தற்செயலாக பொன்னியின் செல்வன் குழும நண்பர் திரு சக்திஸ் அவர்களை சந்தித்தேன். அவர் அலுவல் பணியில் ஜகார்தா சென்று திரும்பினேன் என்றும் அங்கு நண்பர் ஒருவர் பரம்பணன் ராமாயண சிற்பங்கள் பற்றி கூறியதாகவும் சொன்னார். உடனே வெகு நாட்களாக முடிவு பெறாமல் இருந்த ஒரு பதிவை எப்படியாவது முடித்து உங்களுக்கு தரவேண்டும் என்று முடிவு செய்தேன். பரம்பணன் கோயில், அருமையான சிற்பங்கள் கொண்டது, நில நடுக்கத்தால் சிதைந்த இந்த கோயிலின் மராமத்து வேலைகள் செவ்வனே நடந்து வருகின்றன. இதோ அங்கு இருக்கும் ஒரு அற்புத ராமாயண சிற்பம். மிகவும் சுவாரசியமான கதை, இதை அங்கு எப்படி வடித்தார்கள் என்று நம்மை விந்தையில் ஆற்றும் கதை. ராமனும் லக்ஷ்மணனும் வெட்டியான் வேலை பார்த்த கதை என்று இணையத்தில் படித்தேன். வேடிக்கையாக சொன்னாலும் அது அப்படி இல்லை, ஒரு முக்கியமான தருணத்தில் மிகவும் தெளிவான அறிவுடைய பூதம் செயல்பட்ட கதை . ஆம்! ‘கவந்தனின்’ கதை.

முதலில் கதை – ராமயணத்தின் விறுவிறுப்பான படலம். மாரிச்சனை வதைத்து விட்டு, ராமனும் லக்ஷ்மணனும் திரும்புகின்றனர். சீதையைக் காணவில்லை. எங்கும் தேடி பயன் இல்லை. எவருக்கும் தெரியவில்லை. அப்போது …

ஒரு அடர்ந்த காட்டுக்குள் நுழைகின்றனர். எங்கும் மயான அமைதி. ஒரு உயிர் பிராணி கூட கண்ணில் பட வில்லை.

திடீரேனே எதிரே ஒரு பூதம்.

அதுவும் எப்படி பட்ட பூதம். கம்ப ராமாயணத்தில், லக்ஷ்மணன் ராமனிடம் கேட்கிறான்.

நீர் புகும் நெடுங் கடல் அடங்கும், நேமி சூழ்
பார் புகும், நெடும் பகு வாயைப் பார்த்தனர்;
‘சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது?’ என்று, உன்னினார். 20

அவ் வழி, இளையவன் அமர்ந்து நோக்கியே,
‘வௌ;வியது ஒரு பெரும் பூதம், வில் வலாய்,
வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்;
செய்வது என் இவண்?’ என, செம்மல் சொல்லுவான்:

‘ஊர் புகு வாயிலோ ‘இது – ஆஹா , அரக்கனின் வாய்க்கு என்ன ஒரு உவமையைக் கம்பன் தருகிறார்!

மேலும் கவந்தனின் தோற்றம்

இரு புடையும் வாங்கலின்,
நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான்
எயிற்று இடைக்கு இடை இரு காதம்; ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான்

இப்போது சிற்பத்தை பாருங்கள்

கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல்

‘அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை’ என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப,
‘விழுங்குவேன்’ என வீங்கலும், விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். 36

கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும்,
சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு
ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான்.

உடனே அவர்களை ராம லக்ஷ்மணர் என்று அடையாளம் கண்டு கொண்டது கவந்த பூதம். அவர்களை வணங்குகிறது!

மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! 41

‘காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ? 42

‘ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
“சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!” என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? 43

‘எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா! 44

‘மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! 45

‘நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே! 46

‘நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்! 47

‘மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்?’ என்றான். 48

உடனே லக்ஷ்மணன் நீ யார் என்று கேட்கிறான்

என்று, ஆங்கு, இனிது இயம்பி, ‘இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு’ என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான். 49

‘பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
ஆராய்!’ என, அவனும், ‘ஆர்கொலோ நீ?’ என்றான்.

‘சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்;
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்,
எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின்’ என்றான். 51

இப்போது இந்த சாபத்தை பற்றி இன்னும் தெரிந்துக்கொள்ள , நாம் வால்மிகியை நாட வேண்டி உள்ளது. தனு என்னும் கந்தர்வனின் மகன், அவன் பெயரும் தனு. பிரம்மனிடம் பெற்ற சாகா’ வரத்தினால் கர்வம் கொண்டு பூதமென உருக் கொண்டு அனைவரையும் துன்புறுத்தினான். அப்போது அவனை ‘ஸ்தூலசிர’ ( பெரிய தலை ?) என்ற முனிவர் அப்படியே பூத உடலுடன் இருக்கக் கடவது என்று சபிக்க தன் தவறை உணர்த்து சுய சௌந்தர்ய கந்தர்வ உருவம் பெற விமோசனம் என்ன என்று அவன் கேட்கிறான். முனிவர், ராம லக்ஷ்மணர் வந்து அவன் பூத உடலை தீக்கு இறை ஆக்கினால் மட்டுமே விமோசனம் என்று கூறுகிறார். அவ்வாறு பூதமாக அலைந்த அவன், அந்த கொடுமை போதாதென்று தேவேந்திரனிடத்திலும் சண்டை இட்டு, கொடுமையிலும் கொடுமையாக வஜ்ராயுதத்தின் தாக்கத்தில் தலை உடம்பினுள் சென்று, கை கால்கள் வெட்டப்பட்டு முண்டமாக மாறிவிட்டான். இந்திரனிடம் தான் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்க, இந்திரன் அவனின் வயிற்றில் ஒரு பெரிய வாய் ஒன்றை ஒருவாக்கி, யோஜன அளவில் நீண்ட பாம்பை போன்ற கரங்களையும் தருகிறான்.

( இங்கே சிற்பத்தில் சில தவறுகள் – சிற்பத்தில் தலை, கை , கால் உள்ளன. எனினும் வயிற்றில் பெரிய வாய், பாம்பு கரங்கள் – அதிலும் ஒன்று அருகில் இருக்கும் தவளை பார்க்கிறது )

இவ்வாறு, கதை நகர, தன பூத உடலை தீக்கு இரையாக்கும் படி வேண்டுகிறான் தனு, அப்படி செய்தால் சீதை இருக்கும் இடம் மற்றும் எப்படி மீட்பது என்பதற்கும் வழி கூறுவேன் என்கிறான். ராமருக்கு நம்பிக்கை இல்லை. சுய காந்தர்வ உரு பெற்றவுடன் கொடுத்த வாக்கை மறந்து விட்டால், அதனால் முதலில் தகவலை கூறுமாறு கேட்கிறார். சாமானிய பூதம் இல்லை, முதலில் தன் காரியம் ஆகவேண்டும் என்கிறது. ராமனும், லக்ஷ்மணனும் அவ்வாறே சென்று விறகு கொண்டு தீ மூட்டி, பூத உடலை அதில் இடுகிறார்கள்.

சாப விமோசனம் பெரும் தனு, தான் கொடுத்த வாக்குப்படி, சீதையை ராவணன் கொண்டு சென்றதையும், அவனை எதிர்க்க ராமனுக்கு வானர சேனையின் உதவி தேவை என்றும்,. அதற்்கு சரியான யுக்தி , சுக்ரீவனை நண்பனாக்கிக் கொள்வதுதான் என்றும், அவனுக்கு வாலியை அழிக்க உதவி செய்து அவனை தனக்கு கடமை பட்டவனாக ஆக்கி கொள்ள வேண்டும் என்கிறான்.

‘கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். 52

‘பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து
உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே,
ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? 53

‘ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி,
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி. 54

‘கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது’ என்றான்,
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார். 55

கதைப்படி தனுபூதம் மிகவும் அறிவு கூர்மையான கந்தர்வன், ராமனுடன் தன சுய நிலை பெற பேரம் பேசும்போதும், சுக்ரீவனை தன வசம் இழுக்க சொல்லி ஆலோசனை தந்ததும் அபாரம். வாலி மிகவும் பல சாலி, ( நாம் முன்னரே ராவணனை தன வாலில் கட்டி போட்ட வாலியின் சிற்பத்தை பார்த்தோமே ) ஆனால் இப்போது அவர்கள் இருவரும் நண்பர்கள். என்னதான் ராமனுக்கு உதவி செய்ய வாலிக்கு எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்றாலும் வாலியின் நட்பை விட சுக்ரீவன் நட்பே ராமனுக்கு விவேகமானது என்று நினைத்து அவ்வாறே ராமனிடம் கூறியது..

அற்புத கதை, அபாரமான சிற்பம்.

ஓவியம் நன்றி :
http://www.seasite.niu.edu/Indonesian/ramayana/rama23fs.htm


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

இராவணனை வென்ற ஜடாயு

என்னடா? தப்பு தப்பா தலைப்பு போட்டுள்ளேன் என்று பலர் கூறுவது கேட்கிறது. முழுவதையும் படியுங்கள் அப்போது தான் புரியும். அதுவும் இதை நான் சொல்ல வில்லை – தேவாரப் பாடல் துணை உண்டு.
www.shaivam.org

திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

பொருளுரை:
(இறைவன் பால்) அடிமைத்திறம் மிக்க அடியவர்கள் மேல் தீவினையாகிய
நோய் வராத வண்ணம், அறத்தை அடிப்படையாகக் கொண்ட

சிவதருமத்தை உரைத்த பிரான் அமரும் இடமாவது,
போர்வெறி கொண்டு தன்னுடைய வலிமையையே நினைந்து (அறம் கருதாது)
வந்த இராவணனை வென்ற சடாயுவின் இடமான
திருப்புள்ளிருக்கு வேளூராகும்.

ஜடாயு இராவணனுடன் போரிட்டு மடிந்தான் என்று தானே படித்தோம். இது என்ன புதுக் கதை ? சரி சிற்பத்தை பார்ப்போம். ஜடாயு இராவணனு்டன் போரிடும் சிற்பம் மிகவும் சிலவே உள்ளன. பெரும்பாலும் ரவி வர்மா ஓவியமே கிடைக்கும்

எனினும் தேடி பிடித்தோம். ஒன்று நண்பர் முரளி அவர்கள் உபயம் – எல்லோரா கைலாசநாதர் கோயில் சிற்பம். மற்றொன்று இந்தோனேசியா பரம்பணன் ( அதை பின்னர் பார்ப்போம்) – இராவணன் வெறி கொண்டு ஜடாயுவை ஒரு பெரிய வாளால் தாக்கும் சிற்பம்.

அந்த வாள் தான் மிகவும் முக்கியம்.

சரி , யார் இந்த ஜடாயு?. முன்னர் கருடனின் கதையில் பார்த்தோமே – கருடனின் அண்ணன் அருணன் – சூரியனின் தேரோட்டி, அவனுடைய மைந்தன். அருணனுக்கு இரண்டு மகன்கள் – முதல் மகன் சம்பாதி , அடுத்து ஜடாயு. இருவரும் பறவைகள்.

கருடனின் அண்ணன்

ஒருமுறை இருவருக்கும் போட்டி – யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான். அப்போது அவனது சிறகுகள் கருகின . கிரேக்க ஐகாருஸ் கதை போல உள்ளதா? இது நான் கூறுவது அல்ல – கம்பன் கூறுவது ( முடிவில் ராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன )

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

‘தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

‘”ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்” என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

‘முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
“எந்தை! நீ காத்தி” என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

‘மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், “சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி”‘ என்றான்.

சரி சரி, மீண்டும் சிற்பத்தின் கதைக்கு வருவோம்.

http://www.dhool.com/phpBB2/viewtopic.php?p=631

124. மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்றான்.

பெரிய மீன் கொத்திப் பறவை குறி தப்பாமல் மீனைப் பற்ற பாய்ந்தாற் போலச் சடாயு இராவணன் மேலே பாய்ந்தான். அவனது மார்பிலும் தோள்களிலும் சிறகுகளால் ஓங்கி அடித்தான். அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். அதைக் கண்ட சடாயு, ” உனது வலிமை, போய் விட்டது! உனது வலிமை இவ்வளவு தானா?” என்று இழிவாக கூறினான்.

125. அவ் வேலையினை முனிந்தான் முனிந்து ஆற்றலன் அவ்
வெல் வேல் அரக்கன் விடல் ஆம் படைவேறு காணான்
இவ் வேலையினை இவன் இன் உயில் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான்.

வல்லவனான இராவணன் அப்போது மிகுந்த கோபம் கொண்டான். அவ்வாறு கோபித்த – கொடிய வேலை இயல்பாக ஏந்தி இருக்கும் அந்த இராவணன், அந்த நேரத்தில் சடாயுவின் மேல் செலுத்தத்தக்க ஆயுதம் வேறு இல்லாததைக் கண்டான். அதனால் ” இப்பொழுதே இவனது இனிய உயிரை அழிப்பேன் ” என்று முடிவு செய்து குறி தவறாமல் தாக்கும் ‘சந்திரகாசம்’ என்னும் பெயருடைய தனது நீண்ட வாளை, உறையில் இருந்து எடுத்து, சடாயுவின் மீது மிகச் சரியாக எறிந்தான்.

அது என்ன சந்திரகாசம். இராவணன் பலமுறை பலரிடம் தோற்று பொன்னன். நாம் வாலியிடம் அவன் தோற்றதைக் கூட முன்னர் பார்த்தோம்.

வாலியிடம் இராவணன் தோற்றான்

அதே போல அவன் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்றான் ( சிற்பம் இன்னும் எதுவும் கிடைக்க வில்லை ). மேலும் ஈசனிடம் அவன் தோற்ற காட்சியை நாம் பல இடங்களில் பார்த்தோம். அவ்வாறு அவன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது ,பிறகு தனது கை நரம்புகள் மற்றும் தலை கொண்டு செய்த வீணையை மீட்டி சிவபெருமானின் ஆசி பெற்ற பின்னர் அவர் அளித்த பரிசே இந்த வாள். மேலும் படியுங்கள்
இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 2

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 3

இராவணன் கைலாயத்தின் அடியில் நசுங்கி கிடந்தது 4

126. இராவணன் வாளால் சடாயு வீழ்தல்

வலியின் தலை தோற்றிலன் மாற்ற அருந்தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்னின் வேந்தன்
குலிசம் எரியச் சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான்.

இராவணனது வலிமைக்கு முன்னே அதுவர சடாயு தோற்றான் அல்லன். ஆனாலும் எவறாலும் தடுக்க முடியாத சிவபெருமான் அளித்த- தெய்வத்தன்மை பொருந்திய அந்த வாளால் சடாயு வீழ்த்தப்படும் நேரம் வந்து விட்டது என்று ஆகிவிட்டது. அதுவன்றியும் அவனுடைய வாழ்நாளும் குறைவு பட்டு முடியும் கட்டத்தை அடைந்துவிட்டது. ( இந்திரனின் வஜ்ராயுதம் போல் பலம் பொருந்திய, அதை விடவும் பலம் பொருந்திய வாளால் ஜடாயுவின் சிறகுகள் வெட்டி வீழ்த்தப் பட்டன, ராவணனால். இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாய் மலை விழுந்ததைப் போல எனச் சொல்லி இருக்கின்றது. சந்திரஹாசம் என்னும் இந்த வாள் அத்தகையதொரு வலிமையுடனேயே ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியது.)

இப்போது ஒப்புக்கொள்கிறீர்களா – இராவணனை வென்றவன் ஜடாயு என்பதை..

படம் – திரு முரளி , குறிப்புகள் / விளக்கங்கள் உதவி திரு சுப்ரமணியம் அவர்கள், திரு திவாகர் அவர்கள் மற்றும் கீதா அம்மா


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

மானை மயக்கிய மோகினிகள்

இன்றைக்கு மீண்டும் ஹம்பி – ஹஸார ராம கோயில் சிற்பம். மிகவும் சுவாரசியமான சிற்பம் – படம் உபயம் கேத்தி , கதை – கீதா அம்மா. முதன்முதலில் இன்றைய இடுகையின் நாயகனை பற்றி நான் கேள்வி பட்டது நண்பர் தலத்தில் – அழகர் கோயில் ஓவியங்களில், தசரதன் தனது பிள்ளை பெரும் யாகத்திற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டவர்.
திரு பாஸ்கர் அவர்களது தளம்

மான் தலை கொண்ட முனிவர் – உடனே என் ஆர்வத்தை தூண்டினார். தேடி பார்த்தேன் – அவர் ரிஷ்யசிருங்கர் ( வால்மிகி படி ) அல்லது கலைக்கோட்டு முனிவர் ( கம்பர் ). அவரைப் பற்றித் தேடும்போது ‘தி ஹிந்து’ நாளேட்டில் ஒரு படம் கிடைத்தது.
தி ஹிந்து

ஒரு பாதிதான் படம் இருந்தது, சமீபத்தில் ஹம்பி சென்ற கேத்தியிடம் கேட்டு பார்த்தேன். அவர் முழு சிற்பத்தை படம் எடுத்து உள்ளேன் என்று உடனே அனுப்பி வைத்தார். முழு படத்தை பார்த்தும் ‘தி ஹிந்து’வில் வந்தது போல இந்த காட்சி தசரதனின் மூன்று மனைவியருக்கு பாயசம் கொடுக்கும் காட்சியா இது என்ற ஐயம் வந்தது. அப்போது கீதா அம்மா அவர்களிடம் கேட்டு பார்த்தேன். அவர்கள் முழுக் கதையையும் எழுதினார்கள். அப்போது தான் விளங்கியது – இந்த சிற்பம் தசரத யாகத்திற்கு முன்னர் நடைபெற்ற கதை என்று. அதுவும் மிகவும் சுவாரசியமான கதை. கேட்கிறீர்களா ?

காசியபரின் மகன் ஆன விபாண்டகரின் மகன் தான் ரிஷ்யசிருங்கர். விபாண்டகருக்கு ஒரு பெண்மானின் வயிற்றில் பிறந்தார் எனச் சொல்லுவதுண்டு. இவருக்கும் மானைப் போன்ற கொம்புகள் உண்டு. இவர் பிறந்ததில் இருந்து பெண்வாடையே படாமல் வளர்ந்தவர். பெண்களையே கண்களால் கண்டிராத அவர் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும் என்பதை அறிந்த அங்க தேச மன்னன் “ரோமபாதன்” தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரைப் பெண்களைக் காட்டி, அப்பெண்களை அவருக்குப் பணிவிடை செய்ய வைத்துத் தன் நாட்டிற்கு வரவழைக்கிறான். பெண்களின் பணிவிடைகளையும், அவர்களின் தோற்றம், ஆடல், பாடல் ஆகியவற்றில் தன்னிலை இழந்து மயங்கிய ரிஷ்ய சிருங்கரை அந்தப் பெண்கள் அங்க நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். ரிஷ்ய சிருங்கர் வந்ததும் நல்ல மழை பெய்கிறது. பின் தன் மகளான “சாந்தை”யை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். சாந்தையுடன் காட்டுக்கு மீண்டும் வரும் முனிவர் பின் தசரதனுக்காக “புத்திர காமேஷ்டி யாகம்” செய்ய அயோத்தி செல்கிறார்.

இப்போது மீண்டும் சிற்பத்தை பாருங்கள். விளங்குகிறதா ?

அருமையான சிற்பம். கதையைப் படித்த பிறகு – நாட்டியத்தை அவர் ரசிக்கும் பாவமும், நாற்காலியில் கால் மீது கால் இட்டு தன்னை உபசரிக்கும் பெண்களைப் பார்க்கும் முறையும் அருமை.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

புத்திர சோகம் – ஒரு சாபம்

இன்று நாம் ஹம்பி ஹசரா ராமர் கோயில் சிற்பம் ஒன்றை பார்க்க போகிறோம். ராமாயணத்தின் தொடக்கம் – தசரதனின் இளமை பருவம் . அப்போது ஒரு விபத்து, ஒரு இழப்பு ஒரு சாபம்.

சரி – கதையை பார்ப்போம் . ( நன்றி கீதா அம்மா ) மன்னனும் பெரும் வீரனும் ஆன தசரதன் பல நற்குணங்கள் பெற்றிருந்தும் அவன் ஆசை, பாசம், காதல், கோபம், காமம், அதனால் விளையும் துக்கம் போன்றவை நிரம்பியவனாகவே காணப்படுகின்றான். தன் மூத்த மகனை அவன் பிரிய மறுத்ததுக்கும், விசுவாமித்திரருடன் அனுப்ப மறுத்ததுக்கும் காரணம் உண்டு. தசரதன் இளைஞனாய் இருந்த காலத்தில் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த சமயம் மாலை நேரமாகி இருட்டியும் விடுகின்றது. அப்போது இருட்டில் ஒரு நீர்த்துறைக்கு அருகே யானையோ அல்லது ஏதோ காட்டு மிருகமோ நீர் குடிக்கின்றது என நினைத்துக் குறி தவறாமல் அம்பெய்யும் தன் திறமையால் அம்பெய்ய, அம்பு பட்டதோ ஒரு மனிதன் மீது.

இதோ சிற்பம்

நண்பர் மஞ்சு அவர்களது படம்

பதறிப்போன தசரதன் அங்கே போய்ப் பார்க்க அம்பினால் வீழ்ந்து கிடப்பதோ ஒரு முனிகுமாரன். “ஸ்ரவணகுமாரன்” என்னும் பெயர் உள்ள அந்தப் பையன், கண் தெரியாத, வயதான தன் பெற்றோர்களைக் காப்பாற்றி வந்தான். தனது முதுகில் சுமந்தவாறு அவர்களை எடுத்து வரும் காட்சி நெஞ்சை நெகிழவைக்கிறது.

அவர்களின் தாகம் தீர்க்கவே தண்ணீர்த் துறைக்கு அவ்வேளையில் நீர் எடுக்க வந்ததாயும், தசரதனின் அம்பால் வீழ்ந்து விட்டதையும் தெரிவித்துத் தன் பெற்றோர் தாகத்துடன் இருப்பார்கள் எனவும் போய் அவர்களின் தாகத்தைத் தீர்த்து விடு எனவும் சொல்லிவிட்டு இறக்கின்றான்.

அவன் பெற்றோர்களை மிகுந்த தயக்கத்துடனும், பயத்துடனும் சென்று சந்திக்கும் தசரதனைத் தன் மகன் இல்லை எனவும், தன் மகனைக் கொன்றவன் அவனே எனவும் அறிந்து கொள்ளும் அந்தத் தம்பதிகள் புத்திர சோகம் தாளாமல் தசரதனும் அவ்வாறே புத்ர சோகத்தால் இறக்கவேண்டும் எனச் சாபம் கொடுத்துவிட்டு இறந்து விடுகின்றனர்.

இது தான் விதி, என்றும் காரண காரியம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும் புரிய வைக்கின்றது. ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்று, அதனதன் காலத்தில் சற்றும் வழுவாமல் அப்படியே நடக்கின்றது. அதற்குச் சாட்சி …

சரி , கம்பன் இதை எப்படி வர்ணிக்கிறான்

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/ayodhya_kandam/04.htm

தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்

‘பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;
முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது’ என்று,
அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 72

‘வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,
ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,
கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்
செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73

‘ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியொன்று இலவாய் நயனம்
திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,
அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,
பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள. 74

‘புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே அன்று ஈது’ என்ன வெருவா,
‘மக்கள்-குரல்’ என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால். 75

கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,
“ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க” என்று அயரப்
பொய்யொன்று அறியா மைந்தன், “கேள் நீ” என்னப் புகல்வான். 76

‘”இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-
இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;
உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!” என்றே. 77

‘”உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,
தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்
விண்மீது அடைவான் தொழுதான்’ எனவும், அவர்பால் விளம்பு” என்று,
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். 78

‘மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு
அந்தண் புனல்கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவு ஆய்
வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;
சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா” எனவே. 79

‘”ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;
மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,
கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன். 80

‘”வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா, ‘நீ யார்?’ என, உற்ற எலாம் உரையா,
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. 81

‘”அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;
பொறுத்தே அருள்வாய்!” என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். 82

‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; “விழி போயிற்று, இன்று” என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; “ஐயா! ஐயா!” என்றார்;
“போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்; “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே.” 83

‘என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, “யானே
இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;
ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்” என்று இடலும்,
“வண் திண் சீலையாய்! கேண்மோ” எனவே, ஒரு சொல் வகுத்தான். 84

‘”கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?
விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரியப்
பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள்” என்னா. 85

‘”தாவாது ஒளிரும் குடையாய்! ‘தவறு இங்கு இது, நின் சரணம்,
காவாய்’ என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ
போவாய், அகல்வான்” என்னா, பொன் நாட்டிடைப் போயினரால்
. 86


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

ஒளித்துநின்று அம்பு எய்தல் தருமமோ?

முன்னர் நாம் வாலி வதம் தாராசுரம் சிற்பம் பார்த்தோம். அதில் இராமன் சண்டையிடும் வாலியை நோக்கி குறி பார்க்கும் வரையிலும் பார்த்தோம். இப்போது கதையின் அடுத்த காட்சி – ஆனால் அங்கு இல்லை, கம்போடியா பாண்டிய ஸ்ரெய் சிற்பம்.

அற்புத வடிவம். இரண்டு காட்சிகள் ஒரே சிற்பத்தில். முதல் காட்சி ( வலம் இருந்து இடம் – நீங்கள் சிற்பத்தை பார்க்கும் படி ) இராமன் நாணை எய்து விட்டான் – அவனது வலது கரத்தை பாருங்கள் – நானை விட்ட பின்னர் அப்படியே படம் பிடித்தாற்போல உள்ளது .

வில்லின் கயிர் முடி வரையிலும் செதுக்கி உள்ள சிற்பியின் திறன் அபாரம்.

வாலி சுக்ரீவன் – இருவரின் முகங்கள் – சண்டையின் உக்கிரத்தை வெளி காட்டுகின்றன. அவர்கள் கால்களை கொஞ்சம் பாருங்கள் – வினோதமான வடிவமைப்பு – குரங்கின் கால்கள் – கை ( வாலியின் கை) முட்டி – மனித கை போல – சுக்ரீவனை அடிக்க உயர்ந்து உள்ளது.

அடுத்த காட்சி – வாலி தரையில் விழுந்து – தாரையின் மடியில் கிடக்கிறான். அவனது முகத்தை கொஞ்சம் பாருங்கள் – கோபக் கணைகள் – மார்பில் ராமனின் கணை – கம்பனின் வர்ணனையை இப்போது பார்ப்போம்.

இராமன் மறைந்து நின்று எய்திய அம்பினை வாலி மார்பில் வாங்கிக் கொண்டே இராமனைப் பார்த்து நியாயம் கேட்க்கிறான். (கம்பராமாயணம்)

“இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர்மேல் கருணைதூண்டி ஒருவர் மேல் ஒளித்துநின்று
வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம்”

உரை: ஒரு போரில் இரு வீரர் எதிர்த்து நிற்கும்போது அவ்விரண்டு பேரையும் ஒரு சமமாக – நல்ல உறவினராகக் கொள்வது சிறந்தது. நீ அவ்வாறு கருதுவதற்கு மாறாக அவ்விருவருள் ஒருவர் மீது கருணை கொண்டு மற்றவர் மீது மறைந்து நின்று வில்லை வளைத்துக் கூரிய அம்பை மார்பில் பாய்ச்சுதல் அறமாகுமோ! இது தக்கதன்று என்று கருதப்படும் பட்சதாபமே ஆகும்.

மேலும் வாலி சொல்லுவான்:

” வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ”

உரை:இராமா! நீ செய்த இச்செயல் வீரமுடையதன்று; நூல்களில் விதித்த முறையன்று; உண்மையை சார்ந்ததும் அன்று; உனக்கு உரியதான இவ்வுலகத்துக்கு என் உடல் ஒரு சுமையும் ஆகாது; நான் உனக்கு பகையும் அல்லேன்; இங்ஙனம் இருக்கவும், நீ உன் பெருமைக் குணம் அழிந்து அன்பின்றி இச்செயலைச் செய்த விதம் எக்காரணத்தாலோ?

நியாயம் கேட்ட வாலியைப் பார்த்து இராமன் தான் ஏன் அவ்வாறு வாலியின் மீது அம்பெய்தினேன் என்பதையும், அண்ணனுக்காக உயிரையும் கொடுக்க முன்வந்த சுக்கிரீவனுக்கு சந்தேகத்தால் வாலி இழைத்த அநீதியையும், அவன் மனைவி தாரையை அபகரித்ததுவும் வாலிக்குத் தகாது என்பதனையும் எடுத்துச் சொல்வான்.

“ஈரம் ஆவதும் இற் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி
வாரம் ஆவதும் மற்றும் ஒருவன் புணர்
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கும் அரோ”

உரை: அன்புச் செயலாவதும், உயர்குடியில் பிறந்த தன் பயன் ஆவதும், வீரத்தின் பயன் ஆவதும், மற்றொருவனுக்குச் சேர்ந்த மனைவியைக் கற்புத் தவறாதபடி பாதுகாக்கும் பெருமையே அன்றோ”


“ஆதலானும் அவன் எனக்கு ஆருயிக்
காதலான் எனலானும் நிற் கட்டெனென் “

நீ இப்படியெல்லாம் செய்தாய் ஆதலாலும், இந்த சுக்கிரீவன் என் உயிர் போன்ற நண்பன் என்பதாலும் உன்னைக் கொன்றேன். என்று சொல்வான் இராமன்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

வாலி வதம் – ஒரு அற்புத வடிவம் – தாராசுரம்

இன்று திரு சதிஷ் அவர்களின் படங்கள் கொண்டு தாராசுரம் அற்புத வாலி வதம் சிற்பம் ஒன்றை பார்க்கிறோம்.

வாலி மாயாவி என்ற ஒரு அசுரனுடன் போர் செய்ய ஒரு குகையினுள் செல்கிறான். தனது தம்பியை வெளியில் காவலுக்கு இருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறான். வெகு காலம் அவன் வெளியில் வரவில்லை, உள்ளே இருந்து குருதி கசிவதையும், வாலி போல ஒரு குரல் ( உயிர் நீங்கும்போது வரும் குரல் போல ) கேட்டு பதறிய சுக்ரீவன், ஒரு பெரிய பாறையை உருட்டி குகையின் வாயிலை மூடிவிட்டு திரும்பினான்.

வாலி உண்மையில் அசுரனை வீழ்த்தி வெளிவரும் பொழுது, அடைக்கப்பட்டுள்ள வாயிலை கண்டு தன் தம்பி மீது மீது சந்தேகித்து – சினத்தில் அறிவை இழக்கிறான். மேலும் கிஷ்கிந்தையில் அரியணையில் சுக்ரீவனை கண்டதும் வெறி தலைக்கு ஏற – அவனை உதைத்து நாடு கடத்துகிறான்.

காட்டில் ஒளிந்து வாழ்ந்த சுக்ரீவன் – சீதையை தேடி வருகின்ற ராமனிடம் முறையிட்டு – தன்னை மீண்டும் வானர அரசனாக்கினால், தனது வானர சேனை கொண்டு சீதையை தேடவும் , ராவணனை அழிக்கவும் உதவ முன்வருகிறான்.

வாலி – தான் பெற்ற வரத்தினால் – முன்னின்று போர் செய்யும் எதிரியின் பாதி பலம் தன்னுள் சேர்வதால், ராமன் அவனை பின்னால் இருந்து அம்பை எய்து வீழ்த்தும் காட்சியே இது.

இதை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள் .

http://www.tamilnation.org/literature/kamban/ramayanam/kitkantha_kandam/07.htm

வாலி வதம் – கிட்கிந்தா காண்டம் – கம்ப ராமாயணம் – உரை டாக்டர் பூவண்ணன்.

சுக்கிரீவனைப் வாலி மேலே தூக்கலும், வாலி மேல் இராமன் அம்பு எய்தலும்

‘எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி’ என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 65

வாலி ‘இவனை எடுத்துத் தரை மீது மோதுவேன் என்று நினைத்துத் தன் தம்பியான சுக்கிரீவனின் இடையிலும் கழுத்திலும் இரண்டு கைகளையும் செலுத்தி மேல் எடுத்தான். அப்போது அவன் மீது இராமன் ஓர் அம்பைத் தன் வில்லில் தொடுத்து அந்த வில்லின் நாணுடன் தன் தோள் பொருத்திச் செலுத்தினன்.


கார் உண் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது – நின்றது என், செப்ப?-
நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி. 66

இராமனின் அந்த அம்பானது, நீரைத் தோற்றுவித்த நெருப்பும், அந்த நெருப்பைத் தோற்றுவித்த வலிய காற்றும் இவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பூமியும் இந்த நான்கும் கொண்ட வன்மையைப் பெற்றுள்ள வாலியின் மார்பைப் பழுத்த மிக்க சுவையுடைய வாழைப் பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசியைப் போல எளிமையாகத் தைத்துச் சென்றது என்றால், அந்த அம்பின் ஆற்றலைக் குறித்துக் கூறவேண்டியது என்ன இருக்கின்றது?

சரி இப்போது சிற்பம். மிகவும் சிறிய சிற்பம் . மக்கள் பார்வையில் படுவதில்லை. சரி நாம், அதை எடுத்து காட்டுவோம்.

இப்போது தெரிகிறதா ?


இல்லையா ? இப்போது

அதன் அளவை காட்ட இந்த படம்

படங்களுக்கு நன்றி : சதீஷ் மற்றும் ( கடைசி படம் )http://www.kumbakonam.info


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment

நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் எவ்வாறு தோன்றியது?

இன்றைக்கு ஒரு அற்புத சிற்பம் பார்க்கிறோம் , அதனை ஒட்டிய அற்புத வரலாறு மற்றும் இந்த தளம் நாங்கள் நிறுவியதன் முழு மகிழ்ச்சி என்று பல விஷயங்கள் இந்த இடுகையை சிறப்பிக்கின்றன. ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டப அற்புத தூண்கள் நாம் முன்னர் பல பார்த்தோம், அப்போது திரு ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள், அங்கே உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை பற்றி கூறினார். அப்போது அது என்னிடத்தில் இல்லை, நண்பர் அசோக் அவர்களிடம் அதை பற்றி கூறியவுடன், அதற்கு என்ன, நானே சென்று படம் எடுத்து வருகிறேன் என்று அங்கு சென்ற அற்புத படங்கள் பல எடுத்து வந்தார். இந்த அற்புத சிற்பத்தை பற்றி நான் எழுதுவதை விட பல கோயில் புராணங்களை அழகே தொகுத்து அளிக்கும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் எழுதினால் மிக சிறப்பாக இருக்கும் என்று அவர்களை அணுகினேன் ( நண்பர் திரு செந்தில் அவர்கள் தக்க சமயத்தில் அவர்களின் அலைபேசி என்னை தந்து உதவினார் ). திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் கேட்டதும் இந்த அருமையான இடுகையை தந்தார். படித்து பார்த்து மகிழுங்கள்.

புண்ணியம் நல்கும் புருஷோத்தமன் – *ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்.*

”நாராயணா!” என்று நாவிக்க நாளும் நவில்வோர்க்கு நற்கதிக்குயை நல்குவான் திருமகள் நாதன்!

அந்தத் திருமாலவன் எழுந்தளியிருக்கும் திவ்விய தேசங்கள் அனைத்திலும் அன்று முதல் இன்று வரை ஈடும் இணையும் இன்றி முதன்மைத் திருக்கோயிலாய்த் திகழ்வது திருவரங்கமாகும்.கங்கையின் தூயதாய காவிரிக்கும்,கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒர் தீவு போல் அமைந்துள்ளது.

அரங்கமாநகர் ஊர்,அளவில் சிறியதே ஆனாலும் புகழ் ஆகாயம் அளாவியதாகும்.

நினைத்தாலே நெஞ்சினிக்கும் திருவரங்கம் கோயில் இங்கு எவ்வாறு தோன்றியது?

திருவரங்கம் கோயிலின் திவ்விய விமானம் தோன்றிய இடம் திருப்பாற்கடலாகும்.பிரம்ம தேவனின் தவ ஆற்றலால் அது வெளிப்பட்டது. நெடுங்காலம் அதனைப் பூசித்து வந்த பிரமன்,நித்திய பூஜை செய்யும் பொறுப்பைச் சூரிய தேவனிடம் ஒப்படைத்தான். புகழும், புனிதமும் மிக்க அந்த விமானத்தைத் தன் பொற்கிரணங்களால் நீராட்டிப் பூசை புரிந்து வந்தான் சூரியன்.சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற முடிசூட்டு விழாவுக்கு இலங்கையில் இருந்து விபீஷணன் வந்திருந்தான்.

தன் அன்புப் பரிசாக விமானத்தை விபீஷணனுக்கு தந்தான் தசரத குமாரன். பக்தி சிரத்தையுடன் விமானத்தைத் தன் தலை மேல் தாங்கியவாறு இலங்கைக்குப் புறப்பட்டான் விபீஷணன்.இலங்கை செல்லும் வழையில் ஸ்ரீரங்கம் எதிர்ப்பட்டது.அதை அழகாகச் சுற்றி வளைத்துக்கொண்டு ஓடிய காவிரி நதியும் கண்ணைக் கவர்ந்தது.அந்தக் காவிரிக்கரையில் சற்று நேரம் இருந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு இளைப்பாற விழைந்தான் விபீஷணன்.

அந்தப் புனித விமானம் தரையில் எங்கும் வைக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையடன் தான் விபீஷணனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இளைப்பாற வேண்டுமெனில் தலைச் சுமையை இறக்கியாக வேண்டும்! என்ன செய்வது,எங்கே இறக்குவது என்று விபீஷணன் திகைத்து நின்ற சமயத்தில் அவன் முன்பாக ஓர் அந்தணச் சிறுவன் வந்து நின்றான். விபீஷணனின் தலைச் சுமையைத் தான் வாங்கி வைத்துக் கொள்வதாக வாக்களித்தான்.

விபீஷணனும் தன் தலை மீதிருந்த விமானத்தை அந்தணச் சிறுவனிடம் அதி எச்சரிக்கையுடன் ஒப்படைத்தான்.ஆனால் அந்த அந்தணச் சிறுவனோ அதற்குள் தன் கைச்சுமையை நிலத்தில் வைத்து விட்டிருந்தான். பதறிபோன விபிஷணன் அதை அங்கிருந்து தூக்க முயன்றான்.

ம்ஹும். முடியவில்லை. விபீஷணன் அந்தணச் சிறுவனைத் துரத்திச் சென்று அவன் தலையில் குட்டினான்.அச்சிறுவன் பிள்ளையாராக மாறினான்! மலைக்கோட்டை உச்சிக்குச் சென்று அமர்ந்தான்.

(அரங்கநாதன் கோவில் ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் அமைய வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு விளையாட்டை ஆனைமுகன் அரங்கேற்றியதாக வரலாறு. விபீஷ்ணன் குட்டியதால் தலையில் ஏற்பட்ட வீக்கத்தை இன்னும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் தலையில் காணலாம்)

கவலையில் கலங்கிய விபீஷணன் கண்ணீர் விட்டு அழுதான்.அப்பகுதியை ஆண்ட சோழ குலத்தைச் சேர்ந்த அரசன் தர்மவர்மன் என்பவன் அவனுக்கு ஆறுதல் கூறி அவ்விமானத்தைச் சுற்றித் தான் கோயில் எழுப்புவதாகக் கூறினான். விபீஷணன் மேல் இரக்கம் கொண்ட அரங்கநாதன், அவன் வாழ்கின்ற தென்திசை இலங்கை நோக்கிப் பள்ளி கொள்வதாக பரிவுடன் பகர்ந்தான்.

திருவரங்கனின் திருமுகம் தன்னைப் பார்க்கின்ற பெரும் பேற்றினால் மனம் மகிழ்ந்த வீபீஷணன் விடைபெற்றுச் சென்றான்

ஒப்போது சிற்பத்தை பாருங்கள் – ராஜ அலங்காரத்தில் வீபீஷணன், தலையில் கரீடம், கையில் தண்டு – செங்கோல் , ஆசையுடன் விமானத்தை மிக ஜாக்ரதையாக அனைத்து எடுத்து வரும் காட்சி – அருமை.

நண்பர் திரு சிவா கேட்டுகொண்டதன் படி இதோ விமானம் படங்கள். ( இணையத்தில் இருந்து எடுத்தவை )

அற்புத சிற்பங்களை கொண்ட இந்த மண்டபத்தின் தற்போதைய நிலை ….விரைவில் பார்ப்போம்.


Warning: printf(): Too few arguments in /home/121964.cloudwaysapps.com/ybmymhpehw/public_html/wp-content/themes/fiore/content.php on line 34
Leave a comment